Site icon சக்கரம்

யூனுஸ் வங்கதேசத்தை உள்நாட்டுப் போர்ச் சூழலுக்குள் தள்ளுகிறார் – வங்கதேச தொழிலாளர் கட்சி கடும் கண்டனம்

ங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள சூழலில் அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுஸ் வங்கதேசத்தை உள்நாட்டுப் போர்ச் சூழலுக்கு கொண்டு செல்கிறார் என வங்கதேச தொழிலாளர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக நடைபெற்ற இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) என்பவர், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தார். இவர் டிசம்பர் 12 அன்று மர்ம நபர்களால் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 18 அன்று உயிரிழந்தார். அவரது மரணச் செய்தி வெளியான பிறகு வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது.

ஹாடி இறந்த அன்று இரவு, ஜமாத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) அமைப்பின் மாணவர் பிரிவான ‘இஸ்லாமி சத்ரா ஷிபிர்’ (Islami Chhatra Shibir) அமைப்பின் தலைவர் ரஹ்மான் ஒரு பொதுக்கூட்டத்தில் பொதுப் பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் ‘தி டெய்லி ஸ்டார்’ (The Daily Star) மற்றும் ‘புரோதோம் அலோ’ (Prothom Alo) ஆகியவற்றை மூட வேண்டும் என்று அவர் அறைகூவல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து அப்பத்திரிகைகள் மட்டுமின்றி அவாமி லீக் கட்சி, வங்கதேச தொழிலாளர் கட்சியின் அலுவலகங்களும் வன்முறையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாயின.

மேலும் அந்நாட்டு மதச் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் உள்ளிட்ட பிறரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கல்விக்காக சென்றுள்ள இந்திய மாணவர்கள் அபாயமான சூழலில் சிக்கியுள்ளனர்.

பாதுகாப்பற்ற சூழல்

இச்சூழலில் தான் யூனுஸ் நாட்டை முறையாக நிர்வகிக்காமல் ஆபத்தில் தள்ளியதுடன் உள்நாட்டுப்போரில் தள்ளி வருகிறார் என வங்கதேச தொழிலாளர் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் கட்சிகள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளின் அலுவலகங்கள் பத்திரிகை அலுவலகங்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களை அக்கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

Sharif Osman Hadi

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது:

ஏகாதிபத்திய மற்றும் மதவாத சக்திகள் திட்டமிட்டு, ஆளும் வர்க்கத்தின் உதவியுடன் நாட்டில் ஒரு ‘கும்பல் ஆட்சியை’ நிறுவியுள்ளன. கொலை, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை மற்றும் மனித உரிமை மீறல்கள் இப்போது நாட்டில் மிகச் சாதாரணமாகிவிட்டன. தனிநபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ எந்தப் பாதுகாப்பும் இல்லை.

மதவெறி பாசிச சக்திகள்

மதவெறி பாசிச சக்திகள் பட்டப்பகலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திப்பு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்று, மரத்தில் தொங்கவிட்டு, தீ வைத்து எரித்துக் கொண்டாடியுள்ளனர். ஆனால், இதைக் கண்டும் அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்காக, மதவெறி பிடித்த பாசிச சக்திகள் அரசாங்கத்தின் கண் முன்னாலேயே வீடுகளை எரித்து வருகின்றன. ஷேக் முஜிபுர் ரஹ்மான் இல்லம் மீண்டும் மீண்டும் சேதப்படுத்தப்படுவது காட்டுமிராண்டித்தனமானது.

டாக்டர் யூனுஸ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக, அவர் மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கி, நாட்டை உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளுகிறார்.

அமைதியான, நியாயமான தேர்தல்

மூச்சுத் திணற வைக்கும் இந்த பாதுகாப்பற்ற சூழலிலிருந்து மக்கள் விடுதலை வேண்டும் என விரும்புகிறார்கள். அறிவிக்கப்பட்டுள்ள 13 ஆவது நாடாளுமன்றத் தேர்தலை அமைதியான முறையில் நடத்தி, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் ஒரு நியாயமான தேர்தலை உறுதி செய்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“உஸ்மான் ஹாடியை கொன்றது நீங்கள்தான்’’ – யூனுஸ் அரசு மீது சகோதரர் ஒமர் ஹாடி குற்றச்சாட்டு

‘‘ஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள்” என்று மாணவர் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

2024 இல் நடந்த எழுச்சிப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான, பிரபல மாணவர் தலைவரும் இன்கிலாப் மன்ச் (Inqilab Moncho) அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஷெரீஃப் உஸ்மான் ஹாடி (32), 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான டாக்கா-8 தொகுதியின் வேட்பாளராக இருந்தார்.

அவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறும்போது சுடப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இந்த சூழலில், டாக்காவின் ஷாபாக் பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் முன் இன்கிலாப் மன்ச் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஷெரீஃப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் ஷெரீஃப் ஓமர் ஹாடி, “உஸ்மான் ஹாடியைக் கொன்றது நீங்கள்தான், இப்போது இதை ஒரு பிரச்சினையாகப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறீர்கள். எந்தவொரு அமைப்புக்கோ அல்லது வெளிநாட்டு எஜமானர்களுக்கோ பணியாததால்தான் ஹாடி கொல்லப்பட்டார்.

தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகளுக்கு விரைவாகத் தண்டனை கிடைப்பதை உறுதி செய்யுங்கள். அரசாங்கம் இந்த விவகாரத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் காட்டத் தவறிவிட்டது. உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்கதேசத்தில் இருந்து தப்பி ஓட நேரிடும்” என்று நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version