வெனிசுவேலா மீது போர்த் திட்டம் – அமெரிக்க மக்களிடையே அதிகரிக்கும் எதிர்ப்பு

வெனிசுவேலா நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என அமெரிக்க அரசு பல்வேறு வகையில் தாக்குதல்களையும் நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்க மக்களிடம் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

வெனிசுவேலா கடல் எல்லையில் தனது கடற்படையை நிலைநிறுத்தி போர் ஒத்திகையில் ஈடுபடுவது. சிறிய படகுக ளின் மீது தாக்குதல் நடத்துவது. வெனிசுவேலா ஜனாதிபதி போதைப்பொருள் கடத்துகிறார் என பொய்க் குற்றம்சாட்டி தனது குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்வது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார்.

கரீபியன் கடலில் தாக்குதல்கள்

ட்ரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் வெனிசுவேலா மீது விரைவில் போர் துவங்கும் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுவரை கரீபியன் கடலில் அமெரிக்கக் கடற்படையின் திட்டமிட்ட தாக்குதல்களில் 83 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அமெரிக்கா எந்த ஒரு ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தியுள்ளது.

இந்தக் கடல் பகுதியில் விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்ட், எஃப்-35 ரக போர் விமானங்கள், எட்டுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் 15,000 அமெரிக்க வீரர்கள் படைகள் என இராணுவத்தை குவித்து வைத்துள்ளது.

அமெரிக்கா, போருக்கு எதிராக அமெரிக்கர்கள்

இதே நேரத்தில் அமெரிக்க மக்களின் கருத்துகள் ட்ரம்ப்பின் போர் வெறி நடவடிக்கைக்கு எதிராக உள்ளது. சி.பி.எஸ் நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், 70 சதவிகித அமெரிக்க மக்கள் வெனிசுவேலா மீதான தாக்குதல்களை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டது எனக் கூறி அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா கடல் பகுதியில் பல படகுகளை குண்டு வீசி அழித்தன. அப்படகுகளில் போதைப்பொருட்கள் இருந்ததற்கான ஆதாரத்தை அரசு காட்ட வேண்டும் என 75 சதவிகித மக்கள் கூறியுள்ளனர்.

வெனிசுவேலா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் என்ற ட்ரம்ப்பின் பிரச்சாரத்தை பெரும்பாலான அமெரிக்க மக்கள் நம்பவில்லை. வெறும் 13 சதவிகித அமெரிக்கர்கள் மட்டுமே நம்புகின்றனர். மேலும், ட்ரம்ப் அந்நாட்டின் மீது போர் தொடுப்பதைத் தடுக்க, சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டரீதியான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் வெனிசுவேலா உள்ளிட்ட சில நாடுகளின் படகுகள் மீது அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்திய போது ஒரு சிலர் உயிர் பிழைத்தனர். அச்சமயத்தில் அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய அமெரிக்கப் போர்த்துறை செயலாளர் பீட் ஹெக் செத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தான் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு புதிய போரைத் தொடங்க மிரட்டி வருகிறது என ஜனநாயகக் கட்சி கூட்டணியில் உள்ள ஆன்சர் என்ற கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Tags: