Site icon சக்கரம்

இன்று உலக ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் தினம்

ஆர்.குமரேசன்

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித்தான், நாம் செய்யும் சின்னச் சின்ன சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கிறது. வகைதொகையில்லமால் சுற்றுச்சூழலை சூனியமாக்கிக் கொண்டேயிருக்கிறோம். மலைகள் முழுவதும் பிளாஸ்டிக் மேடுகளாக்கியிருக்கிறோம், நிலங்களை நஞ்சாக்கியிருக்கிறோம், நீரை மாசுபடுத்திக் கொண்டேயிருக்கிறோம். சதுப்புநிலக் காடுகளைச் சாகடித்து வருகிறோம். இவற்றில் மற்றவற்றை விட, சதுப்புநிலங்கள் இன்றைக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனென்றால் இன்று (2021.02.02) உலக ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் தினம்.

‘எதற்கும் உதவாத சாதாரண நிலங்கள்தானே இந்தச் சதுப்பு நிலங்கள்’ என்ற நமது அலட்சியத்தின் விளைவால், சூழல் சூனியமாகிக் கிடக்கிறது. பருவம் தவறி மழை பெய்கிறது. வெள்ளச்சேதம் ஏற்படுகிறது. கடல் சீறுகிறது. இதுபோன்ற மனிதகுலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்குப் பின்னணியில் ஈரநிலங்களின் அழிவும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது.

‘அதென்ன ஈரநிலங்கள்?’ என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உலகெங்கிலும் உள்ள ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோரக் குடியிருப்புப் பகுதிகள், பவளத் திட்டுக்கள், தாழ்வான நிலங்கள், குளம், குட்டைகள், ஏரிகள், மீன்குளங்கள், நீர்த்தேக்கங்கள், நெல்வயல்கள், சதுப்பு நிலக்காடுகள் உள்ளிட்டவை ஈரநிலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடலுக்கும், நிலப்பகுதிக்கும் இடையே ஆழம் குறைந்த ஆண்டு முழுவதும் நீர்தேங்கியிருக்கும் நிலப்பரப்புகளைச் சதுப்பு நிலங்கள் என்கிறோம். இந்த நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும், இவற்றை பற்றிய விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் ‘ராம்சர் அமைப்பு’ என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது.

உலகளவில் உள்ள ஈரநிலங்களின் அழிவைத் தடுத்தல் மற்றும், நீர்நிலைகள் பாதுகாப்புத் தொடர்பான சர்வதேச நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் (Ramsar) நகரில் நடைபெற்றது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஈரநிலங்கள் பாதுகாப்புத் தொடர்பான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தீர்மானங்களாக இயற்றப்பட்டன. அப்படி முக்கிய முடிவை எடுத்த நாளான பிப்ரவரி 2-ம் தேதி, ‘உலக ஈரநிலநாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 161 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ள இந்த ராம்சர் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. முதன்முதலில் ராம்சர் நகரில் கூடியதால், இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆராய்ந்த இந்த அமைப்பு, அவற்றில் சிறப்பானவை என 1950 சதுப்பு நிலங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்திய அளவில் இந்த பட்டியலில் 25 சதுப்பு நிலங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கோடியக்கரை, பழவேற்காடு ஆகியவை இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி, உலக ஈரதின நாளில் ஒரு விழிப்புஉணர்வு வாசகத்தை இந்த அமைப்பினர் அறிமுகப்படுத்துவார்கள். ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் தேவையை உணர்த்தும் வகையில் அந்த வாக்கியம் இருக்கும். 2017 ஆம் ஆண்டு, ‘ஈரநிலங்கள்தான் பேரழிவினால் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பவை’ ( Wetlands for Disaster Risk Reduction ) என்ற வாசகத்தை வெளியிட்டார்கள். 2018 ஆம் ஆண்டு, ‘ஈரநிலங்கள்தான் நகர்பகுதிகளுக்கான நிலைத்த நீடித்த எதிர்காலம்‘ ( Wetlands for a Sustainable urban Future) என்ற வாசகத்தை வெளியிட்டுள்ளார்கள்.

உண்மையில் ஈரநிலங்கள் ஆபத்தில் இருக்கின்றனவா என்றால் ஓம், பெரும் அபாயத்தில் இருக்கின்றன என்பதுதான் பதில். பெருகி வரும் நகர்மயமாக்கல், தொழில்சாலைகளுக்கான ஆக்கிரமிப்புகள், புதிதாக உருவாகும் குடியிருப்புகள், ரியல் எஸ்டேட், சுற்றுலாத்தலங்கள் அமைத்தல், நீர்த்தேக்கங்கள் அமைத்தல், வேளாண் உற்பத்திக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவைகளால் மிகப்பெரிய அழிவைச் சந்தித்து வருகின்றன.

அதெல்லாம் சரி, இவை அழிவதால் என்ன விளைவுகள் ஏற்படும்?.

உயிர்ச் சங்கிலி உடையும், பல்லுயிர் வளம் பாதிக்கப்படும், சூழல் சூனியமாகும். நிலத்தடி நீர்வளம் நீர்த்துப்போகும். முக்கியமாக, நீரை வடிகட்டி நன்னீராக மாற்றும் செயல் நின்றுபோகும். உணவுச் சங்கிலியின் உறுதியான பிணைப்பை உறுதி செய்யும் ஈரநிலங்களின் அழிவு, பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆழிப்பேரலையான சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில் அலையாத்திக் காடுகள் ஆற்றிய மகத்தான பணியை மறந்துவிடக் கூடாது.

கடற்கரையோரங்களில் கோடிகளைச் செலவிட்டுக் கொட்டப்படும் கொங்கிரீட் கற்களைவிட, ஆயிரம் மடங்கு மேலானவை அலையாத்திக் காடுகள். நத்தைகள், சேறு நண்டு, சிங்கி இறால், பால் இறால், நீர்ப்பல்லி, கடற்புல், ஆக்காட்டி குருவி, வெண்கொக்கு, ஊரி, நாரை, கண்டற்சிப்பி, மீனினங்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களின் உறைவிடமாக இருப்பவை ஈரநிலங்கள். சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் கார்பனைச் சேமித்து, பகிர்ந்தளிப்பதில் சிறப்பாக பணியாற்றுபவை ஈரநிலங்கள். இந்த ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் எதிர்கால பாதுகாப்பை மனதில் கொண்டு இதனைச் செய்ய வேண்டும் என்பதே உலக ஈரநில தினத்தின் மூலம் உங்கள் முன்வைக்கும் வேண்டுகோள். நிச்சயம் செய்வீர்கள் ஏனென்றால் உங்கள் மனதும் ஓர் ஈரநிலம்தான்.

Exit mobile version