மோடிக்கு எதிராக காங்கிரஸ் செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!
–பாலசுப்ரமணியம் முத்துசாமி

அந்த இழிசெயல் மோதிலால் நேருவிலிருந்து தொடங்கியது. 10-15 ஆண்டுகள் இருக்கும். முதன்முதலாக ஒரு நண்பர் கிசுகிசு பாணியில் ஒரு விஷயம் சொன்னார். ‘உங்களுக்கு ஒன்னு தெரியுமா? மோதிலால் நேரு ஒரு முஸ்லீம், என்று. எனக்கு அது பெரும் கோபத்தை கொடுத்தது.
‘எனக்குத் தெரிந்து அவர் சுத்தமான இந்து’, என்றேன் கோபமாக. ஆனால், அவர் நம்பவில்லை. உங்களுக்கு யார் சொன்னார்கள்?’, எனக் கேட்டேன். அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் சமூக ஊடகங்கள் பெருகியதும் அந்தக் கதையை நானே பல முறை படித்து விட்டேன். வாட்ஸ் அப் வந்ததும், அந்தக் கதை மீண்டும் உயிர்பெற்று பலமுறை எனக்கு வந்து போனது. அது மட்டுமல்ல.. பற்பல உபகதைகளும் வந்தன.
காந்தி முதல் சோனியா வரை… பரவிய தகவல்கள்
மகாத்மா காந்தி ஒரு ஆங்கிலேய ஏஜெண்ட்.. நேரு எட்வினாவுக்கு அனுப்பிய விலையுயர்ந்த பரிசுகள். ராஜீவ் காந்தியும், ஃபரூக் அப்துல்லாவும் உறவினர்கள்.. சோனியா காந்தி ஒரு பார் டான்ஸராக இருந்தவர்.. ராகுல் காந்தி போதைப் பொருட்களைக் கடத்தி அமெரிக்காவில் மாட்டிக் கொண்டார், அவரை அன்றைய பிரதமர் வாஜ்பாய் காப்பாற்றினார் எனப் பற்பல கதைகள்.
இவற்றின் பின்னால் எல்லாம் ஒரு தெளிவான போர்த்தந்திரம் இருப்பதைக் காணலாம். அது, காந்தி, நேரு மற்றும் காங்கிரஸ் பெயர்களை இழிவு செய்வது. அதன் மூலம், அந்த ஆளுமைகளின், காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கைக் குறைப்பது. இன்று பின்னோக்கிப் பார்க்கையில், இதன் பின்னே இருந்தவர்கள் எவர் என்பதை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

காங்கிரஸ் இயக்கமும், காந்தி நேரு பெயர்களும் இந்திய விடுதலைப் போரோடு பின்னிப் பிணைந்தவை. இந்தியாவை 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருந்த இந்தியாவை (17 ஆம் நூற்றாண்டில், உலகின் 25% உற்பத்தி), உலகின் மிகப் பெரிய பிச்சைக்கார நாடாக (20 ஆம் நூற்றாண்டில், உலகின் 4% உற்பத்தி) மாற்றி விட்டுப் போனார்கள்.
விடுதலை பெற்ற இந்தியாவில், 90% மக்கள் ஏழைகளாகவும், கல்வியறிவில்லாதவர்களாகவும் இருந்தார்கள். பசியும், கொள்ளை நோய்களும் சகஜமாக இருந்தன. ஆங்கிலேயர் ஆண்டு வந்த பகுதிகளும், 650 சில்லறை நாடுகளையும் இணைத்து இந்தியா என்னும் ஒரு நாடு உருவாக்கப்பட்டது.
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் தலைமையில், இந்தியாவின் மிகப் பெரும் அறிஞர்கள் இணைந்து, விவாதித்து, அன்றைய நவீனமான ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்கினார்கள். சாதிய மேலாதிக்கமும், தீண்டாமையுமே சட்டமாக இருந்த மண்ணில், பிறப்பினால் அனைவரும் சமம் என்னும் மனித குலத்தின் மிகப் புரட்சிகரமான கருத்து இந்திய நாட்டின் அடிப்படையாக மாறியது.
ஆங்கிலேயேர்கள் to காங்கிரஸ் ஆட்சி – மாறிய இந்தியா
சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு, அனைவருக்கும் சமூகப் பொருளாதார நீதி கிடைக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் இலக்காக மாறியது. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் புதிய இந்தியாவில் தேர்தல்கள் நடந்தன. வயது வந்தோர் அனைவருக்கும் சமமான வாக்குரிமையின் அடிப்படையில் நடந்த முதல் தேர்தலில், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்டு, இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு பெரும் தேசமாக மாற்றிய காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.

ஆட்சிக்கு வந்த முதல் இருபது ஆண்டுகளிலேயே இந்தியா உணவில் தன்னிறைவை அடைந்து, உலக நாடுகளிடம் கையேந்துவதை நிறுத்தியது., அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியா உலகின் இரண்டாவது பெரும் உணவு தானிய உற்பத்தியாளராக மாறியது.
உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராகவும். 1980 களில், இந்தியா நவீனமாகத் தொடங்கியது. 90களில் தனது பொருளாதாரக் கொள்கைகளைத் தளர்த்தி, உலகப் பொருளாதாரங்களோடு மிகவும் நெருக்கமாகத் தொடங்கியது. அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, மென்பொருள் எனப் பல நவீனத் துறைகளில் சாதனைகளைச் செய்து உலகளாவிய முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
ஆங்கிலேயர்கள் காலில்…
இதே காலகட்டத்தில், இந்தியாவில் இன்னொரு அரசியல் தரப்பு பலம் பெறத் தொடங்கியது. அந்தத் தரப்புக்கும் நவீன இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. சொல்லப் போனால், விடுதலைப் போராட்டத்தில், பல முறை இந்தியாவை ஆதிக்கம் செய்துவந்த ஆங்கிலேயர் தரப்பில் நின்றது. தப்பித் தவறி எதிர்த்திருந்தால் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி ஆங்கிலேயர் காலில் விழுந்த தலைவர்களைக் கொண்ட தரப்பு அது.
அந்தத் தரப்பு, மத அடிப்படைவாதத்தை தன் அடையாளமாகக் கொண்டது. மதத்துக்குள்ளேயே மக்களை வேறுபடுத்தும் விதிகளை மறைமுகமாக நிலைநிறுத்தும் இலக்குகளைக் கொண்டது, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களை, அரசியல் தரப்பை வீழ்த்தாமல், தங்களது தரப்புக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்த மதவாதத் தரப்பு, முதலில், காங்கிரஸின் தலைவர்கள் மீதான பிம்பங்களை, இழிவான தனிமனிதத் தாக்குதல் வழியே குலைக்கலாம் என முடிவெடுத்திருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் பியர்லஸ் என்றொரு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இருந்தது. பள்ளி ஆசிரியர்கள் வழியே ஒரு வலைப் பின்னலை இந்தியாவெங்கும் உருவாக்கி, மிகப் பெரும் நிதி மோசடியை இரண்டு மூன்று தசாப்தங்கள் நிகழ்த்தி வந்தது. கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு வலைப்பின்னலை அரசியலில் மிக வெற்றிகரமாக கடந்த 20-25 ஆண்டுகளாக நடத்தி வருகிறது இந்த மதவாத அரசியல் கருத்தியல் தரப்பு.
இந்தியாவின் வளர்ச்சியை குறைத்த ஜிஎஸ்டி… பணமதிப்பழிப்பு!

சமூக ஊடகம் பெருகிய பின்னர், இது ஆயிரம் தலைகளும், கைகளும் கொண்ட பேருருவாக உருவாகிவிட்டது. 2014 ஆம் ஆண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த அந்தத் தரப்பு, தன் சார்பில் ஒரு ஆளுமையை மிக வலுவான தலைவர் என முன்னிறுத்தியது. முதலாம் ஐந்தாண்டில், அந்தத் தலைவர், பணமதிப்பழிப்பு என்னும் உலகில் மிகச் சில சில்லறை நாடுகளே செய்த ஒரு பொதுநலத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதில் நிகழ்ந்த குளறுபடிகளை மறைக்க அவசர அவரசமாக ஜி.எஸ்.டி என்னும் வரிவிதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அவையிரண்டுமே இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் குறைத்தன.
புல்வாமா என்னும் ஊரில், ராணுவ வீரர்கள் மீது நடந்த ராணுவத் தாக்குதலை முன்வைத்து இரண்டாம் முறை தேர்தலில் வென்ற அந்தத் தரப்பு, மூன்றாம் முறை வெல்ல ராமர் கோவிலை முன்வைத்தது. 400 சீட்கள் வெல்வோம் எனச் சொன்ன தரப்பு மூன்றாம் முறையில், பெரும்பான்மை பெறவில்லை. மூன்றாம் முறை கூட்டணி அமைக்கும் நிலைக்கு ஆளாகியது.
அண்மையில், பகல்ஹாம் என்னும் காஷ்மீர் சுற்றுலாத் தலத்தில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் தளங்களின் மீது தாக்குதலை நடத்தியது இந்த தரப்பு. இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானுக்கு உதவியாக துருக்கி நாடு இருந்தது. எதிரிக்கு நண்பன், நமக்கும் எதிரி அல்லவா. உடனே அடிப்படைவாதத் தரப்புக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்க வேண்டும். எதிர்க்கட்சியான காங்கிரஸை, எதிரி நாட்டுடன் இணைத்து ஒரு பிரச்சாரம் செய்தால் என்ன என்று..
மத அடிப்படைவாதத் தரப்பின் வளர்ப்புப் பிராணியான ஒரு ஊடகம், துருக்கியில் காங்கிரஸ் கட்சிக்கு கிளை உள்ளது என்றொரு பொய்ச் செய்தியை வேண்டுமென்றே திரித்து வெளியிட்டது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி அமெரிக்கா நாட்டிலும் காங்கிரஸ் என்னும் பெயர் உள்ளது என வளர்ப்புப் பிராணி ஊடகத்தை முதலில் கிண்டல் செய்யத் தொடங்கியது. சமூக ஊடகத்திலும் இது போன்ற ஒரு எதிர்வினைகளே முதலில் வந்தன. சிக்காகோவில் காங்கிரஸ் ஹோட்டலைக் கட்டியுள்ளது என்று பலர் ஜோக் அடித்தார்கள்.
ஆனால், அடிப்படைவாதத் தரப்பின் இது போன்ற அபத்தமான முன்னெடுப்புகளுக்குப் பின்னால் வலுவான அரசியல் காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு தேர்தலுக்கும், சில மாதங்கள் முன்னால், சுப்ரமணிய சுவாமி என்னும் காலாவதியான அரசியல் நபர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகனா என்றொரு கேள்வியை எழுப்புவார்.
இந்திய உள்துறை நீங்கள் பிரிட்டிஷ் குடிமகனா என்றொரு சம்மனை ராகுல் காந்திக்கு அனுப்பும். இந்தி மாநில ஊடகங்கள் ராகுல் பிரிட்டிஷ் குடிமகனா என சர்ச்சை செய்யும். அடிப்படைவாதத் தரப்பின் காலாட்படை, ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்றொரு பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும்.
ராகுல் செய்ததும் – ஒபாமா செய்ததும்
காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட், நேரு எட்வினாவுக்கு அனுப்பிய பரிசுகள், சோனியா பார் டான்ஸர் என்னும் புராணக் கதைகளின் கிளைக்கதையாக ராகுல் பிரிட்டிஷ் குடிமகன் என்னும் கதையும் இணையும். காங்கிரஸ் என்னும் கட்சியும், அதன் தலைவர்களான சோனியா, ராகுல் போன்றோரின் குடியுரிமையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, காங்கிரஸ் மீதான எதிர்மறை எண்ணங்கள் சாமானியர்கள் மத்தியில் பரப்பப்படும்.
தேர்தலில் வலதுசாரித் தரப்புக்கான வலுவான ஆயுதம் அது. ஆனால், இது போன்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தின் ஆபத்தை உணராமல். பல ஆண்டுகளாக காங்கிரஸ் தரப்பு கேலியுடன் மட்டுமே அதை எதிர்கொண்டது. அது பெரும் தவறு என்பதை அவர்கள் இன்றுவரை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ட்ரம்ப் போட்டியிட்ட முதலாவது தேர்தலில் அவர் திரும்பத் திரும்ப ஓபாமா அமெரிக்காவில் பிறக்காதவர் என்னும் பொய்ப் பிரச்சாரத்தை முன்வைத்தார். ஓபாமா தரப்பு அதற்குப் பதிலாக, ஓபாமா அமெரிக்காவில் பிறந்தார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டது. எந்த அறிவார்ந்த சமூகமும், இது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை புறந்தள்ளியிருக்கும். ஆனால், ஓபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்னும் பொய்ப் பிரச்சாரம் ட்ரம்ப் போன்ற வலதுசாரித் தலைவரை ஆதரிக்கும் வாக்கு வாங்கியில் அலைகளை எழுப்பின. உண்மை அடிப்படையிலான அரசியல் உரையாடலை வெல்ல, பொய்ப்பிரச்சாரம் பயன்படுத்தப்பட்டது.
இதற்கு இன்னொரு வெற்றிகரமான உதாரணம் எம்,ஜி.ஆர். தனது படங்களின் வழியாக, நம்பியார்தான் கருணாநிதி என்னும் ஒரு பிம்பத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்பியிருந்ததுதான். அதனால்தான் எம்.ஜி.ஆர் சாகும் வரை பெண்களின் வாக்குகள் கருணாநிதிக்கு விழவில்லை.
உலகெங்கும் வலதுசாரிகள், அரை உண்மை (Half truth), உண்மை போலத் தோற்றமளிக்கும் பொய் (factoid), பொய்(lies) போன்றவற்றின் அடிப்படையில், புதிய புதிய கதையாடல்களை உருவாக்கி, மக்களிடையே வெற்றிகரமாக உலவ விடுகிறார்கள். லிபரல்தரப்பும் இடது சாரிகளும் இதை தரவுகளின் அடிப்படையில் மறுக்கிறார்கள். கேலிகள் வழியே கடந்து செல்கிறார்கள்.

எஜமானரின் பேச்சை கேட்டு செயல்படும் டாமி!
ஒரு உதாரணம் வழியே இதைப் புரிந்து கொள்ள முயல்வோம். கடற்கரைக்கு, தன் செல்ல நாயான டாமியை அழைத்து வரும் எஜமானர், ஒரு பந்தை ஒரு திசையை நோக்கி வீசுகிறார்.. நாய் உடனே ஓடிப் போய், அதை எடுத்து வந்து தனது எஜமானரிடம் தருகிறது. அதை வாங்கும் எஜமானர், அந்தப் பந்தை இன்னொரு திசையை நோக்கி வீசுகிறார். டாமி மீண்டும் ஓடிப் போய் அந்த பந்தை எடுத்து வந்து தருகிறது. இந்த அலகிலா விளையாட்டில், டாமி திரும்பத் திரும்ப எஜமானரின் விளையாட்டில் அவர் சொல்வதைக் கேட்டு விளையாடும் அடிமையாக இருக்கிறது.
கடந்த 10-15 ஆண்டுகளாக உலகெங்கும் இந்த நிலையே நடந்து வருகிறது. 90களுக்குப் பின்னான உலகமயமாக்கத்தினால், உலகெங்கும் லிபரல், இடதுசாரி தரப்புகள் அரசு அதிகார மையங்களில் பலவீனப்பட்டுப் போனதன் விளைவு இது. பொய் மற்றும் அரை உண்மைகளின் அடிப்படையில் வலதுசாரிகள் முன்வைக்கும் அரசியல் சொல்லாடல்களை வலுவாக எதிர்த்து, புதிய சொல்லாடல்களை, அரசியல் நிலைகளை உருவாக்கும் நிலையில் இன்றைய லிபரல் தரப்பு இல்லை.
கடந்த 20 ஆண்டுகளாக, மத அடிப்படை வாதத்தரப்பின் பொய்ப் பிரச்சாரங்களை எதிர்கொள்ளாமல், தனது கட்சியின் அனைத்துத் தலைவர்களின் மீதான இழிவான பிரச்சாரங்களை முறியடிக்காமல் இருந்த காங்கிரஸ் கட்சி ஒரு வழியாக இன்று விழித்துக் கொண்டு, வளர்ப்புப் பிராணி ஊடகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. ஆனால், இது போதாது. மத அடிப்படைவாதத்தின் ஒவ்வொரு முயற்சியும் முற்றிலுமாக முறியடிக்கப்படாமல், காங்கிரஸ் கட்சி மீண்டு எழுதுவது சாத்தியமில்லை.
பொய்ப் பிரச்சாரத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டுமெனில், உண்மையை நிலைநாட்டுவதைத் தாண்டி, வெற்றிகரமான மாற்று அரசியல் கதையாடல்களை லிபரல் அரசியல் தரப்புகள் முன்னெடுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, விடுதலை பெற்று 70 ஆண்டுகளில், இந்தியா உலகின் தவிர்க்க முடியாத அரசியல், பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவில், பெரும்பாலான சாதனைகள் காங்கிரஸ் இயக்கம் நிகழ்த்தியவை. காந்தியின் சத்தியாக்கிரகம்தொடங்கி, உயர்தர தொழில் கல்வி, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, தொழிற் புரட்சி, மென்பொருள் இயக்கம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி என நிகழ்ந்த மேம்பாடுகளின் பின்னணியில், காங்கிரஸ் இயக்கத்தின் கொள்கை, நிர்வாக முன்னெடுப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம் 15 முதல் 20 நிமிட ஆவணப் படங்களாக மாற்றி, இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வெளியிடுவதை காங்கிரஸ் இயக்கம் செய்ய வேண்டும். அவை, காங்கிரஸ் இயக்கத்தின் கட்டமைப்பின் உதவியோடு, சமூக ஊடகங்கள் வழியே பொதுமக்களைச் சென்றடைய வேண்டும்.
இன்றைய இந்தியாவின் வலுவான நிலைக்கு, மிக முக்கியக் காரணம் காங்கிரஸ் ஆட்சி என்னும் உண்மை அரசியல் தளத்தில் சொல்லாடல்களில், உண்மைத் தகவல்களின் அடிப்படையில் ஆணித்தரமாக நிறுவப்பட வேண்டும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட விக்ரம் சாராபாய் திடீரெனெ அகால மரணமடைந்த போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்லக் கூடிய அடுத்த தலைவர் யார் என்னும் கேள்வி எழுந்தது.
அப்போது, பேராசிரியர் தவண் என்பவர்தான் சரியான தேர்வு என அரசு முடிவெடுக்கிறது. பேராசிரியர் தவண் அப்போது இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராக இருந்தார். அவர் பெங்களூர் இந்திய அரசியல் கழகத்தை விட்டு வரத் தயங்கினார். அரசு கொஞ்சமும் யோசிக்காமல், அவரை இந்திய அறிவியல் கழகம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி இரண்டுக்குமே தலைவராக நியமித்தது.

செய், அல்லது செத்து மடி
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அப்போது அகமதாபாத்தில் இருந்தது. பேராசிரியர் தவணுக்காக பெங்களூருக்குத் தலைமையகம் மாற்றப்பட்டது. அதே போல, வெண்மைப் புரட்சியின் தலைவர் குரியனுக்காக, பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமையகம், டெல்லியில் இல்லாமல், அந்த முயற்சி வெற்றிகரமாக நடந்த குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரில் உருவாக்கப்பட்டது. இவையெல்லாமே, அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த புத்தாக்க முடிவுகள்.
பேராசிரியர் தவண் இல்லாமல் இன்றைய வெற்றிகரமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இல்லை. டாக்டர் குரியன் இல்லாமல் வெண்மைப் புரட்சி இல்லை. ஆனால், இந்த உண்மையான கதையாடல்கள், அரசு வெற்றிக்கதைகள் பொதுமக்கள் மத்தியில் இல்லை. இவை போன்ற சில நூறு கதைகள் உண்மைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு மக்களைச் சென்றடைய வேண்டும். இல்லையெனில், காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி என்னும் வலதுசாரிகளின் பிரச்சாரம் வலுப்பெற்று, காங்கிரஸ் மேலும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்படும்.
காங்கிரஸ் இயக்கம் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்டது என்னும் வாதத்தை முன்வைத்து, காங்கிரஸ் இயக்கமே இந்தியாவிற்கு எதிரானது என வலதுசாரிகள் வெற்றிகரமாக நிறுவினாலும் ஆச்சர்யப்பட மாட்டேன். 1942 ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மா காந்தி, மக்களுக்கு, ‘செய், அல்லது செத்து மடி’, என்றொரு அரசியல் முழக்கத்தைக் கொடுத்தார். அது இன்றைய லிபரல்களுக்கு குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்துக்கு முற்றிலும் பொருந்தும்.