Site icon சக்கரம்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்துத்துவா அரசியலின் அடிப்படைக் குணம்!

-எம்.ஏ.பேபி

ந்தியாவின் காலனித்துவ எதிர்ப்பு போராட்டக் காலத்தின்போது, நாட்டில் போராடிக் கொண்டிருந்த முற்போக்கு சக்திகள், நம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத் தன்மை கொண்டாடப்பட வேண்டும் என்றும், இதன் அடிப்படையில் ஒரு நவீன ஜனநாயக இந்தியா அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறிவந்தன. எனினும், அகில பாரத இந்து மகாசபா, ராஷ்ட்ரிய சுயம் சேவக் போன்ற வலதுசாரி சக்திகள் தங்களுடைய இந்துத்துவா கொள்கையின் தீவிரம் காரணமாக இதனைக் கடுமையாக எதிர்த்தன.

ஒற்றுமையைச் சிதைக்கச் சொன்னவர்கள்

நம்முடைய சுதந்திர போராட்டம் நாட்டு மக்களின் ஒன்றுபட்ட இயக்கமாகும். எனினும், இந்துத்துவாவையும், இந்திய தேசியத்தையும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாதவை என்று கருதிய சாவர்க்கர் போன்றவர்கள், மக்களின் ஒற்றுமையானது தங்கள் இலட்சியத்திற்கு முரணானவை என்று கருதினார்கள். எனவே தான், 1942 இல் கான்பூரில் நடைபெற்ற அகில பாரத இந்து மகாசபாவின் 24 ஆவது அமர்வின்போது உரையாற்றிய சாவர்க்கர், நாம் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளுடன் ஒத்துப்போகும் (‘responsive coopera tion’) உத்தியைப் பின்பற்ற வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் கூறினார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கான்பூரில் தான் பாரதிய ஜனசங்கத்தின் முதல் முழுமையான அமர்வு நடைபெற்றது. காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் மீதான தடை உட்பட, பாரதிய ஜனசங்கம் உருவாவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பரவலாக அறியப்பட்டன.

பாரதிய ஜனசங்கம் உருவாக்கப்பட்டபோது, அது ஓர் எட்டு அம்சத் திட்டத்தை முன்வைத்தது. இதில்தான் இதன் சித்தாந்தம் பொதிந்துள்ளது. அதில் ஒன்று, ஒற்றை பாரத கலாச்சார வளர்ச்சி (Development of a single Bharatiya Culture) என்பதாகும். பாரதிய ஜனசங்கத்தைப் பொறுத்தவரை, தேசிய ஒற்றுமையை வளர்ப்பது என்பது ‘பாரத கலாச்சாரத்தின் இலட்சியத்தை அவர்களுக்குள் புகுத்துவதன் மூலம் அனைத்து இந்துக்கள் அல்லாதவர்களையும் தேசியமயமாக்குவதாகும்’. அதன் நோக்கம் ஓர் இந்து ராஷ்டிரத்திற்காக அல்ல, மாறாக அது ஒரு பாரத ராஷ்டிரத்திற்காக பாடுபடுவதாகும். இவ்வாறு அது அறிவித்திருந்தபோதிலும், பிந்தையது முந்தையதை ஆதரிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டது. இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை மறு த்து, ஜன சங்கம் ‘ஒரு நாடு, ஒரு கலாச்சாரம், ஒரு தேசம்’ என்ற முழக்கத்தை எழுப்பியது. மேலும் இந்த ‘ஒற்றைக் கலாச்சாரத்தை’ ஏற்றுக்கொள்ளாத அனைவரும் ‘தேச விரோதப் பண்புகளை’ கொண்டுள்ளவர்கள் என்றும் வரையறுத்தது.

அமைப்பு ரீதியான தினசரித் தாக்குதல்

எனவே, பாரதிய ஜனசங்கத்தின் வாரிசான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழ், சிறுபான்மையி னர் மீது, அமைப்பு ரீதியாகவும் நேரடியாகவும் தினமும் தாக்குதல்கள் நடத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின்படி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் உள் அச்சுறுத்தல்களாவார்கள். 2020 டெல்லியில் நடந்த மதவெறிக் கலவரத்தின்போது, பா.ஜ.க தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெளிப்படையாகவே வன்முறைக்கு அழைப்பு விடுத்ததைக் கண்டோம். சமீபத்தில் சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது என்பது இந்த பிரச்சனையை மீண்டும் ஒருமுறை கூர்மையான கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஆக்ராவில் உள்ள கான்வெண்ட்டுகளில் 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மாத சம்பளத்தில் சமையலறை உதவியாளர்களாக பணியமர்த்துவதற்காக மூன்று இளம் பெண்களுடன் கன்னியாஸ்திரிகள் சென்றனர். அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தபோதிலும், அந்தப் பெண்கள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதங்களைக் கூட பெற்றிருந்தபோதிலும், அவர்களுக்கெதிராகவும் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராகவும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 143ஆவது பிரிவின்கீழும், சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டத்தின் 4ஆவது பிரிவின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களின் ஆட்சியில் இந்தியாவில் தேவையுள்ளோருக்கு வேலை வழங்குவதுகூட குற்றமாக மாறி இருக்கிறது.

147 சதவீதம் அதிகரிப்பு

2018 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் ஒரு கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது, அங்கிருந்த முக்கியமான உயிர்காக்கும் அமைப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில், கர்நாடகாவின் சிக்கபல்லபூரில் உள்ள 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான செயிண்ட் ஜோசப் தேவாலயம் தாக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில், சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர் மற்றும் கொண்டகானைச் சேர்ந்த பழங்குடி கிறிஸ்தவர்கள் தங்கள் கிராமங்களில் நடந்த தொடர் தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டியிருந்தது. 1998 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நான்கு கன்னியாஸ்திரிகள், ஒரு கும்பலின் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.  1999ஆம் ஆண்டு ஒடிசாவில் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகன்கள் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு கந்தமால் கலவரம் போன்றவை பரவலான கவனத்தைப் பெற்றன. 2023 மே முதல் மணிப்பூர் கொதிநிலையில் உள்ளது. ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் தொகுத்த தரவுகளின்படி, கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவங்கள் 2014 இல் 127 வழக்குகளிலிருந்து 2024 இல் 834 ஆக அதிகரித்துள்ளன. அதாவது 10 ஆண்டுகளில் 147.14 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான திட்டமிட்டமுறையில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது. நாட்டில் கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பும் நிலை ஏற்பட்டது. கடந்த பத்தாண்டுகளாக, நாட்டில் முஸ்லிம்கள் ஏதாவது ஒரு சாக்குப்போக்கின் கீழ் இன்னும் அதிகமான வன்முறையை எதிர்கொண்டு வருகின்றனர்.

பசுக் குண்டர்களின் அட்டூழியம்

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பசுக் குண்டர்கள் மேற்கொண்ட சம்பவங்கள் 97 சதவீதம் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானைச் சேர்ந்த பெஹ்லுகான் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த சிறுவன் ஜுனைத் ஆகியோரின் பெயர்களை நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் விபரங்கள்படி, 2014 முதல் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் மற்றும் வெறுப்புக் குற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. இந்தியா ஹேட் லேப் (India Hate Lab) அறிக்கையின்படி, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சு 2024ஆம் ஆண்டில் 74  சதவீதம் அதிகரித்துள்ளது. இது போன்று 1,165 சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் ஆண்டுகளில் வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரிப்பதும் குறிப்பிடத்தக்கது. பதிவுசெய்யப் பட்ட வெறுப்புப் பேச்சுக்களில் 98.5 சதவீதம் முஸ்லிம் களை குறிவைத்து பேசப்பட்டிருக்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்க ளில் நிகழ்ந்துள்ளன. பா.ஜ.க ஆளும் மூன்று மாநி லங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா, கடந்த ஆண்டு மொத்த வெறு ப்புப் பேச்சு நிகழ்வுகளில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டிருக்கின்றன.  அவற்றில் 340 நிகழ்வுகள் பாஜகவே ஏற்பாடு செய்தவைகளாகும்.

நீதித்துறையில் கேலிக்கூத்து

உத்தரப்பிரதேசத்தில், பல மாதங்களாக நடந்த  தொடர் தாக்குதல்களுக்கு முதலமைச்சரே தலைமை தாங்கினார். கடந்த ஆண்டு, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, முதலமைச்சர் போன்றே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர்,  “இதுதான் இந்துஸ்தான், இந்த நாடு இந்துஸ்தானில் வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி செயல்படும் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.  இதுதான் சட்டம்” என்று கூறினார். ‘பொது சிவில் சட்டம் அவசியம்’ என்ற தலைப்பில் விஸ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசி இருக்கிறார். சத்தீஸ்கரில் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் எந்தவொரு முறையான புகாரோ அல்லது காவல்துறை விசாரணையோ அல்ல. ரயில் நிலையத்தில் உள்ள ரயில் டிக்கெட் பரிசோதகர்,  உள்ளூர் பஜ்ரங் தள நபர்களைத் தொடர்பு கொண்டு சொல்கிறார்; அதைத் தொடர்ந்து அங்கு வந்த பஜ்ரங் தளத்தின் கும்பல் கன்னியாஸ்திரிகளை மிரட்டி யது. பின்னர் அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக ளின் கீழ் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், நாட்டின் உள்துறை அமைச்சர் மாநிலங்களவையில் எந்த இந்துவும் ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கருத்து கூறி, அது வெளியான ஒரு நாளுக்குப்பின்னர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும், தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நீதித்துறையின் இந்த கேலிக்கூத்து, நமது நாட்டில் வரும் நாட்களில் சங் பரிவார் குண்டர்கள் தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்கான ஒரு அச்சுறுத்தும் அறிகுறியாகும்.  “பிற்போக்குத்தனமான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கான உந்துதலும், எதிர்க்கட்சியையும் ஜனநாயகத்தையும் அடக்குவதற்கான சர்வாதிகார உந்துதலும் நவீன பாசிச பண்புகளைக் காட்டுகின்றன என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாடு சரியாகவே சுட்டிக் காட்டியதன் உதாரணங்களே இவை.  

தமிழில்: ச.வீரமணி

Exit mobile version