வெனிசுவேலாவுடன் போர்ப்பதற்றத்தை அதிகரிக்கும் ட்ரம்ப்

மெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையேயான போர்ப்பதற்றத்தை ட்ரம்ப் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.  வெனிசுவேலா அமெரிக்காவுக்கு அடிமையாகச் செயல்பட மறுத்து வருவதால் அந்நாட்டு ஜனாதிபதி மதுரோ போதைப்பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்துவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் ட்ரம்ப். மேலும் அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த திட்டமிட்டு வருகிறார். இதற்கிடையே வெனிசுவேலாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கூறி அந்நாட்டின் கடல் எல்லையில் தனது போர்க்கப்பல்களை நிறுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார் ட்ரம்ப். இதனால் வெனிசுவேலாவும் தனது இராணுவத்தை போருக்கு தயார்ப்படுத்தி வருகிறது. இது அங்கு போர்ப்பதற்றத்தைத் தூண்டியுள்ளது.  

வெனிசுவேலா படகுகள் மீது தாக்குதல்

வெனிசுவேலா கடல் எல்லையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 11 பேர் பயணித்த படகை போதைப் பொருள் கடத்திய படகு எனக் கூறி அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் அவர்கள் கடத்தல்காரர்கள் அல்ல, மீனவர்கள் என வெனிசுவேலா வெளியிட்ட அறிக்கையில் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15 அன்று இன்னொரு படகின் மீது குண்டு வீசி மூன்று பேரை படுகொலை செய்தது. அப்போதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை படுகொலை செய்ததாக ட்ரம்ப் அறிவித்தார். பின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, மொத்தம் மூன்று படகுகளை அழித்ததாகவும் தெரிவித்தார். இதே வேளையில் அமெரிக்காவுக்கு போதைப்பொருட்களை அனுப்புவதை மதுரோ நிறுத்த வேண்டும் என வெனிசுவேலா ஜனாதிபதி மீது அவதூறும் பரப்பினார். அமெரிக்காவின் தாக்குதல்களையும் போரைத் தூண்டும் நடவடிக்கையையும் தொடர்ந்து கண்டித்துள்ளதுடன் இந்நடவடிக்கை எங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டது எனவும் வெனிசுவேலா குற்றம் சாட்டியுள்ளது. எனினும் வெனிவேசுலா தரப்பில் இராணுவ ரீதியிலான தாக்குதலை நடத்தவில்லை.  

சட்டவிரோதச் செயல் மனித உரிமைமீறல்

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களை முதலாளித்துவ ஆதரவாளர்கள் கூட பரவலாகக் கண்டிக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இந்தத் தாக்குதல்கள் “சர்வதேசச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மீறுகின்றன”. “ஒரு கப்பலை தடுத்து நிறுத்துவதற்கு போர்க்கப்பல்களை உயிரிழப்பை ஏற்படுத்தாத வகையில் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அமெரிக்கக் கப்பல்கள் அவ்வாறு செயல்பட்டதாகத் தெரியவில்லை. இது  அமெரிக்காவின் சட்டவிரோதச் செயல்கள், சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்துபவர்களாகக் கருதப்படும் நபர்களை எந்த ஒரு விசாரணையுமின்றி கொலை செய்தது மனித உரிமைகளை மீறிய செயல்” என அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.  

இத்தாக்குதல்கள் குறித்து பேசிய கொலம்பியா ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோ “ஆயுதமில்லாத படகில் பயணித்த மூன்று பயணிகளை ஏவுகணை வீசி கொலை செய்வது அப்பட்டமான படுகொலையாகும். அமெரிக்க அரசு, இலத்தீன் அமெரிக்கர்களை அவர்களின் சொந்த நிலத்தில் கொலை செய்து வருகிறது” என அமெரிக்காவை கண்டித்துள்ளார்.  பல ஆண்டுகளாக வெனிசுவேலாவை தாக்க வேண்டும் என அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில் தற்போதைய நடவடிக்கைகள் வெனிசுவேலாவை போருக்குள் இழுக்கும் செயல் என பலதரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.  வெனிசுவேலாவும் அமெரிக்காவின் போரை எதிர்கொள்ளும் வகையில் மக்களுக்கும் இராணுவ பயிற்சி வழங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

Tags: