
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இது தொடர்பாக கடந்த வாரம் அலாஸ்கா மாகாணத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த சந்திப்பில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்த பேச்சு வார்த்தை தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி நேட்டோ செயலாளர், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் கொடுக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் போர் நிறுத்தம் தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரஷ்யாவில் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திங்களன்று (18.08.2025) உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து புட்டின் மற்றும் ஜெலன்ஸ்கிக்கு இடையே போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவின் மூலமாக அறிவித்துள்ளார். அப்பதிவில், அவர் தெரிவித்திருந்த தாவது: நான் புட்டினை அழைத்துப் பேசினேன். புட்டினுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே ஒரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளேன். சந்திப்புக்கான இடம் பின்னர் தீர்மானிக்கப்படும். அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர்கள் இருவருடன் நானும் சேர்ந்து ஒரு முத்தரப்பு சந்திப்பை நடத்துவோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்
ரஷ்ய ஊடகத் தகவல்
புட்டின் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக் கொண்டாரா என்பது பற்றி ட்ரம்ப் குறிப்பிடவில்லை. புட்டினின் வெளியுறவுத்துறை ஆலோசகர் யூரி உஷாகோவ் இதுகுறித்து தெரிவித்த போது, ட்ரம்ப் மற்றும் புட்டின் இருவரும் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையேயான நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஆதரவாக பேசினர் என்று தெரிவித்ததாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அவரும் புட்டினின் நேரடி பங்கேற்பை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்புடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி இந்த “சந்திப்புக்கு ரஷ்யா விருப்பம் காட்டவில்லை என்றால், அமெரிக்கா தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்வோம்” என்று கூறினார்.
டிரம்ப் கைவிரிப்பு
ஜெலன்ஸ்கியை சந்திக்கும் முன்னதாகவே கிரீமியாவை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியாது. நேட்டோவில் உக்ரைனை உறுப்பினராக்க முடியாது என ட்ரம்ப் பகிரங்கமாக கைவிரித்து விட்டார். கடந்த முறை நடைபெற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாட்டின் தலைவர்களை அமெரிக்கா இணைக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள் மட்டுமே ரஷ்ய அதிகாரிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக ரஷ்யா மீதான போருக்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 100 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக செலவு செய்திருந்தது. இந்த பணத்திற்கு ஈடாக உக்ரைன் அதனுடைய கனிம வளங்களை தனக்கு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா ஒப் பந்தம் போட்டுக்கொண்டது. அதே நேரத்தில் ஆயுதங்களாகவும் நிதியாகவும் ஐரோப்பியா கொடுத்திருந்த 80 பில்லியன் டொலர்கள் பணத்திற்கு எந்த உத்தரவாதமும் பெற்றுத் தரப்படவில்லை. மேலும் ரஷ்யாவுடனான தனது உறவுகளை சரிசெய்ய தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்…
இதனால் பதற்றமடைந்த ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு எதிராக உக்ரைனை தூண்டிவிட்டு வந்தன. இந்நிலையில் தான் தற்போதைய பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், இத்தாலி பிரத மர் ஜியோர்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

