ட்ரம்ப்பின் இரட்டை நாக்கு

இந்தியாவோடு இணைந்து பணியாற்றுவோம் என்று ஒருபுறத்தில் கூறிக்கொண்டே மறுபுறத் தில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு நூறு சதவீத வரி விதியுங்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக உள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் நீடித்துக் கொண்டே போவதற்கு அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான நேட்டோ அமைப்பே காரணமாகும். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் வழங்குகிறது அமெரிக்கா. மறுபுறத்தில் இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும் என்று ஒப்புக்கு பேசுகிறது.
நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று சவடால் அடித்தார் ட்ரம்ப். ஆட்சிக்கு வந்தவுடன் நூறு நாட்களுக்குள் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவேன் என்றார். ஆனால் அவர் கூறியது போல எதுவும் நடக்கவில்லை. இதற்கு காரணம் ரஷ்யாவிடமிருந்து இந்தியா, சீனா போன்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை வாங்குவதுதான் காரணம் என்று புனைந்துரைத்து இந்தியாவின் மீது அடுத்தடுத்து வரி விதிப்பு தாக்குதலை தொடுத்தது ட்ரம்ப் நிர்வாகம்.
பகல்ஹாம் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை நான் தான் நிறுத்தினேன் என்று ட்ரம்ப் 40க்கும் மேற்பட்ட முறை கூறினார். ஆனால் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதத்தின் போது கூட ட்ரம்ப்பிற்கு மறுப்பு தெரிவிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை. மறுபுறத்தில் மோடியின் சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் போது கூட அந்த நாட்டிடமிருந்து பெருந்தொகையில் இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு உடன்பாடு கையெழுத்தானது.
இந்தியாவை வரிவிதிப்பு மூலம் மிரட்டி பணிய வைக்க முயல்கிறது ட்ரம்ப் நிர்வாகம். இதனிடையே இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடையே ஏற்பட்ட கூடுதல் நெருக்கம் அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோடியோடு தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டும் வகையில் பேசுகிறார் ட்ரம்ப்.
மறுபுறத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இந்தியா மற்றும் சீனா மீது நூறு சதவீத அளவுக்கு வரி விதிக்க வேண்டும் என்று தூண்டிவிடுகிறார். அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்படும். இது உள்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. மாறாக அந்த நாட்டை கூடுதலாக சார்ந்திருப்பதை கைவிட்டு உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தவும், பன்முக அயல்துறை உறவை வலுப்படுத்தவும் மோடி அரசு முயலவேண்டும்.
-தீக்கதிர், 11.09.2025