Site icon சக்கரம்

அடாவடி இஸ்ரேலை திருப்பி அடிக்கும் ஈரான்!

ச.அருணாசலம், சாவித்திரி கண்ணன்

ஸ்ரேலுக்கும் – ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதி தீவிர மோதல்கள் உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. எல்லா வரம்புகளையும் கடந்து, கொடூரமான வகையில் அத்துமீறல்களை அரங்கேற்றி வருகிறது இஸ்ரேல். பொறுத்துப் பார்த்த ஈரான் தற்போது பொங்கி எழுந்துள்ளது. இந்தியா இஸ்ரேலை ஆதரித்து தீராப்பழிக்கு ஆளாகிறது;

உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ஒரு பயங்கரவாத நாடாக இஸ்ரேல் செயல்பட்டுக் கொண்டுள்ளது. யாருமே தன்னை தட்டிக் கேட்கக் கூடாது, கேட்டால், விளைவுகள் பயங்கரமானதாய் இருக்கும் என சவடால்விட்ட இஸ்ரேலை  ஈரான் பல முறை எச்சரித்துப் பார்த்தும் பயனில்லை.

காசாவில் அப்பாவி பொதுமக்களை தொடர்ந்து கொன்று குவித்து வருவதோடு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள்மக்களுக்கு செல்லவிடாமல் தடுப்பது, லெபனான் மீதான தாக்குதல்கள், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் படுகொலை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒக்ரோபர் 1 ஆம் திகதி நள்ளிரவில் ஏவுகணைகள் வீசி இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு பதிலடி தந்தது ஈரான்.

இஸ்ரேலை – எந்த நிபந்தனையுமின்றி – கண்மூடித்தனமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரிப்பதால், மத்திய கிழக்கிலும் மேற்காசியாவிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது!

இந்தத் தாக்குதலுக்கான பின்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். இதற்கான பதிலடி சரியான நேரத்தில் சரியான இடத்தில் கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் அப்போதே எச்சரித்திருந்தது

இதையடுத்து அமெரிக்கா ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்து இல்லாத நிபந்தனைகளை விதித்தது. ஆயினும் தீர்வை நோக்கி நம்பிக்கையுடன் பேசி வந்தது ஈரான். ஆனால், ’நம்ப வைத்து கழுத்தை அறுத்தான்’ என்பதற்கு பொருத்தமாக ஈரான் நாட்டுடன் ட்ரம்ப்பின் அமெரிக்கா அணு சக்தி உற்பத்தியை நிறுத்துவது குறித்து பேசிக் கொண்டிருக்கும் போதே, அமெரிக்காவின் அடியாளான இஸ்ரேல், ஈரான் நாட்டின் மீது கொடூரமான முறையில் குண்டுவீசி தாக்கி உள்ளது. இதில் ஈரானின் முப்படை தளபதியும், புரட்சிகர காவலர் படை மற்றும அவசரநிலை போர் படை தளபதிகளும் கொல்லப்பட்டனர். ஏராளமான அணுவியல் விஞ்ஞானிகளும் குறி வைத்து தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

நட்டான்ஸ் அணு உற்பத்தி தொழிற்கூடம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுள்ளது. அதனடியில் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலை இருப்பதாகவும் அங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஏவுகணை உற்பத்தி கூடங்களையும், ராடார் வசதிகளையும் ட்ரோன்கள் மூலம் வெடிவைத்து தகர்த்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஏறத்தாழ 200 மேற்பட்ட ஜெட் விமானங்களை கொண்டு 100 இடங்களில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் மார் தட்டி வருகிறது. இப்பொழுது தாக்கி அழிக்காவிடில் ஈரானியர் அணுகுண்டுகளை ஓரிரு நாட்களுக்குள் தயாரித்துவிடுவர், எனவே, இஸ்ரேலின் எதிர்கால இருப்பு கருதி, இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

இந்த ஈனத்தனமான, சட்ட விரோத ரவுடித்தன தாக்குதலை நேர்மை உள்ளம் படைத்த மக்களும், அமைதியை விரும்பும் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.  ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, துருக்கி, பிரேசில், தென்னாப்ரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகளும் இஸ்ரேலின் அத்துமீறலை கண்டித்துள்ளன.

இந்தியா இஸ்ரேலின் “அத்துமீறலை” கண்டிக்கவில்லை, மாறாக, இஸ்ரேலின் ரவுடி அரசின் பிரதமரான நெத்தன்யாகு அவனது நண்பனான நரேந்திர மோடியுடன் தொலைபேசி உரையாடும் பொழுது, மோடி பிரச்சினையை கைமீறி போகாவண்ணம் பார்த்துக் கொள்ள கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இத்துடன் இன்று (14.06.2025) காலை வந்த செய்தியில் நேற்று  நா சபையில் காசா போர்நிறுத்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில்  இந்தியா கலந்து கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்ட செய்தியையும் பொருத்தி  பாருங்கள்.

பெண்கள் குழந்தைகள, பத்திரிக்கையாளர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், ஐநா உதவி பணியாளர் அடங்கிய 55,000 பேரை காசாவில் கொன்று குவித்த இஸ்ரேலுடன் இந்தியா நட்பு நாடாக திகழ்கிறது!

இஸ்ரேலை வற்புறுத்தும் போர் நிறுத்த தீர்மானத்தில் கூட இந்தியா வாக்களிக்காது, தடித்தனம் மிக்க ரவுடியாக ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதையும், போர் இல்லாத சூழலில் அத்துமீறி நாடு புகுந்து இராணுவ தளபதிகளை, விஞ்ஞானிகளை கொல்லுவதை கண்டிக்க மாட்டோம் என்றிருப்பது எதை காட்டுகிறது? நம்மை ‘ஆளுவோர்கள்’ உண்மையில் யார்?

உலகில் தேவையற்ற யுத்தங்களை நிறுத்துவதே எமது பணி என்று தம்பட்டமடித்துவரும் டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டே கூட்டாளியை விட்டு தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்? எல்லாம் வெளி வேடமா?

போரை, தான் துவக்காத மாதிரியும் இஸ்ரேல் தாக்குவது தனக்கு தெரியாத மாதிரியும் ட்ரம்ப் நாடகமாடலாம். அதில் அவர் வல்லவராக கூட இருக்கலாம், ஆனால், அவரை உலகோர் யாரும் நம்பத் தயாராய் இல்லை! குறிப்பாக ஈரான் நம்பத் தயாராக இல்லை, ஈரான் மீது குறை காணும் நாடுகளும் கூட ட்ரம்பை நம்பத் தயாராய் இல்லை!

உண்மையில் இஸ்ரேலின் கையிருப்பில் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக இது வரை உறுதிபடுத்தப்படவில்லை, ஆனால், ஈரான் யுரேனிய சேகரிப்பை பிரதானமாகக் கொண்ட ஒரு மேம்பட்ட அணுசக்தி திட்டத்தைக் கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி மிரட்டிக் கொண்டுள்ளார். அவருடைய சுய ரூபம் அவரது  ட்வீட்டில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. “டீலை முடிக்க சந்தர்ப்பத்திற்கு மேல் சந்தர்ப்பம் நான் கொடுத்தேன், ஈரான் கேட்கவில்லை, அடுத்த தாக்குதலுக்கு திட்டம் ரெடி, இன்னும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை, ஈரான் டீலை முடிக்க முன்வரவேண்டும் இல்லையெனில், மிஞ்சுவதற்கு ஒன்றுமிருக்காது” என தனது ட்ரூத் பதிவேட்டில் (Truth social platform) வெளியிட்டுள்ளது ட்ரம்பின் உண்மை முகத்தை – டீல் பேசும் கயவனின் முகத்தை – உலகின் கண்முன்னே நிறுத்தியுள்ளது.

முதலில், ஹமாசையும் பின்னர் ஹிஸ்புல்லாவையும் பலவீனப்படுத்திவிட்டு, ஈரானை இஸ்ரேல் 2024 இல் தாக்கும் பொழுதே தற்போதைய தாக்குதலுக்கு திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். அவர்களின் நல் வேளையாக சிறியாவில் இருந்த ஆசாதின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது நிகழ்ந்தது. மற்றெதைக்காட்டிலும் இந்த ஒரு நிகழ்வை ஈரானை இஸ்ரேலின் முன்னால் பலவீனப்படுத்தியது.

ஈரானை தாக்கி அழிக்க வேண்டும் என்ற தனது நெடுநாளைய கனவை நனவாக்கவும், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் போரை மூட்டவும் இஸ்ரேல் எவ்வளவோ கடந்த ஆண்டில் முயன்றது. முந்தைய அமெரிக்க அதிபர்கள் இதற்கு தயங்கிய நிலையில் ட்ரம்பின் ‘எண்ட்ரி ‘ களநிலையை புரட்டி போட்டுள்ளது.

ட்ரம்பும் நெத்தன்யாகுவும் பேசி வைத்துக் கொண்டு – அதாவது தெளிவாக ஸகெட்ச் போட்டு- ஈரானை பேச்சுவார்த்தைக்கு (அமெரிக்கா) வலிந்து அழைத்து, அச்சமூட்டும் மிரட்டல்களையும் ஆசை வார்த்தைகளையும் மாறி, மாறிக் கூறி ஈரானை ஆயாசப்பட வைத்த வேளையில், இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

ஈரானுக்கு இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல . இன்று ஈரானுக்கு ஏற்பட்டுள்ள நிலை கடினமானதுதான். அந்நாட்டின் முன்உள்ள தேர்வும் சிக்கலான ஒன்றுதான்.

‘மாய்மால பேச்சுவார்த்தைக்கு ‘ ஒத்து கொண்டால் , அனைத்து அணு உற்பத்தி கூடங்களையும் மூட ஒத்துக்கோண்டால் ஈரான் நாட்டின் தனமானமும், நன்மதிப்பும் பறி போகும். உள்நாட்டிலும், உலகோர் மத்தியிலும் தலைகுனிவை ஏற்படுத்தும்.

மாறாக, திருப்பி தாக்குதல் நடத்தினால், அது மேலும் புதிய தாக்குதல்களை வரவழைக்கும் , நிச்சயமற்ற எதிர்காலத்தை ஈரானுக்கு திறந்துவிடும்!

ஆனால், தற்போதைய செய்திகளின்படி ஈரான் இஸ்ரேலின் மீது நூற்றுக்கும் அதிகமான ட்ரோன்களையும் ஏவுகணையும் ஏவி விட்டுள்ளதாக தெரிகிறது, இஸ்ரேலின் தலைநகர் டெல் அவீவ் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிகிறது. பென்குரியன் விமானத் தளம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது, பொதுமக்கள் அனைவரும் பதுங்கு குழிகளில் ஒளிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் சுப்ரீம் தலைவர் அயத்துல்லா அலி காமெனி, ”ஜியோனிச ஆட்சியாளர்கள் ஈரானை தாக்கி, மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்துள்ளனர். அவர்களுக்கு உரிய கடுமையான தண்டனையை ஈரான் கொடுக்கும் என கூறியுள்ளார். மேலும் இதற்கு உடந்தையாகவும், உறுதுணையாகவும் இருக்கும் அமெரிக்காவும், டிரம்பும் இந்த பழியிலிருந்து தப்ப முடியாது. டீலுக்காக அழைக்கும் உங்களது உண்மையான முகம் எங்களுக்கு தெரியும்’’ என்றும் கூறியுள்ளார்.

ஈரானை பொறுத்த வரை அது இஸ்ரேலை விட மிகப் பெரிய நாடாகும். இஸ்ரேலிடம் 1,70,000 படை வீரர்கள் என்றால், ஈரானிடம் ஆறு லட்சம் படை வீரர்கள் உள்ளனர். விமானப் படை, நவீன ராக்கெட்டுகள், போர் விமானங்கள் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ளது. அதே சமயம் இஸ்ரேல் தன்னை நோக்கி வரும் ஏவுகணைகள் டிரோன்களை இடைமறித்து தாக்கி அழிக்கத் தக்க வகையில்  ‘அயர்ன் டோம்’, ‘ஏரோ’ அமைப்புகள் மற்றும் டேவிட் ஸ்லிங் ஆகியவற்றை அமெரிக்க கூட்டோடு நிறுவியுள்ளது.

இந்த மோதல் மேற்கு ஆசிய பிராந்தியத்தை தலைகீழாக புரட்டி போடவல்ல நிகழ்வாகும். இது தொடருமானால் வரலாறு காணாத அழிவுகளை இரு நாடுகளும் சந்திக்க நேரும். ஈரானின் எண்ணெய் கிணறுகள் அழிக்கப்பட்டால், உலகில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி தாறுமாறாக உயரும். இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ரவுடி ராஜ்ஜியமான (Rogue state) இஸ்ரேலையும், கொலைகாரன் நெத்தன்யாகுவையும் டிரம்ப தட்டி கேட்க மாட்டார் . ஆனால், அவர் அவ்வாறு செயலில் இறங்க உலக தாடுகள் குறிப்பாக ரஷ்யா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் முன்வர வேண்டும் . ஈரான் இப்படி வீழ்த்தப்படுவதை உலகம் அனுமதிக்க கூடாது, அது நியாயமும் இல்லை! இஸ்ரேலின் அராஜகத்தை தடுத்து நிறுத்தாவிடில், அது இன்னொரு உலகப் போருக்கு வித்திட்டாலும் ஆச்சரியமல்ல.

Exit mobile version