Site icon சக்கரம்

எண்ணெய் வெறியோடு ஏகாதிபத்திய வேட்டை!

ர்வதேசச் சட்டங்களையும், ஒரு தேசத்தின் இறையாண்மையையும் காலில் போட்டு மிதித்து, நள்ளிரவில் ஒரு நாட்டு ஜனாதிபதியையே கடத்திச் சென்றிருக்கும் அமெரிக்காவின் செயல், நாகரிகம் அடைந்ததாகக் கூறிக் கொள்ளும் நவீன உலகின் மிகப்பெரிய பயங்கரம்; தலைகுனிவு.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்று உலக நாடுகளுக்குப் பாடம் எடுக்கும் அமெரிக்காவின் முகமூடி, காரகஸ் நகரில் விழுந்த குண்டுகளிலும், மதுரோவின் கண்கட்டப்பட்ட புகைப்படத்திலும் அப்பட்டமாகக் கிழிந்து தொங்குகிறது. இது ‘ஒபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) அல்ல; இது ‘ஒபரேஷன் ஒயில் ரொபரி’ (Operation Oil Robbery) – அதாவது அப்பட்டமான எண்ணெய் கொள்ளை!

ஒரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்சனையை உருவாக்கி, அதனையே சாக்காக வைத்து, அந்த நாட்டுத் தலைவரைத் திருடனைப் போலக் கடத்தி வந்து தனது நாட்டுச் சிறையில் அடைக்க அமெரிக்காவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது?

1823 இல் வகுக்கப்பட்ட காலாவதியான ‘மன்றோ கோட்பாட்டை’ (Monroe Doctrine) மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு, இலத்தீன் அமெரிக்காவைத் தனது தனிப்பட்ட சொத்தாகவும், கொல்லைப்புறமாகவும் மாற்றத் துடிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல், உலக நாடுகளின் தன்னாட்சி உரிமைக்கு விடுக்கப்பட்ட நேரடி மிரட்டலாகும். வெனிசுவேலா மக்களின் நிம்மதியும், அங்கு நடக்கும் நல்லாட்சியும் சீர்குலைவது பற்றி அமெரிக்காவுக்கு துளியும் கவலையில்லை; மாறாக, அந்த நாட்டு மண்ணுக்கு அடியில் இருக்கும் அளவில்லா பெட்ரோலிய வளத்தின் மீதுதான் அமெரிக்காவுக்குக் கண்.

“வெனிசுவேலாவை இனி நாங்களே ஆள்வோம்” என்று கொக்கரிக்கும் ட்ரம்ப்பின் வார்த்தைகளில் ஒரு ஜனாதிபதியின் நிதானம் இல்லை; மாறாக ஒரு நிலப்பிரபுத்துவ எஜமானனின் ஆதிக்க வெறிதான் தெரிகிறது. இதுவே நவீன பாசிசத்தின் கோரமுகம். ஜனநாயகப் படுகொலைகளை நியாயப்படுத்த இராணுவ பலத்தையும், அதிகார மிரட்டலையும் பயன்படுத்துவது நாகரிக சமூகத்திற்கு விடப்பட்ட சவால். ஈராக் முதல் லிபியா வரை அமெரிக்கா எங்கு ‘ஜனநாயகத்தை மீட்க’ நுழைந்ததோ, அங்கெல்லாம் இன்று சுடுகாடுகள்தான் மிச்சமுள்ளன. வெனிசுவேலாவிற்கும் அதே கதியை உருவாக்கத் துடிக்கும் ஏகாதிபத்தியத்தின் கரம் இப்போதே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த அராஜகம் மதுரோ என்ற தனிமனிதனுக்கு எதிரானது மட்டுமல்ல, இது உலக நாடுகளின் ஒட்டுமொத்த தன்னாட்சி உரிமைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகும். வல்லாதிக்கத்தின் இந்த வெறியாட்டத்தை சர்வதேச சமூகம் இப்போதே தடுத்து நிறுத்தாவிட்டால், நாளை எந்தவொரு சுதந்திர நாட்டின் வாசலிலும் அமெரிக்காவின் போர் விமானங்கள் நிழலாடும் என்பது திண்ணம்.

வரலாறு ஒருபோதும் ஆக்கிரமிப்பாளர்களை மன்னித்ததில்லை; பொலிவாரின் வாரிசுகள் தங்கள் மண்ணின் கௌரவத்தை மீட்டெடுக்கத் தொடுக்கும் இந்தப்போராட்டம், ஏகாதிபத்தியத்தின் இறுதிக்க்காலத்தின் தொடக்கமாக அமையட்டும். மதுரோவின் விடுதலை என்பது ஒடுக்கப்பட்ட நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான மாபெரும் வர்க்கப் போர்!

-தீக்கதிர்
2026.01.04

Exit mobile version