Site icon சக்கரம்

பிள்ளையின் கற்றலினை மேம்படுத்துவதில் பெற்றோரின் வகிபாகம்

ல்வி என்பது உங்களது பிள்ளைகளின் வாழ்வில் முக்கிய பகுதியாக விளங்குகின்றது. பிள்ளைகள் பல்வேறு வழிகளில் கற்றுக்கொள்வதுடன் அன்றாடம் பல்வேறுபட்ட தகவல்களை கிரகித்துக் கொள்கின்றனர். பெரும்பாலான கற்றல் செயற்பாடு பாடசாலைகளில் இடம்பெறுகின்ற அதே வேளை பாடசாலைக்கு வெளியேயும் உங்களது பிள்ளைகள் கற்றலினை தமது அன்றாடச் செயற்பாடுகளின் ஊடான அனுபவங்கள் ஊடாகவும் கற்றுக் கொள்கின்றனர். 


பிள்ளையினுடைய பாடசாலைக் கற்றல் செயற்பாடுகளில் பங்கு கொள்ளல்

பாடசாலை கற்றல்ச் செயற்பாடுகளை கண்காணித்தல் : உங்களது பிள்ளையினுடைய கற்றல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பெற்றோர் ஈடுபடுதலானது உங்களது பிள்ளையினுடைய கற்றல் தொடர்பான ஆர்வத்தினை மேன் மேலும் அதிகரிப்பதாக அமையும். அதில் நீங்கள் செய்யக் கூடிய மிக முக்கியமான செயற்பாடுகளில் ஒன்று, உங்களது பிள்ளை பாடசாலையில் என்ன கற்றுக் கொள்கின்றது என்பதில் கவனம் செலுத்துதல் ஆகும். உங்களது பிள்ளை எந்தெந்த பாடங்களை விரும்பிப் படிக்கின்றது மற்றும் பாடசாலையில் வழங்கப்படும் கணிப்பீட்டுப் பரீட்சைகளில் சித்தி பெறும் வீதம் என்பவை தொடர்பில் அதிக கவனத்தினையும் தேவையான சந்தர்ப்பங்களில் தகுந்த ஊக்குவித்தல்களையும் வழங்குவதற்கு தயங்காதீர்கள் அல்லது மறவாதீர்கள்.

பாடசாலையில் தன்னார்வத் தொண்டு நடவடிக்கையில் ஈடுபடுதல்: உங்களது பிள்ளையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் ஆர்வத்துடன் ஈடுபட பல்வேறு வழிகள் உள்ளன. அதில் இன்னுமொரு சிறந்த வழி பாடசாலையில் பெற்றோர் தன்னார்வத் தொண்டு நடவடிக்கையில் ஈடுபடுதல். உங்களுடைய பாடசாலை அதிபர் அல்லது ஆசிரியரிடம் பெற்றோர்கள் தன்னார்வத் தொண்டு நடவடிக்கையில ஈடுபடக் கூடிய வாய்ப்புக்கள் பற்றிக் கேட்டறியுங்கள்.

ஆசிரியர்களுடன் சிறந்த தொடர்பாடலைப் பேணுங்கள்: உங்களுடைய பிள்ளையின் ஆசிரியரானவர் உங்களது பிள்ளையின் கல்வியில் முக்கிய பங்கு வகிப்பவராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் பிள்ளையின் வகுப்பாசிரியரைத் தொடர்பு கொண்டு சிறந்த நல்லுறவைப் பேண முயற்சியுங்கள். பிள்ளையினுடைய கற்றல் முன்னேற்றங்களை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொண்டு அவருடைய ஆலோசனைக்கேற்ப பிள்ளையினை வழிநடத்துங்கள். உங்களுடைய பிள்ளையின் ஆசிரியருக்கு நீங்கள் அவருடைய ஆலோசனையைப் பெற விரும்புகின்றீர்கள் அல்லது பேச விரும்புகின்றீர்கள் என்பதனை தெரியப்படுத்தவும். 

பிள்ளையினுடைய வகுப்பறைக்குச் செல்லுங்கள்: பிள்ளையினடைய வகுப்பறைக்குச் சென்று பிள்ளையினுடைய வகுப்பறையில் அமர்ந்து ஒன்று அல்லது இரண்டு பாடவேளைகளை அவதானிப்பதானது உங்களுடைய பிள்ளை எவ்வாறு கற்றுக் கொள்கின்றது என்பது தொடர்பான தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்ள உதவும். உங்களுடைய பிள்ளையினுடைய பாடசாலை பெற்றோர்களை வகுப்பறையில் பெற்றோர்கள் அமாந்து அவதானிப்பதற்கு அனுமதிக்கின்றாதா? இல்லையா? எனக் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன் பாடசாலை அதிபரைத் தொடர்புகொண்டு அதற்கான ஒழுங்குமுறைகள் மற்றும் அனுமதிகளை முதலிலே பெற்றுக் கொள்ளவும்.

உங்களுடைய பிள்ளையின் சக மாணவர்களின் பெற்றோருடன் பேசுங்கள்: சக மாணவர்களின் பெற்றோர்களை சந்திப்பதற்கு சிறந்த வழி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து கொள்ளுதல் மற்றும் பெற்றோர் சந்திப்புக்களில் தவறாது பங்குபற்றுதல் ஆகும். உங்கள் பிள்ளைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி ஏனைய பெற்றோருடன் பேசுங்கள். பள்ளியில் நடக்கும் ஏதாவது விடயங்கள் பற்றி உங்களுக்கு கவலைகள் இருந்தால், ஏனையோர் குறித்த விடயம் தொடர்பில் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.

பாடசாலைக்கு வெளியேயும் பிள்ளைக்கான கற்றல் சந்தாப்பங்களை ஏற்படுத்துங்கள்

பிள்ளைகளுக்கான உரிய கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்: இளம் வயதிலேயே கூட உங்கள் பிள்ளைக்கு வீட்டுப்பாடம் இருக்கும். வீட்டில் ஒரு நல்ல கற்றல் சூழலை வளர்ப்பதன் மூலம் உங்களது பிள்ளை தனது கற்றலில் வெற்றிபெற உதவுங்கள். பிள்ளை கற்பதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்வதும் இதில் அடங்கும்.

பாடசாலை பாடவிதானத்திற்கு துணை செய்யும் செயற்பாடுகளில் பிள்ளையுடன் இணைந்து ஈடுபடுதல்: உங்கள் பிள்ளை பாடசாலையில் என்ன கற்றுக் கொள்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டு உங்களது குடும்பத்தின் ஓய்வுசார் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதன் மூலம் நீங்கள் உங்களது பிள்ளையின் கற்றலை வேடிக்கையாகவும் உற்சாகமாகவும் மாற்றி அமைப்பதோடு கற்றலில் அதிக ஈடுபாட்டினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்த முடியும். உதாரணமாக: 

பிள்ளைகள் கற்பதற்கு இடருறும் பாடங்கள் தொடர்பில் உதவுங்கள்: உங்களது பிள்ளை குறிப்பிட்ட பாடமொன்றினைக் கற்பதற்கு இடர்பாடுகளை அல்லது சிக்கலை எதிர்நோக்கும். எனவே நீங்கள் பிள்ளை பாடசாலைக்கு வெளியேயும் குறித்த பாடத்தினைக் கற்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியும். முதலாவதாக பிள்ளையினுடைய தேவையினைக் கண்டறியுங்கள். அதாவது குறித்த பாடத்தின் மேல் உள்ள விருப்பமின்மையால் பிள்ளை சிரமத்தினை எதிர்நோக்குகின்றதா அல்லது குறித்த பாடத்தினை கற்பதற்கு தேவையான அடிப்படைத் திறன்களில் பிள்ளை இடருறுகின்றதா எனக் கண்டறியவும்.

வாசிப்பை ஊக்குவிக்கவும்:  பிள்ளையின் பாடசாலைக் கற்றலுக்காக மட்டுமன்றி வாழ்நாள் முழுவதும் வாசிப்பு அவசியமானது. உங்களது பிள்ளை சிறந்த அறிவுமிக்கவராக மாற உதவும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று பாடசாலைக்கு வெளியே வாசிப்பை ஊக்குவிப்பதாகும். உங்கள் பிள்ளைக்கு வாசிப்பை ஆர்வத்தினைத் தூண்டுவதற்கான பல்வேறுபட்ட வழிகளைக் கடைப்பிடிப்பதன் ஊடாக இதைச் சாத்தியமாக்கலாம். 

பிள்ளை கற்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும்: உங்களது பிள்ளையானது பாசாலையினை விட அதிக மணிநேரம் தனது வீட்டிலேயே செலவிடுகின்றது. எனவே தான் பிள்ளையானது ஒரு பாரம்பரிய கற்றல் சூழலில் இருந்து விலகி இருக்கும் போது தொடர்ந்து கற்றலுக்குரிய சந்தாப்பங்களை ஏற்படுத்தி கற்றலுக்கு உதவுவது அவசியமானது. எனவே உங்களது அன்றாடச் செயற்பாடுகளை பிள்ளைகள் கற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களாக மாற்றி அமையுங்கள். 

கல்வி சாராத ஏனைய செயற்பாடுகளிலும் பிள்ளைகளினை ஊக்குவியுங்கள்: வீட்டுப்பாடம் படிப்பதும் செய்வதும் அமைதியான கற்றல் வகைகளாகக் கருதப்படுகின்றன. இவை மிகவும் முக்கியமானவையாக இருக்கின்ற போதிலும், கல்வியோடு சேர்ந்த அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவதற்கும் ஆளுமைமிக்க பிள்ளையாக திகழ்வதற்கும் கல்வி சாராத ஏனைய செயற்பாடுகள் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளை ஊக்குவித்தல் அவசியம். செயற்திறன் மிக்க கற்றல் என்பது உங்களது பிள்ளை ஒரு செயற்பாட்டில் மிகுந்த ஈடுபாட்டுடன் அல்லது ஆர்வத்துடன் பங்குபற்றுதலையே குறிக்கின்றது. 

ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்ப்பதற்கு உதவுங்கள்: பிள்ளைப்பருவ விருத்திக்கு மனம்-மற்றும் உடல் இணைந்த வளர்ச்சி மிகவும் முக்கியமானது. பாடசாலைக் கல்வியில் வெற்றிபெற, உங்கள் பிள்ளையினது உடல் ஆரோக்கியமாக இருத்தல் மிக அவசியம். பிள்ளைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கின்றதா மற்றும் நன்கு ஓய்வெடுத்துக் கொள்கின்றதா என்பதனை உறுதிசெய்து உங்களுடைய பிள்ளையினது கல்வியில் முக்கிய பங்கை எடுத்துக் கொள்ளுங்கள். 

பிள்ளையுடன் தொடர்பாடலை மேற்கொள்ளுங்கள்

கேள்விகளைக் கேளுங்கள்: உங்களுடைய பிள்ளையுடன் சிறந்த தொடர்பாடலை பேணுவதன் மூலம் பிள்ளையினுடைய கல்வியினை மேலும் மேம்படுத்த முடிவதுடன் அடைவுமட்டங்கள் தொடர்பிலும் கண்காணிக்கவும் முடியும். இதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்களது பிள்ளைகளிடம் கேள்விகளைக் கேட்பது ஆகும். பிள்ளையினுடைய பாடசாலை வாழ்க்கையில் பிள்ளை என்ன கற்றுக்கொள்கின்றது என்பதில் நீங்கள் அக்கறை காட்டுகின்றீர்கள் என்பதையும் பிள்ளைக்கு உணர்த்துவதாக அமையும். 

கவனமாக செவிமடுங்கள்: பிள்ளைகள் அவர்களுடைய விருப்பங்களையும், விழுமியங்களையும் மற்றும் கருத்துக்களையும் நீங்கள் மதிப்பதனை விரும்புகின்றார்கள். உங்களது பிள்ளையிடம் நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கும் போது, நீங்கள்  கவனமாக பதிலை செவிமடுப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களது பிள்ளை கூறும் விடயத்தினை கவனமாக செவிமடுப்பதனை பிள்ளைக்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. 

உங்கள் பிள்ளைக்கு என நேரம் ஒதுக்குங்கள்: உங்கள் பிள்ளையுடன் செலவிட ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டதொரு நேரத்தை ஒதுக்குங்கள். பாடசாலையில் நடைபெற்ற விடயங்கள் உட்பட பிள்ளையின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதனை அறிந்து கொள்ள சந்தர்ப்பத்தினை அளிப்பதாக இது அமையும். உங்களால் முடிந்தால், ஒவ்வொரு இரவும் ஒன்றாக இரவு உணவை சாப்பிட முயற்சிக்கவும். நாள் பற்றி பேச இரவு உணவு வேளை ஒரு சிறந்த நேரம் ஆகும். 

ஊக்கமளியுங்கள்: ஆதரவான சொற்களை வழங்குவது உங்கள் பிள்ளைக்கு வெற்றிபெற உதவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். பிள்ளை வெற்றிபெறும் போது பிள்ளையினை உற்சாகப்படுத்துவதன் மூலமும், பிள்ளை இடருறும் போது ஆதரவை வழங்குவதன் மூலமும் பிள்ளையினுடைய கல்வியில் அக்கறைமிக்கவராக இருங்கள். உங்கள் பிள்ளை மேன்மேலும் கற்றுக்கொள்ளவும், மாணவனாக வளரவும் பெற்றோருடைய கருத்து முக்கியமானது. 

மேற்கூறிய விடயங்களை தொகுத்து நோக்கின், பிள்ளை ஒன்று கற்றலில் பெரும்பான்மையான நேரத்தினை பாடசாலைச் சூழலுக்கு வெளியேயே செலவிடுகின்றது. எனவே பாடசாலையில் உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் பிள்ளையின் கற்றல் தொடர்பில் வழங்கும் ஆதரவினை விட பல மடங்கு ஆதரவினை பெற்றோர் பாடசாலைச் சூழலிலும் மற்றும் வகுப்பறைக்கு வெளியேயும் பல மடங்கு வழங்க வேண்டியுள்ளது. அதுவே எமது பிள்ளையின் கற்றலினை மேம்படுத்துவதற்கு உதவுவதாக அமையும். இதனை நடைமுறைப்படுத்த பாடசாலை நிர்வாகத்துடனும், பிள்ளையினுடைய ஆசிரியர்களுடனும் நல்லுவைப் பேண வேண்டும். அது மட்டுமன்றி பிள்ளையின் சக மாணவர்களுடனும் அவர்களுடைய பெற்றோர்களுடனும் கூட நல்லுறவைப் பேண வேண்டியது அத்தியாவசியமானது. எனவே பெற்றோர்கள் பாடசாலைக்கு பிள்ளையினை அனுப்புவதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக நினைத்துவிடாது பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியேயும் பிள்ளைக்கான கற்றல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பது பெற்றோருடைய இன்றியமையாத கடமையாகும். மேற் கூறிய அனைத்தினையும் கடைப்பிடிக்காவிட்டாலும் உங்களால் இயன்ற சிலவற்றையாவது நடைமுறைப்படுத்தி உதவவேண்டும் என அனைத்துப் பெற்றோரிடமும் வேண்டி நிற்கின்றோம்.

உங்களது பிள்ளைகளே எமது நாட்டின் வளமான எதிர்காலம் என்பதனை நினைவில் கொள்ளவும். 

நன்றி
ஆசிரியர்
போட்டிப் பரீட்சை வழிகாட்டி

Exit mobile version