இன்றைய ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள்
–பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

அண்மைக் காலமாக இன்றைய ஏகாதிபத்தியத்திற்குள் தோன்றியுள்ள முரண்களுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் விசித்திரமான நடவடிக்கைதான் காரணம் என்று, பொதுவாக தாராளவாதிகளின் வட்டாரத்தில் குற்றம் சாட்டப்படுகிறது. அவர் தான்தோன்றித்தனமாக, பீங்கான் கடைக்குள் புகுந்ததொரு முரட்டுக் காளையாக செயல்படுவதன் மூலம், ஏகாதிபத்திய முகாமில் முன்பு நிலவி வந்த ஒற்றுமையை நொறுங்கச் செய்தார் என்றனர். இந்த பகுப்பாய்வு மிகவும் மேலோட்டமான ஒன்றே ஆகும்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்களுக்கான சுங்க வரி என்பது டிரம்ப் வருகைக்கு முன்பே நிலவிய ஒன்றுதான். (ரஷ்யாவில் இருந்து கடல் வழியாக அமைக்கப்பட்டிருந்த எரிவாயுக் குழாய்) நார்ட் ஸ்ட்ரீம் 2 தகர்க்கப்பட்டதன் மூலம், அமெரிக்காவையே தனது எரிசக்திக்காக நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு ஐரோப்பா ஏற்கனவே தள்ளப்பட்டிருந்தது. ஜெர்மனி, தன்னுடைய முதலீடுகளை மீண்டும் தன் நாட்டுக்கே மாற்றுவதன் மூலம், தொழில்மயத்தை நோக்கிச் செல்லும் செயல்முறைகள் டிரம்ப் வருகைக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்தப் போக்குகளை இன்னும் வேகமாக முன்னெடுப்பவராக, ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்’ என்ற முழக்கத்துடன் டிரம்ப் செயல்படுகிறார். எனவே, இப்போது நாம் கண்டுவரும் போக்கு அவருக்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விருப்பத்திற்கு மாறாக, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் புதியவை என்பது உண்மைதான்; இந்த நடவடிக்கையும் கூட, மீள முடியாத ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்த சூழலில் இருந்து ஏகாதிபத்தியத்தை மீட்பதற்கான ஒன்றே ஆகும். அணு ஆயுத மோதல் என்ற அபாயகரமான கட்டத்திற்கு போரை தீவிரப்படுத்துவது; அல்லது, போரை இழுத்தடிக்க அனுமதிப்பது என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்கனவே உருவாகியிருந்தது.
போரில் படிப்படியாக ரஷ்யா மேலாதிக்கம் பெற்று வந்தது. ரஷ்யாவையும், சீனாவையும் சுற்றி, ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான நாடுகளுடைய முகாம் மெல்ல ஒருங்கிணைந்து வந்தது. எனவே, வேறு வார்த்தைகளில் சொன்னால், உக்ரைன் போரில் டிரம்ப் எடுக்கக் கூடிய நிலைப்பாடு, ஏகாதிபத்திய உத்தியின் மாறுபட்டதொரு வெளிப்பாடே ஆகும். ஏகாதிபத்திய முகாமில் நிலவும் வேறுபட்ட பொருளாதார நலன்களின் அடிப்படையில் முகிழ்த்துவரும் முரண்பாடுகளால்தான் இவ்வாறு நடப்பதாக பார்க்க முடியாது. அதே சமயம், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் உண்மையானவை. இன்று நாம் கவனிக்கும் விரிசல்கள் அந்த முரண்களின் காரணமாக எழக்கூடியவையே; டொனால்ட் டிரம்ப்-இன் கோமாளித்தனங்களால் அல்ல.
பொருளாதார மந்தநிலையும் நவ–பாசிசபரவலும்
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மந்தநிலையில் வேர் கொண்டுள்ளன. இந்த மந்தநிலையின் பரிமாணம் பின்வரும் புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது. 1961க்கும் 1973க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக இருந்தது; 1973க்கும் 1984க்கும் இடையிலான ஆண்டுகளில் இது 2.9 சதவீதமாக இருந்தது; 1984க்கும் 1997க்கும் இடையே இது 3.1 சதவீதமாக இருந்தது; ஆனால் இந்த விகிதம் 2007 மற்றும் 2018 க்கு இடையில் 2.7 சதவீதமாகக் குறைந்தது. இந்த பத்தாண்டுகால வளர்ச்சி விகிதம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் மிக மெதுவான விகிதமாகும். தாராளவாத வட்டங்களில், பொருளாதார மந்த நிலைக்கு காரணமாக சொல்லப்படும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பே இந்த நிலைமைதான் நிலவியது என்பதை நாம் பார்க்க வேண்டும்
நவதாராளமய காலத்து முதலாளித்துவமானது, மொத்த உற்பத்தியில் பொருளாதார உபரியின் பங்கை தொடர்ந்து உயர்த்துகிறது. அதன் மூலம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும், உலக அளவிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. நவதாராள முதலாளித்துவத்தின் இந்த உள்ளார்ந்த போக்கிலேயே மந்த நிலைமைக்கான காரணத்தை நாம் அடையாளம் காண முடியும். முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே இவ்வாறு நடப்பதற்கான காரணம், அங்கேயுள்ள மூலதனம், தனது உற்பத்தி நடவடிக்கையை குறைந்த கூலி உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றிட மேற்கொள்ளும் முனைவாகும்.
கடந்த கால காலனித்துவம் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளில் தொழில்மய நீக்கம் நடந்ததுடன், உபரியும் உறிஞ்சப்பட்டிருந்தது. இதுதான் அங்கே பெரும் உழைப்பாளர் படை நிலவிடக் காரணமாக அமைந்தது. மேற்சொன்ன நிகழ்வுப் போக்கினால், புவிக் கோளத்தின் வடக்கில் உள்ள (வளர்ச்சிபெற்ற) நாடுகளில், தொழிலாளர்களுடைய பேரம் பேசும் வலிமை குறைகிறது; உற்பத்தி திறன் உயர்வுக்கேற்ப ஊதியம் உயராமல் தடுக்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில் இருந்து, தொழிலாளர்கள் இடம்பெயரும் போதிலும் கூட, தொழிலாளர் இருப்பு முற்றிலும் தீர்வதில்லை. மாறாக, அதிகரிக்கவே செய்கிறது. சிறு உற்பத்தியின் மீது, நவதாராளமயக் கொள்கைகளால் நிகழ்த்தப்படும் தாக்குதலின் காரணமாகவும், வர்த்தக தாராளமயமாக்கலின் விளைவாக தொழிலாளர்களுடைய உற்பத்தி திறன் வளர்ச்சி பெருமளவு வேகப்பட்டிருப்பதன் காரணமாகவும் இவ்வாறான அதிகரிப்பு நடக்கிறது. இந்த உண்மை நிலைமை காரணமாக, தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் அதிகரித்தாலும் அவர்களுடைய உண்மை ஊதியமானது, பிழைப்பாதார மட்டத்துடனே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, புவிக்கோளத்தின் வடக்கிலும், தெற்கிலும் என இரு தரப்பிலுமே பொருளாதார உபரியின் பங்கு அதிகரிக்கிறது. மேலும், உபரியில் இருந்து நுகர்வு குறைகிறது; உழைக்கும் மக்கள் வருமானத்திலோ பெரும்பகுதி நுகர்வுக்கே செல்கிறது என்ற நிலைமை; கிராக்கி அதிகரிப்பதை மந்தமாக்குகிறது. இதன் விளைவுதான், உலக உற்பத்தியில் ஏற்படும் ஒட்டுமொத்த சரிவு ஆகும்.

மிகை உற்பத்தியை நோக்கிய போக்கினை உருவாக்கிய நவதாராளமயம் அத்தோடு நிற்கவில்லை; இந்தப் போக்குக்கு எதிராக, அரசு தலையீடு செய்வதற்கான சாத்தியத்தையும் அது தடுக்கிறது. ஏனென்றால், ஒட்டுமொத்தமாக தேவையை அதிகரிக்கும் எந்தவொரு அரசு செலவினத்திற்குமான நிதியை பெறுவதற்கு, நிதிப் பற்றாக்குறையை உயர்த்த வேண்டும் அல்லது பணக்காரர்களுக்கு வரிவிதிக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறையை உயர்த்தும்போது, அந்த நேர்வில் யாருக்கும் வரி விதிக்கப்படவில்லை. எனவே அரசின் செலவினத்தை அதிகரித்தாலும் கூட யாருடைய நுகர்வுச் செலவும் குறைவதில்லை.
அதே சமயம், பணக்காரர்கள் மீது வரி விதித்தால், அவர்கள் தமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நுகர்வுக்காக பயன்படுத்துவோராக இருப்பதால் அந்த வரியில் ஒரு பகுதி அவர்களுடைய சேமிப்பில் இருந்து செல்கிறது; சிறு பகுதி மட்டுமே அவர்களின் நுகர்வுச் செலவினங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனால், நிதிநிலை அறிக்கையில் சமநிலை இருந்தாலும் கூட, அரசாங்கம் தனது வரி வருவாயைச் செலவு செய்யும்போது, அதனால் மொத்த கிராக்கியில் நிகர அதிகரிப்பு ஏற்படுகிறது.
அதே சமயம், அரசாங்க செலவினங்களுக்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக ஏழைகள் மீது வரி விதிப்பது ஒட்டுமொத்த கிராக்கியை அதிகரிக்க உதவாது, ஏனெனில், எப்படியும் ஏழைகள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை நுகர்விற்குதான் செலவிடுகின்றனர். ஆனால், நிதி மூலதனமானது பணக்காரர்கள் மீது வரி விதிப்பதையும், பற்றாக்குறையை அதிகரிப்பதையும் எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பை தெரிவிப்பதில் முக்கியமானவர்கள் நிதியாளர்களே; நவீன தாராளமயத்தின் கீழ் நிதி மூலதனம் உலகமயமாக்கப்படுவதாலும், அரசு ஒரு தேசிய அரசாக இருப்பதாலும், நிதி வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டுமானால், முந்தையவரின் ஆணைக்கு ஒருதேசியஅரசுகீழ்ப்படிந்தாகவேண்டும்.
எனவே, தேசிய அரசாங்கம் எதுவும், உலகமய நிதியத்தின் ஆணைகளை எதிர்த்து, மொத்த கிராக்கியை உயர்த்துவதற்கான நிதிக் கொள்கைகளை முன்னெடுக்கிற நிலைமையில் இல்லை. மேலும், (இப்போது பின்பற்றப்பட்டு வரும் பணவியல் கொள்கை ஒட்டுமொத்த கிராக்கியை உயர்த்துவதற்கு பயனற்றது (அதே சமயம், கிராக்கியை குறைக்க இது பலனளிக்கக் கூடும்); உண்மையில், மந்தநிலை தொடங்கிய 2007க்குப் பிந்தைய காலகட்டத்தின் பெரும்பகுதியில், புவிக்கோளத்தின் வடக்கில் அமைந்த நாடுகள், தம் வட்டி விகிதங்களை பூஜ்ஜியத்திற்குக் கீழே தள்ளும் புள்ளிக்கு, விரிவாக்கத்தை நோக்கிய பணக் கொள்கையைப் பின்பற்றி வந்தன. ஆனால் இந்த நடவடிக்கைகள் மந்தநிலையை மாற்றியமைக்கவில்லை.
இப்போதைய மந்தநிலைமையின் காரணமாக, முதலாளித்துவ நாடுகளில் பெரிய அளவிலான வேலையின்மை ஏற்பட்டுள்ளது. நவதாராளமயத்தின் உச்ச காலத்தில் இருந்ததை விடவும் இப்போது அதிகமான வேலையின்மை நிலவுகிறது. (ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகளின் தொடக்கத்தில் நிலவிய வேலையின்மையை விடவும் இது அதிகமாகும்). இதன் விளைவாக, உலகம் தழுவிய நவ பாசிச வளர்ச்சிப் போக்கு உருவாகியுள்ளது. நாடுகளில் உள்ள பெருநிறுவன – நிதி சக்திகள், இந்த நவ பாசிச குழுக்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் நவ பாசிச ஆட்களுக்கு நிதி கொடுத்தும், ஊடக வெளிச்சம் கொடுத்தும், திசைதிருப்பல் வாதங்களை உருவாக்குகிறார்கள். மத அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ சிறுபான்மையினரை தனிமைப்படுத்துவதுடன், பெரும்பான்மையினரிடம் அவர்களுக்கு எதிரான வெறுப்பை உருவாக்குவதாக இந்த போக்கு அமைகிறது.
அதேநேரத்தில் உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, அவர்களின் மெய்யான துயரங்களை மாற்றுவதற்கான போராட்டங்களை திறம்பட முன்னெடுக்கவியலாமல் செய்கிறது. இந்த நவ பாசிசக் குழுக்கள், தத்தமது நாடுகளில் ஏகபோகக் குழுக்களின் நலன்களையே முன்னெடுக்கின்றன. அதே சமயம், 1930களில் பாசிசவாதிகள் செய்ததைப் போலவே, புதிய ஏகபோக மூலதனத்தின் ஒரு பிரிவுக்கு மட்டும் நெருக்கமாக நடந்துகொள்கின்றன.
நவ பாசிச அரசாங்கங்களாலும் பொருளாதார மந்த நிலைமையை மாற்றியமைக்க இயலாது. தாராளமய-முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு உள்ள அதே காரணங்கள்தான் இதற்கும்: நவ பாசிசத்தின் கீழும் ஒரு அரசு தேசிய அரசாகவே தொடர்கிறது. ஆனால், நிதி மூலதனமோ, உலகமயமாக்கப்பட்டுள்ளது. எனவே, உலகமய நிதி மூலதனத்தின் முன்னுரிமைகளைப் புறந்தள்ளியோ, பணக்காரர்கள் மீது வரி போடுவதன் மூலமோ நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் திராணியற்றதாகவே தேசிய-அரசின் அரசாங்கம் இருக்கிறது.
எப்படியென்றாலும், நவ பாசிச ஆட்சியும் கூட மக்களின் பொருளியல் வாழ்க்கைத் தரம் பற்றி முற்றிலும் அலட்சியம் காட்ட முடியாது. அடக்குமுறைகளும், கவனத்தை திசைதிருப்பும் வெறுப்புப் பேச்சுகளும் மட்டுமே அதை அதிகாரத்தில் நீடித்திருக்க போதுமானதாக இருக்காது; மந்த நிலைமையை எதிர்கொள்வதற்கும், வேலையின்மையைக் குறைப்பதற்கும் அது பயன்படுத்திடும் பொதுவான வழிமுறை, இறக்குமதிகளின் மீது கூடுதல் வரி போட்டு வசூலிப்பதாகும். இதைத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்கிறார். எனவே, இதுவொன்றும் பொருளாதாரத்தை மீட்பதற்காக அவரே புதிதாகக் கண்டுபிடித்த வழிமுறையல்ல.

அண்டைநாட்டைஓட்டாண்டியாக்கும்கொள்கை
இறக்குமதிகளின் மீது அமெரிக்கா விதிக்கும் கூடுதல் வரிக்கு பதிலடியாக, அதன் வர்த்தகக் கூட்டாளிகளும் தம்முடைய இறக்குமதி வரி விகிதங்களை மாற்றாமல் இருந்தால், அமெரிக்கா தன்னுடைய கிராக்கியை மற்ற நாடுகளின் உற்பத்தியாளர்களிடமிருந்து பறித்து தம் சொந்த உற்பத்தியாளர்களுக்கு மாற்றும் முயற்சியில் வெற்றிபெறக் கூடும். இதுபோன்ற சூழலில் அதன் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளிலும், வேலைவாய்ப்பிலும் சில அதிகரிப்பு சாத்தியமாகும். இவ்வாறாக வேலைவாய்ப்பில் ஏற்படும் அதிகரிப்பானது அதன் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு ஏற்படும் இழப்பில் இருந்து கிடைத்த பலனாக இருந்திருக்கும்: அதாவது, உண்மையில் அமெரிக்கா தன்னுடைய நாட்டில் நிலவும் வேலையின்மையில் ஒரு பகுதியை தன்னுடைய வர்த்தகக் கூட்டாளிகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும் என்பதே. மற்றவர்களுக்கு வேலையின்மையை ஏற்றுமதி செய்வதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பதை “அண்டை வீட்டாரை ஓட்டாண்டியாக்கும் கொள்கை” (beggar-thy-neighbour) எனலாம்.
ஆனால், அமெரிக்காவின் நலனிலிருந்து முன்னெடுக்கப்படும் இந்த ’அண்டை நாட்டை ஓட்டாண்டியாக்கும் கொள்கையின் மீது மற்ற நாடுகள் அமைதிகாக்காது. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்களுக்காக, அமெரிக்காவின் இந்த பாதுகாப்புவாதக் கொள்கைகளால் உள்நாட்டில் ஏற்படும் வேலை இழப்பை எதிர்கொள்ளும் ஒரு வழிமுறையாக, அரசு தலையீட்டை மேற்கொள்ள முடியாது. எனவே, அவர்களும் இறக்குமதி வரிகளை (சுங்க வரிகளை) உயர்த்துவதன் மூலமே பதிலடி கொடுக்க முடிவு செய்வார்கள். ஆனால் இவ்வாறு அவர்கள் பதிலடி கொடுத்தால், அதன் காரணமாக அமெரிக்காவிற்கு கிடைக்கும் எந்த நன்மையும் மறுக்கப்படுவதுடன், எல்லா நாடுகளிலும் அது வேலைவாய்ப்பை சரியச் செய்யும். அதற்கான காரணங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்.
ஒரு முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் விதிக்கப்படும் சுங்க வரி, பாதுகாப்புவாதம் எதிர்பார்க்கும் விளைவை வழங்க வேண்டுமெனில், அந்த வரி பணக்கூலியை உயர்த்தாமல், விலைகளை மட்டும் உயர்த்த வேண்டும். அதாவது, அந்த வரி, உண்மை ஊதியத்தைக் குறைப்பதாக அமைய வேண்டும். ஒரு நாட்டில் ஒரு கூடை சரக்கு உற்பத்தி செய்யப்படுவதாக ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம். அவ்வாறு உற்பத்தியாகும் ஒரு கூடையின் விலை ரூ. 100 என்று கொள்வோம். இந்த ஒரு கூடையை தயாரிக்க ரூ. 30 மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன (இந்த கூடையில் வேறு சில பொருட்களும் கூட இறக்குமதியாகலாம்); ஒரு அலகு உற்பத்திக்கான கூலிச் செலவு ரூ. 45, ஒரு அலகில் கிடைக்கும் இலாபம் ரூ. 25 (அதாவது, ஒரு அலகுக்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு இலாபம்). அனைத்து இறக்குமதிகளுக்கும் ஒரே சீராக 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படுவதாகக் கொள்வோம். பண ஊதியம், ஒரு கூடையின் விலை உயரும் விகிதத்திற்கு நேர் விகிதத்தில் உயர்வதாக எடுத்துக் கொள்வோம். இலாபத்தின் விகிதம் குறைக்கப்படாது என்பதால், ஒட்டுமொத்த விலை 10 சதவீதம் உயரும்.
எனவே, இறக்குமதியின் மீது சுங்க வரி விதிப்பதால் கிடைக்கும் எந்தப் பலனும் இந்த உயர்வின் மூலம் இழக்கப்படும் என்றே தெரிகிறது. எனவேதான், ஒரு முதலாளித்துவ அமைப்பில் சுங்க வரியால் ஏதாவது நன்மை கிடைக்க வேண்டுமென்றால், அது உண்மை ஊதியத்தைக் குறைப்பதாக அமைய வேண்டும். எல்லா நாடுகளுமே சுங்கத் தீர்வையை உயர்த்தும் முடிவை மேற்கொண்டால், உண்மை ஊதியத்தில் பொதுவான வீழ்ச்சி ஏற்படும். ஆனால், ஏற்றுமதியில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். சுங்க வரி உயர்வின் காரணமாக, எல்லா இடங்களிலும் விலையேற்றம் ஏற்படும். பணக்கூலியில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், ஊதியத்தின் பங்கு, லாபத்திற்கு மாறுகிறது. இதன் காரணமாக எல்லா இடங்களிலும் மொத்த கிராக்கியில் வீழ்ச்ச்சி ஏற்படும். நெருக்கடி மோசமாகும். முன்பைக் காட்டிலும் வேலையின்மை இன்னும் அதிகரிக்கும்.
எனவே, அமெரிக்கா உயர்த்தும் சுங்க வரிகளுக்கு எந்த பதிலடியும் தரப்படாவிட்டால், அமெரிக்காவில் வேலையின்மை குறையலாம், ஆனால் அதன் வர்த்தகக் கூட்டாளிகளுக்கு வேலையின்மை அதிகரிக்கும். அதே சமயத்தில் அவர்கள் பதிலடியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அதனால் எல்லோருக்குமே வேலையின்மை அதிகரிக்கும். இப்படி எது நடந்தாலும், அமெரிக்காவின் இந்தப் பாதுகாப்புவாதம் உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில் பாதகமான விளைவையே உருவாக்கிடும்.
இந்த விஷயத்தை வேறுவிதமாகப் பார்க்கலாம். ஏற்கனவே விவாதிக்கப்பட்ட காரணங்களுக்காக, எல்லா இடங்களிலும் அதிக அரசாங்க செலவினங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், உலகச் சந்தையின் அளவு வரம்புக்கு உட்பட்டுள்ளது. ஒரு நாடு இந்த உலகச் சந்தையில் தனது பங்கை மட்டும் உயர்த்துவதன் மூலமே, அதன் வேலையின்மையைக் குறைக்க முடியும், அதாவது ‘அண்டை நாட்டை ஓட்டாண்டியாக்கும்’ கொள்கையின் மூலம் அதன் வேலையின்மையை ஏற்றுமதி செய்வதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்; ஆனால் அவர்கள் அனைவருமே அத்தகைய கொள்கையை பின்பற்றுவார்களானால் எவரும் ஆதாயம் அடைய முடியாது. அதேவேளையில் அனைவருமே கூட்டாக மோசமாகிவிடுவார்கள். ஏனெனில், எல்லா இடங்களிலும் குறைந்த உண்மை ஊதியங்களின் விளைவாக உலகச் சந்தையின் அளவு சுருங்குகிறது .
ஆகவே, ஏகாதிபத்திய நாடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அரசாங்கச் செலவினங்களையும், அதனால் உலகச் சந்தையின் ஒட்டுமொத்த அளவையும் உயர்த்த முடியாது என்ற உண்மையில்தான் தற்கால ஏகாதிபத்தியத்தின் முரண்பாடு அடங்கியுள்ளது; வேலையின்மையைக் குறைப்பதற்கான அவர்களின் முயற்சியில் ஏற்படும் போட்டி ‘அண்டை வீட்டாரை ஓட்டாண்டியாக்கும்’ கொள்கைகளின் வடிவத்தை மட்டுமே எடுக்கும். இது அவர்கள் அனைவருக்கும் நிலைமையை மோசமாக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகமய நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் இப்போது உலக முதலாளித்துவத்தை அதன் வக்கிரமான பிடியில் வைத்திருக்கிறது. அங்கு ஏகாதிபத்திய நாடுகள் வேலைவாய்ப்பின்மையைக் குறைக்க விரும்பினால் அண்டை நாட்டை ஓட்டாண்டியாக்கும் கொள்கைகளைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவத்தின் ஒரு அம்சமாக இருந்து வந்துள்ள ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி மட்டுப்பட்ட நிலைமையில் இருந்து மாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூற முடியவில்லை. உலகமய நிதி மூலதனத்தின் மேலாதிக்க நிலைமை, அத்தகைய மாற்றத்தை தடுக்கிறது. உலகப் பொருளாதாரம் பல்வேறு செல்வாக்கு மண்டலங்களாக துண்டாடப்படுவதை அது விரும்பவில்லை. அவ்வாறான மாற்றம், உலகெங்கிலும் அதன் தடையற்ற எல்லை தாண்டிய ஓட்டத்தை தடுப்பதாக அமைந்திடும். ஆனால் போட்டி நிறைந்த ‘அண்டை நாட்டை ஓட்டாண்டியாக்கும்’ கொள்கையின் காரணமாக, உண்மை ஊதியம் குறைக்கப்படுவது, உலகில்நவ–பாசிசவாதபோக்கை பலப்படுத்துவதை நோக்கி இழுத்துச் செல்கிறது.

இந்த நவ-பாசிசப் போக்கை வலுப்படுத்துவதாக, தற்கால உலகப் பொருளாதார நிலைமையின் மற்றொரு அம்சமும் அமைந்திருக்கிறது. ஏகாதிபத்திய நாடுகள் எங்கிலும், ராணுவச் செலவினங்களை அதிகரிக்கும் கூக்குரல் எழுகிறது. இராணுவவாதத்தின் மீது டொனால்ட் டிரம்பிற்கு உள்ள ஆர்வத்தை தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை. ஜெர்மனியில் அமையவுள்ள அரசாங்கமும், பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கமும் இராணுவச் செலவினங்களை உடனே உயர்த்திட திட்டமிட்டுள்ளன. உலகமய நிதிமூலதத்தின் எதிர்ப்பின் காரணமாக நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கப்படாது. செல்வந்தர்களே அரசாங்கங்களை வழிநடத்தும் இந்த உலகத்தில் அவர்களின் மீது வரி விதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்பதாலும், ஏழைகளுக்கான நலத்திட்ட செலவுகளை வெட்டுவதன் மூலமோ, உழைக்கும் மக்கள் மீது வரிவிதிப்பதன் மூலமோ தான் பெரும் இராணுவ செலவினங்களுக்கு நிதியளிக்க வேண்டியிருக்கும்.
ஆகவே தற்கால ஏகாதிபத்தியம் எந்த சூழ்நிலைமையில் உள்ளதோ, அந்த நிலைமைகளில், உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல் தவிர்க்கவே முடியாததாகிறது. இந்த தாக்குதல்களை எப்படியும் நாம் எதிர்கொண்டுததான் வருகிறோம். வரவிருக்கும் மாதங்களில் இது இன்னும் தீவிரமாகும். அதனை மேலும் தொடர்ந்திட நவ பாசிசப் போக்குகள் மேலும் தீவிரப்படுத்தப்படும். உலகப்போர்களுக்கு பிந்தைய காலத்தின் முதலாளித்துவம் தனக்குத் தானே வைத்துக் கொண்ட “நலன் புரி அரசு”, “சுதந்திர அரசு”, “ஜனநாயக அரசு” என்ற பெயர்களில் செய்துவந்த விளம்பரங்களின் வெற்றுத்தனம் அம்பலமாகிறது.
ஒருவர் ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தையும், அது வியட்நாமில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏற்படுத்திய போர்களையும் பார்க்காமல் கண்களை மூடிக்கொண்டால் அதன்மேற்சொன்ன பிரச்சாரங்கள் நம்பத்தகுந்ததாக தோன்றக்கூடும் என்பது இப்போது மென்மேலும் தெளிவாகிறது. அநாகரீகம் அல்லது சோசலிசம் இந்த இரண்டில் ஒன்றை மனித குலம் தேர்ந்தெடுத்தாக வேண்டிய நிலைமையில் இருக்கிறது என்ற ரோசா லக்சம்பர்க்கின் முழக்கம் மென்மேலும் பொருளுள்ளதாகிறது. அப்படியான ஒரு தருணத்தில்தான் நாம் இருக்கிறோம்.
மூலம்: Imperialism’s Revival Strategy
தமிழில்: இரா. சிந்தன்