உலகம் முழுவதும் தீவிரமடையும் பலஸ்தீன ஆதரவு மாணவர் போராட்டங்கள்

மெரிக்க மாணவர்களின் பலஸ்தீன ஆதரவு போராட்டம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கும்  நிறுவனங்களும், அமைப்புகளும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ளன. அந்த நிறுவனங்களிடம் இருந்து தங்கள் பல்கலைக்கழகங்கள் நிதி உதவி பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலை வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தை துவங்கினர்.

மாணவர்களுடன் இணைந்த பேராசிரியர்கள்  

மாணவர்களின் போராட்டத்தை கலைக்க  “சியோனிஸ” ஆதரவாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.  கொலம்பியா பல்கலைக்கழகம் லொஸ் ஏஞ்சல்ஸ் – கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் மிகப் பெரும் பேரணிகளை நடத்தி இனவெறி, நிறவெறி கருத்துக்களை பரப்பினர். அதுமட்டுமின்றி மாணவர்கள் அமைத்துள்ள முகாம்களுக்குள் எலிகள் நிறைந்த பைகளையும் போட்டுச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  

அதேவேளையில் பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையை பிரயோகிக்க துவங்கிய போது, பேராசிரியர்களும் நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்து மாணவர்களுடன் போராடினர். அப்போது பேராசிரியர்களையும் மிருகத்தனமான முறையில் கையாண்டு  கைது செய்துள்ளது காவல்துறை. மாணவர்களுடன் ஒற்றுமையாக நின்ற பேராசிரியர்களை  கீழே தள்ளி தரையில் போட்டு மிதிக்கின்ற வீடியோக்களும் வெளியாகியுள்ளன.  

ஸ்னைப்பர்கள் மூலம் மிரட்டல்  

ப்ளூமிங்டன்னில் உள்ள  இந்தியானா பல்கலைக்கழகம், ஓஹியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளிட்ட வளாகங்களில் போராடும் மாணவர்களை பயங்கரவாதிகளை கொலை செய்ய காத்திருப்பது போல  ஸ்னைப்பர்கள் மூலம் கண்காணித்து மிரட்டி வருகிறது காவல்துறை. மேலும் ஸ்வாட் எனப்படும் அமெரிக்காவின் அதி விரைவு காவல் படை  கவச வாகனங்களுடன் எந்நேரத்திலும் கண்ணீர்ப்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயாராக உள்ளது.  

உலகம் முழுவதும் பரவும் போராட்டம்  

அமெரிக்காவை தொடர்ந்து ஜப்பான், துருக்கி, மெக்சிகோ, இத்தாலி, குவைத், ஜோர்டான் மற்றும் அல்ஜீரியா, இந்தியா  உட்பட உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்க மாணவர்கள் முன்னெடுத்த போராட் டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு  பலஸ்தீனத்திற்கும் அமெரிக்க மாணவர்களுக்கும் தங்களின் ஒருமைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய துவங்கி 200 நாட்களை கடந்துள்ளது.  இந்த இனப்படுகொலையை கண்டித்து உலகம் முழுவதும் பல அமைப்புகள் ஒவ் வொரு நாளும் போராடி வருகின்றனர். சர்வதேச நாடுகளும் இனப்படுகொலை போரை நிறுத்த அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனினும் ரஃபா மற்றும் காஸாவில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.  

Tags:

Leave a Reply