வெனிசுவேலா ஜனாதிபதி கடத்தல்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டூழியங்களை முறியடிப்போம்!

-கே.பாலகிருஷ்ணன்

லக மக்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து, புதிய ஆண்டின் தொடக்கத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ள சமயத்தில், உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடிய ஒரு கொடூரமான சம்பவம் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் நடந்தேறி இருக்கிறது. ஜனவரி 3 ஆம் திகதி நள்ளிரவில், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது அமெரிக்க இராணுவம் அராஜகமாகப் படையெடுத்து, அந்த நாட்டின் இராணுவத் தளங்களைத் தகர்த்ததோடு மட்டுமல்லாமல், அந்நாட்டின் குடியரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அவர்களையும், அவருடைய துணைவியாரையும் நள்ளிரவில் படுக்கையறையைச் சுற்றி வளைத்து கைது செய்து, விலங்கிட்டு கடத்திச் சென்றிருக்கிறது. இது ஒரு சர்வதேசப் பயங்கரவாதம்; கொடிய மூர்க்கத்தனம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சிறையில் அடைக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதி

கடத்திச் செல்லப்பட்ட ஜனாதிபதி மதுரோ அவர்கள் இப்போது நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்; கூண்டில் ஏற்றி விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஜனவரி 4 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, அமெரிக்க அரசு அவர் மீது ‘போதைப்பொருள் கடத்தல்’ என்கிற அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறது. அதற்குப் பதிலளித்த மதுரோ, “நான் இப்போதும் வெனிசுவேலாவின் சட்டப்பூர்வமான ஜனாதிபதியாகவே இருக்கிறேன். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்குப் புறம்பாக என்னைக் கடத்தி வந்து சிறை வைத்துள்ளனர்” என்று வாதிட்டுள்ளார். ஆனால், அந்த நீதிபதி அதையெல்லாம் செவிமடுக்காமல், அவரை மார்ச் 17 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதி, அவரது மனைவியோடு இன்னொரு நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது உலக வரலாற்றில் இதுவரை கண்டிராத கொடுமையாகும்.

எண்ணெய் வளமும் அமெரிக்காவின் நீண்ட காலப் பகையும்

வெனிசுவேலா ஏன் அமெரிக்காவின் இலக்காக இருக்கிறது என்பதை நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும். உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுவேலா. உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 20 சதவிகிதம் அந்த ஒரு நாட்டிலேயே இருக்கிறது. இது தவிரத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு தாதுப் பொருட்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. காலம் காலமாக இந்த வளங்களை அமெரிக்க முதலாளிகள் அள்ளிக் கொண்டு போயினர். வெனிசுவேலா மக்கள் வறுமையில் வாடினர். இந்தச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஹியூகோ சாவேஸ் தலைமையிலான இட துசாரி அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். 1999 இல் சாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடனேயே, எண்ணெய் வளம் முழுவதையும் நாட்டுடைமை ஆக்கினார். அந்நியக் கம்பெனிகள் கொள்ளையடிக்க இடமில்லை என்று சட்டம் போட்டார். இதுதான் அமெரிக்க முதலாளிகளையும், ஆளும் வர்க்கத்தையும் ஆத்திரப்பட வைத்தது. சாவேஸ் ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வது,

சி.ஐ.ஏ. மூலம் உளவு பார்ப்பது, உள்நாட்டுப் போர் மூட்டுவது என அமெரிக்கா செய்த எல்லா சூழ்ச்சி களையும் வெனிசுவேலா மக்கள் முறியடித்தனர். சாவேஸின் மறைவுக்குப் பிறகு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மதுரோ அவர்களை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.

மக்கள் ஆதரவும் தேர்தல் வெற்றியும்

ஜனாதிபதி மதுரோ ஏதோ தற்செயலாக பதவிக்கு வந்தவர் அல்ல. 2013, 2019 மற்றும் சமீபத்தில் 2024 என மூன்று முறை அந்நாட்டு மக்களால் பெரும்பான்மை வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர். இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கொண்ட ஒரு தலைவரை, நள்ளிரவில் ஒரு ரவுடியைப் போலப் புகுந்து அமெரிக்க இராணுவம் கடத்திச் சென்றிருப்பது எத்தகைய அராஜகம்? இது ஏதோ சினிமாவில் பார்க்கிற காட்சியைப் போல இருக்கிறது என்று ட்ரம்ப் பெருமையாகப் பேசுகிறார். ஒரு நாட்டின் ஜனாதிபதியைச் சிறைப்பிடித்துச் சென்ற பிறகுதான் உலகத்திற்கே இந்த விஷயம் தெரிய வருகிறது என்றால், அமெரிக்காவின் ரவுடித்தனம் எந்த எல்லைக்குச் சென்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல் எனும் போலித் திரை

மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு என்பது முற்றிலும் பொய்யானது. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (DEA), கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலும் வெனிசுவேலா மீது இத்தகைய குற்றச்சாட்டை வைக்கவில்லை. அப்படியிருக்க, திடீரென இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துவதன் நோக்கம் என்ன?

இதன் பின்னணியில் இருப்பது எண்ணெய் அரசியல். ரஷ்யாவிடமிருந்தும், சீனாவிடமிருந்தும் எண்ணெய் வாங்கக் கூடாது என்று ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா தடுக்கிறது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போக்க, வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா துடிக்கிறது. இதற்காகத்தான் ஜனாதிபதியைக் கடத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இரட்டை வேடம்

போதைப்பொருளை ஒழிக்கவே மதுரோவைக் கைது செய்ததாகச் சொல்லும் ட்ரம்ப், உண்மையில் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்தைச் செய்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தால் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸ் என்பவருக்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இப்போது பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதும், மக்கள் தலைவரைப் போதைப்பொருள் கடத்தல்காரர் என்று பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் வைப்பதும் ட்ரம்ப்பின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது.

இலத்தீன் அமெரிக்காவில் சி.ஐ.ஏ-வின் சதி வரலாறு

அமெரிக்கா நீண்ட காலமாகவே தென் அமெரிக்க நாடுகளைத் தன் கொல்லைப்புறமாக நினைக்கின்றது.

  • 1954 இல் கௌதமாலாவின் அர்பென்ஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்தது.
  • 1973 இல் சிலி நாட்டின் ஜனாதிபதி சால்வடார் அலண்டேவைப் படுகொலை செய்தது.
  • பிரேசில், ஆர்ஜென்ரீனா, உருகுவே, பொலிவியா, நிகரகுவா எனப் பல நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசுகளை இராணுவத்தின் மூலம் கவிழ்ப்பதும், தலைவர்களைக் கொல்வதுமே அமெரிக்காவின் வேலையாக இருக்கிறது.

வெனிசுவேலாவில் தேர்தல் மூலம் மதுரோவைத் தோற்கடிக்க முடியாமல், மீண்டும் மீண்டும் தோற்றுப் போகும் மரியா கொரோனியா மச்சாடோ என்பவரை எப்படியாவது ஆட்சியில் அமர்த்த அமெரிக்கா முயல்கிறது அவருக்கு நோபல் பரிசு வாங்கித் தந்ததோடு, அவரைத் தூக்கிப் பிடிப்பதன் நோக்கம் வெனிசுவேலாவின் வளங்களைக் கொள்ளையடிப்பதுதான்.

பாலஸ்தீன ஆதரவும் அமெரிக்காவின் ஆத்திரமும்

மேலும், வெனிசுலா அரசு பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்பதும் அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து, வெனிசுவேலாவிலிருந்து இஸ்ரேல் தூதரகத்தை வெளி யேற்றியவர் மதுரோ.

பலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்து உதவி செய்து வருகிறார். இத்தகைய துணிச்சலான இடதுசாரித் தலைவரை ஒழிக்க அமெரிக்கா கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

மோடி அரசின் கோழைத்தனம்

சர்வதேச விவகாரங்களில் இந்தியா ஒரு காலத்தில் தனித்துவமான கொள்கையைக் கொண்டிருந்தது. ஆனால், இன்று மோடி அரசாங்கம் அமெரிக்காவின் காலடியில் சரணடைந்திருக்கிறது. வெனிசுவேலா ஜனாதிபதி கடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டிக்கக் கூடத் திராணி இல்லாமல் மோடி அரசு மௌனம் காக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது. அதில் ‘வெனிசுவேலா சம்பவம் கவலை அளிக்கிறது’ என்று மட்டும் சொல்கிறார்களே தவிர, அமெரிக்காவைக் கண்டிக்கிற வார்த்தை அதில் இல்லை. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கக் கூடாது என்று ட்ரம்ப் மிரட்டுகிறார். 500 சதவிகிதம் வரி போடுவோம் என்று அச்சுறுத்துகிறார். “மோடி என் நண்பர் தான், ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை” என்று ட்ரம்ப் வெளிப்படையாகச் சொல்கிறார்.

இவ்வளவு மிரட்டல்களுக்கும் பணிந்து போகும் ஒரு கோழைத்தனமான அரசாங்கமாக மோடி அரசு இருக்கிறது. இஸ்ரேலுக்கு ஆயுதம் கொடுத்து உதவும் மோடி அரசு, சர்வதேச அளவில் ஜனநாயகத்தை மிதிக்கும் அமெரிக்காவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. இது இந்தியாவின் நலன்களுக்கே மிகவும் ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.

நமது கடமை

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது இன்று எல்லை கடந்த பயங்கரவாதமாக மாறியிருக்கிறது. இன்று வெனிசுவேலாவிற்கு நடந்த கொடுமை, நாளை இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவின் ஏதோ ஒரு மாநிலத்திற்கோ கூட நடக்கலாம். ட்ரம்பின் இராணுவம், யாருடைய வீட்டிற்குள்ளும் புகுந்து யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் என்கிற நிலை வந்தால் உலகம் என்னாகும்?

ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த மூர்க்கத்தனமான போக்கை எதிர்த்து இந்தியா முழுவதும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் நாம் வலுவான குரலை எழுப்ப வேண்டும். இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராட வேண்டும். வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அமெரிக்காவின் அராஜகம் ஒழிய வேண்டும் என்கிற முழக்கம் விண்ணதிர ஒலிக்கட்டும். வெனிசுவேலா மக்களின் போராட்டத்திற்கு நமது புரட்சிகர வாழ்த்துகள்!

Tags: