விடைபெற்றார், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், பண்பாட்டுப் போராளி!

-அமரந்தா

சிறந்த சிந்தனையாளரும், இலக்கியவாதியுமான பேராசிரியர் கூகி-வா- தியாங்கோ கிழக்காபிரிக்காவின் மிக முக்கிய எழுத்தாளுமையாக அறியப்பட்டவர். அதிகாரத்திற்கு எதிரான – ஒடுக்கப்படும் எளிய மக்களின் – குரலாக சுமார் 60 ஆண்டுகள் இடையறாது வெளிப்பட்ட அவரது படைப்புகள் அகிலமெங்கும் ஏற்படுத்திய அதிர்வுகள் பிரமிக்கத்தக்கவை;

கென்ய எழுத்தாளர், பேராசிரியர் கூகிவா தியாங்கோ  – Ngũgĩ wa Thiong’o (ஜனவரி 5, 1938 – மே 28, 2025)

ஏகாதிபத்தியங்களிலிருந்து கைமாற்றப்பட்ட சிந்தனையை தூக்கி சுமப்பவர்களை கூகி வெறுத்தார். மக்களின் மொழியையும், தேசிய பண்பாட்டையும் நேசித்தார். ”ஆபிரிக்க எதார்த்தத்தை தெளிவாகச் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.

“ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் எங்கள் பிதாவே  உங்கள் திவ்ய நாமம் போற்றப்படுவதாக !

உங்கள் ராஜ்ஜியம் வருவதாக.

எங்கள் செல்வமிக்க ஆபிரிக்காவில்

விரும்பி அழைக்கும் ஆபிரிக்காவில்

காலனிய ஆட்சி காலத்தில் நடந்ததைப் போலவே

இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக.

இன்றைய நாளில் எங்கள் தினக்கூலிக்குரிய டொலரைத் தாருங்கள்.

எங்களது தவறுகளை மன்னித்தருளுங்கள்.

உங்களுக்கும் எங்களுக்கும் சவாலாக உள்ள

சூழலை வெற்றி கொள்ள உதவி தாருங்கள்.

கருணையை வழங்கி உறுதுணையாக இருந்து

நாங்கள் உமக்கு என்றும்

பணிவுடனும், நன்றியுடனும் இருக்க

ஆத்ம பலத்தை அளியுங்கள்.

என்றென்றும், எப்போதும் ஆமென் !”

கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவர்களும் பாடுகின்ற “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே” என்று தொடங்கும் தோத்திரப் பாடலை நாம் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் கேட்டிருப்போம். காலனி ஆதிக்கத்திற்கு ஆட்பட்ட நாடுகளில் தாய்மொழியை மறக்கடித்து, தேசிய பண்பாட்டைப் புறக்கணித்து, காலனிய அடிமை மனநிலையை வேரூன்றச் செய்யும் பண்பாட்டுப் படுகொலையை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக, கூகிவா தியாங்கோ இந்த தோத்திரப் பாடலை அடியொற்றி மேற்சொன்ன பாடலை எழுதினார்.

ஆங்கில இலக்கியம், ஒப்பிலக்கியம், நாடகத் துறை ஆகியவற்றில் புகழ்மிக்க பேராசிரியராகவும், எழுதுதல், மொழிபெயர்த்தல் இவற்றுக்கான சர்வதேச மையத்தின் இயக்குனராகவும் இர்வினில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர் கூகி வா தியாங்கோ. அதற்கு முன்னர் வடமேற்கு பல்கலைக் கழகத்திலும், யேல் பல்கலைக் கழகத்திலும் நியூயார்க் பல்கலைக் கழகத்திலும் அவர் பணியாற்றியுள்ளார். 1980 ஆம் ஆண்டு கென்யாவை விட்டு வெளியேறுவதற்கு முன் நைரோபி பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகவும் இலக்கியத்துறை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

உகாண்டாவின் மக்கரேரே பல்கலைக்கழகத்தில் 1959 முதல் 64 வரை கூகி (ஆங்கில) இலக்கியத்தில் பட்டப் படிப்பு படித்தார். இப் பருவத்தில் இவர் நாவல்கள் (The River Between & Weep Not Child), நாடகம் (The Black Hermit), கட்டுரைகள், என தொடர்ச்சியாக எழுதத் தொடங்கினார்.

மக்கரேரேவில் 1962 ஜூன் மாதத்தில் ஆபிரிக்க எழுத்தாளர்களின் முதல் மாநாடு நடைபெற்றபோது, இரண்டு சிறுகதைகளை மட்டுமே பதிப்பித்திருந்த மாணவர் கூகி, அதில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். ஆனால் ஆபிரிக்க மொழிகளில் எழுதி வந்த பல மூத்த எழுத்தாளர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை. ஏனெனில், இந்த மாநாட்டின் தலைப்பே “ஆங்கிலத்தில் எழுதும் ஆபிரிக்க எழுத்தாளர்களின் முதல் மாநாடு” என்றிருந்தது. மாநாட்டில் புகழ்பெற்ற நைஜீரிய எழுத்தாளர் சினுவா ஆச்சிபே- யை அவர் சந்தித்தார் (Things Fall Apart – “சிதைவுகள்” (1959) நாவலின் ஆசிரியர்).

அவரிடம் “அழாதே பாப்பா” என்ற தனது முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால், 1964 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து விட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறியபோது, அவர் உற்சாகமான மனநிலையில் இல்லை. ஆபிரிக்காவில் பிறந்தவர்கள் ஆபிரிக்க மொழிகளில் படைக்கும் இலக்கியம் மதிப்பற்றதா? படிப்பை முடித்து பல்கலைக் கழகத்திலிருந்து பல்வேறு கேள்விகளோடு மனக் குழப்பத்துடன் வெளிவந்தவர், முதலில் பத்திரிகைப் பணியில் சேர்ந்தார்.

பிறகு, அதே ஆண்டில் பட்ட மேற்படிப்பிற்காக லீட்ஸ் பல்கலைக்கழகம் சென்ற போது தான், அவர் சோசலிஸ்டுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

1967 இல் நாடு திரும்பி நைரோபி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தபின் அவர் பல நூல்களை எழுதினார். ஆபிரிக்க பெரும்பான்மை மக்களின் புரட்சிகர திறமைகளைப் பற்றிப் பேசும் “ஒரு கோதுமை மணி”(1967 (A Grain of Wheat) நாவலைப் படைத்தார். தொடர்ந்து “திஸ் டைம் டுமாரோ” (This time Tomorrow) என்ற மூன்று குறுநாடகங்களின் தொகுப்பும், “ஹோம் கமிங்” (Homecoming) என்ற கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாயின.

1976 ஆம் ஆண்டு காமிரீத்து சமூகக் கல்வி மற்றும் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு நாடகப் பிரதி ஒன்றை உருவாக்கும் பணி காமிரீத்து மையத்தின் பண்பாட்டுத்துறைத் தலைவராகப் பொறுப்பிலிருந்த கூகியிடம் தரப்பட்டது. “விரும்பியபோது நான் மணமுடிப்பேன்” (I will Marry when I want) என்ற தலைப்பில் கூகியும் கூகி-வா- மிரீஇ என்பவரும் எழுதிய இந்த நாடகத்தில், முன்பின் நடித்திராத கிக்கியூ மொழி பேசும் கிராமத்து விவசாயிகளும் . தொழிலாளர்களும் நடிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

இந்த நாடகத்தின் ஒளி, ஒலி, மேடை, இசை அனைத்தையும் நடிகர்களே உருவாக்கி நடித்தனர். இறுதியில் நாடகம் என்னவோ இரு பேராசிரியர்கள் எழுதிய வடிவில் இல்லாமல், மக்களே எழுதிய ஒரு நாடகமாக உருவாகி இருந்தது ! மாவ் மாவ் இயக்கம் தொடங்கப்பட்ட தினத்தையும், கென்யாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட 25 ஆம் ஆண்டையும் குறிக்கும் விதத்தில் இந்நாடகம் 1977, அக்டோபர் 2 ஆம் தேதி அரங்கேற்றப்பட்டது.

பல்லாயிரக்கணக்கானோர் விரும்பிப் பார்த்த இந்த நாடகம், “மக்களிடையே அரசு எதிர்ப்பு மனநிலையை உருவாக்குகிறது” என்று இரண்டே மாதங்களில் தடை செய்யப்பட்டது. உளவுத்துறை அளித்த புகாரின் பேரில் 1977 டிசம்பர் 31 அன்று முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் கூகி-வா-தியாங்கோ கைது செய்யப்பட்டு காமித்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓராண்டு கால தனிமைச் சிறைவாசம் தனது மன உறுதியைக் குலைத்து விடாதிருக்க கடும் முயற்சி மேற்கொண்டார் கூகி. இரண்டு நூல்களை இக்காலத்தில் எழுதினார்.

1.”Detained : A Writer’s Prison Diary” 2. “Devil on the Cross” (இதை நானும் சிங்கராயரும் இணைந்து “சிலுவையில் தொங்கும் சாத்தான்” (2000) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளோம்).

ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் பன்னாட்டு மனித உரிமைப் போராளிகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக கூகி, 1978 டிசம்பரில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது மலம் துடைக்கும் தாளில் கிக்கூயூ மொழியில் அவர் எழுதிய சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவல் “அபாயமற்றது” என அவரிடமே திருப்பியளிக்கப்பட்டதால், 1979 ஆம் ஆண்டு இந்த நாவல் வெளியிடப்பட்டது. ஒரு சில மாதங்களில் நாவலின் 15 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆயின.

தொடர்ந்து இவர் கென்யாவில் வாழ முடியாத நெருக்கடி ஏற்பட்டது. 1980 ஆம் ஆண்டு இலண்டன் சென்றவர் 89 ஆம் ஆண்டு வரை அங்கேயே தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து வட அமெரிக்கா சென்று விட்டார்.

1977-க்குப் பிறகு படைப்பிலக்கியம் எதையும் இவர் ஆங்கிலத்தில் எழுதவில்லை.

1986 ஆம் ஆண்டு “De-Colonising the Mind” (காலனிய மனோநிலையை அகற்றுதல்”) என்ற நூலை கூகி ஆங்கிலத்தில் எழுதினார். இனி எதை எழுதினாலும் தாய்மொழியான கிக்கூயூ அல்லது கிஸ்வாஹிலி என்ற கென்ய தேசிய மொழியில் மட்டுமே எழுதப் போவதாக இந்த நூலின் முன்னுரையிலேயே கூகி பிரகடனம் செய்தார். அவரைப் பொறுத்தவரை தாய்மொழியில் கதை சொல்வதே விடுதலைக்கான முனைப்புதான் !

1996 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதத்தில் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய இன பிரச்சனை குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள கூகி இந்தியாவுக்கு வந்திருந்தார்.  அப்போது இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இடதுசாரிகள் புது டெல்லி சென்றிருந்தனர். பிப்ரவரி 17ஆம் திகதி கூகியிடம்  நிழல் திருநாவுக்கரசு “Devil on the Cross” நாவலை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளிக்கும்படி  வேண்டுகோள் வைத்தார். சற்றும் தாமதியாமல் கையில் கிடைத்த துண்டுத் தாளில் தனது அனுமதியை கூகி  எழுதிக் கொடுத்தார் ! அதே நேரத்தில் ஆந்திராவிலிருந்து வந்திருந்த கவிஞர் வரவர ராவ், தான் மொழிபெயர்த்த இந்த  நாவலின் தெலுங்குப் பதிப்பைக் கொண்டு வந்து கூகியின் கையில் கொடுத்தார் !

கிட்டத்தட்ட  கால் நூற்றாண்டு காலம் கழித்து 2004 ஆம் ஆண்டு நாடு திரும்பிய கூகி, கூலிப்படையினரால் தாக்கப்பட்டார். அவரது மனைவி ஞ்ஜீரி  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவரது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. உலகெங்கிலும் இருந்து இந்த கீழ்த்தரமான செயலுக்கு கண்டனக் குரல்கள் எழுந்தன.

2018 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற மாநாட்டில் (PEN International Congress) சிறப்பு பேச்சாளராக கூகி அழைக்கப் பட்டிருந்தார்.  வட அமெரிக்க அரசு விசா கொடுக்க தாமதித்ததால், அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை.

சோவியத் தகர்வுக்குப் பின் உலகின் ஒரே எஜமானனாக மாறிய வட அமெரிக்கா, வளரும் நாடுகளுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் வழங்கும் கடன்கள் அந்நாடுகளின் ஏழை மக்களிடம் பகல் கொள்ளை அடிப்பதை கூகி விரிவாக எடுத்துரைத்தார்.

சுரண்டலில் இருந்து விடுதலை வேண்டும் என்று கோரி போராடும் ஒடுக்கப்பட்டோர் மீது ஏகாதிபத்தியம் “பண்பாட்டு வெடிகுண்டை” வீசுகிறது என்கிறார் கூகி.  இந்தப் “பண்பாட்டு வெடிகுண்டு” மக்கள் தங்கள் மொழிகளில், திறமையில், போராட்டப் பண்பாட்டில், ஒற்றுமையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடுகிறது என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.

தங்கள் கடந்த காலத்தை விடுதலையற்ற, சாதனைகள் அற்ற வெறும் பாழ்நிலமாகக் கருதச் செய்கிறது. அந்தப் பாழ் நிலத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள, வாழ்வின் ஊற்றுகளான தாய்மொழி, போராட்ட உரிமை ஆகியவற்றை அடைத்துவிடுவது ஒன்றே வழி என்று நம்ப வைக்கிறது. போராடி வெற்றி காண்பதே இயலாதது என்று விரக்தியில் தள்ளுகிறது. தான் உருவாக்கிவிட்ட பாழ்நிலத்தில், தன்னையே தீர்வாக முன்வைக்க, திருட்டை புனிதமென்று கூறுகிறது. அதனால்தான் “சுதந்திரமான” ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க புதுக் காலனிகளின் ஏகாதிபத்திய முகவர்கள், அதிகார வர்க்கத்தினராக சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். அவர்கள் தான்”திருட்டு புனிதமானது” என்ற பல்லவியை உரக்கப் பாடுகிறார்கள் என்று அடையாளம் காட்டுகிறார் கூகி.

சொந்த நாட்டு மக்களை வேட்டையாடும் புதுக் காலனிய அரசுகளை எதிர்த்து எவ்வாறு போராட வேண்டும் என்றும் அவரே எடுத்துக் கூறுகிறார் : “போராடும் வர்க்கங்கள் தங்களது பண்பாட்டில் ஊறிய போராட்ட ஆயுதங்களை இறுக்கிப் பிடித்து, “ஒன்றுபட்ட மக்களை வீழ்த்த முடியாது” என்ற பாடலை தமது சொந்த மொழியில் உரக்கப் பாடவேண்டும்”.

இந்தப் பின்னணியில் இருந்து இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் அரசியலில் முக்கிய பங்கு இருப்பதை நாம் பார்க்க வேண்டும்.

“எங்கள் சமூகத்தின் பிரச்னைகள் பெரும்பாலும் அரசியல் பிரச்னைகளே. எனவே தான் இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், ஓவியர்கள் அனைவரும் அரசியலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். வட அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளில் அரசியல் அதிர்வுகள் இல்லாதது எனக்கு வியப்பாக இருக்கிறது” என்கிறார் கொலம்பிய எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.

“அரசியல் அற்ற இலக்கியத்தைப் படைத்தவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாக கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு உள்ளாகின்றன. ஒரு கலைஞனாக – வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாக கருதப்படுவதுண்டு” என்கிறார் பெரூவின் மரியோ வார்காஸ் யோசா.

இன்னும் ஒரு படி மேலே போய் “வரலாறு நாவலாசிரியர்களால் எழுதப்பட வேண்டும்” என்கிறார் மெக்சிகோவின் கார்லோஸ் ஃபுயந்தேஸ்.

ஐரோப்பிய / வட அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பிடியில் சிக்கியதன் காரணமாக பொருளாதார குறை வளர்ச்சியும் நிலையற்ற அரசியலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் காலந்தோறும் இருந்து வந்துள்ளன. ஆனால், அவை இக்கண்டத்தின் கலை இலக்கிய வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. மாறாக உலகின் மிக முன்னேறிய நாடுகளின் இலக்கியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் நவீன உலகின் தலைசிறந்த படைப்புகளில் சில இலத்தின் அமெரிக்காவில் இருந்து தோன்றியுள்ளன. இது ஆபிரிக்க நாடுகளில் இருந்து தோன்றிய இலக்கியங்களுக்கும் பொருந்தும். சினுவா ஆச்சிபே, வோலே சோயிங்கா, சிமாமாந்தா ங்கோசி அதிச்சி, நாதின் கார்திமர், கூகி-வா-தியாங்கோ, ஜே.எம். கோயத்சீ என இப்பட்டியல் நீள்கிறது.

கூகி எழுதிய மற்றொரு பாடலுடன் முடிக்கிறேன் :

“முதலில் அவர்கள் எங்களுக்கு தங்கள்

நாக்குகளைக் கொடுத்தார்கள்.

நாங்கள் சொன்னோம், பரவாயில்லை

அவற்றை எங்களுடைய தாக்கிக் கொள்வோம்.

பரவாயில்லை என்று சொன்னோம்.

ஏனென்றால், அவர்களுடைய நாக்குகளுடன்

நாங்கள் முதல் ஆளாக இருப்போம் !

விமானங்களையும் போர்க் கருவிகளையும்

வாங்குவதில் முதல் ஆளாக !

நீங்கள் உங்களிடம் இருந்தவற்றிலிருந்து சிறந்தவற்றையே உருவாக்கினீர்கள் என்றாலும்,

இப்போது அவர்கள் பயன்படுத்தியவற்றுள் சிறந்தவற்றை நம்மை வாங்க வைக்கிறார்கள்.

நாங்கள் திருப்பி அடிப்போம், எங்களுக்காக நாங்களே தயாரிப்போம் என்ற போது /

உங்கள் ஆயுதங்களை ப் பற்றிய ரகசியங்கள் எல்லாம் எங்களுக்குத் தெரியுமென நினைவூட்டினார்கள்.

ஆமாம், அவர்கள் பயன்படுத்தியவற்றுள் சிறந்தவற்றை எங்களை வாங்கச் சொல்கிறார்கள்.

கை மாற்றுதல் என்று இதைச் சொல்லுகிறார்கள்.

சுவாஹிலியில் இதனை மிதும்பா (Mitumba) என்று சொல்வார்கள்.

மிதும்பா ஆயுதங்கள்.

மிதும்பா மகிழுந்துகள்.

மிதும்பா துணிமணிகள்.

இப்போது பன்னாட்டு நிதி நிறுவனம் மிதும்பா அறிவுஜீவிகளை உருவாக்க

மிதும்பா பல்கலைக் கழகங்களைத் திணிக்கின்றது.

எங்கள் எல்லாத் துறைகளையும் மூடும்படி சொல்கின்றது.

எங்கள் துறைகளோ

எங்கள் நிலத்தில் உறுதியாக நிற்கவேண்டும்

எங்கள் நிலத்தில் நின்றுதான் விண்மீன்களைச்

சென்றடைய வேண்டும் என்கின்றன.

ஆனால் மிதும்பா அரசியல்வாதிகள்

பன்னாட்டு நிதி நிறுவனத்தின் முன் மண்டியிடுகிறார்கள்

சர்வதேச மிதும்பா பவுண்டேஷன் !

”சரி தான் ஐயா”

என்று கூவுகிறார்கள்

சரிதான் ஐயா !

புதிய காலனிய விகடர்கள் நாங்கள் சிறந்த கையூட்டுகளைக் கறக்கின்றோம் .

மிதும்பா சிந்தனையுள்ள சிலருக்கு மட்டுமே

மிதும்பா பண்பாடு உப்பிய வயிறுகளை உருவாக்குகிறது !

ஏகாதிபத்தியங்களிலிருந்து கைமாற்றப்பட்ட சிந்தனையை ஏற்பதை கூகி வெறுத்தார்.  மக்களின் மொழியையும் தேசிய பண்பாட்டையும் நேசித்தார். ”ஆபிரிக்க எதார்த்தத்தை தெளிவாகச் சிந்திக்க வேண்டும்” என்றார். ”இரத்தம் சிந்திப் போராடி காலனிகள் விடுதலை பெறும்போது, வாசல்வழியே வெளியேறும் ஏகாதிபத்தியங்கள், கள்ளத்தனமாக கொல்லைப்புற வழியாக நுழைந்து, புதிய வடிவங்களில் புதுக் காலனிகளை உருவாக்கி, உழைப்பால் செல்வத்தைப் பெருக்கும் எளிய மக்களின் வாழ்வை துன்பமயமாக்குகின்றன” என்றார் கூகி.

நம் காலத்தின் சிறந்த சிந்தனையாளரும், தேசியவாதியும், இலக்கியவாதியுமான கூகி-வா-தியாங்கோவின் வாழ்வும், படைப்புகளும் கொண்டாடப்பட வேண்டும்.

Tags: