
காங்கிரஸ் கட்சி அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமரின் பெயர் இடம்பெற்றுள்ளது மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் நலன்களை மத்திய அரசு விற்றது ஆகியவை தான் நாட்டின் அவமானம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மோடிஜி, நீங்கள் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா?. அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உங்கள் பெயர்கள் ஒரு மோசமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவமானகரமான விஷயம். நீங்கள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள், இது வெட்கக்கேடானது.
அமெரிக்காவிடம் நீங்கள் நாட்டின் தரவுகளை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை அழித்துவிட்டீர்கள். இது வெட்கக்கேடானது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு உங்களை தூங்கவிடாமல் செய்தது என்பது முழு நாடும் அறிந்ததே. ஏனென்றால் அது பா.ஜ.க மற்றும் உங்கள் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு. 14 மாதங்களாக, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அது வெட்கக்கேடானது” என்று தனது பதிவில் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “மோடிஜி, உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதைச் செய்யுங்கள். நானும் காங்கிரஸின் சிங்க இதயம் கொண்ட வீரர்களும் நாட்டைப் பாதுகாப்போம். நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். பிரதமரின் கண்களில் பயம் இருக்கிறது. அதனால்தான் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை அவர் எதிர்கொள்ளவில்லை” என்று கூறினார்.
அமெரிக்க மக்களின் மனநிலை என்ன?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்டிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள் குறித்து ஏ.பி.சி நியூஸ் (ABC News), வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) ஆகியவை இப்சோஸ் (Ipsos) நிறுவனத்தின் அறிவுத்திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்தியது.
அமெரிக்காவின் பண வீக்கம், மற்ற நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதி வரி, வெளிநாட்டு உறவுகள் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இந்த கருத்துக்கணிப்பு அமெரிக்க மக்களிடம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுகளின் முடிவில் பெரும்பாலான மக்கள் அமெரிக்க அதிபரின் கொள்கைகள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 60 சதவீதம் பேர் ட்ரம்ப்பின் கொள்கைகளை விரும்பவில்லை. இந்த ஆய்வானது, அதிபர் விதித்த வெளிநாட்டு பொருட்கள் மீதான வரியை, அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்வதற்கு சற்று முன்பாக நடத்தப்பட்டது.
அதிபர் ட்ரம்ப், பண வீக்கத்தைக் கையாளும் விதத்தை 3 அமெரிக்கர்களில் 2 பேர் ஏற்கவில்லை. 10 பேரில் ஆறு பேர் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் விவகாரத்தில் அவர் கையாளும் விதத்தையும் விரும்பவில்லை.
குடியேற்றம் தொடர்பான ட்ரம்ப்பின் கொள்கைகளை 58 சதவீத மக்கள் எதிர்த்துள்ளனர். அதேபோல் 57% பேர் ஒட்டுமொத்தமாக பொருளாதாரக் கொள்கைகள் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் கையாளும் விதத்தையும் ஏற்கவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளிநாட்டு உறவுகள் விவகாரத்தில் அவர் கையாளும் விதத்தை 62% பேர் ஏற்கவில்லை. அதேபோல், நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைகளைத் தீர்க்க யாரை அதிகம் நம்புகிறார்கள் என்று கேட்டபோது, பொதுமக்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்று 33% பேரும், ஜனநாயகக் கட்சி என்று 31% பேரும், ‘இரண்டு பேருமே இல்லை’ என்று 31% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின்படி, அமெரிக்க மக்கள் இரு தரப்பினரிடமும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது தெரிகிறது. மேலும், பத்து அமெரிக்கர்களில் ஏழு பேர் அதிபர் ட்ரம்ப் நேர்மையானவர் அல்லது நம்பகமானவர் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர். இதில் பலர் டரம்ப் தனது அதிபர் பதவியை சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

