
டிசம்பர் 26: நவீன சீனாவின் சிற்பி தோழர் மா சே துங் (மாவோ) அவர்களின் 132-வது பிறந்தநாள்
1893 இல் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த மாவோ, தனது கூர்மையான அறிவாலும் தளராத உறுதியாலும் உலக வரலாற்றையே மாற்றியமைத்தவர்.
மார்க்சியமும் மாவோவின் பார்வையும்
பல்கலைக்கழக நூலகத்தில் வேலை பார்த்தபோது கிடைத்த வாசிப்பு அனுபவம் மாவோவை ஒரு மாபெரும் ராஜதந்திரியாக மாற்றியது. “ஒரு நாட்டின் தலைகீழ் மாற்றம் கீழ்த்தட்டு மக்களால் மட்டுமே நிகழ்த்தப்படும்” என்பதை உணர்ந்த அவர், மார்க்சிய கருத்தியலைச் சீனச் சூழலுக்கு ஏற்பப் புகுத்தினார். முதலாளித்துவ வளர்ச்சி பெறாத அரை நிலப்பிரபுத்துவ சீனாவில், “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற கோஷத்துடன் விவசாயப் பெருங்குடி மக்களைப் புரட்சிப் படையாகத் தயார் செய்தார்.
சீனாவின் துயர் துடைத்த கரங்கள்
ஆயிரம் ஆண்டுகளாகச் சீன மக்களைத் துயரத்தில் ஆழ்த்திய ‘மஞ்சள் நதி’ வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, எவ்வித நவீன இயந்திரங்களும் இன்றி வெறும் மனித உழைப்பை மட்டுமே கொண்டு சாதித்துக் காட்டினார் மாவோ. அபின் போதையிலும், பழைமைவாதச் சடங்குகளிலும் சிக்கிக் கிடந்த சீன மக்களைத் தட்டியெழுப்பி, ஏகாதிபத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அணிதிரட்டினார்.
வரலாற்றுச் சாதனை: நெடும்பயணம் (The Long March)
மாவோவின் வரலாற்றில் மிக முக்கியமானது 1934 இல் தொடங்கிய 6,000 மைல் ‘நெடும்பயணம்’. நிலப்பிரபுத்துவ அரசின் 10 இலட்சம் படை வீரர்களை எதிர்த்து, ஒரு இலட்சம் கம்யூனிஸ்ட் வீரர்களுடன் மாவோ இந்தப் பயணத்தைத் தொடங்கினார். 18 மலைத்தொடர்கள், 24 ஆறுகள் எனக் கடும் இயற்கைச் சீற்றங்களையும் எதிரிகளின் தாக்குதலையும் கடந்து ஓராண்டு காலம் நடந்த இந்தப் பயணத்தின் இறுதியில், 20,000 பேர் மட்டுமே எஞ்சினர். இந்தப் பயணத்தில் தனது மகனையும் மனைவியையும் இழந்தபோதும், கலங்காமல் புரட்சியை வழிநடத்தினார் மாவோ.
போர் வியூகமும் தத்துவமும்
மாவோவின் கெரில்லா போர்முறை உலகப் புகழ்பெற்றது. “எதிரி முன்னேறினால் நாம் பின்வாங்குவோம்; எதிரி முகாமிட்டால் நாம் துன்புறுத்துவோம்; எதிரி ஓடினால் துரத்தித் தாக்குவோம்” என்ற அவரது உத்தி, ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளது. “நூறு பூக்கள் மலரட்டும்” என்ற அவரது தத்துவம், சரியான கருத்துகள் விவாதங்கள் மூலமே உருப்பெறும் என்பதைப் போதித்தது.
புதிய சீனம் மலர்தல்
1949 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 1 இல் பீஜிங் தியனன்மென் சதுக்கத்தில் ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட சிவப்பு வண்ணக் கொடியை ஏற்றி, நவீனச் சீனக் குடியரசைப் பிரகடனப் படுத்தினார். ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்த ஒரு தேசத்தை, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்த அந்தச் சகாப்தம் மாவோ என்ற பெயரால் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவர் விட்டுச் சென்ற அந்தப் புரட்சிகரப் பாதையும், நெஞ்சுரமும் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் பாடம். அந்த மாபெரும் புரட்சியாளரின் நினைவைப் போற்றுவோம்!

