Site icon சக்கரம்

ஏகாதிபத்தியம், எண்ணெய் விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரம்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

டந்த வார இறுதியில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைக் கடந்து, 110 டொலர் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்தியக் கூட்டுத் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு இது பீப்பாய்க்கு 69 டொலராக மட்டுமே இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த எண்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெறும் ஒரே வாரத்தில் எண்ணெய் விலை எவ்வளவு செங்குத்தாக உயர்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.

‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) மூடப்பட்டதால் ஏற்பட்ட உண்மையான தட்டுப்பாட்டை விட, எதிர்காலத்தில் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற ஊகத்தின் அடிப்படையிலான எதிர்பார்ப்பே இந்த அதிரடி விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

தற்போதைய விலை உயர்வானது 1973 ஆம் ஆண்டின் எண்ணெய் அதிர்ச்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அப்போது எண்ணெய் பற்றாக்குறையால் விலை உயரவில்லை; மாறாக ‘ஒபெக்’ (OPEC) நாடுகள் திட்டமிட்டு விலையைப் பலமடங்கு உயர்த்தியதால் அது நிகழ்ந்தது. அதேபோல, 2008 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான எண்ணெய் விலை உயர்வுகளில் இருந்தும் இன்றைய சூழல் முற்றிலும் வேறானது.

தற்காலிக விலை உயர்வும்  நிரந்தரப் போரும்

கடந்த காலங்களில் ஏற்பட்ட விலை உயர்வுகள் குறுகிய காலமே நீடித்தன. உதாரணமாக, 2008 ஆம்  ஆண்டில் சீனாவின் அசுரத் தேவை மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளின் விநியோகத் தடை போன்ற தற்காலிகக் காரணிகளால் விலை உயர்ந்தது.

2022 ஆம் ஆண்டில் உக்ரைன் போரின் விளைவாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்ததால் விலை உயர்ந்தது. ஆனால், தடைகளையும் தாண்டி ரஷ்யா தனது விநியோகத்தைத் தக்கவைத்துக் கொண்டதாலும், ஐரோப்பியச் சந்தைக்குள் அமெரிக்க எரிசக்தி கூடுதல் விலைக்குள் புகுந்ததாலும் அந்த விலை உயர்வு பின்னர் கட்டுக்குள் வந்தது.

ஆனால், தற்போதைய விலை உயர்வு என்பது அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள தற்காப்பு நடவடிக்கையால் ஏற்பட்டதாகும். முடிவே தெரியாமல் நீளும் இந்தப் போர் எவ்வளவு காலம் தொடருமோ, அவ்வளவு காலமும் இந்த விலை உயர்வும் தொடரும் என்பதே கசப்பான யதார்த்தம்.

ஏனெனில், ஈரான் மட்டுமின்றிப் பல அரபு நாடுகளின் எண்ணெய் விநியோகமும் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்ல வேண்டும். இதன் வழியே செல்லும் எண்ணெய்யின் அளவு ரஷ்யாவின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் போல இரண்டு மடங்காகும்! உலகளாவிய இந்த அச்சத்தைத் தணிக்க முயல்வதற்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போரின் நோக்கங்களை அடைய “கொடுக்க வேண்டிய சிறிய விலை இது” என்று கூறி இந்த விலை உயர்வை அலட்சியமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய  பணவீக்கமும் மந்தநிலையும்

எண்ணெய் விலை உயர்வு கணிசமான காலத்திற்கு நீடித்தால், உலகப் பொருளாதாரத்தின் மீது அது மிக  ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நுகர்வோர் நேரடியாக வாங்கும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மட்டுமல்லாது, எண்ணெய்யை மூலப்பொருளாகக் கொண்டுள்ள அனைத்துச் சரக்குகள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரும்.

உதாரணமாக, எண்ணெய் விலை உயர்வால் விவசாய உரங்களின் விலை அதிகரிக்கும்; உரங்களின் விலை அதிகரித்தால் உணவு தானிய உற்பத்திச் செலவு உயரும். உற்பத்தியாளர்களின் இலாப வரம்பு குறையக் கூடாது எனில்,  உணவு தானியங்களின் சந்தை விலையும் தானாகவே அதிகரிக்கும். இதனுடன் ஒட்டுமொத்தப் போக்குவரத்துச் செலவும் கூடுவதால், பணவீக்கம் அனைத்துத் துறைகளிலும் கட்டுக்கடங்காமல் பாயும். இதில் ஒரு நுணுக்கமான பொருளாதாரச் சிக்கல் உள்ளது. எண்ணெய் விலை உயர்வால் பலனடையும் நாடுகள் அல்லது நிறுவனங்கள், தங்களுக்குக் கிடைக்கும் இந்தத் திடீர் இலாபத்தைச் சந்தையில் முதலீடு செய்யாமல் வங்கிகளில் வைப்புத் தொகையாகவே முடக்கி வைப்பார்கள். இதனால் சந்தையில் சரக்குகளுக்கான நேரடிக் கிராக்கி உருவாகாது. அதே  நேரத்தில், பணவீக்கத்தால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்கள் தங்களின் வாங்கும் திறனைக் குறைத்துக் கொண்டு, அத்தியாவசியத் தேவைகளைக் கூடச் சுருக்கிக் கொள்ள நேரிடும்.

இந்த முரண்பாடு உலகளாவிய ஒட்டுமொத்த கிராக்கியை  குறைத்து, உலகப் பொருளாதாரத்தில் ஒரு கடுமையான ‘பணவீக்க மந்த நிலையை’ (Stagflation) உருவாக்கும். விநியோகப் பற்றாக்குறையால் ஏற்படும் இத்தகைய மந்தநிலையைச் சமாளிக்க அரசுகளால் விரிவாக்க நிதி மற்றும் பணவியல் கொள்கைகளைச் செயல்படுத்த இயலாது. ஏனெனில் உற்பத்திப் பொருட்களின் விநியோகமே இங்கே தடைபட்டுள்ளது. எனவே, உலகப் பொருளாதாரத்தில் இந்த மந்த நிலை தவிர்க்க முடியாததாகிவிடும்.

உலகத் தெற்கு நாடுகளின்  இரட்டைத் துயரம்

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைத் தவிர்த்து, மற்ற அனைத்து நாடுகளுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக உலகத் தெற்கு (Global South) நாடுகளின் நிலைமை இன்னும் மோசமாகும். எண்ணெய் இறக்குமதிச் செலவு  அதிகரிப்பதால் இந்நாடுகளின் பணம் செலுத்துதல் சம நிலையில் (Balance of Payments) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும். வளர்ந்த வடபுலத்து நாடுகளைப் போலன்றி, தெற்குலக நாடுகள் சர்வதேச வங்கிகளின் பார்வையில் அதிகக் கடன் தகுதி (Creditworthiness) கொண்ட வையாகக் கருதப்படுவதில்லை. எனவே, பற்றாக் குறையை ஈடுகட்ட இவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்காது. இதன் விளைவாக இந்நாடுகளின் நாணய மதிப்பு படுபாதாளத்தில் வீழ்ச்சியடையும். நாணய மதிப்பு வீழ்ந்தால், இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களின் விலையும் இன்னும் பலமடங்கு உயர்ந்து பணவீக்கத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

கடன் வழங்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள், இந்நாடுகளின் மீது கடுமையான “சிக்கன நடவடிக்கைகளை” (Austerity Measures) நிபந்தனைகளாகத் திணிக்கும். மக்கள் நலத்திட்டங்கள் முடக்கப்படும்; நாட்டின் இயற்கை மற்றும் கனிம வளங்கள் வெளி நாட்டுக் கடன்களுக்குப் பிணையாக அடகு வைக்கப்படும். வேலையிழப்பும் வறுமையும் பெருகும். எனவேதான், இந்த நெறிமுறையற்ற போரை உடனடி யாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா மீது அழுத்தம் கொடுப்பது தெற்குலக நாடுகளுக்கு வாழ்வா-சாவா பிரச்சனையாகும்.

இந்தியாவின் மௌனம் தற்கொலைக்குச் சமம்

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கச்சா எண்ணெய்யில் 84 சதவீதம் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுக்கே வருகிறது. எனவே, இந்த நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் உலக விலை  உயர்வைத் தாண்டி, இந்தியா போன்ற நாடுகளுக்கு நேரடியாகவே கச்சா எண்ணெய் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும். தற்காலிகத் தப்பிப்பாக, ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு “அனுமதி” அளித்துள்ளார். விடுதலையடைந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஒரு காலனி நாட்டைப் போல நாம் யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதற்கு ட்ரம்ப் போன்றவர்களிடம் “அனுமதி” பெற வேண்டியிருப்பது நமது விடுதலைப் போராட்டத்திற்கே இழைக்கப்படும் அவமானமாகும்.

இந்த அடிமைத்தனத்தை எதிர்த்துத் தனது சினத்தை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசு அதனை மௌனமாக ஏற்றுக்கொள்வது வெட்கக்கேடானது. மேலும், இந்த அனுமதியும் வெறும் ஒரு மாதக் காலத்திற்கே! அதன்பின் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதாரச் சூறாவளி கணக்கிட முடியாதது. அமெரிக்க- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இந்தியா மௌனம் காப்பது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

அணு ஆயுதப் பேரழிவின் நிழல்

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடி எண்ணெய் விலையை உயர்த்துவதன் நோக்கமே, உலக மக்கள் ஏகாதிபத்தியப் போரின் விபரீதத்தை உணர்ந்து கிளர்ந்தெழ வேண்டும் என்பதற்காகத்தான். எண்ணெய் விலை பீப்பாய்க்கு 200 டொலராக உயர்ந்தால் மக்கள் எப்படி வாழ்வார்கள்? உலக நாடுகள் உடனே தலையிடாவிட்டால் இது மூன்றாம் உலக மக்களுக்குத் தாங்க இயலாத சுமையாகும். இன்றைய மௌனம் இன்னும் மோசமான ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும்.

போரினால் அமெரிக்காவிற்குள் ஏற்படும் உள்நாட்டுப் பொருளாதாரக் கோபத்தைத் தணிக்கவும், போரை விரைவாக முடிக்கவும் ஈரானுக்கு எதிராக ‘சூழ்ச்சிகரமான முறையில் அணு ஆயுதங்களை’ பயன்படுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துணியக்கூடும்! உலகிலேயே மற்றொரு நாட்டின் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. பிரபல அமெரிக்கப் பொருளாதார நிபுணர் ஜேம்ஸ் கால்பிரைத் குறிப்பிடுவது போல, இத்தகைய அணு ஆயுதப் பேரழிவை மீண்டும் அரங்கேற்றுவதிலிருந்து அமெரிக்கா கடந்த காலங்களில் மூன்று முறை உள் ஆலோசனைகளால் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களைக் காலில் போட்டு மிதிக்கும் அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து குரலெழுப்பத் தவறினால், மனிதகுலம் மீண்டும் ஒரு அணு ஆயுதப் பேரழிவைச் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக நிஜமானதாக மாறிவிடும்.

மூலம்: Imperialism, Oil Prices and the World Economy
தமிழில் சுருக்கம் : எம்.கிரிஜா

Exit mobile version