Site icon சக்கரம்

முழுக்க முழுக்க ‘கச்சா’ எண்ணெய்க்காக அமெரிக்காவின் கொடூரமும், அயோக்கியத்தனமும்!

January 5, 2026, Seoul, Seoul, South Korea: Protesters gather in front of the U.S. Embassy to denounce President Trump’s announcement regarding a U.S. military capture of Venezuelan President Nicolás Maduro and his wife, Cilia Flores. (Credit Image: © Suh Jeen Moon/ZUMA Press Wire)

னவரி 2 ஆம் திகதி அதிகாலையில், காரகஸ்ஸின் வான்பரப்பில் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களின் தீப்பிழம்புகள் ஒளிர்ந்தன. அவற்றைத் தொடர்ந்து ‘டெல்டா ஃபோர்ஸ்’ உள்ளிட்ட அமெரிக்கக் கமாண்டோக்களின் ஹெலிகாப்டர் தாக்குதல்கள் அரங்கேறின. ஜனவரி 3 காலை, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துவிட்டன என்றும், அவர் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள இரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்றும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்த அதிர்ச்சியூட்டும் செய்தியோடுதான் இந்த உலகம் விழித்தது. எந்த அளவு கோலில் பார்த்தாலும், இது ஒரு அப்பட்டமான, முரட்டுத்தனமான ஆக்கிரமிப்பு. இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஒரு புள்ளியில் குவிகின்றன – அது வெனிசுவேலாவின் கச்சா எண்ணெய் வளம்.

போதைப்பொருள் ஒழிப்பு என்ற போலித்திரை

இப்படியொரு விபரீதம் நடக்கும் என்பது கடந்த சில மாதங்களாகவே தெளிவாகத் தெரிந்தது. வெனிவேசுலாவைச் சுற்றியுள்ள சர்வதேசக் கடல் பகுதிகளில் அமெரிக்கக் கடற்படை குவிக்கப்பட்டு, எண்ணெய் டாங்கர்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. போதைப் பொருள் கடத்தப்படுவதாகக் கூறி படகுகள் சுடப்பட்டன. ஆனால், மதுரோவின் மீதான போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கும், டொனால்டு ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெனிசுவேலாவிற்கும் கோகோயின் கடத்தலுக்கும் தொடர்பில்லை எனப் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்கப் போதைப்பொருள் அமுலாக்கத்துறையின் (DEA) சமீபத்திய அறிக்கையில், வெனிசுவேலா ஒரு பத்தியில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், 2025 ஆம் ஆண்டின் ஐ.நா உலக போதைப்பொருள் அறிக்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை என எதிலுமே வெனிசுவேலா ஒருமுறை கூடக் குறிப்பிடப்படவில்லை. போதைப்பொருள் ஒழிப்பில் டொனால்ட் ட்ரம்பிற்கு உண்மையிலேயே எவ்வளவு அக்கறை இருக்கிறது என்பது ஹோண்டுராஸ் தேர்தலின் போதே தெரிந்துவிட்டது. தான் சமீபத்தில் மன்னிப்பு வழங்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸின் கூட்டாளியான டிட்டோ அஸ்ஃபுராவிற்கு வாக்களிக்குமாறு ஹோண்டுராஸை டொனால்ட் ட்ரம்ப் மிரட்டினார். இல்லையெனில் அந்நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் என அச்சுறுத்தினார். அதே போல் ஆர்ஜென்ரீனாவின் 2025 இடைக்காலத் தேர்தலிலும், ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்தி, 20 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்திவைப்பதாக மிரட்டினார்.

எண்ணெய் வளமும் ‘டான் – றோ’ கோட்பாடும்

காரகஸ்ஸின் 303 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது ஆசையை டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இப்போது “நமது மிகப் பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்” அங்கு களமிறங்கி இலாபம் ஈட்டப்போவதை நினைத்து அவர் ஆவலுடன் காத்திருக்கிறார்.

வெனிசுவேலா மீதான இந்தத் தாக்குதல், தனது நிர்வாகத்தின் புதிய ‘தேசிய பாதுகாப்பு உத்தி’யின் (NSS) ஒரு பகுதி என்பதை டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். இது பழைய மன்றோ கோட்பாட்டை, டொனால்ட் ட்ரம்பின் பாணியில் “டான்- றோ கோட்பாடாக” (Don-Roe Doctrine) மாற்றி, மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகும். இப்பிராந்தியத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கங்களை அகற்றிவிட்டு, தனக்கு வேண்டியவர்களை ஆட்சியில் அமர்த்த டொனால்ட் ட்ரம்ப் விரும்புகிறார். மதுரோவைக் கடத்திய சில மணி நேரங்களிலேயே கொலம்பியா, கியூபா மற்றும் மெக்சிகோவிற்கும் இதே போன்ற மிரட்டல்களை அவர் விடுத்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் செயல்

அமெரிக்கா தான் இனி வெனிசுவேலாவை ‘நிர்வகிக்கும்’ என்றும், தேவைப்பட்டால் ‘தரைப்படைகளை இறக்கும்’ என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறுகிறார். ஒரு வெளிநாட்டுத் தலைவரை நீதித்துறை குற்றப்பத்திரிகை மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்ற அமெரிக்க அரசியலமைப்பின் ‘போர் அதிகாரங்கள் விதியை’ (War Powers Clause) இந்த நடவடிக்கை அப்பட்டமாக மீறுகிறது.

அமெரிக்காவின் இந்தச் செயல் ‘ஆட்சி மாற்றத்தை’ நோக்கமாகக் கொண்டது என்பதை டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவின் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்காவிற்குள்ளேயே இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ‘சட்ட அமுலாக்கம்’ என்ற பெயரில் சொல்லப்படும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை. எப்ஸ்டீன் விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானத்தையும், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியையும் திசைதிருப்பவே இந்த ‘சாகசத்’ தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்திற்காக ஓர் ஆக்கிரமிப்பு

இந்த வெனிசுவேலா ஆக்கிரமிப்பு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்த முயல்கிறது. ஒன்று, தனது அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மை நெருக்கடியைச் சமாளிப்பது. இரண்டு, தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தாராளமாக நிதி வழங்கிய எக்ஸான் (Exxon) மற்றும் செவ்ரான் (Chevron) போன்ற எண்ணெய் நிறுவனங்களைத் திருப்திப்படுத்துவது. இச்செயல் ஐ.நா சாசனம், ஜெனீவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதுடன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் நடத்தப்பட்டதால் அந்நாட்டின் அரசியலமைப்பையே கேலிக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் குறித்துக் கேட்கப்பட்டபோது, “காங்கிரஸ் இரகசியங்களைக் கசிய விடும்” என்று டொனால்ட் ட்ரம்ப் அலட்சியமாகப் பதிலளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களைக் கொன்று குவித்த இந்தக் கமாண்டோ நடவடிக்கை, ஒரு ‘போக்கிரித்தனமான’ (Rogue State) செயலாகும். மதுரோவையும் அவரது மனைவியையும் பிடித்து வைத்திருந்தாலும், டொனால்ட் ட்ரம்ப் திசைதெரியாமல் நிற்கிறார். ரூபியோ கூறும் 25 பக்கக் குற்றப்பத்திரிகையில் மதுரோவின் பெயரே இல்லை; அவரது மனைவி பற்றி 2007 இல் (அவர்கள் திருமணத்திற்கு முன்பு) நடந்த ஒரு சிறு குறிப்பு மட்டுமே உள்ளது. இதிலிருந்தே டொனால்ட் ட்ரம்ப் தன்னை உலகிற்கே ஒரு ‘சூப்பர் மன்னராக’ கருதி, சட்டங்களை மதிக்காமல் செயல்படுவது உறுதியாகிறது.

உலகளாவிய எதிர்ப்பும் இந்தியாவின் நிலையும்

இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் குறிப்பாக இலத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. வெனிசுவேலா துணை ஜனாதிபதி டெல்சி பெர்னாண்டஸ், “நிக்கோலஸ் மதுரோவே நாட்டின் ஒரே சட்டப்பூர்வமான ஜனாதிபதி; வெனிசுவேலா தனது இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக் காது” என அதிரடியாக அறிவித்துள்ளார். பலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களைப் போலவே, வெனிசுவேலாவிற்கு ஆதரவான போராட்டங்களும் உலகம் முழுவதும் மின்வேகத்தில் பரவி வருகின்றன.

அணிசேரா இயக்கத்தைத் தொடங்கிய நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, இது ஒரு பெரும் சங்கட மான தருணம். காசா இனப்படுகொலையின் போது மௌனம் காத்த மோடி அரசாங்கம், இப்போதும் சர்வதேச சட்ட மீறல்களைக் கண்டிக்கத் தவறிவிட்டது. மற்ற பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய வெளியுறவுத்துறையின் இந்த முதுகெலும்பற்றத் தன்மை (Pusillanimity) வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஆயினும், இந்திய மக்கள் தங்களது ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். இது அமெரிக்க மேலாதிக்கத்திற்கும், ஏழை நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டும் பேராசைக்கும் எதிரான ஒரு நீண்டகாலப் போர். நமது பிரதமரையே மிரட்டி வரும் டொனால்ட் ட்ரம்பின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, வெனிசுவேலா மக்களுடன் கைகோர்த்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்!

மூலம்: It’s ‘Crude’ All the Way, Stupid
ஜனவரி 11, 2026 / தமிழில்: ச.வீரமணி

Exit mobile version