விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி!

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு பெப்ரவரி 14ந் திகதி வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டங்களை ரத்து செய்யாமல் பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லி எல்லையான காஸிபூரில் மகாத்மா காந்தியின் பேத்தியான தாரா காந்தி (Tara Gandhi Bhattacharjee) விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆடரவளித்ததாக விவசாய சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாரா காந்திக்கு தற்போது 84 வயதாகிறது. தற்போது தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் தலைவர் பொறுப்பில் தாரா காந்தி இருக்கிறார்.
போராட்டத்தின்போது பேசிய அவர், ‘அரசு காரணத்திற்காக நான் இங்கு வரவில்லை. நம் வாழ்நாள் முழுவதும் உணவளித்த விவசாயிகளுக்காக வந்துள்ளோம். என்ன நடந்தாலும் விவசாயிகள் பயனடைய வேண்டும். விவசாயிகளின் கடின உழைப்பு பற்றி யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. விவசாயிகளின் பிரச்சனைகளை அரசு தீர்க்க வேண்டும். விவசாயிகளின் நலனே நாட்டின் நலன்’ என்று தெரிவித்துள்ளார்.