அகண்ட இஸ்ரேலை உருவாக்க வாகனங்களாகுமா அரபு நாடுகள்?

ஹைஹான்

இஸ்ரேலுடனான இயல்பாக்க ஒப்பந்தங்கள் பலஸ்தீனத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பஹ்ரைனும் (United Arab Emirates and Bahrain) இஸ்ரேலுடன் அண்மையில் செய்து கொண்ட இயல்பாக்க ஒப்பந்தங்கள் தொடர்பில் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ (Middle East Eye) பத்திரிகை பலஸ்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனிய்யாவுடன் (Ismail Haniyeh) கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது. அக்கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்களையும் அப்பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.

அவரது பதில்களில் ‘எந்தவொரு அரபு நாடும் இஸ்ரேலுடன் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்தமும் இறுதியில் அந்த நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். இஸ்ரேலை அங்கீகரிக்கும் அரபு நாடுகளுக்கு வரலாறு எந்த கருணையும் காட்டாது. அத்தோடு பலஸ்தீனத்தை காட்டிக் கொடுக்கும் அரேபியர்களுக்கு மன்னிப்பும் கிடையாது.

(இஸ்ரேலுடன் உறவை நாடும்) அவர்களை விட இஸ்ரேலிய தலைவர்கள் குறித்து நாங்கள் நன்கறிவோம். அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள எங்கள் சகோதரர்களிடம் அந்த ஒப்பந்தங்களின் விளைவாக அவர்கள் இழப்புகளை சந்திப்பர் என்று நாங்கள் கூற விரும்புகிறோம், ஏனெனில் இஸ்ரேலின் ஒரே ஆர்வம் ஈரானுக்கு அருகில் ஒரு இராணுவ மற்றும் பொருளாதார மையம் ஒன்றை அமைப்பதேயாகும். அவர்கள் உங்கள் நாட்டை (ஈரானுக்கு எதிரான) ஒரு தளமாக பயன்படுத்துவார்கள். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலிய ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.

சியோனிஸமானது ஒரு விரிவாக்கத் திட்டம். இதன் நோக்கம் ஒரு அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதுதான். எமிரேட்ஸ் அல்லது பஹ்ரைனியர்கள் அல்லது சூடானியர்கள் இத்திட்டத்திற்கான வாகனங்களாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. இது தொடர்பாக வரலாறு எக்கருணையும் காட்டாது, மக்கள் இந்த துரோகத்தை மறக்க மாட்டார்கள் மனிதாபிமான சட்டம் இதை ஒருபோதும் மன்னிக்காது என்பதை மறந்து விடாதீர்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தங்களில் சவூதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான எமிரேட்ஸும் பஹ்ரைனும் கையெழுத்திட்டிருக்கின்றன. அதனால் சவூதி அரேபியாவும் தம் நட்பு நாடுகளின் வழியைப் பின்பற்றத் தயாராக இருக்கக் கூடும் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.

இதேவேளை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ​வாஷிங்டனுக்கான சவூதி தூதராக பணியாற்றிய இளவரசர் பந்தர் பின் சுல்தான், ‘பலஸ்தீனிய தலைவர்கள் சியோனிச ஆட்சியுடன் தீர்வு காணும் வாய்ப்புகளை தவற விட்டு, தொடர்ந்து தோல்வி கண்டு வருகின்றனர்’ என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருக்கின்றார்.

சவூதி அரசுக்கு சொந்தமான அல்-அரேபியா (al-Arabiya TV) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்கும் இக்கருத்துக்கள், பலஸ்தீனிய அரசு உருவாக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலை அங்கீகரிக்க மறுக்கும் மன்னர் சல்மானின் (King Salman) கொள்கையை மென்மையாக்குவதற்கான அறிகுறி எனக் கூறப்படுகின்றது. பந்தர் பின் சுல்தான் இளவரசர் முஹம்மது பின் சல்மானின் (Mohammed bin Salman) நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற கருத்தும் நிலவவே செய்கின்றது. இதேவேளை பந்தர் பின் சுல்தானின் மகளும் மகனும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சவூதியின் தூதுவர்களாக பணியாற்றுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் பலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, தேசிய ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட போட்டி பலஸ்தீனிய பிரிவான ஃபத்தாவுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தைகளின் விளைவாக மேற்குக் கரையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஹமாஸ் கண்டறிந்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலுடனான பலஸ்தீனிய அதிகார சபையின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேற்குக் கரையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக ‘மிடில் ஈஸ்ட் ஐ’ பத்திரிகைக்கு பலஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் ‘மிடில் ஈஸ்ட் ஐ’ பத்திரிகையுடனான கலந்துரையாடலில், பலஸ்தீனிய விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) க்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 1993 இல் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஹானிய்யா, ‘அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலஸ்தீனிய அதிகார சபையை உருவாக்கிய ஒஸ்லோ சமாதான முன்னெடுப்பு உரிய முறையில் செயல்படுத்தப்படாததால் சியோனிச குடியேற்றங்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டது என்ற ஹமாஸின் நிலைப்பாடு சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஒஸ்லோ உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த நாள் முதல் அதன் சொந்த அழிவின் விதைகளை நாட்டியது. இந்த உடன்படிக்கை ஆரம்ப நாள் முதல் பலஸ்தீனர்களுக்கு தோல்வியாக இருந்தது, ஏனெனில் இது ஒரு அரசியல் ஒப்பந்தம் அல்ல, ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் மாத்திரமேயாகும்.

இஸ்மாயில் ஹனிய்யா

பிரதமர் இட்ஷாக் ராபினும் பலஸ்தீன் விடுதலை இயக்க தலைவர் யாஸிர் அரபாத்தும் மரணித்ததோடு ஒஸ்லோ உடன்படிக்கையும் உயிரிழந்து விட்டது. ராபின் 1995 இல் ஒரு இஸ்ரேலிய தீவிர தேசியவாதியால் படுகொலை செய்யப்பட்டார். 2004 இல் அரபாத்தின் மரணம் நஞ்சூட்டப்பட்டதால் ஏற்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டினர்.

ஒஸ்லோ உடன்படிக்கையை வடிவமைத்த அபு மஸென் (பாலஸ்தீனிய அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ்) ஒஸ்லோ உடன்படிக்கையை கைவிடுவதாக இப்போது அறிவித்துள்ளார், எனவே ஆரம்பத்தில் இருந்தே இது தொடர்பாக நாங்கள் எடுத்த தீர்மானம் சரி என்பதையே இது நிரூபிக்கின்றது. இந்த பேரழிவை பலஸ்தீன் அதிகார சபை முன்கூட்டியே உணர்ந்திருந்தால் நாங்கள் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்க முடியும். அது ஆரம்பத்தில் முறியடிக்கப்பட்டிருந்தால், எங்கள் மக்கள் அனுபவித்த துன்பங்களில் இருந்து அவர்களை எம்மால் காப்பாற்றி இருக்கலாம். இருப்பினும் தாமதமாகவேனும் உணரப்பட்டிருப்பது நல்லதே.

மேலும் பலஸ்தீன அதிகார சபைத் தலைவர் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய மூன்று காரணிகள் வழிவகுத்துள்ளன. ஒன்று அபு மஸென் முன்நிபந்தனைகள் விதிக்க எதுவும் இல்லாத கையறு நிலை. இரண்டு அமெரிக்கர்களாலும் இஸ்ரேலியர்களாலும் தனிப்பட்ட முறையில் அவமதிக்கப்பட்டதாக அவர் உணருதல். மூன்று பி.எல்.ஓ வை ஒதுக்கி விட்டு இஸ்ரேலுடன் சமாதானம் செய்ய அரபு லீக்கின் முடிவு ஆகியவையே அவையாகும்.

வேறு விதமாகக் கூறினால், இஸ்ரேலியர்கள் அரேபியர்களுடன் சமாதானம் செய்யப் பாலமாக பலஸ்தீனிய அதிகார சபை இனி இருக்கப் போவதில்லை, பலஸ்தீன் அதிகாரசபை அதன் அரபு சகோதரர்களால் அரசியல் மற்றும் நிதி ரீதியாக கைவிடப்பட்டதாக உணரப்பட்டுள்ளது. இந்த காரணிகளே ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டறிய வேண்டும் என்ற நிலைக்கு அபு மஸெனை இட்டுச் சென்றுள்ளது, எனவே ஹமாஸின் ஒத்துழைப்புக்கான முன்முயற்சிக்கு அவர் நேர்மறையான பதில் அளித்திருக்கின்றார்.

ஹமாஸும் ஃபத்தாஹ்வும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பலஸ்தீனிய தேர்தல்களில் ஒரு கூட்டுப் பட்டியலை முன்வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. 2006 வாக்கெடுப்புக்குப் பின்னர் காஸா ஹமாஸின் கட்டுப்பாட்டில் வந்ததைத் தொடர்ந்து ஹமாஸுக்கும் பத்தாஹ்வுக்கும் இடையே ஏற்பட்ட ஆயுத மோதலால் இவ்விரு பிரிவுகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிழந்தனர். இப்புரிந்துணர்வு நடவடிக்கை ஃபத்தாஹ்வுக்கு வரப்பிரசாதமாக இருக்கும், ஏனெனில், பல ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்துள்ள நிலையில் தேர்தலில் முற்றாக அழிக்கப்படும் ஆபத்தில் இருந்து அது தன்னை காத்துக் கொள்ளும் ஓர் அறிய சந்தர்ப்பமாக அமையும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை பலஸ்தீன் மற்றும் அல் குத்ஸின் உரிமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இஸ்மாயீல் ஹானிய்யா, பலஸ்தீனின் சொந்தக்காரர்கள் நாமே. பலஸ்தீனியப் பகுதியை ஆக்கிரமிக்கும் சியோனிச தீவிரவாதிகள் தங்கள் மூதாதையர்கள் வசித்த நிலங்களுக்குத் திரும்புவதாகக் கூறுகின்றனர். அந்நிலம், அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் எங்கள் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு நிலத்தைப் பற்றி பேசுகிறோம், எங்கள் அல்-குத்ஸைப் பற்றி பேசுகிறோம், இது முஸ்லிம்களின் முதல் கிப்லா (தொழுகையின் திசை). முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலக யாத்திரை மேற்கொண்ட இடம். சியோனிஸ்டுகள் ஐரோப்பாவிலிருந்து இடம்பெயர்ந்து வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்நிலத்துக்கு சொந்தக்காரர்களான பலஸ்தீனியர்கள் தொடர்பிலேயே நாங்கள் பேசுகிறோம்.

நாங்கள் ஒருபோதும் எங்கள் தாயகத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் அல்லது அதன் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக் கொள்ள மாட்டோம். அதை விடுவிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம், மேலும் எங்களால் இப்போது விடுவிக்க முடியாது என்றால் எதிர்கால தலைமுறையினர் விடுவிப்பதற்காக விட்டுவிடுவோம்.

ஒஸ்லோ உடன்படிக்கையின் அடிப்படையில் கூட இஸ்ரேல் அது அமைதியைப் பின்தொடரும் ஒரு ஆட்சி அல்ல என்பதை நிரூபித்து விட்டது. சியோனிச இயக்கத்தின் தன்மை பலத்தின் மூலம் அச்சுறுத்தி காரியம் சாதித்தலாகும். இஸ்ரேல் மனித உரிமைகளையோ அல்லது சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளையோ மதிக்கும் ஒரு நாடல்ல, பலத்தைக் கொண்டு எதுவும் செய்யலாம் என்பது அதன் எண்ணம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

தினகரன்
2020.10.23

Tags: