சிந்து நதி ஒப்பந்தம் இடைநிறுத்தம்: பாதிக்கப்படுமா பாகிஸ்தான்?
–மு.இராமனாதன்

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை இந்த இடைநிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.
இது போன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து எல்லைகளை மூடுவது, தூதரக அதிகாரிகளைக் குறைப்பது, அந்நாட்டுக் குடிநபர்களின் விசாக்களைக் கட்டுப்படுத்துவது முதலான நடவடிக்கைகள் வழமையானவை. இம்முறையும் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்போது மேலதிகமாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். இது சாத்தியமா? இதனால் இரு தரப்பிலும் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?
ஒப்பந்தத்தின் கதை: 1947இல் இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை அடைந்து தனி நாடுகள் ஆயின. புதிய நாடுகளுக்கு இடையே வரையப்பட்ட எல்லைக்கோடு சிந்து நதியை ஊடறுத்தது. இந்த நதி திபெத்தில் உற்பத்தியாகி இந்தியாவில் 780கி.மீ. தொலைவும் பாகிஸ்தானில் 2,170கி.மீ. தொலைவும் ஓடி, அரபிக் கடலில் கலக்கிறது. இது தவிர, சிந்து நதியில் ஐந்து கிளை நதிகள் சங்கமிக்கின்றன.
ஆக, ஆறு நதிகள். இவற்றின் நீரை எவ்விதம் பங்கிட்டுக்கொள்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் 1960 இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். மேற்குறிப்பிட்ட ஆறு நதிகளில் மூன்று நதிகள் (ராவி, பியாஸ், சட்லஜ்) ‘கிழக்கு நதிகள்’ என்றும், அடுத்த மூன்று நதிகள் ‘மேற்கு நதிகள்’ (சிந்து, ஜீலம், செனாப்) என்றும் அழைக்கப்படுகின்றன.
ஒப்பந்தத்தின்படி கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுமையாகப் பயன்கொள்ளலாம். மேற்கு நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கு உரியது. இந்தப் பங்கீட்டின்படி மொத்த நீரில் 20% இந்தியாவுக்கும் 80% பாகிஸ்தானுக்கும் கிடைக்கும். மேலும், இந்தியப் பகுதியில் ஓடுகிற மேற்கு நதிகளில் புனல் மின் நிலையங்கள் அமைக்கவும், நீர்வழிப் போக்குவரத்தை மேற்கொள்ளவும், குடிநீர்த் திட்டங்களை அமைக்கவும் மேல் மடையில் இருக்கிற இந்தியாவுக்கு அனுமதி உண்டு. இதற்குக் கீழ் மடையில் இருக்கும் பாகிஸ்தானின் சம்மதத்தைப் பெற வேண்டும். பிரச்சினைகள் வந்தால் பேசித் தீர்த்துக்கொள்ள உலக வங்கி ஒரு வல்லுநரை நடுவராக நியமிக்கும்.
இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை போரிட்டிருக்கின்றன (1965, 1971, 1999). பாகிஸ்தான் பல முறை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்தியிருக்கிறது. சமீப காலங்களில் மேற்கு நதிகளின் குறுக்கே கிருஷ்ணகங்கா அணை, ரேட்டல் புனல் மின் நிலையம் முதலானவற்றை இந்தியா நிர்மாணித்தபோது, பாகிஸ்தான் இயன்றவரை முட்டுக்கட்டை போட்டது. 2023 முதல் இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவந்தது; பாகிஸ்தான் உடன்படவில்லை.
ஆனால், அப்போதெல்லாம் இந்த ஒப்பந்தத்தை இந்தியா முறிக்கவில்லை. இப்போது முதற்கட்டமாக ஒப்பந்தத்தை இடைநிறுத்தியிருக்கிறது. சிந்து நதியால் பாகிஸ்தானில் பயனுறும் பாசனப் பரப்பு 160 இலட்சம் ஹெக்டேர். இதிலிருந்து பெறப்படும் விளைபொருள்கள் பாகிஸ்தானின் உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கு ஆகும். கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல நகரங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் சிந்து விளங்குகிறது.

விளைவுகள் யாவை? – இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் நீரின்றி வறண்டு போகுமா? மேற்கு நதிகளின் (சிந்து, ஜீலம், செனாப்) வாயிலாக பாகிஸ்தான் பெறும் நீரின் விகிதம் 80% என்று பார்த்தோம். இதன் கொள்ளளவு 117 பில்லியன் கன மீட்டர் (BMC). இந்த நீர் எவ்வளவு இருக்கும்? தமிழகத்தின் பரப்பளவு சுமார் 1,30,000 சதுர கி.மீ. தமிழகம் முழுவதும் மூன்றடி நீரை நிறுத்தினால் அந்த நீர் எவ்வளவு இருக்கும்? அதுதான் 117 பி.எம்.சி. (BMC) இந்தப் பேரளவிலான நீரை பாகிஸ்தானுக்குப் போகவிடாமல் இந்தியாவிலேயே அணை கட்டி நிறுத்த முடியுமா? பெரியாறு அணையின் முழுக் கொள்ளளவுக்கு நாம் நீரைத் தேக்கி ஆண்டுகள் பலவாயிற்று.
அப்படித் தேக்கினால், அது 443 மில்லியன் கன மீட்டர் அல்லது 0.44 பி.எம்.சி.யாக இருக்கும். அதாவது, அரை பி.எம்.சி.க்கும் குறைவு. பெரியாறு அணை, பழைய அணை விட்டுவிடுவோம். 2006 இல் உத்தராகண்டில் பாகீரதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நவீன அணையான தெஹ்ரி அணையை எடுத்துக்கொள்வோம்.
இதன் கொள்ளளவு 3.54 பி.எம்.சி. அதாவது, 117 பி.எம்.சி நீரை பாகிஸ்தானுக்குப் போகாமல் தடுக்க வேண்டுமானால் 33 தெஹ்ரி அணைகளைக் கட்ட வேண்டும். இப்படியான பேரணை ஒன்றைக் கட்ட 10-12 ஆண்டுகள் ஆகும். மிகுந்த செலவு பிடிக்கும். இந்த நதி பாயும் பகுதிகள் குறுகலான, செங்குத்தான, பனிப் பாறைகள் மிகுந்த பள்ளத்தாக்குகள்.
அணை கட்டி நீர் தேக்குவதற்கான சமவெளிகள் குறைவு. இந்த இடங்களில் அணை கட்டுவது சுற்றுச்சூழலுக்குக் கேடானது, பாதுகாப்புச் சவால்கள் மிகுந்தது, நிலநடுக்கப் பகுதிகளில் வடிவமைப்பும் சிரமமானது. தவிர, மக்கள் இடம்பெயர வேண்டி வரும். ஆக, 117 பி.எம்.சி.யில் பெரும்பகுதி நீரைத் தேக்குவது என்பது பொறியியல்ரீதியாகச் சிரமமானது. இந்த இடைநிறுத்தத்தால் வேறு என்ன செய்ய முடியும்? இதற்கு சிந்து நதிநீர் ஆணையத்தின் முன்னாள் ஆணையரான பி.கே.சக்சேனா விடையளிக்கிறார்.
ஒன்று – மேற்கு நதிகளின் மேல் மடையில் அணைகள் கட்டவும், புனல் மின் நிலையங்கள் அமைக்கவும் இனி பாகிஸ்தானின் சம்மதத்தைப் பெற வேண்டாம். அவர்கள் சமீப காலமாகப் போட்டுவரும் முட்டுக்கட்டைகளைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம்.
இரண்டு – சிந்து நதி ஒப்பந்தம், மேற்கு நதிகளில் இந்தியாவின் புதிய கட்டுமானங்களை ஆய்வுசெய்யவும் கருத்துரைக்கவும் பாகிஸ்தானை அனுமதிக்கிறது. இனி அவர்களால் ஆய்வு மேற்கொள்ள முடியாது. மூன்று – மேல்மடையில் உள்ள அணைகளைக் கோடைக் காலத்தில்தான் தூர்வார முடியும். இனி எந்தக் கட்டுப்பாடும் இராது.
நான்கு – ஒப்பந்தத்தின்படி மேல்மடையில் மழை அளவையும் நீர்த் தேக்க விவரங்களையும் கீழ்மடைக்கு வழங்க வேண்டும். இப்போது வேண்டாம். இதனால் என்னவாகும்? பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் முன்னதாகக் கிடைக்காமல் போகும்.
வெள்ளக் காலங்களில் ஆற்றுப் புறம்போக்கில் அனுமதியின்றி வாழும் மக்களை அப்புறப்படுத்துவது தாமதமாகும். முதல் மூன்றும் இந்தியாவில் கூடுதல் நீரைத் தேக்கவும் மின் உற்பத்தி செய்யவும் பயன்படும்; இதனால் பாகிஸ்தானுக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறையும். நான்காவது, வெள்ளக் காலத்தில் பாகிஸ்தான் மக்களைப் பாதிக்கும்.

இனி என்ன நடக்கும்? – ஒப்பந்தத்திலிருந்து யாரும் தன்னிச்சையாக விலகிக்கொள்ள முடியாது என்று பன்னாட்டு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் வாதிடலாம். எல்லா வழக்குகளையும் போலவே இதுவும் நீண்ட காலம் எடுக்கும். பள்ளமான இடத்தை நோக்கி நீர் பாய்கிற இயற்கையின் நியதியை நாம் முற்றிலும் நிறுத்திவிட முடியாது.
இடையில் சில தடைகள் அமைக்கலாம். மேல்மடையில் சாத்தியமுள்ள அணைகளையும் புனல் மின் நிலையங்களையும் அமைக்கலாம். அதற்கு இந்த இடைநிறுத்தம் பயன்படலாம். இது ராஜீயரீதியாகவும் இந்தியாவுக்கு உதவலாம். வருங்காலத்தில் இந்தியாவின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதிலிருந்து பாகிஸ்தானைத் தடுக்கவும் பயன்படலாம். இது சிந்து நதிநீர்ப் பங்கீட்டில் ஒரு சமரச ஏற்பாட்டை நோக்கி பாகிஸ்தானைச் செலுத்தவும் கூடும்