Site icon சக்கரம்

இஸ்ரேல் தலைநகரைத் தாக்கி ஈரான் பதிலடி!

ஸ்ரேல் நடத்திய அடாவடித் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் இராணுவத் தலைமையகம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்காசியாவில் இரண்டாவது நாளாக போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 78 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 320 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா.வுக்கான ஈரான்  தூதர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ‘உண்மை வாக்குறுதி III’ (True Promise III) என்ற பெயரில்,  ஜூன் 14, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:30 மணியளவில் தனது தாக்குதலை நடத்தியுள்ளது.

முக்கிய இடங்களைத் தாக்கிய ஈரான்

இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ்-வில் இராணுவ அமைச்சகம் அமைந்துள்ள இடங்கள்,  இராணுவத் தளங்கள், அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளைக் குறிவைத்து வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.  டெல் அவிவ், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் (அல்-குத்ஸ்), திபேரியாஸ் ஏரி, ஹைபா, பீர்ஷெபா  உள்ளிட்ட இடங்களை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியிருப்பதை, இஸ்ரேலிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் இஸ்ரேலின் இரண்டு விமானங்களையும் ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஈரானின் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி, ‘உண்மை வாக்குறுதி III’ தாக்குதல் நடவடிக்கை “தேவைப்படும் வரை தொடரும்” என  அறிவித்துள்ளார்.  மேலும், இஸ்ரேலின் கூட்டணி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளுக்கும் ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் தாக்குதல், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அதிக சேதத்தை  ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அறிவித்த இஸ்ரேல்

உத்திசார் ஆய்வுகள் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான மையத்தின் இயக்குநர் அமீர் அல்-மூசாவி, ஈரானின் ஏவுகணைகளில் ஒன்று டெல் அவிவில் உள்ள அணு ஆராய்ச்சி மையத்தைத்  தாக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் அபாயச் சங்கு ஒலித்தது. உயிர்ப் பயத்தில் நாட்டு மக்கள் பதுங்குகுழிகளை நோக்கிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலின் தலைநகரில் பலத்த சேதத்தை ஏற்படுத்திய காணொளிகளை மக்கள் பகிரத் தொடங்கியவுடன், தாக்குதல் தொடர்பான படங்களையோ, காணொளிகளையோ இஸ்ரேலியர்கள் யாரும் வெளியிடக் கூடாது என இஸ்ரேல் அரசு தணிக்கை உத்தரவும் பிறப்பித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீதான தாக்குதல் இஸ்ரேலின் முதன்மையான போர்க்களமாக மாறியுள்ளதாகவும், காசா போர் முனை இரண்டாம் நிலையாக மாறியுள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஏவுகணைகள், டிரோன்களைப் பயன்படுத்தி ஈரானின் எரிசக்தி நிலையங்கள், ஏவுகணை அமைப்புக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் இரண்டு துணைத் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு இல்லை

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்களால் அந்நாடு அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும், சர்வதேச அணுசக்தி நிறுவனம் அங்கு வெளிப்புற கதிர்வீச்சு  அளவுகளில் எந்த அதிகரிப்பும் இல்லை என்று தெரி வித்துள்ளது.

பயங்கரவாத செயலுக்கு பதிலடி

இஸ்ரேல் மீது இரவோடு இரவாகத் தாக்கு தல்களை நடத்திய பின்னர், அந்நாட்டின் அரசு செய்தித் தொடர்பாளர் பதேமே மொஹஜெரானி, இஸ்ரேலை தண்டிப்பது “ஈரானின் பெருமையை மீட்டெடுப்பதற்கும், ஈரான் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் இன்றியமையாதது. யூத இனவெறி ஆட்சியின் பயங்கரவாத மற்றும் மிருகத்தனமான செயலுக்கு பதிலளிக்கும் விதமாக தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் மிரட்டல்

ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்தால் “தெஹ்ரான் பற்றி எரியும், மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டிவரும்” என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ், ஈரானின் மதத்தலைவர் கோமெனிக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்

முன்பே தெரியும் – ட்ரம்ப்

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொடுத்த தொலைபேசி நேர்காணலில், தாக்குதல்கள் நடைபெற உள்ளது தனக்கும் தனது குழுவுக்கும் முன்கூட்டியே தெரியும் எனத் தெரிவித்தார். “எங்களுக்கு எல்லாம் தெரியும், ஈரானின் அவமானத்தையும் அழிவையும் காப்பாற்ற முயற்சித்தேன். ஒரு ஒப்பந்தம் நிறைவேறுவதைக் காண நான் விரும்புவதால் அவர்களைக் காப்பாற்ற மிகவும் கடினமாக முயற்சித்தேன். இன்னும் கூட ஒரு உடன்பாட்டிற்குத் தயாராக இருக்கிறேன்”என அவர் தெரிவித்தார்.

உரையாடல் அர்த்தமற்றது

இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கிய பிறகு, இப்போதே அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், பேச்சு வார்த்தையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் இத்தகைய தாக்குதலுக்குப் பிறகு அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான உரையாடல் “அர்த்தமற்றது” என ஈரான் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவுக்குத் தெரியாமல் இந்தத் தாக்குதல் நடந்திருக்காது எனவும் அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே அமெரிக்காவுடன் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

அச்சுறுத்தக்கூடாது : போப் லியோ

இதனிடையே, “யாரும் இன்னொருவரின் இருப்பை ஒருபோதும் அச்சுறுத்தக் கூடாது. அணுசக்தி அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கான உறுதியை மரியாதை நிமித்தமான சந்திப்புகள், நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், நீதி, சகோதரத்துவம் மற்றும் பொது நன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் நீடித்த அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டும்” என்று புதிய போப் லியோ வலி யுறுத்தியுள்ளார். அமைதியான சூழலை எதிர்பார்க்கும் அனைத்து நாடுகளின் விருப்பத்தை ஆதரிப்பது, நல்லிணக்கமான பாதைகளை உருவாக்குவது, அனைத்து நாடுகளுக்குமான பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையிலான தீர்வுகளை ஊக்கு விப்பது அனைத்து நாடுகளின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திடீர் தாக்குதல் ஏன்?

டொனால்ட் ட்ரம்ப் 2015 இல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை ஒருதலைப்பட்சமாக வெளியேற்றிக் கொண்டார். அதன் பிறகு, கடந்த 7 ஆண்டுகளில் ஈரான் அணுசக்தி தொழில் நுட்பத்தில் மிக வேகமாக முன்னேறி வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் சவாலாக ஒரு நாடு உள்ளது என்றால் அது ஈரான் மட்டுமே. அவர்களிடம் அணு ஆயுதம் வந்துவிடக் கூடாது என அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், ஈரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆராய்ச்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அவ்வாறு செய்தால், ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட சாதகமான சில விஷயங்களை அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும் அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்காகப் பலமுறை ஈரான் மற்றும் அமெரிக்க தரப்பு அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சாதகமான வாதங்களையே அமெரிக்கா தரப்பு முன்வைத்த காரணத்தால், பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தேக்கம் அடைந்தது. மறுபுறத்தில், ஈரான் தற்போது செறிவூட்டி வரும் யுரேனியத்தை மேலும் மேம்படுத்தினால், அதனை அணு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பது அமெரிக்கா – இஸ்ரேலின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், செறிவூட்டப்பட்ட 270 கிலோவுக்கும் மேற்பட்ட யுரேனியம் இருப்பதாகவும், ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட அணு குண்டுகளைத் தயாரிக்கும் ஆபத்து இருக்கிறது எனவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியது. ஆனால், இந்த அணுசக்தி ஆராய்ச்சி அணு குண்டு தயாரிப்பதற்கானதல்ல என்றும், இது தங்களின் அணுசக்தி துறை மற்றும் மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்டது எனவும் ஈரான் தெரிவித்து வந்தது. அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களும் கூட, ஈரான் தீவிரமாக ஒரு அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றே மதிப்பிட்டிருந்தன. பல ஆண்டுகாலமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த மறைமுகப் போர், இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்குப் பிறகு ஜூன் 13 அன்று பகிரங்கமாக வெடித்தது. இதன் காரணமாகவே, ஈரானின் முக்கிய செறிவூட்டல் தளமான நடன்ஸ் அணுசக்தி நிலையத்தையும், ஈரானின் முன்னணி அணு விஞ்ஞானிகளையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

-தீக்கதிர்
ஜுன் 14, 2025

Exit mobile version