இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு

-ஹர்கிசன் சிங் சுர்ஜித்

Image result for harkishan singh surjeet"
ஹர்கிசன் சிங் சுர்ஜித்தும் பிடல் காஸ்ரோவும்

இது இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு துவங்குகிற வேளை. அதன் பெருமைமிகு உருவாக்கம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் அவர்கள் 1984 ல் மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) ஜனவரி-மார்ச் இதழில் 75 வது ஆண்டு விழா குறித்து எழுதிய கட்டுரை. நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலும் பொருந்துகிற, இன்றைய  தலைமுறைக்கு பகிர்ந்து கொள்கிற கட்டுரை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 17, 1920 ல் தாஷ்கென்ட் நகரில் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கம், வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வை இங்கு செய்ய முயற்சித்துள்ளோம்.

சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி

கம்யூனிஸ்ட் கட்சி, சமூகத்தின் வெவ்வேறு வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து மாறுபடுகிற தனித்துவம் கொண்டதாகும். சமூகத்தின் பரிணாமம் குறித்த ஆய்வில், மார்க்சும் எங்கெல்சும் சமூகத்தில் நிலவுகிற பகைமைகளும், முரண்பாடுகளுமே அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டு செல்லவும் தீர்மானிக்கவும் செய்கின்றன என்றார்கள்.

“சுதந்திரமானவனும் அடிமையும், உயர்குலச் சீமானும் (patrician) பாமரக் குடிமகனும் (plebeian), நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைக் குழும எஜமானும் (guild-master) கைவினைப் பணியாளனும் (journeyman), சுருங்கக் கூறின், ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப் பகைமை கொண்டிருந்தனர். சில நேரம் மறைவாகவும், சில நேரம் வெளிப்படையாகவும், இடையறாத போராட்டத்தை நடத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்திருக்கிறது.” (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, அத்தியாயம்-1)

ஆகவே முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகள் சோசலிச நிர்மாணத்திற்கு இட்டு செல்லும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். ஆகவே வரலாற்றின் இந்த உந்து சக்தி சமூகத்தை முன்னோக்கி செலுத்துகிறது என்றார் மார்க்ஸ். இதற்கு முந்தைய எல்லா புரட்சிகளைக் காட்டிலும் சோசலிச புரட்சி குணத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும். அறிக்கை மேலும் சொல்கிறது.

“நிலப்பிரபுத்துவத்தை எந்த ஆயுதங்களால் முதலாளித்துவம் தரையில் வீழ்த்தியதோ அதே ஆயுதங்கள் இன்று முதலாளித்துவத்தை குறி பார்த்தே திரும்பி நிற்கின்றன… தனக்கு மரணத்தை கொண்டு வரக் கூடிய ஆயுதங்களை மட்டும் அது திரட்டித் தரவில்லை; அந்த ஆயுதங்களை கையாளக் கூடிய மனிதர்களையும் – நவீன தொழிலாளி வர்க்கம்-  உருவாக்கித் தந்துள்ளது”

கம்யூனிச அறிக்கை அறுதியிட்டு கூறுவது என்னவெனில், “முதலாளித்துவத்தை முகத்திற்கு நேராய் எதிர்கொள்ளும் எல்லா வர்க்கங்களின் மத்தியில் பாட்டாளிகள் மட்டுமே உண்மையான புரட்சிகர வர்க்கமாக உள்ளனர். மற்ற வர்க்கங்கள் நவீன தொழில்களின் வளர்ச்சியில் சிதைந்து இறுதியில் மறைந்து போய் விடுவார்கள்; பாட்டாளிகள் சிறப்பான, தவிர்க்க இயலாத உருவாக்கம் கொண்டவர்கள்.

நிலப்பிரபுத்துவ கட்டத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு மாறியதன் அடையாளமாய் திகழ்கிற தொழிற் புரட்சி இங்கிலாந்து நாட்டை தனது மையமாக கொண்டிருந்தது. அது அதி வேகமான வளர்ச்சியையும், புதிய பாதைகளை உருவாக்க வல்ல ஏராளமான கண்டுபிடிப்புகள் மூலம் வெவ்வேறு தொழில்களின் விரிவாக்கத்தையும் கொண்டிருந்தது. இந்த அதிவேக வளர்ச்சி தொழில், வர்த்தக விரிவாக்கத்தின் வாயிலாக பணக்கார முதலாளித்துவ வரக்கத்தின் பிறப்பிற்கு வழி வகுத்தது. இது நிலப்பிரபுத்துவ முறைமைக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியது. முதலாளித்துவம் தன்னை ஓர் முறைமையாக நிலை நிறுத்திக் கொள்கிற வழியிலே தொழிலாளி வர்க்கத்தைப் பிரசவிக்கவும் செய்தது. மார்க்சு சொல்வது போல முதலாளித்துவத்திற்கு “சவக் குழி தோண்டுகிறவர்கள்” இவர்கள். இந்த வர்க்கம், அதாவது தொழிலாளி வர்க்கம், தன்னை தனக்கான கட்சியின் கீழ்  திரட்டிக்கொள்கிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிந்து அதிகாரத்தை கைப்பற்றி மனிதரை மனிதரை சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க பாடுபடுகிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் திருப்பம்

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளி வருவதற்கு முன்பு வரை சோசலிசத்திற்கான இயக்கம் குழப்பத்தில் இருந்தது. அதாவது முதலாளித்துவ முறைமை குறித்த அதன் ஆய்வு, அதன் நோக்கங்கள், இலக்குகள் மற்றும் முதலாளித்துவ முறையை தூக்கி எறிவதற்கான வடிவங்கள், வழி முறைகள் ஆகியன பற்றிய சித்திரம் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக கருத்து முதல் வாத அணுகுமுறைகளையும், திட்ட வட்டமற்ற கருத்துக்களையும் அடித்து செல்கிற அலையாக கம்யூனிஸ்ட் அறிக்கை அமைந்தது. அது ஓர் அறிவியல்பூர்வமான இயங்கு தளத்தை சோசலிச இயக்கத்திற்கு தந்தது. மார்க்ஸ், லெனின் வர்ணித்தது போன்று ” அது அறிவுப் பெட்டகம். மூன்று வளர்ந்த நாடுகள் மானுடத்திற்கு 19 வது நூற்றாண்டில் அளித்த மூன்று மிக முக்கியமான பிரதான தத்துவ நீரோட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்து அவற்றை நிறைவு செய்கிற பணியையும் அது ஈடேற்றியது. அதாவது “ஜெர்மனியின் தூய தத்துவ இயல், இங்கிலாந்தின் தூய அரசியல் பொருளாதாரம், பிரான்சின் சோசலிசம் மற்றும் அதன் புரட்சிகர கருத்தியல்” ஆகியனவே அம் மூன்று தத்துவ நீரோட்டங்கள். மார்க்சீயத்தின் அடிப்படைக் கூறுகளில் முக்கியமானவை எவையெனில், பொருள் முதல் வாத தத்துவம், இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்று பொருள் முதல் வாதம், வர்க்க போராட்டம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் ஆகியனவாகும்.

Image result for கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகம்"

லெனின் சொல்கிறார். ” மார்க்ஸ் நமக்கு தரும்  முக்கியமான கல்வி, சோசலிச சமூகத்தை நிர்மாணிப்பதில் பாட்டாளி வர்க்கத்தின் உலகளாவிய பங்கை எடுத்துரைத்ததாகும்.” ஆகவே தொழிலாளி வர்க்கத் தலைமை என்பது புரட்சிகர தொழிலாளி வர்க்க கோட்பாட்டிற்கு அடிப்படையானது ஆகும். இது அடிப்படையில் முதலாளிகளை, விவசாயிகளை, குட்டி முதலாளிகளை முன்னிறுத்துகிற பல்வேறு கருத்தோட்டங்களுக்கு மாறுபட்டதாகும். கம்யூனிஸ்ட் அறிக்கை, முதலாளித்துவத்தை வெற்றி பெற தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்வு மிக்க, போர்க் குணம் கொண்ட, ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறது. அறிக்கையின் வார்த்தைகளில் ” கம்யூனிஸ்டுகள்… ஒரு புறம், நடைமுறையில், ஒவ்வோர் நாட்டின் தொழிலாளி வர்க்க கட்சிகளின் முன்னேறிய, உறுதி மிக்க பகுதியினர் ஆவர்; இன்னொரு பக்கம், தத்துவ கோணத்தில், பாட்டாளி வர்க்கத்தின் பெரும் திரளில், மாற்றத்திற்கான பாதை- சூழ்நிலைகள்- பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பொதுவான இறுதி விளை பொருள் ஆகியன பற்றிய தெளிவான புரிதல் கொண்டிருக்கும் பகுதியுமாகும்”. ஆளும் வர்க்கங்கள் தங்களின் சக்தியை முழுவதும் திரட்டி தங்களின் அதிகாரத்தை தக்க வைக்க வன்முறையைப் பிரயோகிக்கும் போது அதை எதிர்கொள்கிற சக்தியை கொண்டதாக தொழிலாளி வர்க்கம் தயாராக இருக்க வேண்டும் என்பதே மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் புரிதல் ஆகும். மார்க்சின் வார்த்தைகளில் “புதிய மாற்றத்திற்கான  கருவைச் சுமந்து கொண்டிருக்கிற ஒவ்வொரு சமூகத்திற்குமான  செவிலித் தாயே புரட்சி”

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரின் பங்களிப்பு, சமூகத்தை உயர்ந்த சோசலிச கட்டத்திற்கு மாற்றுவதற்கான முழுமையான கருத்தாக்கத்தை வளர்த்தெடுப்பதாக மட்டும் இல்லை; மாறாக பல்வேறு நாடுகளில் நிகழ்கிற வர்க்கப் போராட்டங்களையும் கணக்கிற் கொள்வதாக அமைந்தது. அவர்கள் பல்வேறு வர்க்கங்களின் பாத்திரத்தை- முதலாளித்துவத்திற்கு எதிரான குட்டி முதலாளிகள், விவசாயிகளின் பங்கு- ஆய்வு செய்ததோடு தொழிலாளி வர்க்கமே முதன்மையான புரட்சிகர வர்க்கம் என்பதையும் சுட்டிக் காட்டினர். இத்தகைய வலுவான அடித்தளத்தோடு அவர்கள் ” கம்யூனிஸ்ட் லீக்” ஐ துவக்கினர். (அதற்கு முன் லீக் ஆஃப் தி ஜஸ்ட்). கம்யூனிஸ்ட் அறிக்கை, கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் திட்டமாக அமைந்தது.

பிறந்தது சர்வதேச அகிலம்

தொழிலாளி வர்க்கத்தின் பெயரில் இயங்கும் பல்வேறு சக்திகளை, வளர்ந்து வருகிற தொழிற் சங்கங்களை ஒருங்கிணைத்து அவர்கள் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். அதுவே முதல் அகிலம் என்று அழைக்கப்பட்டது.

ஆகவே அதன் விதிகளில், நோக்கங்களில் ஓர் தெளிவான புரட்சிகர உள்ளடக்கத்தை இணைக்க முடியவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். முதல் அகிலம் உருவாவதற்கு முன்பே ஓர் வரலாற்றுப் பெரு நிகழ்வை உலகம் கண்டது. அதுவே பாரிஸ் கம்யூன். முதலாளித்துவத்தை தூக்கி எறிய தொழிலாளி வர்க்கம் எடுத்த முதல் முயற்சி என்று அதை அவர்கள் வர்ணித்தனர். முதல் அகிலம் 1864 முதல் 1876 வரையிலான குறைவான காலமே வாழ்ந்தது. இருப்பினும் மார்க்சீய கருத்துக்களை வெகு மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கை அது ஆற்றியது. 1889 ல் வந்த இரண்டாவது அகிலம் புரட்சிகர தத்துவத்திற்கும், திருத்தல் வாதத்திற்கும் இடையிலான பெரும் போராட்டத்தை எதிர்கொண்டது. இரண்டாவது அகிலத்தில் இருந்த சக்தி மிக்க, செல்வாக்கு மிக்க தலைமையையும் மீறி லெனின் மார்க்சீயத்தை ஏகாதிபத்திய வளர்ச்சி கட்டத்தில், புதிய சூழ் நிலைகளுக்கு ஏற்ற புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றார். ரஷ்யாவின் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (RSDLP)க்குள் எழுந்த உட் கட்சி போராட்டம் 1903 ல் கட்சி பிளவுக்கு வழி வகுத்தது. போல்ஷ்விக், மென்ஷ்விக் கட்சிகள் பிறந்தன. லெனினின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வெற்றிகரமாக சோசலிச புரட்சியை நடத்தி முடித்தது. இதுவே 1917 ல் நடந்தேறிய அக்டோபர் புரட்சி.

காலனி நாடுகளில் எதிரொலி

இந்த காலம் முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களுக்குள்ளேயே சுருங்கி நின்றது. காலனி நாடுகளுக்கு அது விரிவடையவில்லை. அக்டோபர் புரட்சிக்குப் பின்னரே காலனி நாடுகளில் சோசலிச சிந்தனைகள் பரவத் துவங்கின. முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டம், உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என்கிற லெனினின் ஆய்வு அவரை ஓர் முடிவுக்கு இட்டுச் சென்றது. சோசலிச புரட்சிகள் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் மட்டுமின்றி ஏகாதிபத்திய நாடுகளின் கண்ணி பலவீனமாக உள்ள, ஒப்பீட்டளவில் பின் தங்கிய பொருளாதாரம் கொண்ட நாடுகளிலும் வெற்றி பெறும் என்பதே அது. லெனின் மதிப்பீட்டில், உலகம் முழுவதும் புரட்சி ஏக காலத்தில் நடந்தேற வேண்டியதில்லை; மாறாக தனித்தனி நாடுகளிலும் அது வெற்றி பெறலாம். அக்டோபர் புரட்சி இக் கருது கோளை நடைமுறையில் நிரூபித்தது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் உள்ளடக்கத்தை செழுமை செய்கிற வகையில், தொழிலாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கம் என்றாலும் மற்ற வர்க்கங்களுக்கும் புரட்சியில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் – அவை சிதைவதாலும், அடிமட்ட உழைப்பாளிகளோடு இணைய வேண்டியிருப்பதாலும்- ஏற்படுகிறது; சொத்தின் மீதான அவர்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகிய உள்ளுணர்வுகள் தடுத்தாலும் இது நடந்தேறும் என்ற முடிவுக்கு லெனின் வந்தார்.

அக்டோபர் புரட்சி முடிந்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னர் மூன்றாவது சர்வதேச அகிலம் பிறந்தது. பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள், குழுக்கள் அகிலத்தில் இடம் பெற்றன.

ரஷ்யப் புரட்சியின் வெற்றி உலகம் முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உத்வேகம் அளித்தது. லெனின் வார்த்தைகளில்,

“தொழிலாளர்களுக்கு முக்கியமானது எதுவெனில், இரண்டு போக்குகளின் கோட்பாடுகளை வித்தியாசப்படுத்தி பார்ப்பதாகும். அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் முதலாளித்துவம் ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராடுகிறது. நம்மை பொருத்த வரையில், ஒவ்வொரு வகையிலும் மற்ற எவரையும் விட நாம் வலிமையானவர்கள். நாம்தான் ஒடுக்குமுறைக்கு எதிராக மிக வலிமையோடு, சற்றும் இடைவெளியின்றி போராடுகிறவர்கள். ஒடுக்குமுறையின் எதிரிகள். அடிமை தேசத்து முதலாளிகள் தங்களின் சொந்த முதலாளித்துவ தேசியத்திற்காக நிற்பவர்கள். நாம் அதற்கு எதிரானவர்கள்”.

காலனி நாடுகளின் மக்கள் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும் போது தேச விடுதலைக்காக போராடும் போது அவர்களின் நம்பகமான நண்பனை, தோழமையை புரட்சியில் கண்டனர். அக்டோபர் புரட்சி உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் தேசிய உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை விசிறி விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வளரத் துவங்கின. 1918 ல் இருந்து 1931 க்குள்ளாக கிட்டத் தட்ட 12 நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிறந்தன. இதில் துருக்கி, இந்தோனேசியா, சீனா, இந்தியா, ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் அடக்கம்.

இந்தியாவில் விதைகள்

Image result for bala gangathara thilagar history in tamil"
பால கங்காதர திலகர்

லெனின் இந்திய நிலைமைகளை ரஷ்யப் புரட்சிக்கு முன்னரே கூர்ந்து கவனித்து வந்தார். 1908 ல் பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மும்பை பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, இந்திய புரட்சிகர வர்க்கம் அரசியல் நடவடிக்கையோடு இந்திய அரசியல் களத்தில் பிரவேசித்துள்ளது என்று வர்ணித்தார்.

உலகம் முழுவதும் இருந்த புரட்சிக்காரர்கள் போன்றே இந்தியப் புரட்சியாளர்களும் ரஷ்ய புரட்சியால் ஈர்க்கப்பட்டனர். ஜெர்மனி, ஆப்கானிஸ்தான் மற்றும் பல நாடுகளில் இருந்த இவர்களில் பலர் மாஸ்கோ சென்றனர். லெனின் அவர்களை சந்தித்தார். தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தார். தனது ஆதரவினையும் தெரிவித்தார். ஜெர்மனி, ஆப்கானிஸ்தானில் அக்டோபர் புரட்சிக்கு முன்னரே இருந்த இந்திய புரட்சியாளர்கள் சான் பிரான்சிஸ்கோவை தலைமையகமாக கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக 1913-14 லிலேயே கத்தார் கட்சியை துவக்கியிருந்தனர்.

அதற்கும் முன்னதாக 1905-07 ல் தலைமறைவாக இருந்த புரட்சியாளர் வட்டம் லண்டனில், பின்னர் பாரீசில் செயல்பட்டது. வெளி நாட்டில் வாழ்ந்த இவர்கள் போல்ஷிவிக் கட்சியோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தினர்.

முதல் உலகப் போர் உலகம் முழுவதும் புதிய எழுச்சியை உருவாக்கியது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. இந்த போரின் போது இந்திய இராணுவத்திற்குள் இந்த கத்தார் கட்சியினர் ஊடுருவி புரட்சிக்கு திட்டமிட்டனர். அவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயினர். பலர் சிறைச் சாலைக்கு அனுப்பப்பட்டனர். மற்றவர்கள் அந்தமானில் இருந்த இருண்ட செல்களில் அடைக்கப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் கூட்டத்தில் திரண்ட பெரும் திரள், மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இருந்த கோபத்தின் வெளிப்பாடு. இப்படி வளர்கிற சவாலை நசுக்கவே அமைதியான கூட்டத்தின் மீது அடக்குமுறையை ஏவி விட்டது. பெரும் கொலையையும் நிகழ்த்தியது.

Image result for m n roy"
எம்.என்.ராய்: Manabendra Nath Roy (21 March 1887 – 26 January 1954)

பிந்தைய காலங்களில் இலட்சியங்களில் இருந்து விலகிச் சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டவராயினும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் எம்.என்.ராய் செய்த பங்களிப்பை நாம் மறுதலிக்க இயலாது. இந்தியாவில் இயக்கத்தின் உருவாக்கத் தலைவர்களில் ஒருவரான எம்.என்.ராய் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவர் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற் குழுவிற்கு அதன் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனுஷிலான் சமிதி  என்ற பரவலாக அறியப்படாத புரட்சிகர குழுவில் இருந்த ராய் ஆயுதங்கள் சேகரிப்பதற்காக மெக்சிகோ சென்றார். அப்போது இந்திய புரட்சியாளர்களுக்கு ஆயுதப் பஞ்சம் இருந்தது. மெக்சிகோவில்தான் சோசலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அதன் உறுப்பினர் ஆனார். பிறகு அதன் செயலாளர் ஆகவும் உயர்ந்தார். இவரின் தலைமையில்தான், இவர் கம்யூனிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பிறகு அந்த சோசலிச கட்சி, மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. தோழர் முசாபர் அகமது ” நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்” என்ற நூலில், ராய் மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக  சென்றாலும் ” மாஸ்கோவில் அவருக்கு கிடைத்த இதமான வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் காரணம் அவர் இந்தியர் என்பதும் மார்க்சிஸ்ட் என்பதுமே ஆகும். இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தில், தேசிய, காலனியப் பிரச்சினைகள் குறித்த லெனினின் துவக்க நிலை நகல் மீது விவாதங்கள் நடந்தேறுகிற முடிவு இருந்ததால் இந்திய மார்க்சிஸ்ட் ஆன எம்.என்.ராய் இருப்பு அம்மாநாட்டில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது” என்கிறார். 

ஏற்கெனவே குறிப்பிட்டது போல, இவையெல்லாம் கம்யூனிச இயக்கத்தின் உலகளாவிய துவக்க காலங்களாக இருந்தன. ஐரோப்பா கண்டம் விதி விலக்கு ஆகும். இந்த கட்சிகள் எதற்கும் வெகு சன அடித்தளம் அப்போது இல்லை. ஓர் இயக்கத்திற்கான தெளிவான கருத்தாக்கமும் இல்லை.

விவசாயிகளும், தொழிலாளர்களும் அதிகமாக இருந்த நிறைய காலனி நாடுகள் வளர்ச்சி பெறாமல் இருந்தன. ஒப்பீட்டளவில் இந்தியா மற்ற காலனி நாடுகளை விட மேம்பட்டதாக இருந்தது. பிரிட்டனின் போர்த் தேவைகள், இந்திய முதலாளிகளை சில உற்பத்தி தளங்களில் இருந்த தொழிற் சங்கிலிகளில் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் ரயில்வே, தகவல் தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்புத் துறைகளில் பிரிட்டன் முதலீடு செய்தது.

கம்யூனிஸ்ட் கட்சி உதயம்

img

இப் பின்னணியில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி முளை விடுமென்ற நிலை இருந்தது. இந்தியக் கிளை தாஷ்கென்ட் நகரில் அக்டோபர் 17, 1920 ல் உருவானது. முசாபர் அகமது தனது மேற்கூறிய நூலில்,

“எம்.என்.ராய்… அவர்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தாஷ்கென்ட் நகரில் துவங்க முன் முயற்சி எடுத்தார்.”

அந்த முதல் கூட்டத்தின் நிகழ்ச்சிப் பதிவேட்டில்,

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 17, 1920 அன்று துவக்கப்பட்டது”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் முகமது ஃஷாபிக் அவர்களை செயலாளர் ஆகத் தேர்ந்தெடுத்தனர். அடுத்த கூட்டம் டிசம்பர் 15, 1920 ல் நடைபெற்றது.

இவ்விரு கூட்டங்களின் நிகழ்ச்சிப் பதிவேடுகள் தாஷ்கென்ட் நகரின் ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. எனினும் இது குறித்து சந்தேகிக்கிறவர்கள் உள்ளனர். வெளி நாட்டில் துவங்கப்பட்டது என்று சொல்லாவிட்டாலும், இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் இலக்குகளை எட்ட அக் கிளை இந்தியர்களால் உருவாக்கப்பட்ட வரலாறை அழித்து விட முடியாது. இயக்கத்தின் துவக்க காலங்களில் கம்யூனிச கருத்துக்களை வெகு சனங்கள் மத்தியில் பரப்புவதே முதன்மையான நோக்கமாக இருந்தது. இக் கட்சியின் முயற்சிகளால்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகள், இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் – அகமதாபாத், கயா மற்றும் அடுத்து நடந்த மாநாடுகளில்-  சுற்றுக்கு விடப்பட்டன. முழு சுதந்திரம் என்கிற இலக்கை நோக்கி முன்னேறவும், அதற்கான முயற்சிகளை முனைப்போடு காங்கிரஸ் எடுக்கவுமான நிர்ப்பந்தத்தை இந்த அறிக்கைகளின் சுற்று ஏற்படுத்தியது.

முசாபர் அகமது எழுதுகிறார்.

“டிசம்பர் 1921ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்க்கையில் ஓர் முக்கியமான நிகழ்வு நடந்தேறியது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை அச்சிடப்பட்டு முதல் முதலாக சுற்றுக்கு விடப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் தனது 36 வது அமர்வை குஜராத் அகமதாபாத் நகரில் நடத்தியது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின்  முதல் அறிக்கை பிரதிநிதிகள் மத்தியில் வழங்கப்பட்டன… இந்த அறிக்கை மாஸ்கோவில் அச்சிடப்பட்டது. மனபேந்திர நாத் (எம்.என்.ராய்) அதனை எழுதியவர்”

அந்த அறிக்கை இவ்வாறு பிரகடனப்படுத்தியது.

“காங்கிரஸ் புரட்சிக்கு தலைமை தாங்குவது எனில், இந்தியாவின்  அடித்தளத்தையே அசைக்க வேண்டுமெனில், நீங்கள் வெறும் ஆர்ப்பாட்டங்கள், கடும் கூச்சல்கள் என்ற தற்காலிக மகிழ்ச்சிகளோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. தொழிற்சங்கங்களின் உடனடி கோரிக்கைகளை உங்களின் சொந்த கோரிக்கைகளாக முன் வையுங்கள். விவசாயி சங்கங்களின் திட்டத்தை உங்கள் சொந்த திட்டமாக முன் வையுங்கள். எந்த தடைகளாலும் காங்கிரஸ் நிற்காது என்ற காலம் விரைவில் வரும். பொருளியல் முன்னேற்றத்திற்காக உணர்வு பூர்வமாக போராடும் ஒட்டு மொத்த மக்களின் வெல்லற்கரிய சக்தி உங்களுக்கு பின்னால் அணி வகுத்து நிற்கும்” (இந்தியா டுடே, ரஜினி பாமி தத், இரண்டாவது புதுப்பிக்கப்பட்ட பதிப்பு)

ஓர் சின்ன கருவை சுற்றி கட்சி உருவாகியிருந்த நேரத்தில் இதுவெல்லாம் சாதாரண பணி அல்ல.

எல்லா நாடுகளிலுமே கம்யூனிஸ்ட் கட்சிகள் துவங்கப்பட்ட காலங்களில் அவற்றில் உறுப்பினர்கள் குறைவாக இருந்தனர். சிறு குழுக்களாகவே இருந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இதே நிலைதான். அதன் துவக்க மாநாட்டில் கிடடத்தட்ட 12 பேர் மட்டுமே இருந்தார்கள். ஆனால் அந்த கட்சியே பின்னாளில் ஓர் புரட்சியை அங்கு நடத்தி முடித்தது.

கம்யூனிசம் ஈர்த்த முஹாஜிர்கள்

இதே காலத்தில் ஹிஜ்ரத் இயக்கம் தொடங்கி இருந்தது. பல மொஹாஜிர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி துருக்கி நோக்கி சென்றனர். துருக்கியில் நுழைய முடியாததால் அவர்களில் பலர் தாஷ்கென்ட்டிற்கு சென்றனர்.

ஹிஜ்ரத் இயக்கம் கிலாஃபத் இயக்கத்தில் இருந்து முகிழ்த்ததாகும். துருக்கியில் தனது முயற்சிகளுக்காக இஸ்லாமியர்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரிட்டிஷ் அரசு தவறியதால் இந்தியா தங்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பொருத்தமான நாடு இல்லை என்ற உணர்வு இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் துவங்கினர். பட்டாபி சீதாராமய்யா தனது “இந்திய தேசிய காங்கிரசின் வரலாறு” என்ற நூலில் 18000 இஸ்லாமியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதாக குறிப்பிடுகிறார்.  சுயமாய் வேறு தேசங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் (ஹிஜ்ரத்) முஹாஜிர்கள் என்று அழைக்கப்பட்டனர். சில முஹாஜிர்கள் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்தாலும் அவர்கள் துருக்கிக்கு ஆதரவாக அங்கு போய் போர் புரிவது என்பதை விரும்பினார்கள். துருக்கியில் நுழைய முடியாத முஹாஜிர்கள் துர்கிஸ்தான் (இப்போதைய உஸ்பெக்கிஸ்தான்) சென்றனர். அவர்களில் பலர் தாஷ்கெண்டிலும், மாஸ்கோவிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.

கிழக்கு உழைப்பாளிகளுக்கான பல்கலைக் கழகத்தில் (University of Toilers of the East) படிப்பை முடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முஹாஜிர்கள் இந்தியாவிற்கு திரும்புவது என்று முடிவெடுத்தனர். அவர்களில் 10 பேர் தாஷ்கென்ட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்து தலைமறைவாக கட்சி பணியாற்ற புறப்பட்டனர். இந்தியாவிற்குள் நுழையும் போது நான்கு பேர் – மீர் அப்துல் மஜீத், ரபீக் அகமது, ஹபீப் அகமது, பெரோசுதீன் மன்சூர்- கைது செய்யப்பட்டனர். காவல்துறை கண்காணிப்போடு அவர்கள் பெஷாவருக்கு அனுப்பப்பட்டார்கள். இன்னொரு மூன்று பேர் கொண்ட முஹாஜிர் குழு சித்ரால் எல்லை அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களும் பெஷாவருக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் மற்ற சில முஹாஜிர்களும் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மீது வழக்குகள் போடுவதில் போய் முடிந்தது. முதலாவது, இரண்டாவது பெஷாவர் சதி வழக்குகள் அவை.

இவ் வழக்குகள் 1922-24 காலத்தில் ஓர் செய்தியை தெரிவித்தன. தொழிலாளி வர்க்கமும், அதன் புரட்சிகர கட்சியும் இந்திய அரசியல் களத்தில் இறங்கி விட்டது என்பதே அது. இக் கட்சியின் தாக்கத்தால் பல்வேறு அச்சு இதழ்கள் மக்கள் மத்தியில் சுற்றுக்கு வந்தன. அவை லாகூர், பம்பாய், கல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வெளி வந்தன. சற்று தெளிவின்மையோடு இருந்தாலும் அறிவியல் பூர்வமான சோசலிசத்தை அந்த இதழ்கள் முன்வைத்தன. இது மாநிலங்களில் பல குழுக்கள் உருவாவதற்கான உந்துதலை தந்தது. கான்பூர் சதி வழக்கு அடுத்து போடப்பட்டது. முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே, சௌஹத் உஸ்மானி மற்றும் பலர் இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.

வளர்ந்த கதை

டிசம்பர் 1925 ல் கம்யூனிஸ்ட்டு குழுக்களின் மாநாடு சிங்கார வேலர் தலைமையில் கான்பூரில் நடைபெற்றது. அம் மாநாட்டின் தீர்மானம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கம் பம்பாயை தலைமையகமாக கொண்டு அமைவதாக அறிவித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட்டுகளை முடக்கி செயல்பட விடாததால் ஓர் வெளிப்படையான மேடை ஒன்று தொழிலாளர் விவசாயிகள் கட்சி (Workers and Peasants Party) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஏற்கெனவே 1920 ல் உருவாகியிருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் அந்த அமைப்பில் பெரும் பங்களிப்பை நல்க வேண்டியிருந்தது. இதே காலத்தில் தேசத்தின் சில பகுதிகளில் விவசாயி அமைப்புகள் உருவாகின. பின்னர் 1935 ல் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பும் (AISF) பிறந்தது. அது தோன்றி சில ஆண்டுகளிலேயே கம்யூனிஸ்ட்டுகளின் செல்வாக்கு வரம்பிற்குள் வந்தது.

ஆனாலும் ஓர் மத்திய கட்டமைப்பை கொண்ட கட்சி மீரட் கைதிகள் விடுதலையான பின்னர் 1933 ல்தான் அமைந்தது. கம்யூனிஸ்டுகளை ஒடுக்குவதற்காக மீரட் சதி வழக்கு போடப்படடாலும், அது கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் கருத்துக்களை பரப்புரை செய்வதற்கான வாய்ப்பாக அமைந்து விட்டது. கட்சி தனக்கென்று ஓர் அறிக்கையை வெளியிட்டு 1934 ல் கம்யூனிச அகிலத்தோடும் இணைந்து கொண்டது.

துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் இயக்கம் பல் முனை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வர்க்க எதிரிகளிடம் இருந்து தொடர்ச்சியான தாக்குதல்கள் இருந்தன. மட்டுமின்றி கட்சிக்கு உள்ளேயும் பல்வேறு வழுவல்கள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்பட்டன. மார்க்சும் எங்கெல்சும் தங்களது காலத்திலும் இது போன்ற கருத்துக்களை எதிர்த்து போராடினார்கள். இதற்கு பின்னர் திருத்தல்வாதம், இடது அதி தீவிர வாதம் மற்றும் அந்நிய போக்குகள் ஆகியவற்றையும் கம்யூனிச இயக்கம் எதிர்கொண்டது.

இந்தியாவிலும் இத்தகைய சவால்களை இயக்கம் சந்திக்க வேண்டியிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டி இயக்கத்தை நசுக்க முனைந்தது. சோசலிசம் சம்பந்தமான எதையும் அச்சிடவும், சுற்றுக்கு விடவும் கடும் தடைகள் விதிக்கப்பட்டாலும் அத்தகைய கருத்துகளின் பரவலை கட்டுப்படுத்த இயலவில்லை. ஆனாலும் அத்தகைய பிரசுரங்கள் அரியதாய் இருந்ததால் இங்கு கிடைத்தவை கூர்மையான கருத்துக்களை கொண்டவையாக இல்லை. இதனால் குழப்பங்களும் ஏற்பட்டது என்றாலும் கொள்கை உறுதி, அர்ப்பணிப்பின் காரணமாக தொழிற்சங்க இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றினர்.

இந்தியாவில் கம்யூனிச இயக்க வளர்ச்சியில் இன்னும் இரண்டு காரணிகள் முக்கியப் பங்காற்றின. முதலாவதாக, தீவிர வாத பாதையை தெரிவு செய்திருந்த புரட்சியாளர்கள் அதை விடுத்து கம்யூனிஸ்ட்டுகளின் படையில் இணைந்தனர். தீவிரவாத வழிமுறைகள் தீர்வைத் தராது என உணர்ந்து, கம்யூனிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சியிலும் சேர்ந்தனர். இவர்களில் அனுசீலன், ஜூகாந்தர், பகத் சிங்கின் இந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் கட்சி மற்றும் சில குழுக்கள் இடமிருந்து ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு. இதனால் இந்திய சுதந்திர இயக்கத்தின் புரட்சிகர பாரம்பரியத்தின் சிறந்த அமசங்களை கம்யூனிஸ்ட் கட்சி உள்வாங்க முடிந்தது.

inraiya india

மத்திய தலைமை, கட்டமைப்பு ஆகியன அமைந்த சில ஆண்டுகளுக்குள்ளேயே கம்யூனிஸ்ட் கட்சி தேச விடுதலைப் போராட்டத்தில் ஓர் முக்கிய பங்கை ஆற்ற வேண்டியிருந்தது. அது போல அறிவியல் பூர்வமான சோஷலிச சிந்தனைகளையும் பரப்ப வேண்டியிருந்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமானதாக இருந்தாலும் இந்திய கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சிக்கு நல்கிய பங்களிப்பை மறக்க இயலாது. 1926 லிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு இடைவிடா தொடர்பில் இருந்தனர். அவர்களில் பலர் நேரடியாகவே இயக்கப் பணிகளில்  இணைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ரஜனி பாமி தத். பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான அவர் எழுதிய “இந்தியா டுடே” பிரிட்டிஷ் இந்தியா பற்றிய, அதன் சுரண்டல் குறித்த அப்பழுக்கற்ற புரிதலுக்கு உதவியது. பிரிட்டன் கட்சி அங்கு பயின்ற மாணவர்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அம் மாணவர்களில் பலர் இந்தியா திரும்பியதும் இயக்கத்தில் இணைந்தனர். பிரிட்டன் கட்சி உறுப்பினர்கள் பலர் (கம்யூனிச அகிலத்தால் அனுப்பப்பட்டு) இங்கே வந்து உதவி புரிந்தார்கள். சிலர் புனைப் பெயர்களில் வந்தார்கள். தொழிற்சங்கங்களில், இதர அமைப்புகளில் பணி ஆற்றினார்கள். சிலர் பிரிட்டிஷ் அரசால் கைதுக்கும் கூட ஆளானார்கள். இப்படி வந்தவர்களில் பென் பிராட்லி, பிலிப் ஸ்பிராட், ஜார்ஜ் அல்லிசன் ஆகியோரும் உண்டு. சிலர் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இத்தகைய போக்குகள் அனைத்தும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை முன்னெடுத்து சென்றன.

ரஜனி பாமி தத்

சோதனைகளும் வேதனைகளும்…

கம்யூனிச இயக்கம் இக் காலத்திற்கு பின்னர் பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் கடக்க வேண்டியிருந்தது. 1930 களின் பெரும் பகுதியும், 40 களின் துவக்கமும் தலை மறைவு காலமாக கழிந்தது. 1942 ல்,  பாசிச எதிர்ப்பு போர் காலத்தில்தான், சட்ட பூர்வ இயக்கமாக இது மாற முடிந்தது. சுதந்திரத்திற்கு பின்னரும் கூட புதிய ஆட்சியாளர்கள் (இந்திய முதலாளிகள்) கரங்களில் கடும் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் இயக்கத்தைப் பணிய வைக்க நடந்த முயற்சிகள் எதுவும் இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை.

1920 களில் இயக்கம் துவங்கப்பட்ட காலத்தோடு ஒப்பிடுகையில் நிறைய தூரம் பயணித்து விட்டோம். இயக்கத்தின் இன்றைய வயது, இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், இனக் குழுக்களை கொண்ட தேசத்தில் வரலாற்றின் அளவுகோலில் நீண்ட காலம் இல்லை. இத்தகைய பல்வேறு குழுக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டுவதில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பங்கை ஆற்றியுள்ளது.

இயக்கம் அந்நிய வர்க்க தாக்கங்களை, திரிபுகள், வழுவல்களை எதிர்கொள்ளும் போது கடுமையான தவறுகளை செய்துள்ளது. உதாரணமாக, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதலாளிகளின் பங்களிப்பு பற்றி லெனின் மதிப்பீட்டை கணக்கில் கொள்ளாதது. இதனால் தொழிலாளர் வர்க்க கட்சியின் சுயேட்சையான பங்கை பின்னுக்குத் தள்ளி சில நேரங்களில் வலதுசாரி நிலைகளுக்கு இரையான சூழ்நிலைகள் ஏற்பட்டன. இரண்டாம் உலகப் போர் முடிவில் திருத்தல் வாத பள்ளியின் தாக்கத்திற்கு ஆளானது.

அதற்கு பிந்தைய காலத்தில் வெகுசன எழுச்சி இருந்தது. கம்யூனிஸ்டுகள் அதில் குறிப்பிடத் தக்க பங்கை ஆற்றினர். இந்திய கப்பற்படை கைதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கப்பற்படை புரட்சியும், அதற்கு தொழிலாளர் மத்தியில் கிட்டிய ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருந்தது. வெகுசன எழுச்சி அலைகள் முதலாளிகளை அச்சுறுத்தியது. இது தொழிலாளி வர்க்கத்தின் கைகளுக்கு புரட்சியின் தலைமையை மாற்றிவிடும் என்று அஞ்சினர். கம்யூனிஸ்ட்டுகள் அந்த நேரத்தில் கடைப்பிடித்த நடைமுறைத் தந்திரங்களை இங்கு விரிவாக ஆய்வு செய்யாவிட்டாலும் மற்ற நாடுகளின் அனுபவங்களோடு ஒப்பிட முடியும். தேசிய விடுதலைப் போராட்டத்தில் எந்தெந்த நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை வகிக்கவில்லையோ அங்கெல்லாம் அவர்கள் சோஷலிச பாதைக்கு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை. முதலாளிகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் இக் கடமை மிக கடினமாக மாறி உள்ளது.

இரண்டாவது கட்சி காங்கிரசுக்குப் பின்னர் நாமே இடது அதி தீவிர வாதத்திற்கு இரையாகி பெரும் விலையையும் கொடுத்தோம். நாம் அதை சரி செய்ய முயற்சித்த போது இன்னொரு வகையான, வலது அபாயம் எழுந்தது. வலது அபாயத்திற்கு, அதாவது செல்வாக்கு மிக்க தலைமையின் வழிக்கு, எதிரான போராட்டம் கட்சிக்குள் 10 ஆண்டுகள் நடந்தேறியது. கடைசியில் அது கட்சி பிளவுபடுவதில் முடிந்தது. பிந்தைய நிகழ்வுகள் நமது நிலை சரியென நிரூபித்தன.

தலை நிமிர்வோடு

பிளவுக்குப் பின்,  அதாவது சி.பி.ஐ (எம்) உருவான பின்பான காலத்தில் நாம் சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொண்டோம். வெவ்வேறு நேரங்களில்  சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நமது கட்சி மீது தாக்குதல் தொடுத்தன. ஆனால் நாம் உறுதியாக சொந்த கால்களில் நின்றோம். எந்தவொரு கட்சியின் உத்தரவுகளையும் ஏற்க மாட்டோம்; எங்கள் பாதையை எங்கள் நாட்டில் உள்ள திட்ட வட்டமான யதார்த்தங்கள், நிலைமைகளைப் பொருத்து வகுத்துக் கொள்வோம் என்றோம். தத்துவார்த்த விவாதங்கள், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெரும் இயக்கங்களோடு முட்டி நிற்றல், சர்வதேச அரங்கில் நமக்கு ஏற்பட்ட தனிமை ஆகியவற்றோடு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உள் நாட்டில் நாம் நடத்திய போராட்டங்களும் இணைந்து கொண்டன. இவையெல்லாம் கட்சியை கசப்பான சவால்களை எதிர்கொள்ள பயிற்றுவித்தன.  இத்தகைய காரணங்களால்தான் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் வீழ்ந்த போதும், பல கம்யூனிச அரசுகள் அலைகளில் சிக்கி கவிழ்ந்த போதும் சி.பி.ஐ (எம்) உறுப்பினர்கள் ஊசலாடவில்லை. குழப்பம் அடையவில்லை. இந்தியப் புரட்சியை முன்னெடுத்து செல்கிற உறுதியோடு தலை நிமிர்ந்து நின்றனர்.

-தமிழில்: க.சுவாமிநாதன்
ஒக்ரோபர் 22, 2019

Tags: