சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

பி. கோவிந்தபிள்ளை
ஏகேஜி ஆராய்ச்சி & கல்வி மையம்

சிங்காரவேலர் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில், மார்க்சிய – லெனினிய இயக்கத்தில், என்றும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் நட்சத்திரம் என்றே கூறலாம். அவர் 1860-ம் ஆண்டு பிப்ரவரி, 18-ம் தேதியன்று பிறந்தார். சிங்காரவேலரின் வாழ்விலும், சிந்தனையிலும், அவரது பங்களிப்பிலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்களை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ், சிந்திப்பதை இறுதியாக நிறுத்திக் கொள்வதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து, நாசிசத்தையும் பாசிசத்தையும் சோசலிச – ஜனநாயக சக்திகள் வெற்றி கொள்வதைக் கண்ட பின்பு 1946 பிப்ரவரி 11-ம் நாள் அவர் தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அதாவது மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்களிடையே கார்ல் மார்க்ஸ்  (1818 – 1883), பிரடெரிக் எங்கெல்ஸ் (1820 -1895) ஆகியோரின் காலத்தால் என்றும் அழியாத கருத்துக்கள் உருவாகி, வெற்றியை நோக்கி நடைபோட்ட காலத்தில் சிங்காரவேலர் வாழ்ந்தார் என்று கூறுவது பொருத்தமாக அமையும். சிங்காரவேலர் மறைந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அதாவது 1948ஆம் ஆண்டிற்குள், இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்து, 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதும், சீனாவில் புரட்சி வெற்றி பெற்றதுமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. சிங்காரவேலர் போராடிய லட்சியங்கள், அதற்காக அவர் அடைந்த துயரங்கள் ஆகியவை நிறைவேறியதை சுட்டிக்காட்டுவதாகவும் அவை அமைந்தன. மேலும் அவரது தீர்க்க தரிசனம் என்பது அரசியல் விடுதலைக்கு அப்பால் சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் நோக்கியதாக அமைந்தன. தென் இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இயக்கத்தின் முதல் முன்னோடியாக அவர் விளங்கியதோடு, அதிலிருந்து அவர் பெற்ற அனுபவங்களை இந்தியாவில் மார்க்சிய – லெனினிய இகக்கம் தோன்றுவதற்கும் அர்ப்பணித்தார். சிங்காரவேலருக்கு முன்பாகக் கம்யூனிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தோற்றம் குறித்து ஒரு பார்வையை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கம்.

சிங்காரவேலருக்கு முன் இந்திய கம்யூனிசத்தின்  தோற்றம்

கம்யூனிச சித்தாந்தத்தின் அடிநாதமாக விளங்கும் சமத்துவம், மனிதநேயம் என்பவை மனித சமூகத்தின் தோற்றத்தைப் போன்றே மிகப் பழமையானவையே ஆகும். குறிப்பாக வர்க்க பேதமற்ற புராதன கம்யூனிச சமுதாயம்  உடைந்து நொறுங்கிய பிறகு இதுதான் நிலைமை. மார்க்ஸூம் எங்கல்ஸூம் தங்களது ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யில் புராதன சமூக வரலாற்றினைத் தொடர்ந்த காலத்தில் வரலாறு என்பது ‘வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’ என்று சுட்டிக் காட்டியதோடு, வர்க்கங்கள் தோன்றியது குறித்த விஞ்ஞான பூர்வமான பார்வையை அவர்கள் முன்வைத்து, மேம்படுத்தப்பட்ட உற்பத்தி முறையுடன் கூடவே ஏற்பட்ட மனித குல முன்னேற்றம் என்பதும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலின் மீது மனிதர்களின் ஆதிக்கமும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு கட்டத்தைக் குறிப்பிடுவது ஆகும் என்றும் எடுத்துக் கூறினர். இந்த முன்னேற்றமானது சமத்துவமற்ற நிலையையும், சுரண்டலையும், பெரும்பாலோர் துன்புறுவதையும் அதிகரிப்பதாகவே அமைந்தது. எனவே அடித்தட்டு மக்கள் காணாமல் போன புராதன சமூகத்தை நினைத்து ஏங்கி நின்றது என்பது இயற்கையான ஒன்றே ஆகும். கம்யூனிசத்தின் வித்துக்கள் அடங்கிய இந்தச் சமூகம் குறித்த புராதன கதைகளுக்கும், நாட்டுப்புறப் பாடல்களுக்கும் வழிவகுப்பதாகவும் இந்த ஏக்கம் அமைந்திருந்தது. உலகளாவிய இத்தன்மையில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரிடையே வளர்ந்து மேலோங்கி நின்ற இத்தகைய கருத்துகள் முதலில் வெளிப்படையாகத் தென்படாமல் போனபோதிலும், காலப்போக்கில் படிப்படியாக மேல் தட்டு வர்க்கத்தினரின் புராணங்கள், இலக்கியங்கள், எழுத்துகள், ஆகியவற்றிலும் இடம் பெறத் துவங்கின.

மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமான சமூகத்திலிருந்தே சோசலிசம், கம்யூனிசம் போன்ற நவீன கருத்துக்கள் தோன்றின என்பதை ஒப்புக்கொண்ட பி.சி.ஜோஷி, கே.தாமோதரன் ஆகியோர் நமது புராதனகால கதைகளில் இக்கருத்துக்கள் வடிவமற்ற, புராதன வடிவங்களில் தென்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கூறுவதாவது:

கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூகமானது நான்கு வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டபோதே இந்தியாவில் மனிதநேயம் என்பது நிலவி வந்தது என்பது ஒன்றும் விசித்திரமான விசயமல்ல. ரிக்வேதத்தின் பின்னாளைய கவிஞர்களில் சிலரும், உபநிடதங்களை உருவாக்கிய தத்துவஞானிகளில் முன்னோடிகள் சிலரும் புராதன காலத்தில் மேய்ச்சலை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த பழங்குடி சமூகத்தினரின் ஒற்றுமை சிதைந்து போனது கண்டு தங்களது கவலையை வெளிப்படுத்தியதோடு, மக்களிடையே அதிகரித்து வரும் சமத்துவமற்ற தன்மைக்கு எதிராகவும் தங்களது குரலை எழுப்பியுள்ளனர். மனிதகுலத்தின் ஒன்றுபட்ட தன்மை, ஒற்றுமை ஆகிய குறிக்கோள்களை முன்னிறுத்திய அவர்கள் அன்பையும் கருணையையும், நீதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினர். காலப்போக்கில் இவைதான் மதரீதியான வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களாக மாறின. தங்களது சொந்த நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, மக்களின் மனங்களை ஆட்டிப் படைப்பதற்குச் சுரண்டும் வர்க்கங்கள் மதத்தைப் பயன்படுத்திக் கொண்ட அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் நிலவும் அநீதி, சமத்துவமற்ற தன்மை ஆகியவற்றுக்கு எதிராக மதத்தைப் பயன்படுத்தினர். நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், மனித நேயத்திற்காகவுமான போராட்டங்கள் மத்திய காலத்திலிருந்து நவீன சகாப்தம் வரையில் மதத்தின் பெயரால் தொடர்ந்து நடைபெற்றே வந்தன. உதாரணமாக, 16 மற்றும் 17-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கபீர், சைதன்யர், குரு நானக் போன்ற பக்தி இயக்கத்தைச் சேர்ந்த துறவிகள் சாதி அடிப்படையிலான, மத அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு எதிராகப் போராடியதோடு ‘மனிதர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகளே!’ என்ற கோசத்தின் கீழ் மனிதர்கள் அனைவருக்கிடையேயும் சமத்தும் தேவை என்று போராடி வந்தனர்.    (மார்க்ஸ் இந்தியாவிற்கு வருகிறார் – முன்னுரை – 1975)

நிலப்பிரபுத்துவ உறவுகளை மாற்றியமைத்து, அதனிடத்தில் வந்தமர்ந்த நவீனத்துவமும் முதலாளித்துவமும் தான் இந்தியாவில் 19-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் காலம் என்று பின்னாளில் குறிப்பிடப்பட்ட எழுச்சிக்கு வழிவகுத்தன. மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பல்வேறு கருத்துக்களுமே,  மறுமலர்ச்சி காலத்தில் உருவான பல்வேறு கருத்துக்களுமே, கம்யூனிச தத்துவத்திற்கான விதைகளைக் கொண்டதாகவே இருந்தன. மறுமலர்ச்சி காலத் தலைவர்கள் சில பண்டைய இந்தியாவின் புராதன கதைகளிலிருந்து உத்வேகம் பெற்ற அதே நேரத்தில் வேறு சிலர் தங்களது மனித நேய கருத்துக்களை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த தீவிர ஜனநாயகவாதிகள் மற்றும் சோசலிஸ்டுகளிடமிருந்தும் பெற்றனர்.

இந்திய மறுலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் ராஜா ராம் மோகன் ராய்(1772 – 1833) 1789-ம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற முதலாளித்துவப் புரட்சியினால் பெரிதும் கவரப்பட்டவராக இருந்தார். எனினும் அவரது கூர்மையான அறிவும் மனித நேயமும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தாண்டி சோசலிச கருத்துக்களின் மீதும் அவரை ஆர்வம் கொள்ளச் செய்தது. அதன் விளைவாகத்தான் 1833-இல் அவர் பிரிட்டனுக்கு சென்றிருந்தபோது கற்பனாவாத சோசலிஸ்டான ராபர் ஓவன் -ஐ (1771 – 1858) சந்தித்தார். தூரதிர்ஷ்டவசமாக இந்தச் சந்திப்பிற்குப் பிறகு உடனேயே அவர் உயிர் நீத்ததன் விளைவாக ஓவன் பற்றியோ அவரது கருத்துக்கள் பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் அவர் விட்டுச் செல்லவில்லை.

சோசலிச கருத்துக்களைப்  பாராட்டிப் பேசிய மற்றொரு புகழ் பெற்ற வங்காளி “வந்தே மாதரம்” கவிதையை எழுதிய நாவலாசிரியர்  பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (1838 – 94) ஆவார்.

இவை அனைத்தையும் விட புகழ்மிக்க வார்த்தைகளாக அமைந்தது சுவாமி விவேகானந்தரின் (1863 – 1902) பட்டவர்த்தமான அறிவிப்பே ஆகும். 1888-ம் ஆண்டில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்: “அது ஒரு சிறந்த அமைப்பு என்பதனால் மட்டுமே நான் ஒரு சோசலிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. ஒன்றுமே இல்லாமல் இருப்பதை விட அரை வயிற்றுக் கஞ்சி எவ்வளவோ மேல்” (தொகுப்பு நூல்கள் – தொகுதி 6 பக். 381-82)

ஒரு கருத்து என்ற வகையில் சோசலிசத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அதற்கு விளக்கம் கூறுவதற்கும் விவேகானந்தருக்கு அவருக்கேயுரிய காரணங்கள் இருக்கலாம். நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். அது ஒரு பொருட்டல்ல. இதில் குறிப்பிடத்தக்க உண்மை என்னவெனில் அந்த நாட்களில் கிடைத்த அறிவை வைத்துக் கொண்டு, வரலாறு குறித்த விவேகானந்தரின் விளக்கங்களையும் வைத்துப் பார்க்கையில் சோசலிசம் குறித்து அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் பலவீனங்களை, குறைந்தபட்சம் அதை நாம் அடைவதற்கு முன்பாகவே, புரிந்து கொள்வதில் தனது காலத்தையும் விஞ்சியவராக அவர் விளங்குகிறார். அடுத்து வித்தியாசமான ஒன்றாக விளங்குவது என்னவெனில் அவர் சொல்வது நிச்சயமாக சரியாக இல்லை என்றபோதிலும் கூட, இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தைத் பொருத்திப் பார்க்க மேற்கொண்ட அவரது முயற்சி ஆகும்.

அவர் இவ்வாறு எழுதியிருந்தார்: “எனினும் ஒரு காலம் வரும். அப்போது சூத்திரர்களின் வர்க்கம், அவர்களது சூத்திரத் தன்மை உடனேயே எழுச்சி பெறுவார்கள். இப்போது வைசியர்கள் அல்லது கூசத்திரியர்களின் பிரத்தியேகமான குணங்களைப் பெற்று பெரிய மனிதர்களாக சூத்திரர்கள் தற்போது மாறி வருகிறார்களே அதைப்போன்று அல்ல; மாறாக, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சூத்திரர்கள் அவர்களுக்கே உரிய சூத்திர தன்மையுடனும், பழக்கவழக்கங்களுடன் வைசிரியர்களாகவோ அல்லது சத்திரியர்களாகவோ மாறாமல், சூத்திரர்களாகவே இருந்து – ஒவ்வொரு சமூகத்திலும் மேலாதிக்கத்தைப் பெறுவார்கள். இந்தப் புதிய சக்தி தோன்றுவதற்கான முதல் வெளிச்சம் ஏற்கனவே மேற்கத்திய உலகத்தின் மீது மெதுவாகக் கவியத் தொடங்கிவிட்டது. இந்தப் புத்தம் புதிய அம்சத்தின் இறுதி வடிவம் எப்படி பிரதிபலிக்கக் கூடும் என்று சிந்தனை உடையோர் இப்போதே யோசிக்கத் துவங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற சமூகப் புரட்சிக்கு சோசலிசம், அராஜக வாதம், நிகிலிசம் போன்ற இதரப் பிரிவுகளும் முன்னணிப் படைகளாக விளங்கப் போகின்றன. (தொகுப்பு நூல்கள் – தொகுதி 4 – பக் 467 -68)

முதலாவது அகிலமும் இந்தியாவும்

இத்தகைய தனிப்பட்ட கருத்துகள் மற்றும் பிரதிபலிப்புகளைவிட மிக முக்கியமானதாக அமைவது 1864-இல் கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு தீவிரவாதக் குழு கார்ல் மார்க்சை தொடர்பு கொண்டு, அவர் தோற்றுவித்த சர்வதேச உழைக்கும் மக்கள் கழகத்தில் (முதலாவது அகிலம்) சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் செய்ததாகும். துரதிர்ஷ்டவசமாக இக்குழுவின் பெயரோ, அதன் தன்மையோ முற்றிலுமாகத் தெரியவராமலே போய்விட்டது. 1871-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு நடவடிக்கைகள் குறித்த பத்திரிக்கைச் செய்தியில் இருந்துதான் இது குறித்த தகவலை நம்மால் பெற முடிகிறது. இந்தப் பொதுக்குழுதான் பாரீஸ்கம்யூன் வீழ்ச்சி அடைந்தது குறித்து விவாதித்தது; அது குறித்து மார்க்ஸ் உருவாக்கிய புகழ்பெற்ற ஆவணத்தை ஏற்றுக் கொண்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது. 1871 ஆகஸ்ட் 19-ம் தேதிய ‘ஈஸ்டர்ன் போஸ்ட்’ என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இடதுசாரி சார்பு பத்திரிக்கைதான் கல்கத்தா குழுவினரின் கடிதம் குறித்து தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதன் ஒரு பகுதி கீழ் வருமாறு:

“மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கமானது முற்றிலுமாக வெறுக்கப்பட்டு வருகிறது. வரி விதிப்பானது அபரிமிதமாக இருப்பதோடு அத்தகைய வருவாயில் பெரும்பகுதி அதிகாரவர்க்கம் என்ற செலவுமிக்க அமைப்பை நிலைநாட்டுவதற்கே உறிஞ்சப்பட்டு விடுகிறது. மற்ற இடங்களில் நடப்பதைப் போலவே, (மிக மோசமான நிலையில் உள்ள) செல்வத்தை உருவாக்கும் தொழிலாளர்களின் நிலைக்கு முற்றிலும் நேர்விரோதமான முறையில் ஆளும் வர்க்கங்களின் ஆடம்பரச் செலவுகள் அச்செல்வத்தை வீணடிக்கின்றன. இதற்கென ஒரு பிரிவு மட்டும் துவக்கப்படுமேயானால், அகிலத்தின் குறிக்கோள்கள் பெரும்பகுதி மக்களை இந்த அமைப்பிற்குள் கொண்டு வரும் வாய்ப்பும் இருக்கிறது.”

கல்கத்தா தோழர்களின் கோரிக்கையை அகிலத்தின் பொதுக்குழு மிகுந்த கவனத்துடன், தீவிரமாகப் பரிசீலித்தது என்பதை இக்கூட்ட நடவடிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் தொழிலாளர்களை எவ்வாறு அணி திரட்ட வேண்டும் என்பது குறித்தும், தத்துவார்த்த கல்வியின் அவசியம் குறித்துமான வழிகாட்டுதல்களுடன் பொதுக்குழு கல்கத்தா தோழர்களுக்குப் பதிலளித்திருந்தது. இந்தக் குழுவைப் பற்றி மேலும் அதிகமான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், கம்யூனிச கருத்துக்கள் மட்டுமின்றி, ஐரோப்பாவில் அக்கருத்தை வெற்றி பெறச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்தாபன ரீதியான நடவடிக்கைகளும்கூட இந்தியாவில் இருந்த தீவிரவாத குழுவினருக்குத் தெரிய வந்திருந்தது என்பது தெளிவாகிறது.

ஹர் தயாள் – பிள்ளை – பட்டேல்

பல்வேறு இந்தியர்களின் இது போன்ற கருத்துக்களையும் எடுத்துக் கூறி விட முடியும். ஆனால் மார்க்ஸ் பற்றியும் சோசலிசத்தைப் பற்றியும் இந்தியாவில் முழுமையாக எடுத்துக் கூற 1912-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருந்தது. முதலில் அவ்வாறு எழுதியவர் மகத்தான புரட்சிகர தேசியவாதியான லாலா ஹர் தயாள் (1884 – 1939) ஆவார். அந்நாட்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மாத இதழான ‘மாடர்ன் ரிவ்யூ’வின் 1912 மார்ச் இதழில் அவர் கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது கருத்துக்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். அவரது கட்டுரையின் தலைப்பு “கார்ல் மார்க்ஸ் நவீன யுக ரிஷி”.

ஒரு இந்தியனால், ஒரு இந்திய இதழில் மார்க்ஸ் பற்றி எழுதப்பட்ட கட்டுரை என்பது ஹர் தயாளுடையதுதான் எனில் ஸ்வதேசாபிமானி கே.ராமகிருஷ்ண பிள்ளை (1878 – 1916)யின் மார்க்ஸின் சுயசரிதைதான், இந்திய மொழி ஒன்றில் வெளியான சுயசரிதை ஆகும். இந்த இரண்டையும் மேலோட்டமாகப் படிக்கும்போது ராமகிருஷ்ண பிள்ளை தனது நூலை லாலா ஹர் தயாளின் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார் என்பது தெரியவரும். ஏனெனில் ஹர் தாயாளின் கட்டுரை மார்ச் மாதத்தில் வெளிவந்த அதே நேரத்தில், பிள்ளையின் நூல் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. ஹர் தயாளின் கட்டுரை தலைப்பான கார்ல் மார்க்ஸ், “நவீன யுக ரிஷி” என்று கூறியது போல அவரது கட்டுரையானது கதாநாயகரான கார்ல் மார்க்ஸின் தனிப்பட்ட மேன்மையையும், அவரது துயரங்களையும் தியாகங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைந்தது என்றே கூறலாம். மார்க்ஸின் தத்துவம் மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஹர் தயாளுக்கு பலவகையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. மேலும் பி.சி.ஜோஷி சுட்டிக் காட்டுவது போன்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று, மார்க்சியவாதிகள் பலரையும் சந்தித்து, மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்த பல நூல்களையும் படிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்த போதிலும், மார்க்சியம் குறித்த அவரது புரிதல் என்பது குறைபாடு உடையதாகவே இருந்தது. இதற்கு மாறாகக் திருவாங்கூர் மகாராஜாவின் ஊழல் மற்றும் உறவினர்களைச் செழிப்பாக்கும் போக்குகளை எவ்வித அச்சமுமின்றிச் சுட்டிக் காட்டியதன் விளைவாகத் திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்தே வெளியேற்றப்பட்ட ஸ்வதேசாபிமான ராமகிருஷ்ண பிள்ளையோ இந்தியாவிற்கு வெளியே எங்கும் சென்றவரல்லர்.

மகாராஜாவையும் அவரது அடிவருடிகளையும் கோப்படுத்திய செய்தித்தாளின் பெயர்தான் ஸ்வதேசாபிமானி. அதே பெயரால்தான் அவரும் அழைக்கப்பட்டார். மார்க்சிய கருத்துக்களின் செறிவான கருத்தையும், மார்க்ஸின் முக்கியமான நூல்களையும் சுட்டிக்காட்டுவதாக ராமகிருஷ்ண பிள்ளையின் நூல் அமைந்திருந்தது. சமஸ்தானத்திலிருந்து அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தனது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகளிலும், வேறு சில பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளிலும்கூட சோசலிசத்தை விளக்கும் வகையிலும் அதை நியாயப்படுத்தியுமே எழுதி வந்தார், போதிய தகவல்கள் கிடைக்காததால் இக்கட்டுரைகளில் ஒரு சில குறைகளைக் கண்டுபிடிக்க முடியுமே தவிர, ராமகிருஷ்ண பிள்ளை – சோசலிசத்தை ஏற்றுக் கொண்டு அதை ஆதரிப்பவராகவே செயல்பட்டார். இவை அனைத்துமே மகத்தான அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்தவை என்பதை நினைவில் கொள்ளும்போது இந்த இரு பெரும் மனிதர்களின் நினைவைப் போற்றுவது மிகவும் பொருந்தமானதே ஆகும்.

மார்க்ஸ் குறித்த ஆய்வுகளில் ஹர் தயாள் மற்றும் ராமகிருஷ்ண பிள்ளை ஆகியோருக்குப் பிறகு முயற்சி செய்தவர் குஜராத்தைச் சேர்ந்த அம்பாலால் பட்டேல் ஆவார். அவர் 1916-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், அதாவது அக்டோபர் புரட்சிக்கு சரியாக ஓர் ஆண்டிற்கு முன்னால் ‘நவஜீவன் மற்றும் சத்யா’ என்ற குஜராத்தி மொழி இதழில் மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார். இக்கட்டுரையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் ஆகியோரின் புகழ்பெற்ற அறைகூவலான ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்: நீங்கள் இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறெதுவும் இல்லை: ஆனால் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் உண்டு!’ என்பது பிரதானமாக எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் முன்னுரையில் அவர் எழுதியிருந்தார்:

“1847-ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு ஏழை மக்களை சுரண்டுவதை நியாயப்படுத்துவதற்கான தத்துவஞானிகளின் முயற்சிகள் வீணாகத்தான் போயின”

(குறிப்பு: கம்யூனிஸ்ட் அறிக்கை 1848ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட போதிலும், அதற்கு ஓர் ஆண்டிற்கு முன்பே அது எழுதி முடிக்கப்பட்டிருந்தது)

புரட்சிக்குப் பிறகு

1917-ம் ஆண்டின் மகத்தான அக்டோபர் புரட்சிக்குப் பிறகு இத்தகைய சோசலிச, கம்யூனிச கருத்துக்களை மேலும் வலுவாகப் பரவத்துவங்கின. ‘ஆதி பராசக்தி’ போன்ற பாரம்பரியமான கருத்துக்களைப் பயன்படுத்தியபோதிலும், தமிழ்மொழியின் நவீனயுக கவிஞர்களில் மகத்தானவரான சுப்ரமணிய பாரதி இப்புரட்சியை வரவேற்று – போற்றி கவிதை பாடினார். விடுதலைப் போராட்டத்திலும், பகுத்தறிவு இயக்கத்திலும் அப்போது தீவிரமாக ஈடுபட்டு வந்த பெரியார் ஈ.வே.ராவும்கூட சோசலிசம், புரட்சி ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்பவராக மாறினார். இவர்கள் இருவருமே சிங்காரவேலரின் நெருங்கிய நண்பர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிங்காரவேலர் விடுதலை இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். சூரத் நகரில் (1907) நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற இரு குழுக்களாகப் பிளவுபட்டது. மிதவாதிகளின் குழுவிற்குக் கோபாலகிருஷ்ண கோகலே, சர் ஃபிரோஸ் ஷா மேத்தா மற்றும் பலர் தலைவர்களாக இருந்தனர். தீவிரவாதிகள் குழுவிற்குப் பால் -லால் – பால் என்றறியப்பட்ட முப்பெரும் தலைவர்கள், அதாவது பாலகங்காதர திலகர். லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். இயற்கையாகவே சிங்காரவேலர் இந்தத் தீவிரவாதிகளின் குழுவைச் சார்ந்தவராகவே இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சியாளர் பாலகங்காதர திலகரை அன்றைய பர்மாவில் (இப்போது மியான்மார்) இருந்த மாண்டலே சிறையில் நாடு கடத்தியபோது, மும்பை மற்றும் தூத்துக்குடி நகர்களில் இருந்த தொழிலாளர்கள் திலகர் கைது செய்யப்பட்டதையும் நாடு கடத்தப்பட்டதையும் எதிர்த்து ஓர் அரசியல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் சிங்காரவேலரை பின்பற்றியவர்கள்தான் இந்த வேலைநிறுத்தத்தை முன்நின்று நடத்தினார்கள். வி.ஐ.லெனின், தொழிலாளர்களின் இத்தகைய அரசியல் நடவடிக்கையானது இந்தியத் தொழிலாளி வர்க்கம் முதிர்ச்சி அடைந்து வருகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

அக்டோபர் புரட்சியினால் உற்சாகம் பெற்று, 1919-ம் ஆண்டில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவாக்கப்பட்டதைக் தொடர்ந்து, மற்ற இடங்களைப் போலவே இந்தியாவிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்தத் துவக்க கால முயற்சிகளில் குறிப்பிடத்தக்க இரண்டு முயற்சிகள் என்பது சோவியத் ஒன்றியத்தின் தென் பகுதியில் இருந்த தாஷ்கெண்ட்டிலும் மற்றொன்று கான்பூரிலும் மேற்கொள்ளப்பட்டது. தாஷ்கெண்ட் நகரில் மேற்கொள்ளப்ட்ட முயற்சி வி.ஐ.லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தூண்டுதலுக்கு இணங்க செயல்பட்ட எம்.என்.ராயினால் வழிகாட்டப்பட்டதாகும். இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாய இயக்கத்தையும் வளர்த்தெடுப்பது பற்றிய பிரச்சனையில் எம்.என்.ராய் சிங்காரவேலருடன் தொடர்ந்து கடிதங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தாஷ்கெண்ட் மாநாட்டில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபானி முகர்ஜி நேரடியாகச் சென்னைக்கு வந்து சிங்காரவேலரைச் சந்தித்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் இந்தியாவில் அதன் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்தக் காலப்பகுதியில் சிங்காரவேலர் தேசிய இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார் என்பதும், 1922-இல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவராக உருப்பெற்ற எஸ்.ஏ.டாங்கேயை அவர் இந்தக் கயா மாநாட்டில்தான் சந்தித்தார்.

அவருடனும் மாநாட்டு பிரதிநிதிகளாக வந்திருந்த இதர கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் இணைந்து அந்த கயா காங்கிரஸில் இந்தியத் தேசிய காங்கிரஸை மேலும் தீவிரமானதொரு  அமைப்பாக மாற்றும் முயற்சியாக அணிதிரட்டப்பட்டதொரு முகாமை சிங்காரவேலர் உருவாக்கினார்.  ‘முழுமையான விடுதலை’ என்பதே அதன் இலட்சியம் என்று காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதை வற்புறுத்தும் வகையில் இந்த மாநாட்டில் இக்குழுவினர் பிரசுரங்களையும் விநியோகித்தனர். இந்த விசயத்தைப் பொறுத்தவரையில் அப்போது காங்கிரஸ் கிட்டத்தட்ட நடுக்கத்துடனேயேதான் இருந்தது. மாண்டேகு – செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் பிரிட்டனின் தலைமையின் கீழ் மேலாதிக்கமான இடம் என்ற விசயங்களுக்கு இடையே அன்றைய காங்கிரஸ் இயக்கம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, அதன் நடவடிக்கைகள் முழுவேகத்தில் செயல்படத் துவங்கின, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வேன்கார்ட்’ (முன்னணிப்படை) என்ற இதழ் வெளிநாட்டில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்டது. என்.என்.ராயின் நூலான ‘மாற்றத்தை நோக்கி இந்தியா’ என்ற நூல் முதல்முறையாக இந்தியப் பின்னணியில் மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளைச் செயல்படுத்த முற்பட்டது. மகத்தான தோழரான முசாபர் அகமது, ஷெளகத் உஸ்மானி, நளினி குப்தா, அபானி முகர்ஜி போன்றவர்கள் தாஷ்கெண்ட் மாநாட்டின் அறைகூவலை ஏற்று, கல்கத்தா, சென்னை, மும்பை போன்ற பல்வேறு நகரங்களிலும் சட்டவிரோதமான ஆரம்பக் கட்சிக் கிளைகளை உருவாக்கினர். 1920-ம் ஆண்டில் இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முதல் அகில இந்திய அமைப்பான அகில இந்தியத் தொழிற் சங்க காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

சிங்காரவேலரின் இந்துஸ்தான் லோபர் – இசான் கட்சி 1923-ம் ஆண்டில் பேரணி ஒன்றை நடத்தி பொதுக்கூட்டத்தையும் நடத்தி, மே தினத்தைக் கடைப்பிடித்த முதல் இந்தியத் தொழிற்சங்கமாகும்

என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும். லேபர் – கிசான் கெஜட் என்று ஆங்கில இருவார இதழையும் தொழிலாளர் என்ற வார இதழையும் அவர் நடத்தத் துவங்கினார். வலுவான சோசலிச உணர்வு கொண்ட தீவிர காங்கிரஸ்காரர் என்று சிங்காரவேலர் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியிருந்தார். அநேகமாக 1925-ம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்டுகளின் அகில இந்திய மாநாட்டிற்கு அவர் தலைமை வகித்தபோதுதான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக ‘ஞான ஸ்நானம்’ பெற்றார் என்றும் கூடக் குறிப்பிடலாம். எஸ்.ஏ.டாங்கேயுடன் இந்தக் கான்பூர் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்றவர்கள் ஆகியோருக்கு எதிராகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வழக்கு ஒன்றையும் ஜோடித்தது. சிங்காரவேலரும் கைது செய்யப்பட்டதோடு, வன்முறையின் மூலம் பிரிட்டிஷ் அரசை தூக்கி ஏறிய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த விளக்கியதைப் போல கான்பூர் மாநாட்டின் முக்கிய நோக்கம் என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களையும் ஒன்றுபடுத்தி, அவைகளை ஒன்றுபட்டதொரு கட்சியாக மாற்றுவது என்பதே ஆகும். பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த புகழ் பெற்ற சக்லத் வாலா இந்த மாநாட்டிற்குத் தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழ் பலருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மாபெரும் தோழரான முசாபர் அகமது அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் அல்மோராவில் சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று வந்ததால் பங்கேற்க முடியவில்லை. எனினும் இந்த மாநாட்டிற்கு தனது ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் நன்கொடையாக அவர் ரூ.30 அனுப்பியிருந்தார். அந்த நாட்களில் அது மிகப் பெரிய தொகையாகும். வரவேற்புக் குழுவின் தலைவராக ஹசரத் மோகானி இருந்தார். தவிர்க்க இயலாத காரணகங்களால் சக்லத் வாலா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. எனினும் வாழ்த்துச் செய்தியையும் தனது ஆதரவினையும் அவர் அனுப்பியிருந்தார். அவர் பங்கேற்காத நிலையில் மாநாட்டிற்குத் தலைமை ஏற்கச் சிங்காரவேலர் தேந்தெடுக்கப்பட்டார். 1925-ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 28 வரை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தலைமை உரையில் சிங்காரவேலர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று துணிவுடன் அறிவித்தார். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்த மாநாட்டை நடத்துவதற்கு முன்முயற்சி எடுத்த சத்ய பக்த், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட கருத்துக்களுடன் மாறுபட்டு நின்ற நிலையில் மாநாட்டை விட்டு மட்டுமின்றி கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்தே வெளியேறினார்.

தாஷ்கெண்ட் மாநாட்டிற்குப் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது அணி திரட்டும் முயற்சியாகக் கான்பூர் மாநாடு விளங்கியது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்தப் கான்பூர் மாநாட்டினை முன்முயற்சி எடுத்து நடத்தியது சத்ய பக்த் என்ற துணிச்சலான பத்திரிக்கையாளர் ஆவார். நாணயமானவராக இருந்த போதிலும் மார்க்ஸிய – லெனினிய தத்துவம் மற்றும் நடைமுறையில அனுபவம் மிக்கவராக அவர் விளங்கவில்லை. எஸ்.ஏ. டாங்கேயின் முதல் நூலான ‘காந்தியும் லெனினும்’ என்ற நூலைப் பார்க்கும்போது, அவரது தத்துவார்த்த நிலைப்பாடும்கூட தெளிவாக இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. அவர் நடத்தி வந்த ‘சோசலிஸ்ட்’ இதழ் இந்தியாவில் தொழிலாளி வர்க்க இயக்க வளர்ச்சியின் வரலாற்றில் ஓர் அங்கமாக இடம் பெற்ற போதிலும், காந்தியம், சோசலிசம் ஆகியவற்றின் குழப்பமான கலவையாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கான்பூர் மாநாடு தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று கூறி வருகிறது. தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாட்டைப் போல் இல்லாமல், கான்பூர் மாநாடு இந்திய மண்ணிலேயே நடைபெற்றது என்பதுதான் அவர்களது வாதம். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ கம்யூனிஸ்ட் அகிலத்தால் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்டு தாஷ்கெண்ட் நகரில் நடைபெற்ற மாநாடுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்க காங்கிரஸ் என்று வலியுறுத்துகிறது.

தோழர் முசாபர் அகமது எழுதிய ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தோற்றமும்’ என்ற நூல் இது குறித்த நிலைபாட்டைத் தெளிவாக விளக்குவதோடு. தாஷ்கெண்ட் மாநாட்டிற்கான தனது ஆதரவை பலப்படுத்தியது. இன்றைய நோக்கத்திற்கு இந்த சச்சரவிற்குள் இதற்கு மேலும் நாம் போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் கான்பூர் மாநாடு நிச்சயமாக ஒரு மைல்கல் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

இப்போது நாம் சற்றே பின்னோக்கி போய் சமூக சீர்திருத்தவாதியாகவும், தீவிர காங்கிரஸ்காரருமாக இருந்த சிங்காரவேலர் முழுமையானதொரு கம்யூனிஸ்டாக உருப்பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பதைச் சற்றே காணலாம்.

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

சிங்காரவேலரின் குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்ததாகும். மிகக் கடுமையான தொழிலைச் செய்து வந்து போதிலும் மீனவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. கடற்கரையில் குடிசைகளுக்கிடையே சுகாதாரமில்லாத, மிக மோசமான சூழ்நிலையில், வழக்கமான கல்வியோ, மரியாதைமிக்க குடியுரிமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் வசித்து வந்தனர். இச்சமூகத்தினை சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவிற்கு மேம்பட்ட நிலையில் சிங்காரவேலரின் பெற்றோர் இருந்தபோதிலும், சாதிய புறக்கணிப்பு மற்றும் ஒடுக்குமுறை என்ற தளையிலிருந்து அவர்களால் விடுபட இயலவில்லை. வறுமையிலும், சகதியிலும் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவான சிங்காரவேலர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிறுவயதிலேயே உணர்வு தூண்டப்பட்டவராக இருந்தார். சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று. வளமான வருமானம் தரும் வக்கீல் தொழிலில் இறங்கிய போதும் நிலைமைகள் அவரைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டேதான் இருந்தன. எனவே சமூக சேவை நடவடிக்கைகளிலும் அவர் இறங்கினார். இத்தகைய அனுபவங்கள்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கி அவரை கவர்ந்திழுக்க உதவின என்றும் உறுதியாகக் கூறலாம்.

அங்கும்கூட நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் மிதவாதிகளை விட, தீவிரவாத பிரிவினருடன் தான்அவர் தன்னை இணைத்துக் கொண்டார். மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து 1907-ம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற இந்தியத் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அவர் பங்கேற்றார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். அதே ஆண்டில்தான் முறையான பயிற்சிக்குப் பிறகு சிங்காரவேலர்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். இந்த நீதிமன்றங்களும், அதில் செயல்பட்டு வந்த வழக்கறிஞர்களின் வெற்றி என்பதும் சட்ட வழிமுறைகளின் நுணுக்கமான தன்மைகள் மட்டுமின்றி பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர்களின் போராட்டங்களும் அடங்கியதே ஆகும். எனினும் பணத்தையும் பதவியையும் மட்டுமே நோக்கமாக கொண்ட வழக்கறிஞர்களின் கண்களில் இதுபோன்ற விசயங்கள் தென்படுவதில்லை. ஆனால் சிங்காரவேலரோ மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர். இவை அனைத்துமே அவரது இளம் பருவத்தில் உருப்பெற்ற கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. பொதுவாகவே வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப்பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் அப்போதுதான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்காரவேலரோ எந்தவொரு சூழ்நிலையிலும் அடக்கு முறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோரின் சார்பாக எப்போதும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.

பல்வேறு வகையிலும் 1902-ம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சிங்காரவேலர்  மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது என்றே கூறலாம். அந்தநேரத்தில்தான் மகத்தான சோசலிஸ்ட் பேச்சாளரும் அமைப்பாளருமான கெர் ஹார்டியின் தலைமையின் கீழ் புதியதாக உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சி பிரிட்டிஷ் அரசியலின் வடிவத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. உயிரோட்டமான சோசலிஸ்ட் தத்துவம் நடைமுறை என்ற பாரம்பரியத்தை உருவாக்கி விட்டுச் சென்ற ஃபிரடெரிக் எங்கெல்ஸ் மறைந்து ஏழு ஆண்டுகளே ஆகியிருந்தது. இவையனைத்துமே இந்தியாவிலிருந்து வந்திருந்த அந்த இளைஞரின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. அதுதான் உலக புத்த மதத்தவரின் மாநாடாகும். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்திற்கு அவர் மாறி விட்டார் என்றே கூறிவிடலாம். சாதிய முறைக்கு எதிரான, பிராமணிய பலியிடல், சடங்கு முறைகள் ஆகியவற்றிற்கு எதிரான கௌதமபுத்தரின் கருத்துக்கள் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்த இளம் புரட்சியாளரின் இதயத்திலும், மனத்திலும் அலைமோதிக் கொண்டிருந்த கருத்துக்களே ஆகும்.

இந்தியாவிற்குத் திரும்பி வந்த அவர், மகா போதி சமூகத்தின் மாநாடு நடைபெற உதவி செய்ததோடு அதில் பங்கேற்கவும் செய்தார். அந்த நேரத்தில்தான் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் நுழைய மட்டுமல்ல; பொது வீதிகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தவும் தடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் சாதிய மேலாதிக்கத்திலிருந்து விடுபடும் வகையில் புத்தமதத்திற்கு மாறி விடலாமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். இறுதியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்தான் தலித்துகள் பெருமளவில் புத்தமதத்திற்கு மாறுவதற்கு ஏற்பாடு செய்தார். இவ்வாறு மதம் மாறியவர்கள் புதிய புத்த மதத்தவராகக் கருதப்பட்டனர். எனவே சிங்காரவேலரை, அவரது முப்பதாவது வயதிலேயே, புதிய புத்த மதத்தவராக அழைப்பதும் தவறாகாது.

காங்கிரஸ் அரசியலின் கடுமையான பாதை

1919-ம் ஆண்டில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவமும், இந்தியத் தேசிய காங்கிரஸில் மகாத்மா காந்தியின் நுழைவும், இந்தியத் தேசிய விடுதலை இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளாக அமைகின்றன. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் படுகொலை சம்பவமானது படுமோசமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் கிளர்ந்தெழுந்ததற்கு பழி வாங்கும் படலமாக அமைந்தது. அந்நிய ஆட்சியாளர்கள் மக்களின் குரல்வளையை நெறித்து அரசியல் ரீதியாக அவர்கள் கிளர்ந்தெழாத வண்ணம் செய்வதற்காக பயன்படுத்திய வரன்முறை ஏதுமற்ற சட்டம்தான் ரௌலட் சட்டம். ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் அணிதிரளும் வகையில் காந்தி மிகவும் புத்திக் கூர்மையுடன், பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஆகியவற்றைப் புறக்கணிப்பது மது விற்பனையைத் தடுப்பது, அனைத்து அரசு அலுவலகங்கள், அவற்றின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முழுமையாக மறுப்பது போன்றவைதான் அவரது போராட்ட வடிவங்களாக இருந்தன. இவை அனைத்தையும் அஹிம்சை முறையிலான சத்தியாக்கிரக இயக்கம் என்று அவர் அழைத்தார். 1922-ம் ஆண்டில் இந்தப் போராட்டம் உச்சகட்டத்திற்குச் சென்ற நேரத்தில், பீஹாரில் சௌரி சௌரா என்ற கிராமத்து மக்கள், காவல் நிலையத்தைத் தாக்கி வன்முறையில் இறங்கினார்கள் என்று கூறி, சக ஊழியர்கள் எவரையும் கலந்து ஆலோசிக்காமலேயே காந்தி இந்தப் போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.

காந்திஜியின் இந்த நடவடிக்கையானது பொதுவாக மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் அவநம்பிக்கை கொள்ள வைத்தது. மோதிலால்நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு குழுவை உருவாக்கி அதற்கு ஸ்வராஜ்ய கட்சி என்று பெயரிட்டு அரசியல்  சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடப்போம் என்றும் அறிவித்தனர். மேல் தட்டில் இருந்த தலைவர்களில் சி.ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிராசாத், வல்லபாய் பட்டேல் போன்ற மற்றொரு பிரிவினர், காந்திய வழிமுறையையே பின்பற்றுவது என முடிவெடுத்தனர். இவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். எனினும் இந்த மாற்றத்தை விரும்பாதவர்களிடம் காதி நூல் நூற்பது, ஹரிஜன மேம்பாடு, மதுவிலக்கு போன்ற திட்டங்கள் மட்டுமே கைவசம் இருந்தன. அதாவது கிட்டத்தட்ட தீவிரமான அரசியல் பணிகளிலிருந்து விலகி நிற்பது என்பதாகவே இருந்தது.

காந்திஜியின் எதேச்சாதிகாரமான, முன்யோசனையில்லாத நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பெரும் இடைவெளியில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், பகத்சிங் போன்ற தீவிர இளைஞர் குழுக்கள் போன்ற அமைப்புகள் தோன்ற வழி கிடைத்தது. முசாபர் அகமது, சிங்காரவேலர்  எஸ்.ஏடாங்கே போன்றவர்கள் ஊசலாடிக் கொண்டிருந்த சோசலிஸ்டுகளையோ, அல்லது பகத்சிங் போன்றவர்கள் தனி நபர் வீரச் செயல் போன்ற வன்முறை நடவடிக்கைகளையோ பின்பற்ற மறுத்தனர். கான்பூர் மாநாட்டிற்குப் பிறகு சிங்காரவேலர்  உள்ளிட்ட கம்யூனிஸ்டுகள் நாட்டின் பல பகுதிகளிலும் சட்டபூர்வமாகச் செயல்படுவதற்காகத் தொழிலாளர் மற்றும் விவசாயக் கட்சியை உருவாக்கினர்.

சிங்காரவேலரின், சாதிக்கு எதிரான உறுதியான நிலைபாடும், இந்துச் சடங்குகள், அவர்களது மனுஸ்மிருதி போன்ற நூல்களின் மீதான அவரது வெறுப்பும்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் மற்றும் அவரது சுயமரியாதைக் கட்சியுடன் நெருக்கமாக அவரைச் செயல்பட வைத்தது எனலாம். 1925-ம் ஆண்டு வாக்கிலேயே ஈ.வே.ரா., காங்கிரஸின் மீதும் அதன் மேல்சாதி தலைமையின் மீதும், நம்பிக்கை இழந்திருந்தார். சுயமரியாதைக் கட்சியின் முக்கிய நோக்கம் என்பது சாதி அடக்குமுறை அமைப்பை எதிர்த்துப் போராடுவதே ஆகும். இந்து மதச் சடங்குகள், புராண ரீதியான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை எதிர்ப்பதும் இதன் ஒரு பகுதியாகவே இருந்தது. ராமாயணத்தில் வரும் ஸ்ரீராமனை வழிபடுவதற்குப் பதிலாக ராவணனின் சிறப்பான குண நலன்களையும், அறிவுத் திறனையும், ஈ.வே.ரா. போற்றிப் புகழ்ந்தார். அவரது பகுத்தறிவு வாதம் என்பது மார்க்ஸின் இயக்கவியல் பொருள் முதல்வாதத்திலிருந்து ஒரு சில விசயங்களில் வேறுபட்டதாக இருந்தபோதிலும் சிங்காரவேலர் அதனால் கவரப்பட்டார். அதேநேரத்தில் ஈ.வே.ரா.வின் அதீதமான பேச்சுக்களையும் அவர் விமர்சித்தார். ஈ.வே.ரா.நடத்தி வந்த “குடியரசு” இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.

1925-ம் ஆண்டில் சுயமரியாதைக் கட்சி தோன்றுவதற்கு முன்னரே, 1916-ம் ஆண்டில் நீதிக்கட்சி தோன்றியது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், 1934-ம் ஆண்டு முதல் நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். அதுவே பின்னாளில் திராவிடக் கழகமாக உருப்பெற்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் குறித்து சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கினைச் சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான் சுயமரியாதை சோசலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார். இந்த இயக்கமானது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதோ அல்லது அதற்கு இணையானதோ அல்ல. எனவேதான் அவரறிந்திருந்த மூத்த கம்யூனிஸ்டுகளில் ஒருவரான எஸ்..ஏ.டாங்கேவை 1936-ம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை சோசலிஸ்டுகளின் மாநாட்டை துவக்கி வைக்க அழைத்தார்.

சௌரி சௌரா சம்பவத்திற்குப் பிறகு பெற்ற அடிகளிலிருந்து மெதுவாக விடுதலை பெற்று, உறுதியுடன் புத்தெழுச்சி பெற்றதாக இந்திய அரசியல் சூழ்நிலை நிலவியது. சைமன் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் வெள்ளையர்களே ஆன கமிசன் இந்தியாவிற்கு வருகை தர நியமிக்கப்பட்டதை அறிந்து இந்திய மக்கள் மிகுந்த கோபமுற்றனர். இந்தக் கமிசன் இந்தியத் தலைவர்களுடன் பேசி, இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து பரிந்துரைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சைமன் கமிசன் இந்தியாவில் சென்ற இடங்களில் எல்லாம் புறக்கணிக்கப்பட்தோடு வலுவான எதிர்ப்பையும் சந்திக்க நேரிட்டது.

1928-ம் ஆண்டில் டாக்டர் அன்சாரி தலைமையில் காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் பங்கேற்ற முதல் காங்கிரஸ் மாநாடும் இதுவேயாகும். தனது தந்தை மோதிலால் நேருவுடன் சோவியத் யூனியனுக்குச் சென்று திரும்பியிருந்த இளைஞரான ஜவகர்லால் நேருவும் இந்தச் சென்னை மாநாட்டில் பங்கேற்றதோடு, முழுமையான விடுதலையே காங்கிரஸ் இலக்கு என்ற தீர்மானத்தையும் முன்மொழிந்தார். அவரது இந்த முயற்சியை அவரது தந்தையும் மாகத்மா காந்தியும் கூட எதிர்த்தனர் என்பதோடு அதீதமானதொரு நடவடிக்கை இது என்றும் கருதினர். எனினும் அத்தீர்மானம் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதை அடுத்து வந்த 1929-ம் ஆண்டானது இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகம் முழுவதற்குமே மிகவும் முக்கியமானதொரு ஆண்டாகத் திகழ்ந்தது. இந்த 1929-ம் ஆண்டில்தான் அமெரிக்காவிலும், இதர மேற்கந்திய முதலாளித்துவ நாடுகளிலும் ‘மாபெரும் பொருளாதார வீழ்ச்சி’ வெடித்தெழுந்தது. இது இந்தியா உள்ளிட்டு முதலாளித்துவ உலகம் முழுவதிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்ழுடுத்தின.

1930-ம் ஆண்டில் உப்பு ‘சத்தியாக்கிரம்’ ‘தண்டி   யாத்திரை’ என்ற வடிவங்களில் அடுத்த சுற்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தினை மகாத்மா காந்தி துவங்கினார். இதே நேரத்தில்தான் பகத்சிங்கும் அவரது தோழர்களும் பிரிட்டிஷ் ஆட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ஜெனரல் டயர் மாபெரும் தேசியத் தலைவரான லாலா லஜபதிராய் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்க, படுகாயமுற்ற அவர் சில நாட்களில் உயிரிழந்தார். இந்த ஜெனரல் டயரை சுட்டுக் கொல்ல முயன்ற பகத்சிங் பின்பு தூக்கிலிடப்பட்டார்.

1929-ம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கநிகழ்ச்சி என்பது மீரட் சதி வழக்கு ஆகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர் – விவசாய கட்சியின் செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டடனர். சட்டபூர்வமானதொரு அரசைத் தூக்கியெறிய சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1934ஆம் ஆண்டில் மத்திய கமிட்டி ஒன்றை உருவாக்கித் தங்களைச் சீரமைத்துக் கொண்னட கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலத் தலைவர்களின் பெரும்பாலோர் இந்த மீரட் சதி வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிலிப் ஸ்பராட், பென் பிராட்லி, ஹட்சின்சன் உள்ளிட்டு பி.சி.ஜோஷி, ஜி.அதிகாரி, எஸ்.ஏ.டாங்கே, எஸ்.எஸ்.மிராஜ்கர் மற்றும் பலர் இச்சதிவழக்கில் குற்றவாளிகளாக இருந்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களோ புரட்சிகரக் கருத்துக்களை பிரச்சாரம் செய்யவும், கம்யூனிஸ்ட்டுகளின் செயல் திட்டத்தை விளக்குவதற்குமான ஒரு மேடையாகவே இந்த நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். கம்யூனிச தத்துவம் குறித்த நூல்கள் அப்போது தடை செய்யப்பட்டு, கிடைக்காத நிலையில், இந்த நீதிமன்ற நடவடிக்கைகளின்மூலம் மக்கள் மார்க்சியம் பற்றியும், சோசலிசம் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அன்றைய நாளிதழ்களும் இந்த வாதங்களை விரிவாக வெளியிட்டன. ரயில்வே வேலைநிறுத்தம் ஒன்றிற்காகச் சிங்காரவேலர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மீரட் சதி வழக்கில் அவர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை.

18 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் 1930-ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 70. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட தலைவர்கள் ஏற்கனவே இயக்கத்தை வலுப்படுத்தி, போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். வயதும், முதுமையும், உடல் நலக்குறைவும் இருந்தபோதிலும் அவர் ஓய்வு பெற விரும்பினாரில்லை. தனது நடவடிக்கைகளையும் எழுத்துப் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருந்தார்.

1933-ம் ஆண்டில் மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்ற தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக விடுதலை பெற்றனர். அவர்கள் ஒன்றுகூடி கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கத் தலைப்பட்டார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல 1934-ம் ஆண்டில் ஒரு மத்திய தலைமை உருவாக்கப்பட்டது. மீரட் குழுவில் வயதில் மிகவும் இளைஞராக இருந்த தோழர் பி.சி. ஜோஷி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஆனார். உண்மையில் டாக்டர். கங்காதர் அதிகாரிதான் அந்தப் பொறுப்பிற்கு வருவதாக இருந்தது. எனினும் அந்த நேரத்தில் அவர் விடுதலை செய்யப்படாமல் இருந்தததால் தோழர் ஜோஷியிடம் பொறுப்பு வழங்கப்பட்டது. அதிகாரி  சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட ஜோஷி தொடர்ந்து பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். 1948-ம் ஆண்டில்தான் அவருக்குப் பதிலாகத் தோழர் பி.டிரணதிவே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1934-ம் ஆண்டிலிருந்துதான் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி” அந்நிய ஆட்சியாளர்களின் அனைத்து விதமான அடக்குமுறைகள், தாக்குதல்கள் ஆகியவற்றை மீறி முதிர்ச்சி அடைந்தது. எனினும் 1942-ம் ஆண்டு வரை கட்சி சட்டவிரோதமான ஒன்றாகவே இருந்தது.

1934-ம் ஆண்டில் மத்திய தலைமை ஒன்றின் மூலம் மறுசீரமைப்புச் செய்ததன் மூலம் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்மிகு அத்தியாயம் துவங்கியது. இந்தத் துவக்கத்தில் தோழர் சிங்காரவேலரின் பங்களிப்பு தீர்மானகரமானதாகவும், மகத்தானதாகவும் இருந்தது. இதில் அவரது பங்களிப்பு குறித்து அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டனர்:

“….. அவரது இந்த உண்மைத் தன்மையுடன் வெளிப்படையான பேச்சும் அவருக்கு எந்த வகையிலும் பெரிய அளவில் ஊறு எதையும் விளைத்துவிடவில்லை. ஏனெனில் அவர் காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருந்தாலும் சரி, வெளியே இருந்தாலும் சரி, சுயமரியானை இயக்கத்திற்கு உள்ளே இருந்தாலும் சரி, வெளியே அவர் ஊசலாட்டமில்லாததொரு கம்யூனிஸ்ட் என்பதை வெளிப்படுத்துகிறது. தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறிக் கொள்ள அவர் எப்போதுமே பயந்தவரல்ல; அதுவும் அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் அவர்களது பிரச்சாரமும் கம்யூனிசம் என்பது ஏதோ பயங்கரமானது போன்று சித்தரிக்கத் தயங்கியதே இல்லை. அப்போதுதான் விழிப்புணர்வு பெற்றிருந்த தேசியவாதிகளின் மனங்களில் கம்யூனிசத்தோடோ அல்லது கம்யூனிஸ்டுகளுடனோ தொடர்பு கொள்வது என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தை உண்டாக்கி இருந்தனர். அல்லது அவ்வாறு உண்டாக்க முயற்சி செய்தனர். தொடர்ந்து உறுதியாகத் தன்னை ஒரு கம்யூனிஸ்டு என்ற நிலையெடுத்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தும் வந்ததானது கம்யூனிசம் என்ற தத்துவத்திற்கு ஆதரவாக எத்தகைய வீரமான, துணிச்சலான, வீரராக சிங்காரவேலு இருந்தார் என்பதையே எடுத்துக் காட்டுகிறது”

தமிழில்: வீ.பா.கணேசன்

Tags: