Site icon சக்கரம்

ஜுலை 1: சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105-ஆவது ஆண்டு தினம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 105-ஆவது ஆண்டு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

105-ஆவது ஆண்டைக் கொண்டாடும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் சார்பில் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:

வறுமையிலிருந்து மக்களை மீட்டு சாதனை

கடந்த 105 ஆண்டுகளில், சீன மக்களை ஒரு மகத்தான மாற்றத்தை நோக்கி வழிநடத்துவதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பான தொலைநோக்குப் பார்வை, மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. 1921-இல் நிறுவப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அன்று முதல் வரலாற்றிலேயே மிகச் சிறப்பான பயணங்களில் ஒன்றை முன்னெடுத்துச் சென்றுள்ளது. அரை-நிலப்பிரபுத்துவ மற்றும் அரை-காலனித்துவ நிலையில் இருந்த நாட்டை, வறுமை மற்றும் பிளவுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை, அனைத்து சிக்கல்களிலிருந்தும் மீட்டிட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உதவி இருக்கிறது. இன்று, நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மனிதகுல வரலாற்றிலேயே மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மேலும் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் உலகளாவிய அளவில் சீனா ஒரு முன்னணி நாடாகத் திகழ்கிறது.

நம்பிக்கை அளிக்கும் சீனத்தின் வழிகாட்டல்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ், சீன மக்கள் குடியரசு தனது மக்களின் தனித்துவமான சூழல் மற்றும் அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட சோசலிசக் கட்டமைப்புப் பாதையைப் பின்பற்றி வருகிறது. ‘சீனப் பண்புகளுடனான சோசலிசக் கட்டமைப்பு’ எனும் கோட்பாட்டு ரீதியான புதுமையான அணுகுமுறை, நாடுகள் செழிப்பு, சமூக நீதி மற்றும் தேசிய மறுமலர்ச்சியை நோக்கித் தங்கள் சொந்தப் பாதையை வகுத்துக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

பன்மைத்துவ உலக ஒழுங்கிற்கு பங்களிப்பு

தற்போதைய கொந்தளிப்பான சர்வதேசச் சூழலில் இந்த சாதனைகள் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற தீவிர சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள வேளையில், பன்முகத்தன்மை, அமைதியான வளர்ச்சி மற்றும் ‘தெற்கு-தெற்கு’ ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீதான சீனாவின் அர்ப்பணிப்பு, உலக விவகாரங்களில் ஒரு நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குகிறது. பரஸ்பர மரியாதை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பன்மைத்துவ உலக ஒழுங்கிற்கான சீனாவின் ஆதரவு, மிகவும் சமத்துவமான சர்வதேச அமைப்பை விரும்பும் பல நாடுகளின் அபிலாஷைகளுடன் ஒத்துப்போகிறது.

முழுமையான சோசலிச கட்டமைப்புக்கான பயணம் ‘நவீன சோசலிச நாட்டை முழுமையாகக் கட்டமைத்தல்’ எனும் தனது பணியின் அடுத்த கட்டத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் வேளையில், இரு நாட்டு மக்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் அமைதி மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய தொடர்ச்சியான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியதற்காக உங்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். வரவிருக்கும் நூற்றாண்டு, கட்சிக்கும், சீன மக்களுக்கும் மற்றும் உலகிற்கும் இன்னும் மகத்தான சாதனைகளைக் கொண்டுவரட்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

Exit mobile version