பதின்பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

-இந்து குணசேகர்

லகெங்கிலும் ஏராளமான பதின்பருவத்தினர் மனநலம் சார்ந்து கடினமான காலக்கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்; கொரோனா பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு, இதே மனநிலை பலருக்கு இருந்தாலும், கொரோனா காலம் இந்த நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது.

அதிகப்படியான திறன்பேசி / சமூக ஊடகப் பயன்பாடுகள் இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. நண்​பர்​களுடன் ஓடி விளை​யாடு​வது, சுவாரசி​யமான உரையாடல்​களில் ஈடுபடுவது பதின்​பரு​வத்​தினரிடம் குறைந்துள்ளது; பள்ளி​களில் உணவு இடைவேளை​களில்​கூடத் தேர்​வுக்​காகப் படிப்​பது, போட்​டித் தேர்​வுகள் தரும் அழுத்தங்கள் போன்றவை பதின்​பரு​வத்​தினரின் மனநலனைப் பாதிப்​பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்​றனர்.

குறிப்​பாக, தொழில்​நுட்பப் பயன்​பாடு அதிகரிப்​பால் நண்பர்களை நேரடி​யாகச் சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்து, இணையம் மூலமாகவே தொடர்​பு​ கொள்​ளும் மனநிலைக்கு இன்றைய இளம் பருவத்​தினர் தள்ளப்​பட்​டுள்ள​தாக​வும் ஆய்வுகள் தெரிவிக்​கின்றன. உலக சுகாதார அமைப்​பின் ஐரோப்​பாவுக்கான பிராந்திய அலுவலகம் (The WHO Regional Office for Europe) 2022இல் ஆய்வு ஒன்றை நடத்​தி​யது.

ஐரோப்பிய நாடு​கள், மத்திய ஆசிய நாடு​கள், கனடா உள்ளிட்ட 44 நாடு​களில் 11 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட 2,80,000 பதின்​பரு​வத்​தினரிடம் நடத்​தப்​பட்ட இந்த ஆய்வில், சமூக ஊடகப் பயன்​பாடு இளம் பருவத்​தினரின் மனநல ஆரோக்​கி​யத்​தில் பாதிப்பை ஏற்படுத்துவது தெரிய​வந்​தது. 2018 இல் சமூக ஊடகப் பயன்​பட்​டால் மனநல ஆரோக்கியப் பாதிப்பு 7% ஆக இருந்த நிலை​யில், 2022இல் இது 11%ஆக அதிகரித்ததாகவும், 12% பதின்​பரு​வத்​தினர் இணைய கேமிங் பயன்​பட்​டால் மனரீதியாகக் கடும் பாதிப்பை எதிர்​கொண்​டுள்ள​தாக​வும் இந்த ஆய்வு கூறுகிறது.

தரவுகள் என்ன சொல்​கின்றன? – மனநலனை ஆரோக்​கியமாக வைத்​திருக்​க​வும், சமூக – உணவுப் பழக்​கங்களை வளர்ப்​ப​தற்​கும் பதின்​பருவம் மிகவும் முக்​கியமான காலக்​கட்​டம். முறையான உறக்​கம், உடற்​ப​யிற்சி, உணர்​வு​களைச் சரியாகக் கையாள்வது, சிக்​கல்​களைத் தீர்ப்​பது, தனிப்​பட்ட திறன்களை வளர்த்​துக்​கொள்வது ஆகியவை இதில் அடக்​கம். இத்தகைய திறன்களை வளர்ப்​ப​தற்​குக் குடும்ப – பள்ளிச் சூழல் சுதந்​திர​மாக​வும் பாது​காப்​பாக​வும் இருப்பது முக்​கி​யம்.

கடந்த 10 ஆண்டு​களில் பதின்​பரு​வத்​தினரின் மனநல ஆரோக்​கி​யத்​தில் சரிவு ஏற்பட்டுள்ள​தாகப் பல்வேறு ஆய்வு முடிவுகள் சுட்​டிக்​காட்டு​கின்றன. சமீபத்​தில் பிரிட்டனில் உள்ள ‘யுகே’ தரவு சேவை (UK Data Service) அமைப்பு வெளி​யிட்ட அறிக்கையில், 7–16 வயதுடைய​வர்​களில் ஆறு பேரில் ஒருவருக்​கும், 17–19 வயதுடைய நான்கு பேரில் ஒருவருக்​கும் மனநலப் பிரச்சினை இருப்​ப​தாகக் கூறப்​பட்​டுள்​ளது. 2017 இல் முறையே, ஒன்பது பேரில் ஒருவருக்கு, பத்தில் ஒருவருக்கு என்கிற அளவில் இந்தப் பாதிப்பு இருந்​தது. இந்தத் தரவு​கள், பதின்​பரு​வத்​தினரின் மனநல ஆரோக்​கி​யத்​தில் சரிவு ஏற்பட்​டுள்ளதை வெளிப்​படுத்து​கின்றன.

மோசமான உணவுப் பழக்​கம், மனநல ஆரோக்​கி​யத்​தில் ஏற்படும் பாதிப்பு ஆகியவை இளைஞர்​களிடம் உடல் பருமனை அதிகரிப்​ப​தாக​வும் மருத்​துவர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த ஐந்து வருடங்​களில் சுமார் 40 கோடி பதின்​பரு​வத்​தினர் உடல் பருமனுடன் இருப்​பார்கள் என மருத்துவ இதழான ‘லான்​செட்’ எச்சரித்​து உள்ளது.

பதற்​றமான தலைமுறை: அமெரிக்​காவைச் சேர்ந்த பேராசிரியரும், சமூக உளவியலாள​ருமான ஜோனதன் ஹெய்ட் (Jonathan Haidt), பதின்​பரு​வத்​தினரின் மனநல ஆரோக்கி​யத்​தில் திறன்​பேசிகள் – சமூக ஊடகங்கள் ஏற்படுத்​தும் பாதிப்புகள் குறித்த ஆய்வில் ஈடுபட்​டுள்​ளார். தொழில்​நுட்​பங்​களின் வளர்ச்சி​யானது, பதின்​பருவத்தினரிடம் பதற்​றம், மன அழுத்தம் அதிகரிப்​ப​தற்கு வழிவகுப்​பதாக ஆய்வு​களின் மூலம் ஹெய்ட் உறுதி​யாகத் தெரிவிக்​கிறார். “முன்​பெல்​லாம் திறன்​பேசிகள், ஐபோன்கள் வெறும் கருவியாக மட்டுமே இருந்தன.

ஆனால், 2008க்​குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இலட்சக்​கணக்கான நிறுவனங்கள் திறன்​பேசிகள், சமூக ஊடகங்கள் மூலம் கவனத்தை ஈர்க்​க​வும், நமது நேரத்தை அவற்றுக்​குச் சாதக​மாகப் பயன்​படுத்​திக்​கொள்ள​வும் முயல்​கின்றன; இன்றைய காலத்​தில் இத்தொழில்​நுட்​பங்கள் பெரும்​பாலும் கவனச் சிதறலுக்கே வழிவகுக்​கின்றன” என்கிறார் ஹெய்ட்.

மிக முக்​கிய​மாக, இத்தகைய மாறு​பாடுகள் வயதில் மூத்​தவர்​களின் மனநல ஆரோக்கியத்​தில் பெரிய அளவில் மாற்​றத்தை ஏற்படுத்​தவில்லை; பதின்​பரு​வத்​தினர்​தான் இதில் சிக்​கிக்​கொண்​டுள்​ளனர் என அவர் தெரிவிக்​கிறார். தனது ஆய்வின் அடிப்படை​யில் ஹெய்ட் எழுதிய ‘The Anxious Generation’ (பதற்​றமான தலைமுறை) புத்தகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடு​களில் கவனத்தைப் பெற்றிருக்​கிறது. மறுபுறம், மனநல ஆரோக்கிய பாதிப்​புக்கு, திறன்​பேசி – சமூக ஊடகங்களே முக்​கியக் காரணம் என்கிற வாதம் பலவீன​மானது எனச் சில ஆய்வாளர்கள் தெரிவிக்​கின்​றனர்.

சமூக ஊடகப் பயன்​பாட்டுக்​கும் – மனநல ஆரோக்​கி​யத்​துக்​கும் இடையே தொடர்பு இருந்​தா​லும், மருத்​துவரீ​தியாக இதன் தாக்கம் மிகக் குறைவாக இருப்​பதாக அவர்கள் கூறுகின்​றனர். ஹெய்ட்​டின் தரவுகள் எதிர்​மறைத் தாக்​கங்​களைச் சற்று மிகைப்​படுத்தி இருப்​ப​தாக​வும் அவர்கள் தெரிவிக்​கின்​றனர். மேலும், ஹெய்ட்​டின் ஆய்வானது அறிவியல் அடிப்​படையிலான தரவு​களை​விட​வும் தனிப்​பட்ட நபர்​களின் கருத்துகளையே அதிகம் கொண்​டிருப்​ப​தாக​வும், இது ஒரு சார்பு நிலைப்​பாட்டுக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்​டிக்​காட்டு​கின்​றனர்.

வாசிப்பை ஊக்கு​வித்தல்: எல்லாவற்றையும் தாண்டி, மனநல ஆரோக்கிய பாதிப்பு உலகளாவிய பிரச்சினையாக மாறி​யுள்ள​தால், தீவிரமான திறன்​பேசி – சமூக ஊடகப் பயன்​பாட்​டிலிருந்து பதின்​பரு​வத்​தினரை மீட்பது அவசி​யம். திறன்​பேசிகளை விலக்கி வைப்​ப​தால் பதின்​பரு​வத்​தினரிடையே அதீதக் கோபம், கவனச்சிதறல், தூக்​கமின்மை, பதற்றம் போன்றவை ஏற்படலாம்; இத்தகைய அறிகுறிகள் தென்​பட்​டால் எந்தவிதத் தயக்​க​முமின்றி உடனடியாக நிபுணர்​களின் உதவியை நாட வேண்​டும் என மருத்துவர்கள் வலியுறுத்து​கின்​றனர்.

புத்தக வாசிப்பு, குழந்தை​களின் கற்பனைத் திறன்களை அதிகரித்து அறிவு​சார் செயல்பாடுகளை வளர்ப்​ப​தால் குழந்தை​களிடம் வாசிப்புப் பழக்​கத்தைப் பெற்றோர்கள் ஊக்கு​விக்க வேண்​டும். உயர்​நிலை வகுப்பு​களுக்கு முன்னர் திறன்பேசிகளைப் பயன்படுத்தக் குழந்தைகளை அனும​திக்கக் கூடாது; குறிப்​பாக, வன்முறை மனநிலையை வளர்க்​கும் கேமிங் விளை​யாட்டு​களைப் பெற்​றோர் கண்காணிக்க வேண்​டும். ‘ஸ்க்​ரீன் டைம்’ எனப்​படும் திறன்​பேசிகள் பயன்​பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது குழந்தை​கள், நண்பர்​களுடன் மைதானங்​களில் தங்கள் ஓய்வு நேரத்தைச் செலவிடப் பெற்​றோர் பழக்​கப்​படுத்த வேண்​டும். இன்றைய சூழலில், தொழில்​நுட்​பங்​கள் தவிர்க்க ​முடி​யாதவை என்​றாலும் அவற்றின் பயன்பாட்டில் உரிய கட்டுப்​பாடுகளை ​வி​திப்​ப​தன் மூலம், அவற்​றால் ஏற்​படும் தீமைகளைக் கணிச​மாகக் குறைக்​கலாம்!

-இந்து தமிழ்
மே 22, 2025

Tags: