சீனா-ரஷ்யா- தென்னாப்பிரிக்கா கூட்டுப் போர்ப்பயிற்சி

சீனா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சிகளில் ஈடுபடப் போவது குறித்த ஐரோப்பிய யூனியனின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தென்னாப்பிரிக்கா அறிவித்திருக்கிறது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பு வலுவடைந்து வருகிறது. இந்த நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளைத் தாண்டி, சர்வதேச பிரச்சனைகளில் ஒருமித்த கருத்துகள் உருவாகி வருகின்றன. பல பிரச்சனைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், அவை குறித்த திறந்த மனதுடனான விவாதங்கள் இந்த நாடுகளுக்கிடையில் நடைபெற்று வருகின்றன.

வெளிப்படையாகவே அமெரிக்கா போடும் ஆணைகளை நிறைவேற்றுபவராக இருந்த ஜெய்ர் போல்சானரோ (Jair Bolsonaro) தோற்கடிக்கப்பட்டு, லூலா (Luiz Inacio Lula da Silva) பிரேசில் ஜனாதிபதியாகத் தேர்வானது, பிரிக்ஸ் (BRICS) அமைப்பிற்கு சாதகமாக மாறியிருக்கிறது. கடந்த வாரத்தில் கூட்டுப் போர்ப்பயிற்சி பற்றிய அறிவிப்பை தென்னாப்பிரிக்கா வெளியிட்டது. “மோசி” (MOSI) என்று பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சியில் தென்னாப்பிரிக்கா கடற்படையோடு, சீனா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகளும் பங்கேற்கவுள்ளன. பெப்ரவரி 17 முதல் 27 ஆம் திகதி வரையில் இதை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். இவ்வளவு நாட்கள் கூட்டாகப் போர்ப்பயிற்சியை இந்த மூன்று நாடு களும் இதுவரையில் மேற்கொண்டதில்லை. அதுவும் உக்ரைன் விவகாரம் இன்னும் நிறைவடையாமல் இருக்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிரண்டு போயுள்ளன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை பிரதிநிதி ஜோசப் போர்ரெல் (Josep Borrell), இத்தகைய போர்ப்பயிற்சிகளில் இணைய வேண்டியதில்லை என்று தென்னாப்பிரிக்காவுக்கு அறிவுரை கூறினார். அடுத்த வாரத்தில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) தென்னாப்பிரிக்காவுக்கு வரவிருக்கிறார். அந்தச் செய்தியும் ஐரோப்பிய யூனியனால் ஏற்றுக் கொள்ள முடியாததாக மாறியிருக்கிறது.

உக்ரைன் விவகாரம் தொடங்கிய பிறகு, உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவும், பிற ஐரோப்பிய நாடுகளும் போர்ப் பயிற்சிகளை நடத்தியுள்ளன. இதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்பாத ஐரோப்பிய யூனியன், இந்த மூன்று நாடுகள் இணைந்து நடத்துவதை மட்டும் கேள்விக்கு உட்படுத்துவது ஏன் என்று தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை கேட்டிருக்கிறது. பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா பல நாடுகளுடன் இணைந்து போர்ப் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவுடனும், ரஷ்யாவுடனும் இணைந்து போர்ப்பயிற்சி நடத்துவது கவலையளிக்கிறது என்று ஐரோப்பிய யூனியன் கூறியுள்ளதற்கு, அது எங்கள் விருப்பம் என்று தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்திருக்கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்த தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாண்டோர் (Naledi Pandor), எங்கள் நாடு இறையாண்மை கொண்டது. யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது யாருடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாங்களே தீர்மானித்துக்கொள்வோம்” என்று குறிப்பிட்டார். இவரை மேடையில் வைத்துக் கொண்டே, “தற்போது உக்ரைனில் நடந்து கொண்டிருப்பது ஐரோப்பாவிற்கான பிரச்சனை மட்டுமல்ல. ஐரோப்பிய மண்ணில் நடப்பதாக இருந்தாலும் ஒட்டுமொத்த உலகையே பாதிக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணை ந்து போர்ப்பயிற்சியில் ஈடுபடுவது சரியாக இருக்காது. அத்தகைய போர்ப் பயிற்சிகளில் பங்கேற்காமல் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்” என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறைப் பிரதிநிதி ஜோசப் போர்ரெல் தெரிவித்தார். ஆனால், உடனடியாகத் தரப்பட்ட தென்னாப்பிரிக்கா அமைச்சரின் பதிலடியால், தென்னாப்பிரிக்காவின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம் என்று அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.

Tags: