விடுமுறை நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது

லகெங்கும் ஒமிக்ரோன் (Omicron) கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் தமது விடுமுறை திட்டங்கள் சிலதை இரத்துச் செய்யும்படி உலக சுகாதார அமைப்பு (World Health Organization) கேட்டுக்கொண்டுள்ளது.

‘உயிர் ஒன்றை இரத்துச் செய்வதை விடவும் நிகழ்ச்சி ஒன்றை இரத்துச் செய்வது சிறந்தது’ என்று குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus), ‘கடினமான முடிவுகள்’ எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் ஆதிக்கம் கொண்ட வைரஸ் திரிபாக ஒமிக்ரோன் மாறி இருப்பதாக சுகாதார நிபுணர்கள் அறிவித்திருக்கும் நிலையிலேயே டெட்ரோஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபை விடவும் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவுவது தொடர்பில் ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட பல நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளன. புதிய திரிபு பரவுவதை கட்டுப்படுத்த இந்த நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளன. கிறிஸ்மஸ் காலத்தில் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையை கொண்டுவந்துள்ளது. எனினும் நாட்டை முடக்குவதற்கு ஜனாதிபதி ஜோ பைடனிடம் திட்டம் இல்லை என்று வெள்ளை மாளிகை கடந்த திங்கட்கிழமை கூறியது. முழுமையாக தடுப்பூசி பெற்றபோதும் கிறிஸ்மஸ் பயணங்கள் ஒமிக்ரோன் பரவலை அதிகரிக்கும் என்று அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் அந்தோனி பௌச்சி எச்சரித்துள்ளார்.

பிரிட்டனிலும் ஒமிக்ரோன் திரிபு உச்சத்தை பெற்றிருக்கும் நிலையில் புதிய விதிகளை கொண்டுவருவதற்கான வாய்ப்பு பற்றி பிரதமர் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்நாட்டில் மேலும் கட்டுப்பாடுகள் கொண்டுவருவது பற்றிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.

எனினும் இலண்டனில் நோய்ப்பரவல் நிலவரத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புத்தாண்டை வரவேற்கும் முக்கியக் கொண்டாட்ட நிகழ்ச்சியை மேயர் சாதிக் கான் ரத்து செய்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் தொன்னாபிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் திரிபு, அவதானத்திற்குரிய ஒரு திரிபாக உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்தியது.

பில்கேட்ஸ் விடுமுறையை இரத்து செய்தார்

வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது ஒமிக்ரோன் தொற்றால் ஒரு மோசமான மிக மோசமான தொற்று பரவலுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறையை இரத்து செய்துவிட்டேன் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26ம் தேதி கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் உலகளவில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிட்டது. ஒமிக்ரோனுக்கு அஞ்சி, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருவோருக்கு தடையும், பல்வேறு கடும் கட்டுப்பாடுகளையும் பல நாடுகள் விதித்துள்ளன. ஆனால், பிரி்ட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் ஒமிக்ரோன் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகை ஆட்டிப்படைக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

வரலாற்றில் எந்த ஒரு வைரஸையும் விட ஒமிக்ரோன் வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் உலகின் அனைத்து நாட்டிலும் பரவும் ஆபத்து உள்ளது.

ஒமிக்ரோன் உங்களை எப்படி தாக்குகிறது என்பது பெரிதாக தெரியாது. இது டெல்டாவை விட பாதியாக இருந்தாலும், இதுவரை நாம் பார்த்த மிக மோசமான பாதிப்பாக இது இருக்கும், ஏனெனில் இது மிகவும் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது.

வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தோன்றியபோது, நாம் தொற்றுநோயின் மோசமான பகுதிக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரோன் நம் அனைவருக்கும் வீட்டிற்கு வரும். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இப்போது அது உள்ளது. இதனால் எனது கிறிஸ்துமஸ் விடுமுறை திட்டங்களை இரத்து செய்துவிட்டேன்.

இங்கே ஒரு நல்ல செய்தி ஒன்று இருந்தால் அது இதுதான். ஒமிக்ரோன் மிக விரைவாக கடந்து செல்லும் என்பது தான் அது. ஒரு நாட்டில் ஒமிக்ரோன் புகுந்தால் அது அங்கு கொரோனா அலை 3 மாதங்களுக்கும் குறைவாக நீடிக்கும். அந்த சில மாதங்கள் மோசமாக இருக்கலாம், ஆனால் நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், தொற்றுநோய் 2022 இல் முடிவுக்கு வரும் என்று நான் இன்னும் நம்புகிறேன்.

இவ்வாறு பில்கேஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: