அமெரிக்கா சீனாவை அடக்க முயன்றது; ஆனால் சீனா மேலும் வலுவடைந்தது!

தொழில்நுட்ப ஆய்வாளர் பப்பா சின்ஹா (Bappa Sinha), பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 1, 2025) இதழில் ஒரு முக்கியமான கட்டுரை எழுதியுள்ளார். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் அதன் விளைவு எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, சீனா மேலும் வலுவாகிவிட்டது என்று அவர் விளக்கியுள்ளார்.
புத்திசாலித்தனமான கணினிகள் (AI) போட்டி ஹுவாவே (Huawei) நிறுவனத்தின் பெரிய சாதனை: சீனாவின் பெரிய நிறுவனமான ஹுவாவே, மிகவும் வேகமாக சிந்திக்கும் கணனி அமைப்பை உருவாக்கியுள்ளது. இது சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற புத்திசாலித்தனமான கணனிகளையே பயிற்றுவிக்கும் வேலையை செய்கிறது.
எப்படி வேலை செய்கிறது: நம் மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் இருப்பது போல, இந்த கணனியிலும் 384 சிறிய “மூளைகள்” (சிப்கள்) இருக்கின்றன. என்விடியா (Nvidia) நிறுவனத்தில் கணினியில் வெறும் 72 மூளைகள் தான் உள்ளன. ஆனால் ஒவ்வொரு என்விடியா மூளையும் ஹுவாவேயின் ஒரு மூளையை விட 3 மடங்கு வேகமானது.
ஆனால் சீனாவின் ஹுவாவே நிறுவனம், அதிக எண்ணிக்கையில் சிறிய மூளைகளை வைத்து புத்திசாலித்தனமாக இணைத்து வேலை செய்வதால், ஒட்டுமொத்தமாக அதிக வேலை செய்து முடிக்கிறது.
அமெரிக்க நிறுவனத்தை மிஞ்சுதல்: இது அமெரிக்காவின் பிரபல நிறுவனமான என்விடியாவின் கணினியை விட 67 சதவீதம் வேகமாக வேலை செய்கிறது.
அமெரிக்கா சீனாவை எப்படி அடக்க முயன்றது?
கடைகளில் பொருள் விற்க தடை: கடந்த மூன்று வருடங்களாக அமெரிக்கா சீனாவுக்கு நவீன தொழில்நுட்ப பொருட்களை விற்பனை செய்வதை தடுத்து வருகிறது. இது ஒரு கடைக்காரன் தனக்கு பிடிக்காத வாடிக்கையாளருக்கு பொருள் விற்க மறுப்பது போன்றது.
முக்கிய பொருட்களை மறுத்தல்: அமெரிக்கா சீனாவுக்கு கணினி தயாரிக்க தேவையான முக்கிய பாகங்கள், இயந்திரங்கள், மென்பொருள் எதையும் கொடுக்க மறுத்துவிட்டது. சிப் வடிவமைப்பு மென்பொருள் (EDA), சிப் தயாரிப்பு இயந்திரங்கள், நுண்ணிய வேலைகள் செய்யும் லித்தோகிராஃபி இயந்திரங்கள், உயர்தர சி.பி.யு (CPU) மற்றும் ஜிபியு (GPU) சிப்கள் – இவை அனைத்தையும் மறுத்தது.
சீனாவின் புத்திசாலித்தனமான பதிலடி சொந்த வளத்தைப் பெருக்குதல்: அமெரிக்கா “நாங்கள் உங்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டோம்” என்று சொன்னதற்கு சீனா “சரி, நாங்களே செய்து கொள்கிறோம்” என்று முடிவு செய்தது. இது ஒரு குடும்பம் வெளியில் இருந்து அரிசி வாங்க முடியாத நிலையில், தங்கள் நிலத்திலேயே நெல் பயிரிட்டு அரிசி தயாரிப்பது போன்றது.
500 கோடி டொலர் முதலீடு: சீனா தனது உயர்தொழில்நுட்ப வளர்ச்சிக்காக சுமார் 37,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. கணனி வேகத்தை அதிகரிக்கும் சிப்கள், சிறிய அளவில் பெரிய தகவல்களை சேமிக்கும் நினைவகங்கள், செயற்கைக்கோள் தொடர்பு, ஒளி அடிப்படையில் வேலை செய்யும் சிப்கள் என அனைத்து வகை தொழில்நுட்பமும் வேகமாக வளர்க்கப்படுகிறது.
எஸ்.எம்.ஐ.சி (SMIC) நிறுவனத்தின் சாதனை: சீனாவின் எஸ்.எம்.ஐ.சி (Semiconductor Manufacturing International Corporation – SMIC) என்ற நிறுவனம் மிக நுட்பமான கணனி சிப்களை உருவாக்கியது. இதை உருவாக்க தேவையான சிறப்பு இயந்திரங்கள் (EUV) அவர்களிடம் இல்லை. ஆனால் பழைய வகை இயந்திரங்களை (DUV) வைத்தே அதே வேலையை செய்து முடித்தார்கள்!

டீப்சீக் (Deepseek) – சீனாவின் சாட்ஜிபிடி (ChatGPT)
குறைந்த செலவில் பெரிய சாதனை: சீனாவின் டீப்சீக் (Deepseek) என்ற நிறுவனம் சாட்ஜிபிடி போன்ற புத்திசாலித்தனமான கணினியை உருவாக்கியது. ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் செலவழித்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே சீன வல்லுநர்கள் செலவழித்தார்கள். அமெரிக்காவிடம் சிறந்த கருவிகள் இருந்ததால் அவர்கள் அதை வீணடித்தார்கள். ஆனால் சீனாவிடம் குறைந்த வசதி மட்டுமே இருந்ததால், அவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்தார்கள்.
என்விடியா (Nvidia) நிறுவன தலைவரின் எச்சரிக்கை
அமெரிக்காவின் பிரபல கணனி நிறுவனமான என்விடியா-வின் தலைவர் ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) ஒரு முக்கியமான விஷயத்தை ஒப்புக்கொண்டார். “சீனாவை அதிகமாக அழுத்துவது தவறு, நமது கொள்கை தோல்வியடைந்துவிட்டது” என்று அவர் சொன்னார். சீன சந்தையில் செயற்கை நுண்ணறிவு (AI) கணினிகள் விற்பனையில் மட்டும் 2026-க்குள் 3,750 கோடி ரூபாய் வியாபாரம் இருக்கும். இதை அமெரிக்க நிறுவனங்கள் இழந்துவிட்டன. என்விடியா நிறுவனம் மட்டுமே 412 கோடி ரூபாய் மதிப்புள்ள கணனி சிப்கள் சீனாவில் விற்க முடியாமல் கிடங்கில் தேங்கிப் போனதால் அதை இழப்பாக ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
உலகம் இரண்டாக பிரியும் ஆபத்து
தொழில்நுட்ப உலகின் பிளவு: இப்போது உலகம் இரண்டு தொழில்நுட்ப முகாம்களாக பிரிந்து கொண்டிருக்கிறது. ஒன்று அமெரிக்கா தலைமையில், மற்றொன்று சீனா தலைமையில்.
சீனாவின் மிகப்பெரிய சந்தை: உலகம் முழுவதும் தயாரிக்கப்படும் கணனி சிப்களில் 40 சதவீதம் சீனாவில் தான் பயன்படுத்தப்படுகிறது. சீனா தனது சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டால், இந்த பெரிய சந்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு எப்போதும் மூடப்பட்டுவிடும்.
இந்தியா போன்ற நாடுகளுக்கான பாடம்
இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இப்போது ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளன. அமெரிக்கா அல்லது சீனாவின் தொழில்நுட்பத்தை வாங்கி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக மட்டும் இருக்கப் போகிறோமா? அல்லது நமது சொந்த தொழில்நுட்ப திறனை வளர்த்துக் கொள்ளப் போகிறோமா?
பப்பா சின்ஹா தனது கட்டுரையில் ஒரு முக்கிய மான செய்தியை சொல்கிறார்: “அமெரிக்கா சீனாவை வீழ்த்த முயன்று தன்னையே வீழ்த்திக் கொண்டுள்ளது. சீனா இப்போது தொழில்நுட்பத்தில் சுதந்திரமாகிவிட்டது. இது உலக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கம்” என்று அவர் எச்சரிக்கிறார்.
மூலம்: Silicon Curtain: How US Sanctions Are Forging China’s Tech Sovereignty