நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் தரையிறங்கியது – இது என்ன செய்யும்?

Perseverance rover

செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.

அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொறியாளர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சி பொங்கியது.

ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.

செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் (Jezero Crater) பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. இந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குள்ளேயே, குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.

“இப்போதுவரை ரோவர் சமதளத்தில் தான் இருகிறது. இதுவரை 1.2 டிகிரி தான் சாய்ந்திருக்கிறது” என ரோவரின் தரையிறங்கும் அணியின் தலைவர் ஆலென் சென் குறிப்பிட்டார்.

கடந்த 2012-ம் ஆண்டு க்யூரியாசிட்டி ரோவரை, செவ்வாய் கோளின் வேறொரு பள்ளத்தில் நாசா தரையிறக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பெர்சவரன்ஸ் ரோவரின் கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள், அடுத்த சில வாரங்களில் ரோவர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள்.

இனி வருங்காலத்தில், பெர்சவரன்ஸ் ரோவர் நிறைய படங்களை எடுத்து அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.

பெர்சவரன்ஸ் ரோவர் தன்னோடு ஒரு சிறிய ஹெலிகாப்டரை எடுத்துச் சென்றுள்ளது. விரைவில் செவ்வாய் கோளில் ஹெலிகாப்டர் பறக்க விடும் சோதனை நடைபெறும். இப்படி வேறொரு கோளில் மனிதர்கள் ஹெலிகாப்டரை பறக்கவிட முயற்சிப்பது இதுவே முதல் முறை. அதன் பிறகு தான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கியப் பணிகள் தொடங்கும்.

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கோளில் உள்ள டெல்டா பகுதிகளில் இருந்து மாதிரிகளைச் சேமிக்கும், அதன் பின், பெரிய பள்ளத்தின் விளிம்பை நோக்கி நகரும். இந்த பெரிய பள்ளத்தின் விளிம்பில் தான் கார்பனேட் பாறைகள் இருப்பதாகச் செயற்கைக் கோள்கள் கண்டுபிடித்துள்ளன. இந்த பாறைகளைக் கொண்டு பூமியில் உயிரியல் ரீதியிலான நடவடிக்கைகளைக் கண்டுபிடிக்கலாம்.

பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் உபகரணங்களை வைத்து, இந்த விவரங்கள் அனைத்தையும் மிக நுண்ணிய அளவு வரை ஆராயும்.

ஏன் ஜெசெரோ பள்ளம்?

45 கிலோமீட்டர் அகலம் கொண்ட செவ்வாயின் பள்ளத்துக்கு ஜெசெரோ எனப் பெயர் வைக்கப்பட்டது. ஜெசெரோ என்றால் ஏரி என்று அர்த்தம். நீர் இருக்கும் இடத்தில் தானே உயிரினங்கள் இருக்கும்? அது தான் இந்த இடத்தைத் தேர்வு செய்யக் காரணம்.

ஜெசெரோ பகுதியில் பல தரப்பட்ட பாறை வகைகள், களி மண் வகைகள், கார்பனேட்டுகள் என உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளைக் காட்டக் கூடிய பொருட்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பாத் டப் ரிங் பகுதி. இந்த பகுதி ஏரியின் கரையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பூமியில் ஸ்ட்ரொமடொலைட்ஸ் (Stromatolites) என்றழைக்கப்படும் ஒரு வகையான நுண்ணுயிரிப் பாறையை, பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாயில் கண்டுபிடிக்கலாம்.

பெர்சவரன்ஸ் ரோவர் சேகரிக்கும் வித்தியாசமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய பாறை மாதிரிகளை தனியாக சிறிய குழாய்களில், செவ்வாயின் மேற்பரப்பிலேயே வைக்கும்.

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை இணைந்து, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அந்த பாறை மாதிரிகள் வைக்கப்படும் சிலிண்டர்களைச் சேகரித்துக் கொண்டு வர, பல பில்லியன் டாலர் மதிப்பீட்டில் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது அத்தனை சுலபமான நடவடிக்கைகளாக இருக்காது. ஜெசெரோவில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வர பெரிய ராக்கெட், பெரிய செயற்கைக் கோள் என பல விஷயங்கள் தேவை.

செவ்வாய் கோள் தொடர்பான ஆராய்ச்சியில், செவ்வாயில் இருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவது தான் அடுத்த சரியான மற்றும் தேவையான நடவடிக்கையாக இருக்கும்.

ஸ்வாதி மோகன்: நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் திட்டத்தை வழிநடத்திய இந்திய வம்சாவளி பெண்

அமெரிக்காவின் நாசா விண்வெளி முகமை வெற்றிகரமாக தன் பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை நேற்று செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. இதில் முக்கிய பங்காற்றி இருக்கிறார் இந்திய வம்சாவளி அமெரிக்கரான முனைவர் ஸ்வாதி மோகன்.

மார்ஸ் 2020 திட்டத்தில் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் (Guidance & Controls Operation Lead) என்கிற முக்கிய பொறுப்பை ஸ்வாதி மோகன் தான் ஏற்று வழிநடத்தினார்.

மார்ஸ் 2020 விண்கலம் விண்வெளியில் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வது, மார்ஸ் 2020 விண்கலத்தை தேவையான இடத்துக்குக் கொண்டு செல்வது எல்லாம் இவருடைய பொறுப்பு தான்.

குறிப்பாக மார்ஸ் 2020 விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் எல்லைக்குள் நுழையச் செல்வது தொடங்கி தரையிறக்குவது வரை இவரது பங்கு மிகவும் முக்கியமானது.

ஸ்வாதி மோகன் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிவிட்டார். வடக்கு வெர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி சி மெட்ரோ பகுதிகளில் தான் வளர்ந்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பிரிவில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதன் பின் எம்.ஐ.டியில் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டம் பெற்றார்.

குழந்தை மருத்துவராக வேண்டும் என்றிருந்த விருப்பம்

2013-ம் ஆண்டு முதல் மார்ஸ் 2020 திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். கிட்டத்தட்ட மார்ஸ் 2020 திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அத்திட்டத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது கைடன்ஸ் நேவிகேஷன் & கன்ட்ரோல் ஆபரேஷன்ஸ் லீடாக கலிஃபோர்னியாவில் இருக்கும் நாசாவின் ஜெட் ப்ரொபல்சன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார்.

16 வயது வரை ஸ்வாதி மோகனுக்கு ஒரு நல்ல குழந்தை மருத்துவராக வேண்டும் என்பது தான் விருப்பமாக இருந்தது. இன்னொரு பக்கம் விண்வெளி மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. ஆனால், அந்த விருப்பத்தை எப்படி ஒரு வேலையாக மாற்றிக் கொள்வது எனத் தெரியாமல் இருந்தார்.

16 வயதில் தன் முதல் இயற்பியல் வகுப்பை மேற்கொண்டார்.

“எனக்கு இயற்பியலில் எல்லாமே எளிதாக புரிந்தது, நல்ல ஆசிரியர் கிடைத்தது என் அதிர்ஷ்டம். அப்போது தான் பொறியியலை ஒரு வழியாகப் பயன்படுத்தி, விண்வெளி துறையில் பணியாற்றலாம் எனத் தோன்றியது” என நாசாவின் வலைதளத்தில் அவர் குறித்த தகவல்களில் கூறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.

மருத்துவராக விரும்பிய ஸ்வாதிக்கு விண்வெளி மீது எப்படி ஈர்ப்பு ஏற்பட்டது?

ஸ்வாதி ஒன்பது வயது சிறுமியாக இருக்கும் போது ‘ஸ்டார் டிரெக்’ என்ற அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளியானது. அதில் விரிந்து கிடக்கும் பேரண்டத்தில் புதிய புதிய பகுதிகளைக் கண்டு பிடிப்பார்கள். அதைக் கண்ட போது தான் அவருக்கும் விண்வெளி மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

“நானும் அது போல செய்ய விரும்பினேன். இந்த பேரண்டத்தில் புதிய, அழகான இடங்களை கண்டுபிடிக்க விரும்பினேன். இந்த பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளி தனக்குள் நிறைய ஞானத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. நாம் இப்போது தான் அதைக் கற்கத் தொடங்கி இருக்கிறோம்,” என நாசா வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வாதி மோகன்.

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்

அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

ஆறு சக்கரங்களைக் கொண்ட இந்த பெர்சவரன்ஸ் ரோவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடவிருக்கிறது.

செவ்வாயில் ஜெசெரோ பகுதியில் பில்லியன் கணக்கிலான ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும், அதில் நீர் இருந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே அப்பகுதியில் உயிரினங்கள் வாழ்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் எனக் கருதுகிறார்கள்.

பெர்சவரன்ஸ் ரோவர் பிப்ரவரி 18, வியாழக்கிழமை இரவு 20.55 ஜி.எம்.டி நேரப்படி செவ்வாயில் தரையிறங்கியது. இந்த மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்குள்ளேயே, குறைந்த ரெசல்யூஷன் கொண்ட பொறியியல் கேமராக்களால் எடுக்கப்பட்ட செவ்வாய் கோளின் இரண்டு படங்களை அனுப்பியது பெர்சவரன்ஸ் ரோவர்.

பிபிசி தமிழ்
2021.02.19

Tags: