நூற்றாண்டு கண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் சாதித்தது என்ன?

(thetricontinental இணைய இதழிற்காக விஜய் பிரசாத் தயாரித்த ஆவணப் பதிவின் சுருக்கம், தமிழில் – சிந்தன்)

2020, ஒக்டோபர் 17 அன்று, இந்திய கம்யூனிச இயக்கம், தனது நூற்றாண்டு வரலாற்றை நிறைவுசெய்கிறது. ஒடுக்குமுறைகளுக்கும், கொடுங்கோன்மைக்கும், சுரண்டலுக்கும் எதிராக தீரம்மிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பதை வரலாற்றின் கழுகுப் பார்வையில் அறிந்துகொள்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

கம்யூனிஸ்டுகள் எப்போதுமே நாட்டுப்பற்றோடு இயங்கினார்கள். இந்தியாவின் சமூக – பொருளாதார, பண்பாட்டு நிலைமைகளில், அவர்களின் நடவடிக்கைகள் வேர்விட்டிருக்கின்றன. அதே நேரத்தில், உலகின் ஒட்டுமொத்த மேம்பாட்டையும், உலக மக்களின் விடுதலையையும் தங்கள் சிந்தனையில் பிரிக்க முடியாத அங்கமாக கொண்டே செயல்பட்டார்கள். இவ்வாறு செயல்படுவதால் உடனடி அரசியலில் பலன் கொடுக்காது என்றபோதிலும் அவர்கள் இந்த கண்ணோட்டத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம்:

சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிய அக்டோபர் புரட்சி, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்த நிகழ்வாகும். ஏனென்றால் அது சோவியத் தொழிலாளர்களுக்கு மட்டும் விடுதலையை பெற்றுத்தரவில்லை; உலகம் முழுவதுமே ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கு திசைவழி காட்டுவதாகவும் இருந்தது.

இந்திய புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், சோவியத் ஒன்றியத்தின் (இப்போதைய ரஷ்யாவின்) தாஷ்கெண்ட் பகுதியில் சந்தித்தார்கள். அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை 1920 அக்டோபர் 17 ஆம் தேதியன்று உருவாக்கினார்கள். இதற்கு இந்தியரும், மெக்சிக்கோ கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவரும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினருமான எம்.என்.ராய் உதவி செய்தார்.

1920 காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் குழுக்கள் உருவாகி இயங்கின. பம்பாயில் எஸ்.ஏ.டாங்கே, கல்கத்தாவில் முசாபர் அகமது, மதராஸ் மாகாணத்தில் சிங்காரவேலர், லாகூரில் குலாம் உசேன் ஆகியவர்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி உருவான குழுக்களுக்கு மார்க்சிய-லெனினிய தத்துவக் கல்வியும், அரசியல் கல்வியும் வழங்குவதில் முனைப்புக் காட்டி செயல்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

எம்.என்.ராயுடன் தொடர்பில் இருந்த இந்திய கம்யூனிஸ்டுகள் , இப்போதைய உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கான்பூர் நகரத்தில் ஒரு மாநாடு கூட்டினார்கள். 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 25 முதல் 28 வரை 3 நாட்கள் அந்த மாநாடு நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு பகுதி கம்யூனிஸ்டுகள் கான்பூர் மாநாட்டினை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கமாக பார்க்கிறார்கள்.

MN Roy (centre, black tie and jacket) with Vladimir Lenin (tenth from the left), Maxim Gorky (behind Lenin), and other delegates to the Second Congress of the Communist International at the Uritsky Palace in Petrograd. 1920.

தடைக் கற்களே படிக்கட்டாக:

பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து முழுவிடுதலை வேண்டும் என்ற குரலை இந்திய கம்யூனிஸ்டுகள் தொடக்கம் முதலே எழுப்பினார்கள். இந்திய மக்கள் தம்மை தாமே ஆண்டுகொள்ள முடியும் என்பதற்கு சோவியத் ஒன்றியம் முன்னுதாரணமாக  அமைந்தது. இந்திய தேசிய காங்கிரசின் அகமதாபாத் கூட்டத்தில் மவுலானா ஹஸ்ரத் மொஹானி, சுவாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்டுகள் முழு விடுதலைக்கான தீர்மானத்தை முன்வைத்தார்கள். அந்த தீர்மானம் ஏற்கப்படவில்லை என்றபோதிலும் தேசிய இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அதிகரித்தது.

1920களில் கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட கடும் முயற்சிகளால் தொழிற்சங்கங்கள் உதயமாகின. 1928-29 காலகட்டத்தில் நாடு முழுவதும் தொழிலாளர் போராட்டங்கள் அலையடித்தன. வங்கத்தின் ரயில்வே தொழிலாளர் போராட்டங்களும், பம்பாயில் நூற்பாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தீரம் மிகுந்த உதாரணமாக அமைந்தன.

பிரிட்டிஷ் அரசாங்கம் சதி வழக்குகளை புனைந்து கம்யூனிஸ்டுகளை முடக்க முயன்றது. 1929 முதல் 1933 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற மீரட் சதிவழக்கு அவற்றில் முக்கியமானதாகும். குற்றம்சாட்டப்பட்ட 33 பேரில் 27 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேடையாக்கி, தங்களின் நோக்கங்களை பிரச்சாரம் செய்தார்கள்.

1934 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியானது கம்யூனிஸ்ட் கட்சியையும் அதனோடு தொடர்புடைய அமைப்புகளையும் தடை செய்தது. உறுப்பினராக ஆவதே குற்ற நடவடிக்கை என அறிவித்தது. இதனாலெல்லாம் கம்யூனிச லட்சியங்கள் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. பொருளாதார பெருமந்தத்திற்கு (Great Depression) இடையிலும் சோவியத் ஒன்றியம் நிகழ்த்திவந்த சாதனைகள், கம்யூனிசத்தை நோக்கிய ஈர்ப்பை அதிகப்படுத்தின.

பிரிட்டிஷ் ஆட்சியின் நிர்வாக இயந்திரத்தையே, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியினால் முடக்கிப் போட முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நிரூபித்துக் காட்டினார்கள். 1937 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் 6 லட்சத்து 6 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர். அதே சமயம் 80 சதவீதம் வேளாண் சமுகமாக அமைந்த இந்தியாவின் விடுதலை, விவசாயிகளைத் திரட்டாமல் சாத்தியமாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர். தொடக்க காலத்தில் நகர்ப்புறங்களில் குவிமையமாக வளர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம், ஊரகப் பகுதிகளுக்கும் தன் வேர்களைப் பரப்பியது.

விவசாயிகள் சங்கம் 1936 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கான முதல் சங்கத்தை உருவாக்கியதும் கம்யூனிஸ்டுகளே. மாணவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள் என பல்வேறு வழிமுறைகளில் மக்களை திரட்டி, புரட்சிகர உணர்வை வளர்த்தெடுத்தனர் கம்யூனிஸ்டுகள்.

Portrait taken outside the jail in Meerut of twenty-five of those who were imprisoned as part of the Meerut Conspiracy Case. Back row (left to right): KN Sehgal, SS Josh, HL Hutchinson, Shaukat Usmani, BF Bradley, A Prasad, P Spratt, G Adhikari. Middle Row: RR Mitra, Gopen Chakravarti, Kishori Lal Ghosh, LR Kadam, DR Thengdi, Goura Shanker, S Bannerjee, KN Joglekar, PC Joshi, Muzaffar Ahmad. Front row: MG Desai, D Goswami, RS Nimbkar, SS Mirajkar, SA Dange, SV Ghate, Gopal Basak. 

நிலவுடைமைக்கும் சாதிக்கும் எதிராக:

சாதியும் – வர்க்கமும் கலவையாக இயங்கிய ஊரக இந்தியாவின் பிரச்சனைகளை அவர்கள் எதிர்த்து நின்றார்கள். நிலவுடைமை சக்திகள், வட்டிக்காரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் சுரண்டலுக்கு ஆளாகிவந்த விவசாயிகளை திரட்டினார்கள். கடன் சுழலில் சிக்கி, தங்கள் நிலத்தை இழந்த விவசாயிகளையும், தீண்டாமையை எதிர்கொண்டதுடன், கட்டாய உழைப்பைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டி கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராகப்  போராடினார்கள்.

கம்யூனிஸ்டுகள் தலைமையின் காரணமாக விவசாயிகள் இயக்கம் வலுவடைந்தது. 1938 ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தில் 60 லட்சம் பேர் சேர்ந்திருந்தனர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்தது.

நிலவுடைமை சமூகத்தில் நிலவிய கொடுங்கோன்மைக்கு எதிராகவும், நில உரிமைகளுக்காகவும் கம்யூனிஸ்டுகள் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி நில உடைமையாளர்களோடு வெளிப்படையாக கூட்டு சேர்ந்து செயல்பட்டது. இந்தியத் தொழில் முதலாளிகளும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்கள். இதன் விளைவாக காங்கிரஸ் கட்சியின் வலதுசாரி பிரிவுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் இடையே மோதல்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இயங்கிய மாகாண அரசுகள் வெளிப்படையாகவே நில உடைமையாளர்களையும், தொழில் முதலாளிகளையும் ஆதரித்தன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டனர். இதனை நினைவுகூரும்போது, இ.எம்.எஸ் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் சிலரும், ஒட்டுமொத்த உறுப்பினர்களும் வெளியேறி தங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்’ என்று கூறினார்.

Circa 1946: Godavari Parulekar, leader of the communist movement and the All India Kisan Sabha, addressing the Warli tribals of Thane in present-day Maharashtra. The Warli Revolt, led by the Kisan Sabha against oppression by landlords, was launched in 1945. 

இரண்டாவது உலகப்போர் :

1939 ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. இந்திய பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்யாமலே, இந்திய வீரர்களை போர் முனைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசாங்கம். மேலும், இக்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. போருக்கு எதிரான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதனால், 1941 ஆம் ஆண்டில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை கைது செய்து சிறைப்படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சி.

1942 ஆம் ஆண்டில்தான் கம்யூனிஸ்ட் அமைப்பின் மீதான தடை விலக்கப்பட்டது. தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். போர் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தது, வங்கத்தை பஞ்சம் சூழ்ந்தது. மாபெரும் இந்தப் பஞ்சத்தினால் வங்கம், ஒரிஸா, அசாம், பீகார் பகுதிகளில் 30 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானார்கள்.

லாப நோக்கில் விலையை அதிகரிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கையே இந்தப் பெரும் பஞ்சத்தினை விளைவித்தது என்கிறார் பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக். உணவு தானியங்களை பதுக்கி வைத்து விலையேற்றிய வணிகர்களில் ஒரு பகுதியினர் மற்றும் நிலவுடைமையாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. பெண்கள் தற்காப்புக் குழு அமைக்கப்பட்டு இளம் பெண்கள் கடத்தப்படுவதை தடுத்தார்கள். தன்னார்வலர்களும், மருத்துவக் குழுக்களும் ஏற்படுத்தி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அயர்வில்லாத இந்தப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குத்தளத்தை விரிவாக்கின.

A page from Hungry Bengal (1945) by Chittaprosad. Copies of the book were seized and burnt by the British; this drawing is from the only surviving copy (reprinted in facsimile by DAG Modern, New Delhi, 2011). Chittaprosad’s drawings on the Bengal Famine were published in the Communist Party of India’s journal People’s War, helping to intensify popular anger against the British colonial regime.

போருக்குப் பிறகான எழுச்சி:

இரண்டாவது உலகப் போருக்கு பின் இந்தியாவில் வெகுமக்கள் போராட்ட எழுச்சி ஏற்பட்டது. அவற்றில் பல போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கினார்கள். 1946 ஆம் ஆண்டில் தபால் ஊழியர்கள், ரயில்வே பணியாளர்கள், தந்தி பணியாளர்கள் உள்ளிட்டு போராட்டக் களத்திற்கு வந்தனர்.

1946 பிப்ரவரி மாதத்தில் நடந்த கப்பல் படை கிளர்ச்சி தீரம்மிக்க ஒரு போராட்டமாக இருந்தது. பொது வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி, கிளர்ச்சியை தொடங்கிய கப்பல் படையினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவை வழங்கியது. தொழிலாளர்கள் இக்கிளர்ச்சிக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தார்கள். வணிகர்கள் கடையடைப்புச் செய்தார்கள், மாணவர்கள் கல்விநிலையங்களை புறக்கணித்தார்கள். கடைசியாக, கப்பல்படை வீரர்கள் சரணடைய நேர்ந்தபோதிலும், நாடு முழுவதிலும் அவர்களுக்கு ஆதரவாக எழுந்த கிளர்ச்சியே அவர்களை அழித்தொழிப்பதில் இருந்து காத்துநின்றது.

BT Ranadive, G Adhikari, and PC Joshi at a meeting of the Polit Bureau of the Communist Party of India at the CPI headquarters in Bombay, 1945.P.c.Joshi G.Adhikari and B.T. Ranadive at a meeting of the Polit Bureau of the Communist Party

தெபாகா இயக்கம்:

தெபாகா இயக்கம், வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய மாபெரும் விவசாய எழுச்சியாகும். தெபாகா என்றால் மூன்று பங்கு என்று பொருள். விளைச்சளினை மூன்றாக பங்கிட்டு அதில் 2 பங்குகள் குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையே அதில் பிரதானமாக இருந்தது. 1946 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போராட்டம்  4 ஆண்டுகள் இடைவிடாமல்  நடைபெற்றது.

அந்தக் காலத்தில் கல்கத்தாவில் வகுப்புவாத வன்முறைகள் நடந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் மதங்களைக் கடந்த மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக தெபாகா எழுச்சி அமைந்தது. மேற்குவங்கத்தில் அமைந்திருந்த முஸ்லீம் லீக் அரசாங்கம் இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையை  ஏவியது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னணியில் போராடிய இந்து, முஸ்லிம், பழங்குடி ஆண்களும், பெண்களுமாக 73 பேர் கொல்லப்பட்டார்கள். இறுதியில் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றது.

தெலங்கானா ஆயுதப்போராட்டம்:

தெலங்கானா ஆயுதப் போராட்டம், இந்தியாவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் எழுச்சிகளிலேயே மிகப்பெரியதாகும். ‘வெட்டி’என்று அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பு, நியாயப்படுத்த முடியாத வரி முறைமை ஆகியவைகளை எதிர்த்தும், நில உரிமையை முன்நிறுத்தியும் இந்த போராட்டம் தொடங்கியது. 1946 ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் 5 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹைதராபாத்தினை ஆண்ட நிஜாம் மன்னன் ரசாக்கர்கள் என்ற குண்டர் படையையும், காவல்துறையையும் ஏவி, அடக்குமுறை செய்தபோது, ஆயுதங்களை ஏந்தி தங்களை தற்காத்தபடி விவசாயிகள் போராடினார்கள். 30 லட்சம் மக்கள் தொகை இருந்த 3 ஆயிரம் கிராமங்கள் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கே விநியோகம் செய்யப்பட்டன. கட்டாய உழைப்பு ஒழிக்கப்பட்டு, குறைந்தபட்ச கூலி முறை அமலாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சுய நிர்வாகக் குழுக்கள் ஏற்படுத்தினார்கள்.

நிஜாமின் ஆளுகைப் பகுதியை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் விதமாக 1948, செப்டம்பர் 13 ஆம் தேதி தனது நடவடிக்கையை தொடங்கியது இந்திய ஒன்றிய அரசு. இதற்கு நிஜாம் மன்னன் ஒப்புக்கொண்டதும் இந்திய ராணுவமும், காவல்துறையும் நுழைந்தன. தற்காப்பு போராட்டம் நடந்தது என்றாலும் – 4 ஆயிரம் கம்யூனிஸ்டுகளும், விவசாய போராளிகளும் கொல்லப்பட்ட நிலையில், 10 ஆயிரம் பேர் தடுப்புமுகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 3 – 4 ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தை பிடுங்கி, நிலவுடைமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைத்தது இந்திய அரசு.

Mallu Swarajyam (left) and other members of an armed squad during the Telangana armed struggle (1946-1951).

புன்னப்புரா வயலார் எழுச்சி :

1946 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானம் மன்னராட்சியில் இருந்தது. சமஸ்தானத்திற்கென்று பிரதமர் இருந்தார். அவர்கள் இந்தியாவின் நாடாளுமன்ற முறையை ஏற்கவில்லை. மாறாக அமெரிக்காவைப் போன்ற ஏற்பாட்டை வலியுறுத்தினார்கள். இப்போதைய ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்த புன்னப்புரா – வயலார் ஆகிய இரு கிராமங்கள் மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தின் மையப்புள்ளியாக அமைந்தன. போராட்டக் களத்தில் பல தொழிலாளர்களை சுட்டுக் கொல்லவும் காவல்துறை தயங்கவில்லை. இருப்பினும் திருவிதாங்கூர் விரைவில் இந்தியாவின் பகுதியானது. மொழிவழி மாநிலத்திற்கான அடித்தளத்தை இப்போராட்டமே கொடுத்தது. கொச்சி, திருவிதாங்கூர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த மலபார் மாவட்டம் (மதராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி) ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. தமிழ்நாடு உட்பட மொழி வழி மாநிலங்கள் உருவாக்கத்திற்கான அவசியத்தினை வலியுறுத்தி, சாத்தியமாக்கியதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்களிப்பைச் செய்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்கள் :

இந்தியாவின் விடுதலையை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்து மோதல்களை உருவாக்கியது. அதுவரை அவர்கள் தீவிரமாக எதிர்த்துவந்த பிரிட்டிஷ் ஆதிக்கம் அகன்றுவிட்டது. இப்போது இந்தியர்கள் நாட்டை ஆள்கிறார்கள்.

இந்த  அரசின் தன்மை என்ன? ஆட்சியாளர்கள் யார்? இது காலனி ஆதிக்க அரசாங்கத்தின் கைப்பாவைதானா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆதரவைப் பெற்ற சுதந்திர அரசாங்கமா? புதிய அரசையும், ஆளும் வர்க்கங்களையும் கம்யூனிஸ்டுகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆட்சியாளர்களோடு இணைந்து நிற்க வேண்டுமா? அல்லது அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதா? ‘ரஷ்ய’ வழிமுறையா அல்லது ‘சீன’ வழிமுறையா? இந்திய வழிமுறை என ஏதாவது உள்ளதா? இவையெல்லாம் அந்த காலகட்டத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்விகள் ஆகும். இந்த கருத்துமோதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல்வேறு போக்குகள் உருவாக்கத்திற்கு காரணமாக அமைந்தது.

1950களின் மத்தியில் இருந்தே கருத்து மோதல்கள் தீவிரமாகின. விடுதலைக்கு பிறகான இந்திய அரசாங்கத்தை எப்படி மதிப்பீடு செய்வது என்பதுதான் முதல் கேள்வியாக இருந்தது. புதிய அரசாங்கம் ஒப்பீட்டளவில் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது; பொருளாதார திட்டமிடலுக்கு முயன்றது; தனது இலக்கு சோசலிச வகைப்பட்ட சமுதாயத்தைக் கட்டமைப்பதே என்று கூட காங்கிரஸ் கட்சி சொல்லியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பகுதியினர் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இடது தன்மை கொண்ட சக்திகளோடு இணைந்து செயல்பட வேண்டுமென நினைத்தனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு நிலவுடைமைக்கு எதிரான, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேசிய முதலாளிகளை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் வாதிட்டனர். இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக 1964 ஆம் ஆண்டில் கட்சியின் பிளவு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பிரிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என உருவானது. 1969 ஆம் ஆண்டில், ஆயுதப் போராட்டம் அவசியம் என நம்பிய கம்யூனிஸ்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஏற்படுத்தினார்கள். 

Members of the Samyukta Maharashtra Samiti headed by communist leader SS Mirajkar (third from right, wearing dark glasses) who was then the Mayor of Bombay, demonstrating before the Parliament House in New Delhi, 1958.

இடதுசாரி மாநில அரசாங்கங்கள் :

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மிக முக்கியமான காலமாக, கம்யூனிஸ்டுகளின் தலைமையில் மாநில அரசுகள் அமைந்ததைப் பார்க்கலாம். பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியாவில், அதன்  அரசியலும் மொழிவழி மாநிலங்களின் அடிப்படையிலேயே பெரும்பாலும் வடிவம் பெற்றுள்ளது.

மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கம்யூனிஸ்ட் இயக்கம், விடுதலைப் போராட்ட காலத்தை போலவே, விடுதலைக்கு பின்னரும் வெற்றிகரமான மக்கள் போராட்டங்களை வழிநடத்தியது. இதனால் திரண்ட மக்கள் செல்வாக்கினால்தான் சில மாநிலங்களின் ஆட்சியையும் பிடிக்க முடிந்தது. தேர்தல்களில் வெற்றி பெறுவதோ, மாநில ஆட்சிகளை வழிநடத்துவதோ, தொழிலாளிகள்-விவசாயிகளின் கையில் அரசு அதிகாரத்தை கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறை இல்லை என்றபோதிலும், இத்தகைய  ஆட்சிகளை நடத்துவதன் மூலம் கம்யூனிஸ்டுகளால் மாற்றுக் கொள்கைகளை அமலாக்கி ஒரு சில நிவாரணங்களைக் கொடுக்க முடிந்தது.

கேரளா: ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சி பின்னுக்குத் தள்ளப்பட்ட சமயத்தில், கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு வரலாற்று வெற்றி சாத்தியமானது. 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளத்தில்  1957 ஆம் ஆண்டு முதல்  சட்டமன்ற தேர்தல் நடந்தது.   1957 ஏப்ரல் 5 ஆம் தேதி, இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆட்சி உருவான ஆறாவது நாளில், அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளை அவர்களுடைய குத்தகை நிலங்களில் இருந்து வெளியேற்றத் தடை செய்தது கம்யூனிஸ்ட் அரசு. நிலச் சீர்திருத்த சட்டத்தையும் அறிமுகம் செய்தது. சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கே நில உரிமை, நியாயமான வாடகை நிர்ணயம், நில உடைமைக்கு உச்ச வரம்பு மற்றும் விவசாயிகளே தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தை விலைக்கு வாங்குவதற்கான உரிமையை வழங்குதல் ஆகியவற்றிற்காக சட்டமாக இது கொண்டுவரப்பட்டது. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது, கல்வித்தளத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனநாயகப்படுத்தினார்கள். பொது சுகாதார கட்டமைப்பை விரிவாக்கினார்கள். நியாய விலைக் கடைகளின் வழியாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் நியாய விலையில் ஏழை மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தார்கள்.

நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமையாளர்களை  கலகலக்கச் செய்தது. கல்விச் சீர்திருத்தங்களுக்கு கத்தோலிக்க திருச்சபைகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் தொடர் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தார்கள். காங்கிரஸ் கட்சி இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் ஆட்சியினை கலைத்தது. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவர்கள் நிலச்சீர்திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்தார்கள். இதற்கு எதிராக இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள் என்பதையோ, அடுத்து ஆட்சிக்குவந்த பிறகு சீர்திருத்தங்களை முன்னெடுத்தார்கள் என்பதையோ தனித்து குறிப்பிடுவது அவசியமில்லை.

1993 ஆம் ஆண்டில் 28 லட்சம் குத்தகை விவசாயிகளுக்கு உரிமைகள் உறுதி செய்யப்பட்டது. 60 லட்சம் ஹெக்டேர் நிலம் மறுவிநியோகம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டுவாக்கில்  5 லட்சத்து 28 ஆயிரம் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. கேரளத்தில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் நிலவுடைமைக் கட்டமைப்பின் முதுகெலும்பினை தாக்குவதாக அமைந்தன. கம்யூனிஸ்டுகளின் கொள்கைளால் கல்வியறிவும், மனிதவளமும் மேம்பட்டன. இந்த மேம்பாடுகளை  1970 ஆம் ஆண்டு முதலே பல்வேறு ஆய்வுகளில் அறிய முடிந்தது.

1) மக்களின் பொருளாயத வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துதல், ஒரு நாடு அல்லது மாநிலம் செல்வச் செழிப்போடு வளர்ந்தபிறகே சாத்தியம் என்பது உண்மையில்லை.

2) மக்களால் முன்னெடுக்கப்படும் பொது நடவடிக்கைகள் வழியாக மறுபங்கீட்டை சாத்தியப்படுத்திட முடியும் – என்ற இரு படிப்பினைகளை கேரள முன்மாதிரி நமக்கு வழங்குகிறது.

EMS Namboodiripad (right) taking oath as the first Chief Minister of Kerala. Thiruvananthapuram, 5 April 1957.

மேற்கு வங்கம் :

வங்கம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினால் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாகாணம் ஆகும். வங்கப் பஞ்சம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். இந்திய விடுதலையின் போது பிரிவினையும், அதையொட்டி எழுந்த வகுப்புவாத வன்முறைகளும், அந்த மாகாணத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ஏராளமான மக்கள் அகதிகளானார்கள். அகதிகளின் வாழ்விட உரிமைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும் கம்யூனிஸ்டுகளே முன்னணியில் நின்றார்கள்.

வங்க பஞ்சத்தின்போது நிவாரண நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்தார்கள். 1950  ஆம் ஆண்டு வாக்கில் கல்கத்தாவின் தெருக்களில்  ‘பட்டினிப் பேரணிகள்’ நடைபெற்றன. ஏழைகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரண்டார்கள். நிலச்சீர்திருத்தத்திற்கான முழக்கம் ‘தெபாகா’ இயக்கத்தின் பகுதியாக ஆனது. விவசாயிகள் சங்கம் குத்தகைதாரர்களின் உரிமைக்காக போராடியது. இவற்றால் கம்யூனிஸ்டுகள் வலிமைபெற்றார்கள்.

குறுகிய காலமே செயல்பட்ட ஐக்கிய முன்னணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடது முன்னணி அமைந்தது. தேர்தல் வெற்றியின் மூலம் மாநிலத்தில் ஆட்சியமைத்தது. ஜோதிபாசு முதலமைச்சரானார். 34 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியை இடது முன்னணி வழங்கியது.

இடதுமுன்னணி அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது. குத்தகை விவசாயிகளின் உரிமைகளைக் காக்கும் வகையில் ஆபரேசன் பர்க்கா முன்னெடுக்கப்பட்டது. நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அதிகப்படியான நிலங்கள் மறுவிநியோகிக்கப்பட்டன. இந்தியாவில் நிலச்சீர்திருத்தம் மூலம் பலனடைந்த பயனாளிகளில் 50% மேற்குவங்கத்திலேயே உள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தின் வழியாக நாம் அங்கு நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அளவினை உணரலாம்.

2008 ஆம் ஆண்டு வாக்கில் 29 லட்சம் விவசாயிகள் சாகுபடிக்கான நிலங்களை மறுவிநியோக திட்டங்களின் வழியாக பெற்றிருந்தனர். 15 லட்சம் விவசாயிகள் குத்தகை பதிவு பெற்றார்கள். 55 லட்சம்பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு பயனடைந்தவர்களில் 55% பேர் தலித் மற்றும் பழங்குடிகள் ஆவர்.

மேற்கு வங்கத்தின் வேளாண்மையை மறுகட்டமைத்து, அதன் வழியாக  ஊரக ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தியதுதான் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசாங்கத்தின் முக்கியமான சாதனையாகும். ஊரக வளர்ச்சியில் பொது முதலீடு அதிகரித்ததன் வழியாக பாசன திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவாக்கப்பட்டன. இதன் வழியாக மூன்று போக விவசாயம் சாத்தியமானது. நாட்டிலேயே அரிசி சாகுபடியில் முன்னணி மாநிலமாக மேற்கு வங்கம் உருவானது.

அதிகார பரவலாக்கல் நடவடிக்கை மேற்கு வங்கத்தின் ஊரக வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. நிலச்சீர்திருத்தம் உட்பட உள்ளூர் முடிவுகளை திறம்பட மேற்கொள்வதில் பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான பங்குவகித்தன. இந்த சீர்திருத்தங்களால், மேற்கு வங்கத்தின் ஊரக பகுதிகளில் பெரும் நிலவுடைமையாளர்கள், வட்டிக்காரர்கள், சாதி ஆதிக்க சக்திகள் பலவீனமடைந்தன. தலித், பழங்குடி மக்களின் உள்ளாட்சி பிரதிநிதித்துவம் மக்கள் தொகையில் அவர்களின் பங்கினை விட அதிகமாக உயர்ந்தது. இது உழைக்கும் வர்க்கத்திற்கு சாதகமாக வர்க்க பலம் அதிகரிக்கச் செய்தது.

Communist leader Jyoti Basu (sixth from the left in the front row; no glasses), who later became the Chief Minister of West Bengal, at a Bhukha Michhil (’procession of the hungry’), during the Food Movement of 1959.

திரிபுரா :

திரிபுராவில் , 1948 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகளின் தலைமையிலான மக்கள் விடுதலைக் குழு உருவாக்கப்பட்டது. அது பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் போராட்டங்களை முன்னெடுத்தது. கந்துவட்டிக் கும்பல்களின் ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி அகதிகள் பல்லாயிரக் கணக்கில் அலை அலையாக வரும் சிக்கலை திரிபுரா எதிர்கொண்டது. அகதிகள் தஞ்சம் அடைவது 1960 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சூழலில் பழங்குடி மக்களின் நில உரிமையை பாதுகாப்பது, பழங்குடிகளை குத்தகைய நிலங்களில் இருந்து வெளியேற்றுவதை தடுப்பது, அகதிகளுக்கு முறையான மறுவாழ்வு என கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலைக் குழு போராட்டங்களை முன்னெடுத்தது. விவசாயிகள் – பழங்குடிகள் இடையிலான ஒற்றுமையை இந்தப் போராட்டங்கள் அதிகரித்தன.

1978 ஆம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சிக்குவந்தது. நிருபன் சக்ரபர்த்தி முதலமைச்சராக தேர்வானார். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட விரோதமாக பழங்குடி மக்களின் நிலங்களை உரிமை மாற்றம் செய்வதை தடுத்ததுடன், பழங்குடி நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன, குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இதற்காக நிலச்சீர்திருத்த சட்டத்தில்  திருத்தம் செய்யப்பட்டது. 

மாவட்ட கவுன்சில் தன்னாட்சி சட்டம் மூலமாக, பழங்குடி மக்களுக்கு பிராந்திய அளவில் தன்னாட்சி அதிகாரம் உறுதி செய்யப்பட்டது. கோக்பொரோக் என்ற பழங்குடி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டது.

1980 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பிரிவினைவாத கிளர்ச்சிகளை திரிபுரா எதிர்கொண்டது. இடது முன்னணி அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வழியாக இந்த வன்முறைகள் மட்டுப்படுத்தப்பட்டன. கல்வியறிவு, நலவாழ்வு, தனிநபர் வருமானம் மற்றும் அதிகாரப் பரவல் ஆகியவற்றில் திரிபுரா தனித்துவமான சாதனைகளை எட்டியது.

1978 முதல் 1988 வரையிலும், 1993 முதல் 2018 வரையிலும் இடது முன்னணி மாநில ஆட்சியில் இருந்துள்ளது. இப்போது மிகப்பெரும் அளவில் பணத்தைக் கொட்டியும், சமூக ஊடகங்களின் வழி மோசடிப் பிரச்சாரம் செய்தும் பாஜக தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது. இருப்பினும் தேர்தல் தோல்வியைக் கடந்தும் களத்தில் முன்னணியில் நிற்கின்றது கம்யூனிஸ்ட் இயக்கம்.

நவ தாராளமய காலகட்டமும், ஒன்றிய ஆட்சிகளும்:

1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் நவதாராளமய கொள்கைகள் அதிகாரப்பூர்வமாக அமலாகத் தொடங்கின. இந்தக் கொள்கைகள் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை கண்டுணர்ந்துவருகிறோம். சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவும் தகர்வும், இந்திய அரசின் முரட்டுத்தனமான முதலாளித்துவப் போக்கிற்கு உதவி செய்தது. மேலும், நவதாராளமய கொள்கைகள் வலதுசாரி அரசியல் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சக்திகள் இந்தியாவை ஒரு இந்துத்துவ அரசாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்டுகள் நவ தாராளமய கொள்கைகளுக்கு எதிராக இடைவிடமல் போராடுவதுடன், பாசிச சக்திகளையும் இடைவிடாமல் எதிர்க்கின்றனர்.

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு மாநில கட்சிகளின் பங்களிப்பைக் கொண்டு அமைந்த கூட்டணி அரசுகளுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்தார்கள். மத்திய ஆட்சியின் கொள்கைகளில் கம்யூனிஸ்டுகளின் தாக்கம் மிக அதிகமான காணப்பட்ட ஆண்டு 2004-07 வரையிலான காலம் ஆகும். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தார்கள். இதனால் பாரதிய ஜனதா கட்சி,மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டது. மேலும் ஊரக வேலை உறுதி திட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், வனத்தில் வசிக்கும் பழங்குடிகளுக்கான நில உரிமைச் சட்டம் போன்ற முற்போக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. இருந்தாலும் நவதாராளமய கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அதனால்தான் 2008 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு தனது நெருக்கத்தை இந்திய அரசு அதிகரித்தது. இதனை ஒட்டி இடதுசாரிகளும் மத்திய அரசாங்கத்திற்கு அளித்துவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டார்கள்.

மேற்கு வங்கத்தில் பின்னடைவு:

மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது முன்னணி மாபெரும் வெற்றியை சாதித்தது. ஆனால் பொருளாதாரத்தில் நவ தாராளமயத்தின் தாக்கம் அதிகரித்த பின்னணியில் மாநிலங்கள் தங்கள் சுயாட்சியை இழந்துகொண்டிருந்தன. மாநிலங்களுக்கிடையே போட்டிச் சூழல் ஏற்படுத்தப்பட்டு தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலங்களுக்கு முதலீடுகள் கிடைக்காத நிலைமை ஏற்படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் பொது முதலீட்டுக்கான வாய்ப்புக்களை ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தன, தொழிலாளர் உரிமைகளில் சலுகை கொடுத்து, வரிச் சலுகைகளை அள்ளி வழங்கும் மாநிலங்களை நோக்கி அந்நிய முதலீடுகள் சென்றன. இந்தப் போட்டியில்  மேற்கு வங்கம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. நிலச்சீர்திருத்தம் மூலம் சாதித்திருந்த வளர்ச்சி மிதமாகிய நிலையில், மாற்று வழிமுறைகளை இடது முன்னணி நாட வேண்டி வந்தது.

தனியார் முதலீடுகளை ஈர்க்க முயற்சியெடுத்த இடதுமுன்னணி அதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டபோது சர்ச்சைகள் வெடித்தன. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட எதிர்க் கட்சிகள் விவசாயிகளில் ஒரு பகுதியை இடது முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக திருப்பினார்கள். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இடதுமுன்னணி தோல்வியைத் தழுவியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் வலதுசாரிகளின் மோசடிப் பிரச்சாரங்களும், தாக்குதல்களும் தொடர்கின்றன. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளர்கள் 250க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்கொண்டு வங்கத்திலும் நாடு முழுவதும் இடதுசாரிகள் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தே வருகிறார்கள். அமைப்புசாராதவர்களை அமைப்பாக்கவும், ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கவும் முன்கையெடுக்கிறார்கள். அரசின் திட்டப்பணிகள் மற்றும் ஜவுளி ஆலைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை வெற்றிகரமாக திரட்டியுள்ளார்கள். வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள் என பல்வேறு வேலை சூழலில் இருப்பவர்களையும் திரட்டுவது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. இந்த அனைத்துப் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக சாதிக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமும் அமைந்துள்ளது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான காலத்திலிருந்தே நடந்துவரும் இந்த போராட்டம் இப்போதும் தொடர்கிறது. சாதி ஒழிப்பை முன்வைத்து பல்வேறு அமைப்புகளை இணைத்த மேடையை கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர்.

இந்துத்துவ சக்திகளின் எழுச்சியின் காரணமாக வகுப்புவாத திரட்டல் அதிகரிக்கிறது. இது கம்யூனிஸ்டுகள் கட்டமைக்கும் போராட்ட ஒற்றுமைக்கு ஆபத்தாக எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான அமைப்புகளின் பாசிச வகைப்பட்ட திரட்சியும், பிரச்சாரமும் நவ தாராளமய கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இத்தகைய முயற்சியை எதிர்கொள்ள பரந்துபட்ட மதச்சார்பற்ற, முற்போக்கு சக்திகளின் கூட்டணியை உருவாக்க கம்யூனிஸ்டுகள் முயல்கின்றனர். இதற்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள்.

நவ தாராளமய காலகட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய முதலாளிகளும் அரசியல் தலையீடுகளை பல வடிவங்களில் மேற்கொண்டு வருகிறார்கள். அடையாள அரசியலும், தனிப்பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளும் அதற்கான கருவிகளாக இருக்கின்றன.

Farmers in Sikar, Rajasthan conducting a mock funeral of the BJP government of the state of Rajasthan as part of a struggle led by the All India Kisan Sabha, 3 September 2017.

முடிவாக:

இப்படியான சூழலில்தான், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அவசியம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நூற்றாண்டுகால தீரம் மிக்க வரலாற்றினை திரும்பிப் பார்க்கும் இந்த சமயத்தில், நவ தாராளமய காலகட்டம் குறித்தும், இந்த காலத்தில் ஏற்பட்ட பலவீனங்களையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள சாத்தியங்களையும், வாய்ப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆத்திரமோ, கசப்புணர்வோ உதவாது. திறந்த மனதுடன் சாத்தியங்களை ஆய்வு செய்வதன் வழியாகவே கம்யூனிஸ்டுகள் முன்னேற முடியும். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி, இந்திய மக்கள் நலன்களை பாதுகாக்க மிக மிக அவசியமாகும். நாடு, அநாகரீக நிலைமைக்கு பின் தள்ளப்படாமல் தடுப்பதில், கம்யூனிஸ்டுகள் தங்கள் கடமையை வீரியமாக ஆற்றிட வேண்டும்.

உழைக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களையே தங்கள் லட்சிய இலக்காக கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள், அயர்வில்லாத போராட்டங்களுக்கான உற்சாகத்தை, தங்கள் சொந்த வரலாற்றிலிருந்தே பெற்றிட வேண்டும்.

மூலக்கட்டுரை: One Hundred Years of the Communist Movement in India

Tags: