வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்ரைன் என்ன சொல்கிறார்!?

-ஜெ.பிரகாஷ்

”நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து… ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன் (Albert Einstein). அவருடைய நினைவு தினம் இன்று. அவர் 18.04.1855 இல் தனது 76 வயதில் இறந்தார்.

குழந்தைகளின் மனநிலை! 

”வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும்” என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய  ஐன்ஸ்ரைன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். அதனால்தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், ”குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே.” 

”அவன் ஒரு சிந்தனையாளன்!”

சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்ரைன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது மாமா (ரூடி), ”உன் மகன் ஆல்பர்ட்டைப் பார், எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன்; சிந்தனையாளன்” என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான்,  ஐன்ஸ்ரைன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல, தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ”அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன்; அறிவாளி. அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான்” என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.

ஐன்ஸ்ரைன் அன்னை சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.  ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர். சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார்; அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார்; வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார்; சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். மறுமண மனைவி எல்ஸாவின் பேரிலேயே, அவர் நல்ல ஆடைகளை அணிவார். 

எளிமைக்கு உதாரணம்!

அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தவர், ”இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன். சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்” என்றார். தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்ரைன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம் ”ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன. அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா” என்றார்.

எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்ரைன், சிரித்துக்கொண்டே அவரிடம்… ”அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது. நீ கோபித்துக்கொள்ள வேண்டாம்” என்றவர், ”அது இருக்கட்டும். ஆனாலும், எனக்கு ஒரு சந்தேகம்” என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். ”எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா” என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை. 

“என்னைத் தேடி வருகிறது!”

வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே… வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்ரைனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது… எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். ”எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது” என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம்… ”இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்ரைனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம்” என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது.

”மகாத்மாவோடு ஒப்பிட வேண்டாம்!”

கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்து மறைந்த ஐன்ஸ்ரைனிடம்,  அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ”நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்” என்றார். அதற்கு ஐன்ஸ்ரைன், ”தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றார், அடக்கத்துடன்.

”அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது” என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்ததுடன்… ”மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது” என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்துக்கொண்டது.

ஐன்ஸ்ரைன் சொன்ன E=MC2-ஐ இவ்வளவு ஈஸியாக விளக்க முடியுமா?

-ஜெ.ஆபிரகாம்

உலகில் இதுவரைக்கும் அறிவியல் விஞ்ஞானிகள் பல சமன்பாடுகளைத் தந்திருக்கிறார்கள். அதில், சார்பியல் கொள்கை (the Theory of Relativity), ராமன் விளைவு (Raman’s Effect) போன்றவற்றை போல முக்கியமானது ஐன்ஸ்ரைன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு(E=MC2). ”இது தெரியுமே” என்பவர்களிடம் விளக்கம் கேட்டால் யோசிக்கத்தான் செய்வார்கள். 

ஆரம்பம் :
1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது ஆராய்ச்சியை சமர்ப்பிக்கிறார்.அதுதான் E=MC2
இதில் M- நிறை, E- சக்தி, C- ஒளியின் திசைவேகம். மேலும், செல்வதற்கு முன் நிறை (Mass), சக்தி (Energy) பற்றி தெரிந்துகொள்வோம்.

சக்தி (Energy):
சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு வகை சக்தியை இன்னொரு வகை சக்தியாக மாற்ற முடியும்.
நிலக்கரி ஒரு நிலை சக்தி. இதை எரிக்கும் போது வெப்ப சக்தியாக மாறுகிறது. இது ஜுல் (Joule) என்ற அலகால் அளக்கப்படுகிறது..

நிறை (mass):
W=Mg என்பது அனைவரும் அறிந்ததே.
நிறை kg லும், எடை N (Newton) அலகிலும் அளக்கப்படுகிறது. 
எடுத்துகாட்டு: ஐஸ் கட்டி 100 கிராம் என்றால் அது உருகி தண்ணீராக மாறினால் கூட அதே 100 கிராம்தான் இருக்கும். ஆக, நிறை ஆனது மாறிலி.

கதைக்குள் வருவோம்:  E=MC2
ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் மிகக் குறைந்த நிறையைக் கூட மிக மிக அதிக அளவு சக்தியாக மாற்ற முடியும் என்பதே ஐன்ஸ்டீன் சொல்வது.

சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.

1. ஒரு பீரங்கி மற்றும் ஓர் இரும்புக் குண்டை எடுத்துக்கொள்வோம். இந்தக் குண்டை அதிக ஆற்றலுடன் உந்தி வெளியே தள்ளும் போது,  ஒளியின் திசைவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம்.

நாம் வெளியே தள்ளும் ஆற்றலில் (energy) ஒரு பாதி மட்டும் வேகத்தை அதிகப்படுத்தும். மற்றொரு பாதி, அந்த இரும்புக் குண்டின் நிறையை (mass) அதிகப்படுத்தும்.

ஆக, ஒளியின் திசைவேகத்தில் செல்லக்கூடிய எந்த ஒரு பொருளின் வேகத்தை அதிகப்படுத்தக்கூடிய ஆற்றல் அதன் நிறையைத்தான் அதிகப்படுத்தும்.

2. ஒரு கால்பந்தை ஒருவன் மெதுவாக கிக் செய்கிறான்.அது உருண்டு வந்து காலில் படுகிறது. நம்மீது ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
அதே பந்தை அதிக வேகத்தில் (m/s) கிக் செய்கிறான் என்றால் அது உங்கள் முகத்தில் வந்து படும் போது அந்தப் பந்தின் நிறையானது முதலில் இருந்ததை விட அதிகமாகக் காணப்படும். அதுவே அந்த பந்தானது ஒளியின் வேகத்தில் சென்றால் நினைத்துப் பாருங்கள்.

3. சக்தியை நிறையாகவும், நிறையை சக்தியாகவும் மாற்ற முடியும்.
தங்கக் கட்டியை எடுத்து சுமார் 10-20 டிகிரி செல்சியஸ் வெப்பப்படுத்தினால், அதனுடைய நிறையானது 0.000000000000014 கிலோ கிராம் அதிகரிக்கும்.

வெப்பப்படுத்துவதை நிறுத்தினால் பழைய நிலைமைக்குத் திரும்பும்.

ஆகவே, நிறையும் ஆற்றலும் சமம்..(E=M).
இதில் C2 என்பது மாறிலி..(3×108 *3×108 = 9×1016 m/s)
இதைத்தான் ஆற்றல்-நிறை சமன்பாடு E=MC2 என்று சொல்கிறோம்..

நிறை  ஒரு kg என்றால் C2=9×10^16m/s. ஆக,  9,00,00,00,00,00,00,00,00 joule ஆற்றலை வெளிவிடும். இந்த சக்தி ஐரோப்பா கண்டத்தை ஒரு மணி நேரத்துக்குள் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.  

மிக குறைந்த நிறையை கூட மிக மிக அதிக அளவு சக்தியாக மாற்ற முடியும் என்றோமே. அது எப்படி என்று பார்ப்போம்.
யுரேனியம் 235 உடன் ஒரே ஒரு நியூட்ரானை மோதச் செய்தால், அது யுரேனியம் 236 ஆகும். மேலும் , பிரிந்து 141 BR + 92kr + 3நியூட்ரான் ஆகும். இதற்கு பெயர்தான் அணுக்கரு பிளவு (Nuclear Fission).

இந்த 3 நியூட்ரான்கள் அருகில் உள்ள 3 யுரேனியத்துடன் மோதி அதே வினை நடைபெறும் .
அதோடு 9 நியூட்ரான்கள் வெளிவரும்.
9 நியூட்ரான்கள் 9 யுரேனியத்துடன் இணைந்து 27 நியூட்ரான்களாக , அப்படியே சங்கிலித் தொடர் (chain reaction) நடத்துகிறது.

என்ன நடக்கிறது :
யுரேனியம் + நியூட்ரான்
235+1=236u

பிளவின் போது
140.883 + 91 +  3×1.008=235.812u
236- 235.812 =0.188u

0.188 u இது மாதிரி குறைந்த அளவு சக்தியை ஒரு யுரேனியம் நியூட்ரானிடம் மோதி வெளி வருகிறது. இதேபோல் பல கோடிக்கணக்கான அணுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்தும்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டில் யுரேனியத்தின் அளவு 0.860கிராம் மட்டுமே. அதாவது நமது பேனா மூடியின் நிறையின் பாதி அளவே.
0.8 கிராம் 15,000,000 அளவு TNT ஐ வெளிப்படுத்தியது. சுமார் 80000 பேர் இறந்தனர்.

ஐன்ஸ்ரைன் E=MC2 விளக்கம் என்பது குறைந்த அளவு நிறையை கூட மிக மிக அதிக அளவு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.

அணுகுண்டு இப்படித்தான் வெடிக்கிறது:

போரின் போது,  எடுத்துக்காட்டாக, அணு குண்டில் யுரேனியம் 100கி இருந்தால்தான் சங்கிலித் தொடரை ஏற்படுத்தும்.
ஆனால் 0.95 கி மட்டுமே நிரப்பப்படும்.

குண்டு போடும் இடத்திற்கு வந்த உடன் 10கி உந்தித் தள்ளி 105கி ஆக ஆக்கி விடும். இது 100ஐ விட அதிகம் என்பதால் நியூட்ரானுடன் வினைபட்டு மிக அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும். அதாவது 5000 செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும்.

‘அறிவியலை ஆக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அழிவுக்குப் பயன்படுத்தினால் நினைக்க முடியாத சேதங்களை ஏற்படுத்தும். இந்தக் கதிர் வீச்சினால் ஏற்படும் புற்று நோய், DNA மாறுபாடு ஆகியவை அபாயகரமானவை.

அணுகுண்டைவிட ஹைட்ரஜன் குண்டு வலிமை வாய்ந்தது. அது வெடிப்பதை நாமோ நமக்கு அடுத்தத் தலைமுறைகளோ நிச்சயமாக பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். 

Tags: