Site icon சக்கரம்

அமேசன் காட்டுத் தீ

ற்றி எரிவது அமேசான் காடுகள் மட்டுமல்ல; மனித மனங்களும்தான்!

இருக்காதா பின்னே? பூமிப்பந்தின் நுரையீரல் அல்லவா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

அமேசான் மழைக்காடுகளைத்தான் சொல்கிறோம். நாம் வாழும் உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை இத்தனை காலமும் உற்பத்தி செய்து வாரி வழங்கிக்கொண்டிருந்தது இந்த அமேசான் காடுகள்தான். அதனால்தான் பூமியின் நுரையீரல் என்ற செல்லப்பெயர், இந்த அமேசான் மழைக்காடுகளுக்கு வந்திருக்கிறது.

அமேசான் மழைக்காடுகள் எங்கே இருக்கின்றன என்ற கேள்வி எழும்.

அமேசான் மழைக்காடுகள் என்பது தென் அமெரிக்காவில் அமேசான் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள மழைக்காடுகள்தான். அமேசான் படுகையின் பரப்பளவு 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் என்கிறார்கள். இதில் காடுகள் மட்டும் 55 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன.

இதில் 60 சதவீதம் பிரேசில் நாட்டிலும், எஞ்சியவை கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்குவடார், பொலிவியா, கயானா, சுரிநாம் ஆகிய நாடுகளிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.

பூமியின் 10 சதவீத பல்லுயிரினங்களுக்கு தாய்வீடு இந்த அமேசான் காடுகள்தான்.

கணக்கிட முடியாத எண்ணிக்கையிலான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் தாயகமும் இந்த அமேசான் காடுகள்தான்.

குளோபல் வார்மிங் என்று சொல்லப்படுகிற உலக வெப்ப மயமாதலை ஓரளவுக்கு தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்கு இவற்றுக்கு உண்டு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அமேசான் மழைக்காடுகள் மட்டும் மறைந்து விட்டால், நாம் சுவாசிக்கும் காற்றுக்கும், குடிக்கும் தண்ணீருக்கும் திண்டாடும் நிலை உருவாகி விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள்.

அமேசான் மழைக்காடுகளில் உள்ள ஈரப்பதம், தீயையே தடுத்து விடும் ஆற்றல் வாய்ந்தவை என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது உண்டு. அப்படிப்பட்ட அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதுதான் ஆச்சரியம்.

அமேசான் மழைக்காடுகள் பற்றி எரிவது ஒன்றும் புதிது இல்லை. ஆனால் இப்போது போல் முன் எப்போதும் பற்றி எரிந்ததில்லை என்று புள்ளி விவரம் சொல்கிறது, 2013-ம் ஆண்டில் இருந்து அமேசான் காட்டுத்தீ நிலவரத்தை பதிவு செய்து வருகிற பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் அமேசான் மழைக்காடுகள் எரிகிற சம்பவங்கள் 84 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாக பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விவரம் சொல்கிறது.

இதனால் நாம் மூச்சு திணறாமல் சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கிக்கொண்டிருந்த அமேசான் மழைக்காடுகள் இப்போது புகை மண்டலத்தால் மூச்சு திணறிக்கொண்டிருக்கும் சோகம் அரங்கேறி வருகிறது.

எப்படி அமேசான் மழைக்காடுகள் தீப்பற்றி எரிகின்றன என்ற கேள்விக்கு ஆணித்தரமான பதில் இதுவரை கிடைக்கவில்லை. மின்னல்கள் வெட்டி அதனால் தீப்பற்றி எரிவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அமேசான் மழைக்காடுகளின் அழிவுக்கு மனிதர்கள்தான் காரணம்; மனிதர்களின் அதீத சுயநலம்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் விசுவரூபம் எடுத்து வருகிறது. பிரேசில் நாட்டு மக்கள் விவசாயம் செய்வதற்காக, கனிம வளங்களை தோண்டி எடுப்பதற்காக அவர்களே காட்டுக்கு தீ வைக்கிறார்கள் என்ற புகாரும் பரவலாக உள்ளது.

ஏனெனில் அமேசான் மழைக்காடுகளில் அதிகளவு ஈரப்பதம் உள்ள நிலையில், அவ்வளவு எளிதாக இயற்கையாக தீப்பிடித்து விடாது என்ற கருத்தும் வலுத்து இருக்கிறது.

அமேசான் காட்டுத் தீக்கு முற்றிலும் வறண்ட வானிலை, அதீத வெப்பநிலைதான் காரணம் என்பது பிரேசில் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ் கருத்தாக இருக்கிறது. ஆனால் தீப்பற்றி எரிவதற்கு வறண்ட வானிலையோ, மின்னலோ எதுவும் காரணம் இல்லை, இது மனிதர்களால் வைக்கப்பட்ட காட்டுத்தீ என்பது வானிலை ஆராய்ச்சியாளர் ஹேலி பிரிங்கின் கருத்தாக அமைந்துள்ளது.

இப்போது பல்லாயிரக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிவதின் காரணமாக, உலக நாடுகள் பலவும் பிரேசிலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

அமேசான் காடுகளில் பற்றி எரிகிற தீயை அந்த நாடு கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், அந்த நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வரப்போவதில்லை என்று பிரான்சும், அயர்லாந்தும் அறிவித்துள்ளன.

பிரேசில் நாட்டில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்று பின்லாந்து ஓங்கிக்குரல் கொடுக்கிறது.

ஒரு படி மேலே போய் விட்டார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்.

“எங்கள் வீடு எரிந்து கொண்டிருக்கிறது. நமது கிரகத்துக்கு 20 சதவீத ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நுரையீரல் எரிந்து கொண்டு இருக்கிறது. இது சர்வதேச பிரச்சினை. ஜி-7 உச்சி மாநாட்டில் இதுபற்றி விவாதிக்க வேண்டும்” என்று மேக்ரான் குரல் கொடுத்தார். 22 மில்லியன் டாலர் நிதியை அவசரமாக விடுவிக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அதை பிரேசில் உதாசீனப்படுத்தி விட்டது.

“ஜி-7 நாடுகளுக்கு நன்றி. ஆனால் இந்த நிதியை ஐரோப்பாவில் காடுகளைப் பெருக்குவதற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உலகின் பாரம்பரிய பெருமைமிக்க பிரான்ஸ் தேவாலயத்தில் ஏற்பட்ட தீயைக்கூட மேக்ரானால் தடுக்க முடியாமல் போய்விட்டது. அவர் எங்கள் நாட்டுக்கு பாடம் சொல்லித்தர நினைக்கிறார். அவர் பிரான்சிலும், அதன் காலனிகளிலும் செய்ய வேண்டிய காரியங்கள் அனேகம் உண்டு” என்று பிரேசில் அதிபரின் தலைமை பணியாளர் அதிகாரி ஆனிக் லோரன்ஸோனி சொல்லி இருக்கிறார் சூடாக.

தற்போது தீயை அணைக்கும் பணியில் பாதுகாப்பு படைகளை பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ களம் இறக்கி உள்ளார். ஒரு மாத காலம் பாதுகாப்பு படைகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் என அவர் சொல்லி இருக்கிறார். தற்போது அங்கு 7 மாகாணங்களில் 44 ஆயிரம் படை வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டாலும் தீயின் வேகம் குறையவில்லை. இது ஆபத்தை நோக்கி வழிநடத்துவதை காண முடிகிறது.

ஆகஸ்டு 22-ந்தேதி நிலவரப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை ஏறத்தாழ 75 ஆயிரம் தீ சம்பவங்களை பிரேசில் நாட்டின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பதிவு செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவின் பூமி கண்காணிப்பு கணினி தரவு மற்றும் தகவல் அமைப்பு தீப்பற்றி எரியும் சம்பவங்கள் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் படங்களை வெளியிட்டு இருக்கிறது.

இதில் ஒரு படம், பிரேசில் மற்றும் பொலிவியாவின் காற்று மண்டலத்தில் கார்பன் மோனாக்சைடு கலந்திருப்பதை காட்டுகிறது. இந்த கார்பன் மோனாக்சைடைப் பொறுத்தமட்டில், ஒரு மாத காலம் கூட அப்படியே இருக்கும். அது நீண்ட தொலைவுக்கு பயணிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. அது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும். சுவாசிக்கிற ஆக்சிஜனிலும் இந்த கார்பன் மோனாக்சைடு கலக்கும். அதை சுவாசிக்கிறபோது மனிதர்களுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும். தொடர்ந்து சுவாசிக்கிறபோது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். நெஞ்சு வலியை உண்டு பண்ணும். உயிரையும் பறிக்கும் ஆபத்தும் உண்டு.

அமேசான் காட்டுத்தீயாலும், கார்பன் மோனாக்சைடு பரவலாலும் நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ?

“இந்த தீயின் விளைவாக உடனடியாக தென் அமெரிக்காவின் பருவ நிலையில் தாக்கம் ஏற்படும். அங்கு மழை குறைந்து போவதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் வறண்ட வானிலைக்கு வழிநடத்தும். உலக வெப்பமயமாதலில் கார்பன் உமிழ்வுகள் பங்கு வகிக்கும். ஆனால் நீண்ட கால உலகளாவிய தாக்கம் எப்படி இருக்கும் என்று கணித்து சொல்வது கடினம்” என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மல்ஹி. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

அமேசான் காட்டுத்தீயால் நமக்கு ஆபத்து உண்டா, இல்லையா என அறுதியிட்டுச்சொல்ல முடியவில்லை என்பதுதான் தற்போதைய நிலை.

அமேசான் காடுகள் நமக்கு சுவாச காற்றைத்தந்த காலம் மாறி, நம் உயிரைப்பறிக்கும் காலம் வந்தால்? நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. அப்படி ஒரு நிலை வராது என்று நம்புவோம். வரவும் கூடாது; வந்தால் தாங்காது மானுடம்.

அமேசான் மழைக்காடுகளை காப்பாற்றியாக வேண்டும். பற்றி எரிகிற தீ அணைக்கப்பட்டால்தான் அங்கெல்லாம் வாழ்கிற நமது சக மனிதர்கள், பேரழிவில் இருந்து காக்கப்படுவார்கள். அமேசான் காடுகளில் மீண்டும் வருமா ஈரப்பதம்? அது மனித மனங்களை குளிர்விக்குமா?

-தினத்தந்தி
ஓகஸ்ட் 28, 2019

அமேசன் என்கிற ஆச்சரியம்!

ருடமெல்லாம் கொட்டும் மழை! 
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை!

மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு!

அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்!!

இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்!

ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.

இந்த காடுகள் ஆபத்தானவை.

இந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது!

இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.

இச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்!!

இதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.

இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.

முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.

அமேசான் நதி பிறக்‍கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்‍ கொண்டு கடலில் சென்று கலக்‍கிறது.

‘இங்கு இருக்‍கும் 90 சதவீதத்துக்‍கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை’ என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்‍கு உணர்த்தும்.

————————

அமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை!

இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்!

எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.

1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை!

அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.

மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.

ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது!

மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.

முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.

பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் ‘மனவுஸ்’ வரை செல்லலாம்.

சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.

அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.

பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.

——————-

”அமேசான் மழைக்காடுகள்”

அமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.

சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.

பூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.

பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.

மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.

இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.

உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்‍கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்‍கும் மேல் இருக்‍கின்றன.

3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்‍கள் இந்த காடுகளில் உள்ளன.

உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.

எண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.

அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.

ஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28% அதிகரித்திருப்பதாக பிரேசில்அறிவித்திருக்கிறது.

————————–

அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.

கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.

இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்‍களை சேர்ந்த மக்‍கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்!

இன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

விலங்குகளை வேட்டையாடி பச்சையாகவே உண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.

காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.

ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.

ஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.

ஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.

அவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.


உலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.

பெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.

இதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

இந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.

இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.

தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.

அதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.

ராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.

இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.

—————————

அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது!

இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது ‘வாலியா ஹம்சா’ என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.

அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.

சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது!

நாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

எனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.

—————————-

குளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.

4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.

அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.

உடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.

இதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.

100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.

விலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.

இது சிறிய ஆறு.

ஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.

ஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.

வெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

குகராஜ் சகாதேவன்
(பல வருடங்கள் பழமை வாய்ந்த முகநூல் பதிவு)
22/09/2012

Exit mobile version