Site icon சக்கரம்

போரால் அமைதி விளையுமா?

சஞ்சய் கே. ஜா (Sanjay K. Jha)

டந்த சில நாட்களாக இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானுக்குப் பாடம் கற்பித்ததில் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களில் ஒரு பெண்மணி, காஷ்மீர், பஞ்சாப் மீது இருண்ட வானத்தில் ட்ரோன்களின் ‘பிரகாசிக்கும்’ கதிர்களைத் தெளிவாக விவரித்தார். ஒவ்வொரு பாகிஸ்தானிய ஏவுகணையும் எந்தச் சேதமும் இல்லாமல் செயலிழக்கச் செய்யப்பட்டதைப் பற்றிய மின்னணு ஊடகச் செய்தியைக் கிளிப்பிள்ளை போலக் கூறினார்.

“வேடிக்கை என்னவென்றால் எங்கள் ஏவுகணைகள் லாகூரில் இலக்கைத் தாக்கின!” என்று அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

வேடிக்கையா? அவர் இதயம் வலியை உணரவில்லை, அவருடைய மனதில் கவலைகள் இல்லை. ஏனென்றால் அவர் போர் மண்டலத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறார். போர் நடக்கும் இடங்களில் மக்கள் இரவில் தங்கள் பாதுகாப்பை எண்ணி அஞ்சுகிறார்கள். பாகிஸ்தான் இராணுவத் தலைவர் அணுசக்தி பொத்தானை அழுத்த முடிவு செய்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.

ஒரு குண்டு ஒரு முழு மாநிலத்தையும் அழிக்கக்கூடும், இது நம் நாட்டின் உடலிலும் ஆன்மாவிலும் தாங்க முடியாத வடுக்களை விட்டுச்செல்லும். எல்லையின் இருபுறமும் பள்ளிப் பேருந்தின் மீது ஒரு குண்டு விழுந்து, குழந்தைகளை வெடித்துச் சிதறச்செய்தால் என்ன செய்வது? இது வேடிக்கையா?!

இது நம் கற்பனை அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 குழந்தைகளைக் கொன்றுவருவதாகச் சில மதிப்பீடுகள் கூறுகின்றன. 

பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த கேள்விகளுக்கான பதில் எப்போதும் இதுதான்: “அவர்கள் இந்தப் பைத்தியக்காரத்தனத்தில் ஈடுபட மாட்டார்கள். பாகிஸ்தான் நிதானத்தைக் காண்பிக்கும்.” யாரை அழிக்க நினைக்கிறார்களோ அந்த நாடு விவேகமாக நடந்துகொள்ளும் என்று நம்புகிறார்கள். எனவே தாங்க முடியாத பேரழிவால் தங்கள் புல்லரிப்புக்கு இடையூறு ஏற்படாத பட்சத்தில் மக்கள் போரைக் கொண்டாடுகிறார்கள். எதிரியின் நல்லறிவும் கட்டுப்பாடும் இறுதியில் நம்மைக் காப்பாற்றும் என்று நம்புகிறார்கள்.

விவேகமற்ற பைத்தியக்காரத்தனமான செயல்கள் சிறிய அளவுகளில், தங்களுக்குத் தீங்கு விளைவிக்காத அளவில் இருந்தால் பரவாயில்லை என்பதே அவர்கள் நிலைப்பாடு. இது பாசாங்குத்தனம் இல்லையா? கட்டுப்பாடுதான் முக்கியம் என்றால், பொறுப்பாக இருப்பது நல்லொழுக்கம் என்றால், பெரும் சோகத்தைத் தடுக்க மட்டும்தான் அதைப் பயன்படுத்த வேண்டுமா?

மனிதகுலம் ஆயிரக்கணக்கான போர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் வரலாற்றிலிருந்து எந்த அர்த்தமுள்ள பாடத்தையும் கற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. முதல் உலகப் போரில் 40 மில்லியன் மக்கள் இறந்தார்கள், இரண்டாம் உலகப் போரில் 75 மில்லியனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் பூமியிலிருந்து மனிதர்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை உருவாக்கியுள்ளன. இந்த உலகத்தை 55 முறை அழிக்கப் போதுமான வெடிபொருட்கள் உலகில் உள்ளன. அறிவியலும் தொழில்நுட்பமும் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது தெளிவாகிறது.

ஏழை நாடுகளில் கொசுக்கடியால் மக்கள் இறக்கின்றனர், ஆனால் நாகரிக உலகில் அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. மக்கள் பசியால் இறக்கின்றனர், ஆனால் உலகத்தால் அனைவருக்கும் உணவளிக்க முடியாது. ஆனால், அனைவரையும் கொல்லும் வெடிமருந்துகள் தயாராக உள்ளன. 

துல்லியம்: போருக்கு மட்டும்தான் பொருந்துமா?

பெரும்பாலான தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் கோமாளிகள். அவர்கள் முகஸ்துதியில் மன்னர்கள். திறமையில் சராசரிக்கும் கீழே. அவர்கள் போரை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அது ஒரு வீடியோ கேம். போர்களின் கோரத்தை நெருக்கமாகப் பார்த்த விவேகமுள்ள மக்கள்கூட, யுத்த நிபுணர்களைப் போல, துல்லியமான குண்டுவீச்சு எவ்வாறு இலக்குகளைத் தாக்குகிறது என்பதை உற்சாகமாக விளக்குகிறார்கள்.

துல்லியமான குண்டுவீச்சு! சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் வைரஸ்களை இப்படித் துல்லியமாகக் குறிவைப்பதில்லை. பட்டினியால் வாடுபவர்களுக்கு இவ்வளவு துல்லியமான உதவி இல்லை. 

ஆனால் போர் மட்டும் சரியாக, துல்லியமாக நடக்கும். இது உலகம் முழுவதிலும் உள்ள தலைவர்களின் விபரீதமான முன்னுரிமைகளை மட்டுமல்ல, அறிவியல் அறிவின் நாசகரமான சுரண்டலையும் காட்டுகிறது. மனித இருப்பை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய அறிவியல் மனிதகுலத்தை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

பாகிஸ்தானை முன்னுதாரணமாகக் கொள்ளலாமா?

பாகிஸ்தான் தோல்வியுற்ற நாடு. அதன் தலைமையிடம் நல்லறிவோ தொலைநோக்கோ இல்லை. எந்த நாகரிக நாடு பயங்கரவாதத்தை வளர்க்கிறது? மசூத் அசார், ஹபீஸ் சயீத் போன்றவர்களால் தங்கள் சர்வதேச நற்பெயருக்கு சேதம் ஏற்படுவதை பாகிஸ்தான் குடிமக்களால் எவ்வாறு பொறுத்துக்கொள்ள முடியும்? அவர்கள் ஏன் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்?!

ஆனால், இந்தியத் தலைமை? 26 உடல்களுக்கான பதில் 26,000 உடல்கள்தானா? பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய வியூகத்தின் விளைவுகளை அவர்கள் பார்க்கவில்லையா? தாலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கை என்ன ஆனது? உக்ரைனைத் தாக்கியதன் மூலம் ரஷ்யா என்ன இலாபம் அடைந்தது? ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கைக்கும் இராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி தருவோம் என்ற முடிவை நரேந்திர மோடி அரசாங்கம் எடுத்திருக்கிறதா?.

அப்பாவிக் குடிமக்கள் மீது யாராவது தோட்டாக்களை வீசும்போதெல்லாம், இரண்டு அணுசக்தி சக்திகள் போரில் இறங்க முடியுமா? இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தனது ‘வலிமைக் கோட்பாட்டை’ எண்ணிப் பெருமை கொள்கிறார். தோவலுடன் தொடர்புகொண்ட மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பலர், அவர் அந்தக் கோட்பாட்டை எவ்வளவு உறுதியாக நம்புகிறார் என்பதைச் சொல்கிறார்கள்.

சீனா இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அந்தக் கோட்பாட்டிற்கு என்ன ஆனது? அப்போது மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஏன், “இதோ பாருங்கள், அவர்கள் (சீனா) பெரிய பொருளாதாரம். சிறிய பொருளாதாரமாக இருக்கும் நாம் பெரிய பொருளாதாரத்துடன் சண்டையிடப் போகிறோமா? இது பின்வாங்குவது அல்ல, பொது அறிவோடு நடந்துகொள்வது…” என்று சொன்னார்? இந்தியாவின் துணிச்சலும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான உறுதியும் பொருளாதாரத்தின் அளவிற்கு உட்பட்டதா? வலிமையின் கோட்பாடு பாகிஸ்தானுக்கு அல்லது அதைப் போன்ற சிறிய நாடுகளுடனான மோதலுக்கு மட்டும்தான் பொருந்துமா?

யுத்தமும் புத்தமும்

2024 ஜூலை 10, அன்று மோடி ஆற்றிய உரையை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது?

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நாங்கள் எங்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் உலகிற்கு அளித்துவந்தோம். நாங்கள் ‘யுத்தம்’ கொடுக்கவில்லை, உலகிற்கு ‘புத்தர்’ கொடுத்தோம். இந்தியா எப்போதும் அமைதியையும் செழிப்பையும் உலகிற்குக் கொடுத்தது, எனவே 21ஆம் நூற்றாண்டில் இந்தியா தனது பங்கை வலுப்படுத்தப் போகிறது” என்று அவர் பேசினார். 

கடந்த ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் அவர் ‘யுத்தம் அல்ல – புத்தர்’ என்னும் செய்தியை மீண்டும் மீண்டும் கூறினார். அந்தத் தத்துவம் பாகிஸ்தானுக்குப் பொருந்தாதா? எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கொள்கையின் மூலம் இந்தியாவில் இரத்தக்களரி ஏற்படுத்த பாகிஸ்தான் சதி செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது. கடந்த காலங்களில் எண்ணற்ற தாக்குதல்கள் நடந்துள்ளன, பாகிஸ்தானின் ஈடுபாட்டிற்கான மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. 

மசூத் அசாரையும் பிறரையும் விடுவிப்பதற்காக ஒரு விமானம் கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு ஏன் கொண்டு செல்லப்பட வேண்டும்? பயங்கரவாதிகளுக்கு இங்கே இடமில்லை என்று பாகிஸ்தான் அரசு அப்போது கூறியிருக்கலாம். அஜ்மல் கசாப் பாகிஸ்தானிலிருந்து வந்து மும்பையைத் தாக்கினார். மன்மோகன் சிங் அரசாங்கம், பாகிஸ்தானை ராஜதந்திரம் மூலம் தனிமைப்படுத்துவதில் வெற்றிபெற்றது. கடுமையான ஆத்திரமூட்டல் இருந்தபோதிலும் இராணுவ மோதலைத் தவிர்த்தது. அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் பாகிஸ்தானின் ஈடுபாட்டைக் காட்டும் அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு உலகத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 

புல்வாமா தாக்குதலின் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அந்த நடவடிக்கையை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்தியது என்பதை உலகிற்குக் காட்ட முடியாமல்போனது நமது தோல்வி.

பஹல்காமும் தெளிவாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல்தான், ஆனால் நமது பதிலடியை நியாயப்படுத்த பாகிஸ்தானின் ஈடுபாட்டிற்கான மறுக்க முடியாத ஆதாரங்களை நாம் முன்வைத்திருக்க வேண்டும். இந்திய ஆயுதப் படைகள் மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை என்று கூறியது நல்லது. எனவே பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்டன. 

பாகிஸ்தான் தீவிரத்தைத்தை ஆதரித்ததால் இந்தியா உறுதியான பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இரு தரப்பினரும் இப்போது நிதானத்தைக் காட்டி, நமது சர்ச்சைகளைத் தீர்க்க இராணுவம் தவிர்த்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். போர் வெறியைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம்.

பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து அழிக்க வேண்டும் என்ற கதையாடல் ஆபத்தானது, சாத்தியமற்றது. போர் என்பது அழிவுகளைக் கொண்டுவரும் பேரழிவு என்பதை இரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். அது ஒருபோதும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்றல்ல. 

போர்களில் எந்தக் கருத்தும் இல்லாத அல்லது ஆர்வமும் இல்லாத அப்பாவிக் குடிமக்களைக் கொன்று குவிப்பதை நியாயப்படுத்த எந்த தர்க்கத்தையும் கண்டுபிடிக்க முடியாது. போர் அமைதியைக் கொண்டுவரும் என்பதைக் காட்டிலும் அபத்தமான நம்பிக்கை இருக்க முடியுமா?

போர்கள் தவறுகளைச் சரி செய்யாது, அவற்றைப் பெருக்கும். உலகம் பல விதமான பிரச்சினைகளில் சிக்குண்டு திணறிவருகிறது. அதற்கு இப்போது அலெக்சாண்டரோ நெப்போலியனோ ஸ்டாலினோ ஹிட்லரோ தேவையில்லை. ஐன்ஸ்ரைனும் நியூட்டனும்கூடத் தேவையில்லை.

இன்றைய உலகம் புத்தரையும் காந்தியையும் தேடி ஏங்கிக்கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் இந்தியா முட்டாள்தனம், வெறுப்பு அல்லது அரசியல் தந்திரத்தின் மணலுக்கு அடியில் புதைந்து போகக் கூடாது.

மூலம்: Could There Be a More Ridiculous Belief That War Can Bring Peace?

தமிழில்: தேவா

Exit mobile version