ஆழமாகும் நெருக்கடி திணறும் முதலாளித்துவம்

கடந்த மாத துவக்கத்தில் (ஓகஸ்ட்.9-11, திகதிகளில்) கல்கத்தாவில் நடைபெற்ற சி.ஐ.டி.யு (Centre of Indian Trade Unions – CITU) பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலிருந்து:

முதலாளித்துவத்தின்  நெருக்கடி, மார்க்ஸ்  வரையறுத்தது  போல், முதலாளித்துவத்தின் கீழ்  இலாப விகிதம்  வீழ்ச்சியடையும்  என்ற உள்ளார்ந்த  போக்கிலிருந்து உருவாகிறது. 2008ம் ஆண்டு துவங்கிய உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குப்  பிறகு இந்தப்போக்கு குறிப்பிடத்தக்க வகையில் முக்கிய கவனத்திற்குரியதாக  மாறத் தொடங்கியுள்ளது. முதலாளித்துவம் அதன்  நவீன தாராளவாத  எல்லைக்குள்  இந்தப் பிரச்சனைக்கு  எந்த வெற்றிகரமான  தீர்வையும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால்,  நீண்ட கால மந்தநிலை உலகப்  பொருளாதாரத்தின்  நிரந்தர  அம்சமாக மாறியுள்ளது.

உந்தித் தள்ளும் ஊக வணிகம்

முதலாளித்துவக் கட்டமைப்பின்  தொடர்ச்சியான நெருக்கடியானது, ஆளும் வர்க்கத்தின்  தீவிர  ஆதரவுடன் முதலாளித்துவ  வர்க்கத்தால்  அபகரிப்பு  அல்லது பொதுச் செல்வம் மற்றும் வளங்களைக்  கொள்ளையடிக்கும் விபரீதமான – மிக மோசமான  திட்டங்களைக் கட்டவிழ்த்து  விட்டது.  நெருக்கடியின்  காரணமாக ஏற்பட்டுள்ள இலாப இழப்பு மற்றும் சரிவை ஈடுகட்டுவ தற்காக,  உலகளவில்  அரசு இயந்திரங்களை  ஆக்ரோஷமாக  சுரண்டல் பாதையில் கட்டவிழ்த்து விட்டுள்ளது முதலாளித்துவம்.  பொருளாதாரத்தில்  சர்வதேச நிதி மூலதனத்தின்  மேலாதிக்கம் மற்றும்  அதனுடன்  இணைந்த  நிதியாக்க  செயல்முறை  ஆகியவை அனைத்து பொருளாதாரப்  பிரிவுகளிலும் ஊக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது காணப்படும்  ஒரு சிறிய அளவிலான உலக வளர்ச்சி கூட,  முக்கியமாக  ஊக வணிகத்தால் ஏற்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட  முதல்  500 அமெரிக்க நிறுவனங்களுக்குள்ளும்  கூட,  ஏழு பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியானது  சமூக ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்பட்ட – உந்தப்பட்ட வளர்ச்சியாகத் தான் உள்ளது. அதுவும் மிகவும் சீரற்றதாகவே இருக்கிறது. இவை மிகப் பிரம்மாண்டமான டெக் மற்றும் சிப் நிறுவனங்கள்.  (ஆல்ஃபாபெட்,  அமேசான்,  ஆப்பிள், மெட்டா, மைக்ரோசாப்ட்,  என்விடியா மற்றும் டெஸ்லா)  இந்த 7 நிறுவனங்கள்  இப்போது  சுமார் 12 டிரில்லியன் டொலர் சந்தை  மூலதனத்தை வைத்துள்ளன. அதே நேரத்தில்  மற்ற 493 நிறுவனங்கள் தேக்கநிலை மற்றும் பொருளாதாரச் சரிவையே எதிர் கொள்கின்றன. இத்தகைய  மாயையான உந்துதல் காரணமாக ஏற்படும் தற்காலிக ஏற்றம் இறுதியாக ஒரு குமிழியை உருவாக்கி,  முழு உலகப்  பொருளாதாரத்தையும் ஆழமான நெருக்கடியில்  மூழ்கடிக்கும். 

நெருக்கடிக்கு தீர்வாக முதலாளித்துவத்தின்  பதில் நடவடிக்கைகள்  

முதலாளித்துவ  நிறுவனங்கள் ஆறு வழிகளில் நெருக்கடியிலிருந்து வெளியே வர முயல்கின்றன: 

அ) குறிப்பிட்ட தருணத்தில்  மிகவும்  இலாபகரமான  தொழில் மற்றும் பொருளாதாரத்தின் ஒரு புதியகிளையை  உருவாக்குவது;

ஆ) தற்காலிகமாக போட்டி உற்பத்தித்திறனை தீவிரமாக விரைவுபடுத்துவது; 

இ) சிறிய  நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொழிலாளர்கள்  மீது நெருக்கடியின் சுமையைத் தள்ளுவது; 

ஈ) மிகப் பெரிய வேலையின்மையை உருவாக்குவது; ஊதியத்தை குறைப்பது; 

உ) பொதுவாகத்  தொழிலாளர்  வர்க்கத்தின்  மீது சுமையை மடை மாற்றுவது;

ஊ) போரை கட்டவிழ்த்து விடுவது. 

(போர்ப் பொருளாதாரம் தான், நெருக்கடிகளின்  போது  முதலாளித்துவத்தின்  மிகவும்  நம்பகமான  நண்பராக இருந்து வருகிறது.)

(அ)
இலாபகரமான புதிய துறையாக நவீன எரிசக்தித்துறை

உலகமே புதை படிம எரிபொருளுக்கு பதிலாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறி வருகிறது. இது உலக வல்லரசுகளுக்கு இடையே முரண்பாடுகளை உருவாக்கும்; புதிய முகாம்களை உருவாக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டணி சக்திகளும் ஒரு புறம்; எஞ்சிய பகுதி உலகம் மறுபுறம். 

பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (ஐ.எம்.எப் – International Monetary Fund) 1945 ஆம் ஆண்டைய, எரிசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டு 80 ஆண்டுகள் ஆகின்றன. இது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம். இப்போது சவூதி அரேபியா எண்ணெய்வளம் சார்ந்து நிற்கும் அதன் பொருளாதாரத்தை மாற்றிக் கொள்ளு மாறு ஐஎம்எப் திடீரென ஆலோசனை கூறியுள்ளது. ஏற்கனவே எண்ணெய்  உற்பத்தி/ ஏற்றுமதியில் பிரதான நாடு என்ற பங்கை அமெரிக்கா வகிக்கிறது. இதனால் மத்தியக் கிழக்கு பகுதியில் விநோதமான குழப்பம் உருவாகி உள்ளது.

ஆபிரிக்காவின் சாகெல் பிராந்தியத்தில் மாலி, புர்கினோ பாஸோ, சாட், நைஜர் ஆகிய நாடுகளில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஆதரவு ஆட்சிகள் மாறி யுள்ளன. இப்பிராந்தியத்தில் அரிய வகை தாதுப் பொருட்களான எண்ணெய், தங்கம் மற்றும் யுரேனியம் ஏராளமாகக் கிடைக்கிறது. ஐரோப்பிய யூனியன் முழுமைக்கும் 25% யுரேனியம் தேவையை நைஜர் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் நைஜரில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடியைத் தீவிரப்படுத்தும். ஆர்ஜென்ரீனா, பொலிவியா, சிலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ‘லித்தியத் திற்கான ஓபெக்’ அமைப்பு குறித்து பரிசீலித்து வருகின்றன. இதன் உற்பத்தி மற்றும் விலையை கூட்டாக தீர்மானிக்க முடியும்.

உலக அளவில் எரிசக்தி துறை மற்றும் அது  சார்ந்த அரசியல் முழுமையாக மாறி வருகிறது. இது உலக அளவில் பணி முறைகள் மற்றும் பணியாளர்களில் பெரும் மாற்றம் கொண்டு வரும். மாற்று எரிசக்திக்கான அடிப்படை கச்சா பொருள் மற்றும் தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாடு காரணமாக ஒரு சில பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் ஏகபோகமாக புதிய எரிசக்தி துறை உருவாகி வருகிறது.

(ஆ) 
செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ – Artificial Intelligence) புகுத்தி உற்பத்தி திறன் உயர்வு

இரண்டாவது அம்சம், தொழிலாளரின் உற்பத்தி திறனை உயர்த்தி, தரமான வேலை வாய்ப்பை குறைப்பது ஆகும். தற்போது உற்பத்தித்திறன் உயர்வு பற்றி பேசும்போது, மிக அதிகமாக குறிப்பிடப்படுவது, செயற்கை நுண்ணறிவை, அனைத்து அம்சங்களிலும் புகுத்துவது ஆகும். உற்பத்தி திறனை ஒரு புதிய கட்டத்திற்கு உயர்த்துவதற்கு  ஏ.ஐ (AI) ஒரு கருவியாக பயன்படுகிறது. அதன் வாய்ப்புகள் மற்றும் பலம் குறித்து சர்வதேச மூலதனம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்திரச் செலவுகளை உயர்த்தாமலே, வேலைவாய்ப்பில் பொருளாதார சிக்கனம் மேற்கொண்டு, உற்பத்தித்திறன் / இலாபங்களை பல மடங்கு உயர்த்த முடியும் என்பதே முதலாளித்துவத்தின் அனுமானம்.

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட்டை விட கூடுதலாக இந்த ஆண்டு பன்னாட்டு பங்கு சந்தையின் இலாபத்தில் ஐந்தில் ஒரு பகுதிக்கு சமமாக சம்பாதிக்க முடியும் என கருதி, பிரதான ஏ.ஐ வடிவமைப்பாளர் நிவேதியா, ஒரு இலட்சம் கோடி டொலரை முதலீடு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

(இ)
தொழிலாளர் மீது  நெருக்கடியின் சுமைகள் ஏற்றம்

நெருக்கடியில் இருந்து மீள முதலாளித்துவத்தின் கைகளில் உள்ள,  அதற்கு தெரிந்த தெளிவான வழி, அதன் சுமைகளை தொழிலாளர் மீது திணிப்பதே. அதிகாரப்பூர்வமாக அமெரிக்க பொருளாதாரத்தில் 2024 மே மாதக் கணக்கின்படி 2.72 இலட்சம் வேலை வாய்ப்புகள் கூடியதாக கூறுகின்றனர். ஐந்து மாதங்க ளில் இது மிக அதிகமாம். ஆனால் அதே மே மாதம் வேலையின்மை விகிதம் 4% உயர்ந்தது. எதார்த்தத்தில், மே மாதம் 2,86,000 பகுதி நேர வேலை வாய்ப்புகள் அதிகரித்த போதிலும், முழு நேர வேலை வாய்ப்புகள் 6,25,000 வீழ்ச்சியுற்றன. இதர முன்னேறிய நாட்டு  பொருளாதாரங்களிலும் இதே போல் வேலைவாய்ப்பு வீழ்ந்து வருகிறது. வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பின் தரம் சீர்கெட்டு வருகிறது. உலக அளவில் இவ்வாறு மோசமாக பணி உறவுகள் மாறுவது புதிய சகஜமான நிலையாக உள்ளது.

2024 -க்கான போக்குகள் குறித்து ஐ.எல்.ஓ (International Labour Organization) அறிக்கை  கூறுவது, ஜி-20 நாடுகளில் உண்மை ஊதியம் குறைந்துள்ளது; தீவிர வறுமையில் வாழும் தொழிலாளர் எண்ணிக்கை உலக அளவில் 10 இலட்சம் உயர்ந்துள்ளது. நான்காண்டுக்கு முன் இருந்ததை விட தற்போது அமெரிக்க தொழிலாளியின் உண்மை வார ஊதியம் 7 % குறைந்துள்ளது.

மே மாதம், பல பணிகளில் ஈடுபடும் அமெரிக்கர் எண்ணிக்கை 84 இலட்சமாக உயர்ந்தது. இது 2020ஐ காட்டிலும் 30 இலட்சம் பேர் அதிகம். வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஒவ்வொருவரும் இரண்டு பணிகளை செய்ய வேண்டி உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஜெர்மனி, தொழிலாளரின் உண்மை ஊதியம் சீராக குறைந்துள்ளது ; 2020 இல் கொரோனா முடிவுற்ற பிறகு 6 சதவிகிதம் வீழ்ச்சி.

தொடரும்
 

Tags: