
சீனாவின் வருடாந்திர வர்த்தக உபரியானது (trade surplus) முதன்முறையாக ஒரு டிரில்லியன் டொலரை தாண்டியுள்ளது. சீனாவின் வளர்ச்சியை முடக்க அமெரிக்கா அதன் மீது வரிகள் விதித்து வர்த்தகப்போர் நடத்தியும் இந்த வளர்ச்சியை சீனா அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 8 அன்று சீன அரசு வெளியிடப்பட்ட தரவுகளின்படி இது தெரிய வந்துள்ளது. அந்த அதிகாரப் பூர்வ தரவுகளின்படி, ஒக்ரோபர் மாதம் 1.1 சரிவை சந்தித்த சீன ஏற்றுமதி, நவம்பர் மாதம் மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் அதிகரித்த சீனப் பொருட்களின் தேவைகள் தான் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பரில் சீன ஏற்றுமதி 5.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இறக்குமதியும் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2025 நவம்பர் மாதத்தில் சீனா 29 இலட்சத்து 82 ஆயிரத்து 540 கோடி (இந்திய) ரூபாய்க்கும் அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. அதே மாதம் சுமார் 19 இலட்சத்து 79 ஆயிரத்து 322 கோடி (இந்திய) ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், ஒரே மாதத்தில் 10 இலட்சத்து 03 ஆயிரத்து 218 கோடி (இந்திய) ரூபாய்க்கும் அதிகமான உபரியை சீனா ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டை விட அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சீனாவின் மொத்த வர்த்தகம் 516.07 இலட்சம் கோடி (இந்திய) ரூபாயாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாத புள்ளிவிவரங்களுடன் சேர்த்து, சீனாவின் மொத்த வர்த்தக உபரி முதன்முறையாக 97.61 இலட்சம் கோடி (இந்திய) ரூபாயை (1.08 டிரில்லியன் டொலர்) எட்டியுள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் மொத்த வர்த்தக உபரி 89.66 இலட்சம் கோடி (இந்திய) ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா மீது அமெரிக்கா விதித்திருந்த வரியை 2025 ஒக்ரோபர் மாதம் தற்காலிகமாக குறைப்பதாக அமெரிக்கா கூறியது. அதன் பிறகும் கூட அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஓப்பிடுகையில் இந்த நவம்பர் மாதம் 29 சதவிகிதமாக குறைந்துள்ளது.
2024 இல், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 63.27 இலட்சம் கோடி (இந்திய) ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது. அதில் சீனா 45.19 கோடி (இந்திய) ரூபாய்க்கும் அதிகமான பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. அதற்கு ஈடாக 14.46 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்தது. பல நாடுகளுடன் வர்த்தகம் ட்ரம்ப் ஆரம்பித்த வர்த்தகப் போரின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் அமெரிக்காவிற்கான சீன ஏற்றுமதி ஒவ்வொரு மாதமும் வேகமாக குறைந்து வருகிறது. இதன் விளைவாக, இந்த ஆண்டு இது வரை அமெரிக்காவிற்கான சீனாவின் மொத்த ஏற்றுமதி சுமார் 19 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
சீன ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், அதன் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஒரு நாட்டை மட்டுமே நம்பி இருக்காமல் பல நாடுகளுடன் கொண்ட உறவு தான். அதாவது சீனா அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்காமல் ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.
2024 நவம்பர் மாதம் ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு 15 சதவிகிதம் ஏற்றுமதி செய்திருந்த சீனா இந்த ஆண்டு அதனை 36 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பான ஆசியான் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கான ஏற்றுமதியும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
2030-க்குள் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு 15 இலிருந்து 16.5 சதவிகிதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி அதிகரித்துள்ள சூழலில் ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தின் போக்கைக் குறைக்கும் நடவடிக்கையாக உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பது, உயர்தர சரக்கு மற்றும் சேவைகளின் உற்பத்தி ஆகியவற்றிலும் சீனா கவனம் செலுத்தும் என 15 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.

