
நியூயார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான ஜோரான் மம்தானி (Zohran Mamdani) வியாழக்கிழமை (01.01.2026) அதிகாலை பதவியேற்றுக் கொண்டார்.
உலகின் மிக முக்கிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க் நகர் மன்றத் தேர்தல், 2025 நவம்பரில் நடைபெற்றது. இதில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோரான் மம்தானி போட்டியிட்டார். அடிப்படையில் சட்ட வல்லுநரான மம்தானி, தன்னை ஜனநாயக சோசலிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்தார். தேர்தல் பிரச்சாரங்களின் போது, “அமெரிக்க அரசியலில் மாற்றம் தேவை. இது அனைத்து மக்களுக்கான, அவர்களின் தேவைகளுக்கான அரசியலாக இருக்க வேண்டுமே தவிர உயர்தட்டு மக்களுக்கானதாக இருக்கக் கூடாது” என்றார். இதனால், மம்தானியை ஒரு கம்யூனிஸ்ட் என்றும், அவரை தோற்கடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். எனினும், 20 இலட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று ஜோரான் மம்தானி அபார வெற்றி பெற்றார்.
அமெரிக்க வரலாற்றில், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமியர், தெற்காசியாவைச் சேர்ந்தவர் மற்றும் இந்திய – ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமையையும் மம்தானிபெற்றார். இந்நிலையில் தனது பதவி யேற்பு விழாவை இரண்டு கட்டங்களாக திட்டமிட்ட ஜோரான் மம்தானி, முதலாவதாக நள்ளிரவில், தனிப்பட்ட விழா ஒன்றில், நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டி ஷியா ஜேம்ஸ் (Letitia James) முன்னிலையில், தனது தாத்தாவின் குர்ஆன் மற்றும் புகழ்பெற்ற கருப்பின எழுத்தாளர் ஆர்டுரோ ஸ்காம்பர்க் (Arturo Schomburg) வைத்திருந்த குர்ஆன் சாட்சியாக பதவியேற்றார்.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி, வியாழக்கிழமையன்று மான்ஹாட் டன் நகரின் கைவிடப்பட்ட ஒரு ரயில் நிலையத்தின் சுரங்கப்பாதை முன்னர் மிகவும் சாதாரணமாக நடை பெற்றது. அப்போது, “நியூயார்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாக வும் கருதுகிறேன்” என தனது பதவியேற்பு உரையில் தெரிவித்த மம்தானி, தான் பதவியேற்ற இடமான மான்ஹாட்டன் ரயில்வே சுரங்கப்பாதை குறித்து கூறுகையில், “இது நமது நகரத்தின் உயிர்ப்பு, சுகாதாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்துக்கான ஒரு சான்றாக திகழ்கிறது.” என்றார்.
அதைத்தொடர்ந்து, நியூயார்க் நகர மண்டபத்தில், வெர்மாண்ட் மாகாண அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) முன்னிலையில் பொதுமக்கள் மத்தியிலும் மம்தானி மேயராக பதவியேற்றுக்கொள்கிறார். நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி, ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்களையும், ‘ஸோ பார் ப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப் படத்தையும் இயக்கிய புகழ்பெற்ற இயக்குநர் மீரா நாயர் (Mira Nair) மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானி (Mahmood Mamdani) தம்பதியின் மகன் ஆவார்.

