Site icon சக்கரம்

இந்தியா-சீனா-ரஷ்யா உறவுகள் புதிய சகாப்தத்தின் தேவை

பிரதமர் நரேந்திர மோடியின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டுப் பங்கேற்பு, ஆசியக் கண்டத்தில் அத்தியாயத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியா-சீனா-ரஷ்யா மூன்று நாடுகளுக்கிடையேயான உறவுகள் இன்றைய உலக அரசியலில் தீர்மானகரமான பங்கு வகிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

சீனா உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரம், ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்களின் பெரும் சக்தி, இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம். இம்மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும்போது, உலக வர்த்தகத்தில் 40 சதவீதத்துக்கும் மேலான பங்கைக் கொண்டுள்ளன. 

இந்தியா ரஷ்யாவிலிருந்து தினசரி 20 இலட்சம் பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. சீனாவுடன் கடந்த ஆண்டு 125 பில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெற்றது. இந்த பொருளாதார ஒன்றிணைவு மூலம் டொலர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் வாய்ப்பு  உருவாகிறது. யுவான், ரூபிள், ரூபாய் நாணயங்களில் நேரடி வர்த்தகம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது வளர்ந்தால், உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.

மேற்கத்திய நாடுகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு எதிரான மாற்று வழியை இந்த மூன்று நாடுகளும் வழங்கும் வாய்ப்பு உள்ளது என்றால் மிகையல்ல. பிரிக்ஸ் (BRICS), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation – SCO) போன்ற அமைப்புகள் பல பன்முக உலக ஒழுங்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது அமெரிக்க ஆதிக்கத்தின் சவாலுக்கு எதிரான வலுவான பதில்.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மேற்கத்திய பொருளாதார தடைகளை எதிர் கொள்ளும் ரஷ்யா, ஆசிய சக்திகளுடன் நெருக்கமாகி வருகிறது. சீனாவும் அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவாக தனது நேச சக்திகளுடன் உறவை வலுப்படுத்துகிறது. இந்தியாவும் தனது வர்த்தக சுதந்திரத்தைப் பாதுகாக்க இம்மூன்று நாட்டு கூட்டணியை முக்கியமாகக் கருதும் நிலைக்கு வந்துள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை, உக்ரைன் போர் குறித்த கருத்து வேறுபாடுகள் போன்ற சிக்கல்கள் இருந்தபோதிலும், பொதுவான நலன்களுக்காக ஒத்துழைப்பது அவசியம்.  காலநிலை மாற்றம், பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி போன்ற உலகளாவிய சவால்களுக்கு இணைந்து தீர்வு காண வேண்டும்.

கல்வான் எல்லை மோதலுக்குப் பின்னர் இந்தியா – சீனா உறவுகள் பதட்டமான நிலைக்குச்  சென்றன. ஆனால் வர்த்தக ரீதியாக இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ரஷ்யாவும் இரு நாடுகளுக்கிடையே பாலமாக செயல்பட முடியும். இந்தப் பின்னணியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் மோடியின் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டே, ஆசிய சக்திகளுடன் ஆக்கபூர்வமான உறவை மேம்படுத்த முடியும். இம்மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு ஆசியாவில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.

-தீக்கதிர்
2025.09.01

Exit mobile version