Site icon சக்கரம்

ஈரான் மக்களின் போராட்டம்: ஏகாதிபத்திய,  நவ தாராளமய நெருக்கடிக்கு எதிரான கலகம்

-தே.சைலஸ் அருள்ராஜ்

ரான் நாட்டின் பணமான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவில் கீழிறங்கியுள்ளது.  இதனால் ஏற்பட்ட கடுமையான பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சிதைத்துள்ளது. குறிப்பாக, சிறு மற்றும் குறு வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடிய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

மக்களின் இந்தக் கோபம் நியாயமானது என்றாலும், ஈரான் அரசு இந்தப் போராட்டத்தை அரசுக்கு எதிரான சதி வேலையாகவே பார்க்கிறது.  அதே வேளையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள், மக்களின் உரிமைகளுக்காகப் பேசுவதாகக் கூறிக்கொண்டு, ஈரானைத் தங்களின் காலனியாக மாற்றும் ஏகாதிபத்திய வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

வரலாற்றுப் பின்னணியும்  இஸ்லாமிய ‘புரட்சியும்’

1970-களின் இறுதியில் தென்மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1978 இல் ஈரானில் ஷா மன்னரின் எதேச்சதிகார குடும்ப ஆட்சிக்கு எதிராக இஸ்லாமிய கலாச்சாரப் போராளிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 1979 இல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது.  இதுவே வரலாற்றில் ‘இஸ்லாமியப் புரட்சி’ என அழைக்கப்படுகிறது.

கம்யூனிஸ்டுகள் முதல் தாராளவாதிகள் வரை பல தரப்பினரும் இந்தப் புரட்சிக்கு ஆதரவாக நின்ற போதிலும், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மத எதேச்சதிகார அரசு, நாளடைவில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டது.

ஏகாதிபத்திய எதிர்ப்பும்  அதன் விலையும்

உலகளாவிய அரசியலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்து வரும் நாடுகளில் ஈரானுக்கு முக்கிய இடமுண்டு. பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஈரான், அமெரிக்கக் கூட்டணியால் ‘Axis of Resistance’ (எதிர்ப்பின் அச்சு) என முத்திரை குத்தப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக ஈரான் கொடுத்த விலை மிக அதிகம். 1979 முதல் இன்று வரை ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல்வேறு வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

அணு ஆயுதம் மற்றும் பயங்கர வாதம் போன்ற காரணங்களைக் காட்டி விதிக்கப்பட்ட இந்தத் தடைகள், உண்மையில் ஈரானின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதையே நோக்கமாகக் கொண்டவை.

பொருளாதாரப் போரினால் சீர்குலைந்த வாழ்க்கை

பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் ஆயுதப் போரை விட ‘பொருளாதாரப் போர்’ (Economic War) என்ற புதிய ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளன. ஈரானின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை முடக்கியதன் மூலம் அந்நாட்டின் அந்நியச் செலாவணி வரத்து முற்றிலும் தடுக்கப்பட்டது.

2012 இல் 8,000 டொலராக இருந்த தனிநபர் மொத்த உள்நாட்டு  உற்பத்திப் பங்களிப்பு, 2024 இல் 5,000 டொலராகச் சுருங்கியுள்ளது. இந்த வீழ்ச்சி ஈரானின் வலுவான நடுத்தர வர்க்கத்தைப் பாதாளத்திற்குத் தள்ளி, அவர்களை ‘புதிய ஏழைகள்’ ஆக்கியுள்ளது. இந்த வர்க்கமே தற்போது லொறி ஓட்டுநர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

உரிமைகளை மறுக்கும்  ஆளும் வர்க்கம்

நவீன ஈரானின் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகித்த நடுத்தர வர்க்கத்தினர், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர். இவர்கள் பொருளாதாரத் தேவைகளுக்காகப் போராடுவதோடு மட்டுமல்லாமல், “பெண்கள், வாழ்க்கை, சுதந்திரம்” (Women, Life, Freedom) போன்ற சமூகச் சீர்திருத்தக் கோரிக்கைகளையும் முன் வைக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக எழுந்த ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிந்தைய எழுச்சிகள் ஈரானிய அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்டன.

இந்த நிலையில் மக்களின் இந்தத் தன்னெழுச்சியான கோபத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் அமெரிக்கா, ஈரானின் உள்நாட்டு நெருக்கடிக்குத் தன் தடைகளே காரணம் என்பதை மறைத்து, ஜனநாயகப் போர்வை போர்த்திக் கொண்டு பிரச்சாரம் செய்கிறது.

Protesters hold a rally denouncing the U.S. strikes on Iran’s nucelar facilities, near the U.S. Embassy in Tokyo, Japan June 22, 2025. REUTERS/Issei Kato

நவ தாராளமயக்  கொள்கைகளின் நெருக்கடி

ஈரானின் தற்போதைய நிலைக்கு அமெரிக்கத் தடைகள் ஒரு பக்கம் என்றால், அந்நாட்டு அரசு பின்பற்றும் நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் மறுபக்கம் காரணமாக உள்ளன. 1989 இல் அயத்துல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, ஈரான் அரசு ஐ.எம்.எஃப் (IMF) பரிந்துரைத்த கட்டமைப்பு மாற்றங்களை ஏற்றுக்கொண்டது. மானியங்கள் வெட்டப்பட்டதும், பொதுத்துறை நிறுவனங்கள் பலவீனமடைந்ததும் சாதாரண மக்களின் வாழ்க்கையைச் சுமையாக்கின.

ஈரானிய கம்யூனிஸ்ட் இயக்கமான துடே (Tudeh) கட்சி சுட்டிக் காட்டுவது போல, ஒரு பக்கம் மத எதேச்சதிகார அரசுக்கும், மறுபக்கம் ஏகாதிபத்தியச் சூழ்ச்சிகளுக்கும் இடையே ஈரான் மக்கள் சிக்கியுள்ளனர். அமெரிக்க ஆதரவு பெற்ற முன்னாள் ஷா மன்னரின் வாரிசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த ட்ரம்ப் முயல்வது, ஈரானை மீண்டும் அமெரிக்காவின் அடிமை நாடாக்கும் முயற்சியே தவிர வேறல்ல.

மீண்டெழும் ஈரான் வெனிசுவேலா, கியூபா, சிரியா போன்ற நாடுகளைப் போலவே ஈரானையும் சிதைக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறது. டொலர் ஆதிக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் மூன்றாம் உலக நாடுகளின் மீது இத்தகைய பொருளாதாரத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இருப்பினும், ஈரானிய மக்களின் இந்தப் போராட்டம் நவ தாராளமயக் கொள்கைகளுக்கும், ஏகாதிபத்திய அடாவடித்தனத்திற்கும் எதிரான ஒரு முக்கிய அடையாளமாகும். மதவாத ஒடுக்குமுறையிலிருந்தும், அந்நிய நாடுகளின் ஊடுருவலிலிருந்தும் ஈரான் மக்கள் தங்களை விடுவித்துக்கொண்டு, தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஏகாதிபத்தியம் வீழும், ஈரான் மக்கள் மீண்டெழுவார்கள்.

Exit mobile version