–பாஸ்கர் செல்வராஜ்
ஈரான்-இஸ்ரேலிய போருக்கான தேவை என்ன?
எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது.
தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மையங்களின் மீது உலகின் மிகப்பெரிய குண்டுகளை வீசினார்கள். இறையாண்மையும் முதுகெலும்பும் இருந்த நாடுகள் இதனைக் கண்டித்தன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நவகாலனிகள் உழப்பும் வார்த்தைகள் பேசி ஆதரித்தன.
அடுத்த அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். இஸ்ரேல் உலகுக்கு அறிவிக்காமல் அணு ஆயுதம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஈரான் அப்படி அறிவிக்காமல் வைத்திருக்கிறதா என்று எவரும் அறியாத நிலையில் ரஷ்ய பாதுகாப்பு உயர்மட்ட குழு உறுப்பினரான இவரின் அறிவிப்பு ஈரானின் அடுத்த நகர்வுக்கு முறைமுக ஆதரவும் வழிகாட்டி உதவுவதாகவும் இருந்தது.
பின்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் ரசியா சென்று புட்டினின் உதவிக்கான உறுதிமொழியைப் பெற்றுவந்த பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இதுவரையில் நடைமுறையில் இருக்கிறது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்று பேசி இருக்கிறார். இது குறித்த அரசியல் அக்கப்போர்கள், இராணுவக் கருவிகளின் நுட்பங்கள், அமெரிக்க அரசியல் கோமாளியின் உளறல்கள் குறித்த செய்திகள், காணொளிகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து இந்தப் போரின் அரசியல் பொருளாதாரம் குறித்து மட்டும் பார்ப்போம்.
உலகப் போர்களைப் பொருத்திப் பார்க்கும் சட்டகம் (Frame)
இரத்தம் சிந்தி செய்யும் போர் அரசியலை அதனைச் சரியான சட்டகத்தில் வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்வது உலகுடன் ஒத்திசைந்து செல்ல வேண்டிய நமது பாதையைச் செவ்வனே செதுக்கிக் கொள்ள உதவும். மேற்காசியா என்றால் எரிபொருளும் ஆசிய-ஐரோப்பிய வணிகப் பாதையும். அதில் அமெரிக்காவின் தலையீடு என்றால் பெட்ரோ டொலரும் ஆசிய ஐரோப்பிய வணிகக் கட்டுப்பாடும்தான்.
பெட்ரோ டொலர் உலகப்பொருள் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப மூலதனப் பொருள்களின் மதிப்பைத் தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்திக்கு டொலரைக் கொண்டே இவற்றை வாங்க வேண்டும் என்பதால்தான் அதற்கான தேவை சந்தையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் விதிகள் கொண்ட உலக ஒழுங்கு நடைமுறையில் இருந்து வந்தது.
இந்த ஒழுங்கு ரஷ்யா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளரான சீனாவுக்கு டொலர் தவிர்த்த சொந்த நாணயங்களில் எரிபொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாள் முதல் உடைப்பைச் சந்திக்க தொடங்கியது. இதோடு முந்தைய மரபான எரிபொருள் தொழிநுட்ப உற்பத்தி மரபுசாரா மின்னணு தொழில்நுட்ப உற்பத்திக்கு மாறி வருகிறது. மாறிக் கொண்டிருக்கும் நவீன மின்னணு மாற்று எரிபொருள் உற்பத்திக்கான நுட்பங்களைச் சீனா அடைந்தது. இது மேலும் டொலர்மைய உலக ஒழுங்கை உடைத்து டொலர் இல்லாமலும் பொருள் உற்பத்தி, வணிகம் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தியது. அந்த உடைப்பை அமெரிக்கர்கள் சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தபோது வந்த கொரோனாவினால் உலக உற்பத்தி மேலும் நிலைகுலைந்து நின்றது. அந்த உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களும் அந்த சொத்துக்களின் மீது கட்டப்பட்ட பங்குச்சந்தை மாய மாளிகையும் மதிப்பு குறைந்து உடைந்து இருக்க வேண்டும்.
அப்படி அனுமதிக்காமல் அந்த சொத்துக்களின் மதிப்பைச் செயற்கையாக டொலர் பணத்தை உற்பத்திசெய்து நிலைநிறுத்தியதால் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான டொலர் சுழற்சியின்றியும் இப்படி டொலரை அச்சடித்ததாலும் சந்தையில் டொலர் மிகைமூலதனம் திரண்டது. அதாவது சொத்தின் விலையை உயர்த்திக் காட்டி டாலரின் மதிப்பு நீர்க்க வைக்கப்பட்டது. இப்போது நீர்த்து பெருகிப்போன டொலருக்கு ஏற்ப அதற்கு எதிராக மதிப்பிடப்பட்ட மற்ற உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு மாறவேண்டும். பொருள்களைவிட அதிகமாக உற்பத்தி செய்த டொலர் அதன் மதிப்பை அடைய உலகம் முழுக்க பாய்ந்து சொத்துக்களின் தேவையைக் கூட்டி விலையை உயர்த்தியது. பொருள் உற்பத்தியின்றி ஏற்பட்ட அந்த விலை உயர்வுக்கு ஏற்ப மற்ற நாடுகளில் ஏற்பட்ட பணத்தின் பெருக்கம் இயல்பாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பைக் குறைத்தது. அது பணத்தில் இயங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுகுறு உற்பத்தியாளர்களின் வருவாய் மற்றும் செல்வத்தை மறைமுகமாக நீர்க்கச் செய்து குறைத்தது. இப்படி பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு கூடும் அதேவேளை மற்றவர்களின் வருமானம் சொத்து ஆகியவை மறைமுகமாக குறைக்கப்பட்டது.
அப்போது செய்த முதலீடுகள் கொரோனாவிற்குப் பிறகான பொருளாதார உற்பத்தி பெருக்கத்தை எதிர் நோக்கி இடப்பட்டவை. அந்த மதிப்பு வருங்கால உற்பத்தி மீதான உத்தேச மதிப்பு; உண்மை மதிப்பு அல்ல. உண்மை மதிப்பு பின்னர் பொருளை உற்பத்தி செய்து விற்று முதலையும் இலாபத்தையும் அடைவதில் இருக்கிறது. உத்தேச மதிப்பை உண்மையாக்க அதிக விலையில் பொருளை விற்றதால் இலாபம் பெருகி ஜிடிபியும் உயர்ந்தது. ஆனால் ஏற்கனவே பணத்தின் மதிப்பைத் திரித்ததால் வருவாயை இழந்த மக்கள் மேலும் அதிக விலை கொடுத்து பொருளை வாங்கியதால் அவர்களின் வாங்கும் திறன் குறைந்து விற்பனை சரிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பொருள்களின் விலை வீழ்ந்து சொத்துக்களின் மதிப்பு இப்போது சரியவேண்டும். அதாவது தொடங்கிய இடத்திற்கே முதலாளித்துவம் வந்து நிற்கிறது. அதுதான் அதனுடைய இயல்பு.
இல்லையேல் மதிப்புமிக்க புதிய சொத்தையும் அதற்கான சந்தையையும் டொலர் நிதிமூலதனம் அடையவேண்டும். ஆனால் அப்படியான மாற்று உற்பத்தி இவர்களிடம் இல்லை. எனவே அந்த உற்பத்தியை வைத்திருக்கும் சீனர்களின் சொத்தை வழக்கம்போல ஆட்டையைப் போடுவதுதான் ஒரேவழி. கொரோனாவின் போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப்போல டாலருக்கு சந்தையைத் திறந்து விடாமல் மூடிக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி சந்தையை சீனர்கள் விரிவாக்கி இருக்கிறார்கள். அந்த சொத்தை டொலர் மூலதனம் அடைவது அல்லது அதனை உடைத்து பழைய எரிபொருள் தொழில்நுட்ப உற்பத்தியை மையப்படுத்திய டொலர்மைய ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஒன்றே அமெரிக்கர்களின் நெருக்கடியைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. இந்த பொருளாதாரத் தேவைக்கான
1. பழைய உற்பத்தி ஒழுங்கை உடையாமல் காப்பது,
2. புதிய உற்பத்தியில் உருவாகும் சொத்தைத் டொலர் நிதிமூலதனம் அடைவது
ஆகிய இரண்டு நோக்கத்தின் பொருட்டும் நடக்கும் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது.
போருக்கு முந்தைய ஈரான்-இஸ்ரேலிய சூழல்
5ஜி தொலைத்தொடர்பு மற்றும் மின் மகிழுந்துகள் உள்ளிட்ட மாற்று உற்பத்தி நுட்பங்களைக் கொண்டிருக்கும் சீனர்களின் புதிய உற்பத்தி தொழில்நுட்ப சொத்துக்களை டொலர் நிதிமூலதனம் அடைய செய்த வணிகப்போர், தொழில்நுட்ப போர், மிரட்டல்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. டொலரின் வழியான பழைய எரிபொருள் உற்பத்தி வணிக உடைப்பைத் தடுக்கும் பொருட்டு உக்ரைன் பிரச்சனையைத் தூண்டி ரசியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றும் முயற்சியும் தோல்வி. ஆனால் அதனிடம் இருந்த ஐரோப்பிய எரிபொருள் சந்தை வெற்றிகரமாக உடைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான எண்ணெய் எரிவாயு அளிப்பை விலை அதிகமான அமெரிக்க உற்பத்தி கொண்டு மட்டும் செய்துவிட முடியாது.
ரஷ்யாவை அடுத்து அதிகமான எரிவாயு வளத்தை ஈரான்-கத்தார் எரிவாயுவைக் கொண்டு செல்வதிலும் சிக்கல். ஈரானும் ரஷ்யாவும் இணைந்து எரிவாயு தளத்தை கூட்டணி (strategic partnership) அமைத்து ஆசிய-ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளும் திசையில் சென்றன. அமெரிக்காவை விலக்கி ஆசிய ஐரோப்பிய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான புதிய உலக வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டலத்தை (INSTC) ஏற்படுத்தின. இந்தக் கூட்டணியில் சீனாவோடு இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும்போது அமெரிக்கர்களை வெளியேற்றி இந்த மண்டலத்தைத் இவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
அதனைத் தடுக்க இக்கூட்டணியில் இருந்து இந்திய, ஐரோப்பிய நாடுகளைப் பிரிக்கும் வகையில் இதற்கு மாற்றாக பலஸ்தீன பகுதியில் இருக்கும் எரிவாயுவையும் எதிர்காலத்தில் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதியையும் இணைக்கும் இஸ்ரேலை மையப்படுத்திய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தை (IMEC) அறிவித்தது அமெரிக்கா. அந்த நகர்வுக்கு ஹமாசின் இஸ்ரேல் மீதான தாக்குதல் பலஸ்தீன பிரச்சனையை உலகின்முன் கொண்டுவந்து தடையை ஏற்படுத்தியது. இந்தத் தடையைப் பலஸ்தீன இனத்தை அழித்து வெளியேற்றி உடைக்க முற்பட்டது இஸ்ரேல்.
ஈரான் தனது பொருளாதார நலனைக் காக்கும் நோக்கில் தனது ஆதரவு ஹிஸ்புல்லா, கவுத்தி இயக்கங்களின் வழியாக அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகளின் நோக்கத்தை அடையாவிடாமல் அரசியல் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் போருக்கான நோக்கத்தில் அமெரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் இஸ்ரேலின் இருப்பும் தேவையும் கேள்விக்குள்ளாகும். போருக்கு செலவிட்ட சுமையும், உடைபட்ட பொருளாதார நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் அங்கே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எனவே இது இஸ்ரேலிய ஆளும்வர்க்கத்துக்கு வாழ்வா சாவா போராட்டம்.
எனவே தனது அனைத்து வலிமையையும் நீண்டகால தயாரிப்புகளையும் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தலைமைகளைக் கொன்றும் லெபனான் மீது போர்தொடுத்தும் கவுத்தி இயக்கத்தைத் தாக்கியும் ஈரானின் அரசியல் வலிமையை உடைத்தும் வந்தார்கள். உச்சமாக அலாவைத் சிறுபான்மை ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டு துருக்கி ஆதரவு கூலிப்படையின் மூலம் சிரியாவில் ஆட்சிக் கவிழப்பை நிகழ்த்தி தன் மீதான ஈரானின் இஸ்ரேலிய சுற்றிவளைப்பை வெற்றிகரமாகத் தகர்த்தார்கள். ஈரானின் மீது சிரிய, ஈராக் வான்வெளி வழியாக தாக்குதல் நடத்த இருந்த தடை இதன்மூலம் நீங்கியது.
கணக்கை மாற்றிப் போட்ட அமெரிக்கா
இதனிடையில் ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் நிர்வாகம் முந்தைய சனநாயகக் கட்சியின் ரஷ்ய, சீன சொத்துக்களை மொத்தமாகக் கைப்பற்றி சந்தையை ஆதிக்கம் செய்யும் முயற்சியில் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டு ஏற்றத்தாழ்வுடன் இவர்களுடன் பலனைப் பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு வந்தது. முந்தைய பைடன் நிருவாகத்தின் சில்லுகளுக்கான தொழில்நுட்ப போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போது சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் தனக்கு இசைவான ஒரு பொருளாதார ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் வகையில் உலக நாடுகளின் மீது வரிவிதிப்பு போரை அறிவித்தது. ரஷ்யாவுடன் சமரசம் செய்துகொண்டு ஐரோப்பிய நலனைப் பலிகொடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொள்ள பேரம் பேசியது.
எதிர்பாராத விதமாக சீனர்களின் எதிர் வரிவிதிப்பு தாக்குதலினால் அமெரிக்கா வரிவிதிப்பு போர் ஆரம்பத்திலேயே அமெரிக்கர்களைத் திருப்பித் தாக்கியது. வேறுவழியின்றி பின்வாங்கியது ட்ரம்ப் நிருவாகம். தனது நலனை விட்டுக் கொடுக்காத ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியாக அந்த சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதால் ரஷ்ய கூட்டு முயற்சியிலும் தோல்வியைத் தழுவியது. ரஷ்யர்களும் இறங்கிவர அடம்பிடித்த நிலையில் ரஷ்ய-சீன-ஈரானிய கூட்டணி பலத்தை உடைக்கும் வகையில் எந்த ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முன்பு விலகினாரோ அதே ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மிரட்டினார் டிரம்ப். அதன்மூலம் ஈரானிய எரிபொருளைப் பெற்று ரஷ்யர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றது அவரது நிர்வாகம்.
ஈரானில் இருக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் புரட்சிக்குப் பிறகு உருவான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாடு, ரஷ்யாவுடனான எரிவாயு கூட்டணியை உடைத்து அனுகூலம் அடையத் துடிக்கும் அமெரிக்கர்களின் நோக்கம் ஆகியவை காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடன் கவனமாகக் காய்களை நகர்த்தியது ஈரான். இந்த இக்கட்டை இன்னும் இறங்கி விட்டுக் கொடுத்து தீர்க்கலாம் இல்லையேல் ரஷ்ய, சீன நாடுகளுடன் ஒப்பிட பலகீனமான ஈரானைத் தாக்கி அந்நாட்டு வளத்தை ஓட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தை அரசியலின் திசையையே மாற்றலாம்.
இரண்டாவதைத் தெரிவு செய்தார் அமைதி விரும்பியாக வேடமிட்ட ட்ரம்ப். எனினும் அமெரிக்க தளங்களை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க இஸ்ரேலை ஏவிவிட்டு சிரியாவைப் போன்று ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டமாக இருந்திருக்கிறது. ஈரானுடனான ஒப்பந்தம் அந்தப் பகுதியில் இஸ்ரேலின் ஏகபோகத்தை உடைத்து ஈரானின் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இஸ்ரேல்முனைப்புடன் ஈரானை முடிக்க களமிறங்கியது.
மன்னர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிழலில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்க உருவான ஈரானிய இராணுவம், இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு உருவான புதிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்கும் புரட்சிப் பாதுகாப்புப்படை என இரண்டாக பிரிந்திருக்கும் அந்நாட்டின் ஆளும் வர்க்க அரசியலைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள்.
தேசிய வர்க்கத்தின் புரட்சிப் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமைகளை கொன்றொழித்து அதன் தொடர்புகளைத் துண்டித்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளை ஏவும் வலிமையை குண்டுவீசி அழித்தும் அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் போது தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்களிடம் மண்டியிட்டு சேவை செய்யத் தயாராகிவிடும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
நேர்த்தியான இந்தத் திட்டத்தைச் சிறப்பாக முதல் இரண்டு நாட்களில் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால் சிறிய இடைவேளையில் மீண்டு எழுந்த தேசிய வர்க்க புரட்சிப் பாதுகாப்புப்படை இழந்த தொடர்புகளை மீட்டு வெற்றிகரமாக பதிலடியைத் தொடங்கி இவர்களின் திட்டத்தை உடைத்ததன் மூலம் ஈரானின் ஆட்சி மாற்றத்தைத் தவிர்த்து இருக்கிறது.
தொடரும்..

