Site icon சக்கரம்

சாலைகளில் அடிபட்டுக் கிடக்கிற இவர்களைக் கவனித்திருக்கிறோமா?

ரேவதி ராமச்சந்திரன் 

நெடுஞ்சாலைப் பயணங்களில் இந்தக் காட்சியை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். படையும் நடுங்கும் பாம்புகள் தலை நசுங்கிக் கிடக்கும் காட்சிதான். அப்போது கூட ஒரு சின்ன அச்சம் மனதுக்குள் எட்டிப்பார்க்கும். செத்த பாம்புகள் காற்றைக் குடித்து மறுபடி உயிர்பெற்று விடுமாமே என்று நம்புகிறவர்கள் இப்போதும் இருக்கிறார்களே.

பார்க்கிற எல்லாப் பாம்புகளும் உயிரைக் கொல்லும் நஞ்சு உள்ளவை  அல்ல. எந்தப் பாம்பும் தற்காப்புக்காகத்தான் தாக்குகிறதேயன்றி மனிதர்களை எதிரிகளாகக் கருதியல்ல. இதை பள்ளிக்கூட உயிரியல் வகுப்புகளில் படித்திருக்கிறோம். ஆனாலும் பாம்பைப் பார்க்கிறபோது அந்தப் பாடம் நினைவுக்கு வருவதில்லை.

நினைவுபடுத்திக் கொள்வதற்காகவும், நினைவில் கொள்வதற்காகவும் சில முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். உயிரினங்களில் ஊர்வன வகையைச் சேர்ந்தது பாம்பு. முதுகெலும்புடன் நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட பாம்புக்குக் கால்கள் இல்லை, உடலை அசைத்து நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரில் நன்றாக நீந்தக் கூடியவை. 

அத்தனையும் நச்சுப்பாம்பா? 

உலகில் தோராயமாக 3,600 பாம்பினங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 மட்டுமே நச்சுப் பாம்புகளாகும். இந்தியாவில் உள்ள சுமார் 230 பாம்பினங்களில், கிட்டத்தட்ட 50  மட்டுமே நஞ்சு கொண்டவை. அந்த ஐம்பதிலும் சில வகைகள் மட்டுமே மனிதர்களின் வாழ்விடங்களான ஊர்ப்புறங்களில் இருக்கின்றன, மற்றவை அடர் காடுகளுக்குள்ளும் பாலைவனங்களிலும் குறிப்பிட்ட சூழலியல் உள்ள இடங்களிலும்தான் வாழ்கின்றன. மனிதர் வாழ்விடங்களுக்கு அந்தப் பாம்புகள் வருவது கூட, தங்களுக்கான இரைகளைத் தேடித்தான். 

இந்தியாவிலுள்ள ராஜநாகம், நல்லபாம்பு, கட்டுவிரியன் போன்றவை நச்சுப் பாம்புகள் ஆகும். இவை தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் உணவுக்காகவும் நஞ்சை பயன்படுத்துகின்றன. அனைத்து வகையான பாம்புகளும் ஊனுண்ணிகள் ஆகும். இவை சிறிய ஊர்வன வகைகளையும், எலிகளையும், பறவைகளையும், அவற்றின் முட்டைகளையும், பூச்சிகளையும் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன.

பொதுவாகப் பாம்புகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. விரியன்கள் போன்ற சில வகைகள் குட்டி போடுகின்றன. மண்ணுழிப் பாம்புகளின் கருமுட்டை வயிற்றில் வளர்ந்து குட்டியாகப் பிறக்கிறது. பாம்புகள் முட்டைகளுக்கு அதிகப் பாதுகாப்பு தருவதில்லை. சில பாம்புகள் முட்டைகளை அடை காக்கின்றன. குருட்டுப்பாம்பு அல்லது புழுப்பாம்பு எனப்படும் பாம்புகள் “ரீனல்” என்று நடைமுறையில் குறிப்பிடப்படுகின்றன. இவ்வகைப் பாம்புகள் தரையில் இலைகளை கூடாகக் கட்டி அதில் முட்டையிடுகின்றன. இந்தக் குருட்டுப்பாம்பு வகையில் பெண்ணினம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தப் பாம்பு முழுமையாகப் பார்வைத் திறன் இல்லாததல்ல. மற்ற பாம்புகள் போல இதற்குக் கண்கள் வெளிப்படையாக இருப்பதில்லை. தோலின் அடியில் அல்லது செதில்களால் மூடப்பட்டதாக இருக்கும். அரை வெளிச்சத்தையும் இருட்டையுமே உணர முடியும். ஆனால், வெளியே கண் இல்லாததால் இந்தப் பெயர் வாய்த்துவிட்டது. மேலும், அளவில் சிறியதாக, புழுப்போல இருப்பதால், வேகமாக நெளிந்து மண்ணுக்குள் புதைந்துகொள்வதால் இதற்குப் புழுப்பாம்பு என்ற துணைப் பெயரும் சேர்ந்துகொண்டது.

மனித நாகரிகங்களில் பாம்பு 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாம்பு வழிபடப்படுகிறது. மரத்தடிக் கோவில்களில் பாம்புச் சிலைகளைக் காணலாம். புராணங்களில் பாம்பைப் படுக்கையாக வைத்திருக்கும் கடவுள், கழுத்தில் சூடியிருக்கும் கடவுள் எனப் பல சித்தரிப்புகள் இருக்கின்றன. இங்கு மட்டுமல்ல கிரேக்கப் புராணங்களிலும் இதர பல தொன்மை இலக்கியங்களிலும் பாம்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் உண்டு. பாரசீக நாடுகளிலும், இலங்கை, சீனா, ஜப்பான், பர்மா, ஜாவா, அரேபியா, எகிப்து, கிரீஸ், இத்தாலி, பெரு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் வழிபாட்டு அடையாளங்களாகப் பாம்புகள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாக வணங்கப்படுகிறது, சிலவற்றில் கெட்ட தெய்வமாக அஞ்சப்படுகிறது. 

உலகெங்கும் பாம்புகள் விவசாயிகளின் நண்பனாக கருதப்படுகின்றன. குறிப்பாக, எலிகளைப் பிடித்து உண்பதால், எலிகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தடுக்கப்படுகிறது. பூச்சிகள், தவளைகள் போன்றவற்றையும் உணவாகக் கொள்வதால், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதமும் கட்டுப்படுத்தப்படுகிறது. தங்களது இரைகளைக் கவ்விக்கொள்வதோடு, கழுகு ஆந்தை கீரிகள் உள்ளிட்டவற்றுக்குப் பாம்புகள் இரையாகவும் அமைகின்றன. அதன் மூலம் பாம்புகள் இயற்கையான உணவுச் சங்கிலியில் முக்கியமானதொரு கண்ணியாக இருக்கின்றன. நெடுங்காலப் பரிணாம வளர்ச்சியில் இயற்கையமைப்புகளுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்ட பாம்பினம் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும் உள்ளதென விலங்கியல் கூறுகிறது.

ஆயினும், பாம்பைப் பார்த்தவுடனேயே, அது நஞ்சில்லாத பாம்பு என்றாலும் அடித்துக் கொல்லப்படுகிறது. ஒரு பக்கம் அடித்துக்கொன்றுவிட்டு இன்னொரு பக்கம் பாம்புப் புற்றில் பால் ஊற்றப்படும். பாம்புகளோ பாலைப் பருகுவதில்லை! இத்தகைய சூழலில்தான் பாம்புகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கிற திட்டமிட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. முதலில் பார்த்த நெடுஞ்சாலைக் காட்சிகளை மாற்ற வேண்டியுள்ளது. சாலை விரிவாக்கங்களின்போது பாம்புகளுக்கும் இதர வனவிலங்குகளுக்கும் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க, விலங்கியலும் சார்ந்த அறிவியல் கண்ணோட்டங்களோடு திட்டமிட வேண்டியுள்ளது. 

வனச்சட்டமும் பாம்புகளும் 

இந்திய வனச்சட்டம் 1972ன் படி பாம்புகளைத் துன்புறுத்துவதோ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம். இருப்பினும், ஏற்கெனவே பார்த்தது போல, விழிப்புணர்வின்மையால் பெரும்பாலானோர் பாம்புகளைக் கண்டவுடன் கொன்றுவிடுகின்றனர். அடித்துக் கொல்வது ஒரு புறம், வாகனங்களில் அடிபட்டுச் சாவது இன்னொரு புறம். 2021 முதல் 2024 வரை நான்காண்டு காலத்தில் வாகனங்களில் அடிபட்டும் நசுங்கியும் 499 பாம்புகள், 152 பல்லி வகை உயிரினங்கள், 115 நிலநீர் வாழ் விலங்குகள், 27 ஆமைகள் சாலைகளில் மாண்டு கிடந்தன என செய்திகள் தெரிவிக்கின்றன.

பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளின் இயக்க முறைகளையும் திட்டங்களால் சாத்தியமாகக்கூடிய தாக்கங்களையும் புரிந்துகொண்டு சாலைகளை அமைக்கிற நடைமுறை பரவலாக வேண்டும். பாம்புகள் மட்டுமல்லாமல் மான் உள்ளிட்ட பல விலங்குகள் வேக வாகனங்களால் காயமடைகின்றன. விலங்குகளுக்கான சுரங்கப் பாதைகள்,  மேம்பாலங்கள் என அமைப்பதோடு, குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களுக்குக் கறாரான வேக வரம்புகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். வாகனங்களைச் செலுத்துவோருக்கும் பொதுமக்களுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வைப் பரப்ப வேண்டும். சாலைகளையும் வாழ்விடங்களையும் பிரிப்பது, வாகன இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, விலங்குகள் சாலைக்கும் ஊருக்குள்ளேயும் வரத் தேவையில்லாத ஏற்பாடுகளைச் செய்வது என்ற அணுகுமுறைகள் அவசியம் தேவை.

ஒலி மாசு என்பதும் வனவிலங்குகளின் வாழ்வியலைச் சீர்குலைத்து ஒவ்வாத சூழலை ஏற்படுத்தக்கூடும். வாகன இரைச்சல்களால் மனிதர்களின் கட்டடங்களுக்குள் ஒலி மாசு நுழைவதைத் தடுக்கும் ஏற்பாடுகள் பல சாலைகளில் செய்யப்படுகின்ற. அத்தகைய ஏற்பாடுகளுக்கான உரிமை வன விலங்குகளுக்கும் உண்டு.

சாலைகளில் வேலி அமைக்கப்படும்போது, வனவிலங்குகள்  சுரங்கப் பாதைகள் தங்களுக்குரிய வழிகளைப் பயன்படுத்த விரைவிலேயே கற்றுக்கொள்கின்றன.

வாழ்விட மறுசீரமைப்பு 

சீரழிந்த வாழ்விடங்களை மீட்டெடுப்பது வனவிலங்குகளுக்கு மிகவும் பொருத்தமான பகுதிகளை உருவாக்க உதவுவதுடன்  சாலைகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். 1972ஆம் ஆண்டுச் சட்டம் வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதற்கான கட்டமைப்பை வலியுறுத்துகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளுக்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வழங்குகிறது. தேசிய வனவிலங்குகள் வாரியம் இந்த வகையிலான சாலைத் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்குகிறது. புலிகள் வாழ்விடங்களில் சாலைகளை அகலப்படுத்தவோ மேம்படுத்தவோ கூடாது என்றும், தற்போதுள்ள சாலைகளை அவற்றின் தற்போதைய வடிவத்திலும் அகலத்திலும் பராமரிக்க வேண்டும் என்றும், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காப்பகங்களில், கால்வாய்கள் அமைக்கவும், கடந்து செல்ல முடியாத சாலைகளாக  மறுவடிவமைப்பு செய்வது போன்ற வழிமுறைகளை இந்த வாரியம் பரிந்துரைக்கிறது.

இவை தவிர, சாலை விரிவாக்கத்தின் போது, சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்,  வனவிலங்கு சரணாலயங்கள், காடுகள் போன்றவற்றைச் சீர்குலைக்காமல், பாதுகாப்பாக சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. அந்த விதிகள் எந்த அளவுக்கு நேர்மையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன? பாம்புதானே சாகிறது, ஏதோவொரு விலங்குதானே அடிபடுகிறது என்ற அலட்சியம் மேலோங்குகிறதா?

சாலைக் கொலைகள் தினம்! 

அமெரிக்காவில் விலங்குகள் சாலையில் அடிபட்டு இறப்பதைத் தடுக்க, சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்புக் குழுக்களால்  2020ஆம் ஆண்டில் “தேசிய சாலைக் கொலை தினம்” என்று ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் செப்டம்பர் 25இல் அந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைக் கடக்கும்போது முயல்கள், அணில்கள், பாம்புகள், பல்லிகள், ஓணான்கள், தவளைகள், தேரைகள்,  சிறிய பறவைகள், வான்கோழி, கழுகு போன்ற பெரிய பறவைகள், நாய்கள், பூனைகள், மான்கள், நரிகள், கால்நடைகள் போன்ற விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு பலத்த காயமடைகின்றன, அல்லது மரணமடைகின்றன. 

வாகனங்களின் முகப்பு விளக்கொளியால் கவரப்படும் வவ்வால்கள், ஆந்தைகள், பூச்சியினங்கள் அடிபட்டு இறக்க நேரிடுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றைத் தடுப்பதற்கான ஒரு கூட்டு முயற்சியாக சாலை கொலை தினத்தை அனுசரித்து, விலங்கினங்களின் வாழும் உரிமை பற்றிய விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. இத்தகைய முயற்சிகள் இங்கேயும் தேவைப்படுகின்றன.

இரவில் வாகனம் ஓட்டும்போது, குறிப்பாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகத்தைக் குறைப்பது, சுற்றிலும் விலங்குகளின் நடமாட்டம் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்டு வாகனத்தைச் செலுத்துவது, செல்லும் சாலையில் விலங்குகளின் கால் தடங்கள், பறவைகளின் தீவனங்கள் முதலியவை தென்படுகின்றனவா என்று கவனிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் வலியுறுத்தப்படுகின்றன. இரவு நேரத்தில் விலங்குகள் அதிக சுறுசுறுப்பாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இரவில் வாகனங்களின் முகப்பு ஒளியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும், அதிக வெளிச்சத்தை உமிழாமல் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிச்சக் கற்றைகளைப் பாய்ச்சுவது என்ற ஆலோசனையும் முன்வைக்கப்படுகின்றன.

“வனப் பகுதிகளுக்குச் செல்லும்போது விளக்குகளை அணைத்து விட வேண்டும். திடீரென்று பிரேக் போடுவது, அதிக வேகம், திடீர் திருப்பங்கள் போன்ற செயல்கள் விலங்குகளைத் திடுக்கிடச் செய்து குறுக்கே வர வைத்துவிடும். அப்படியே விலங்குகள் வாகனங்களில் அடிபட நேர்ந்தால், அப்படியே விட்டுவிட்டுப் போகாமல்  வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தெரிவிக்க வேண்டும். விலங்குகளின் செயல்பாடுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் மாற்று வழிகளில் வாகனத்தைச் செலுத்தலாம்.

பாம்புகளையும் இதர வன விலங்குகளையும் போற்றி வணங்கிவிட்டு, பிறகு கைவிடுகிற கலாச்சாரம் முற்றுப்பெற வேண்டும். உயிர்களின் மீதுள்ள அன்பினால் மட்டுமல்லாமல், அவற்றைக் காப்பது நம் பொறுப்பு என்ற கடமையுணர்வோடும் இந்தச் சிந்தனைகளை சமூகத்தின் காதுகளில் போட்டுவைப்போம். 

கட்டுரையாளர்:

ரேவதி ராமச்சந்திரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உதவி செவிலியர் கண்காளிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமூக விழிப்புணர்வு இயக்கங்களில் ஈடுபட்டு வருபவர்.

ஜூலை 16 உலக பாம்புகள் தினம் 

Exit mobile version