உலக அமைதிக்கு எதிராக அமெரிக்கா

லக அமைதி கெட்டுப் போய்விடும் என்றெல்லாம் கவலைப்படாமல் தனது இராணுவக் கூட்டணிகளை விரிவாக்கம் செய்வதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. நேட்டோ ராணுவக் கூட்டணியை மையமாக வைத்து அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் நடந்தாலும், மேற்கு ஆசியா மற்றும் கொரிய தீபகற்பப் பகுதிகளிலும் பதற்றங்களைத் தூண்டி விடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது உக்ரைனுக்கு கோடிக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் அவுஸ்திரேலியாவுக்கு அணு நீர்மூழ்கிக் கப்பல்களை பல இலட்சக்கணக்கான கோடி அமெரிக்க டொலருக்கு தரும் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

சவூதி அரேபியா உலகிலேயே அதிகமான ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாடாக இருக்கிறது. அந்த நாடும் அமெரிக்காவிடம் இருந்தே அதிகமான ஆயுதங்களை வாங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணியான நேட்டோ (NATO – வட அட்லாண்டிக் உடன்பாட்டு அமைப்பு) மேலும் விரிவடையும் என்று அந்த அமைப்பின் செயலாளரான ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பெர்க் (Jens Stoltenberg)தெரிவித்துள்ளார். 

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்த இராணுவக் கூட்டணியில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக சுவீடனும், பின்லாந்தும் முழுமையான உறுப்பினர்களாக சேர்ந்து விடுவார்கள். இரு நாடுகளும் ஒரே நேரத்தில் உறுப்பு நாடுகளாக சேர்ந்து விடுவார்கள் என்பதைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது” என்றார். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்சில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் உடன் இருந்தனர். நேட்டோ தலைமையகத்தில் இவர்களைப் பார்ப்பதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பெர்க், அவர்கள் நேட்டோவின் முழு உறுப்பினர்களாக இணைகையில் பெரு மகிழ்ச்சி அடைவேன் என்றும் தெரிவித்தார். இவர்கள் நேட்டோ தலைமையகத்திற்கு வரும் ஒரு நாள் முன்பாக, நேட்டோவில் பின்லாந்து இணைவது பற்றித் தங்கள் நாடாளுமன்றம் விவாதத்தைத் துவக்கவுள்ளதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவித்தார். சுவீடன் இணைவது பற்றி இப்போதைக்கு துருக்கி எந்த  முடிவையும் எடுக்காது என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.

நேட்டோ விரிவாக்கம்

ஐரோப்பியக் கண்டத்தில் மேலும் பல நேட்டோ  உறுப்பினர்கள் வருவார்கள் என்று ஸ்டோல்டென் பெர்க் கூறியுள்ளார். பின்லாந்தை நேட்டோவிற்குள் கொண்டு வருவதன் நோக்கமே, ரஷ்யாவுடனான நேட்டோ கூட்டணியின் எல்லை அதிகமாக வேண்டும் என்பதேயாகும். ரஷ்யாவைச் சுற்றி வளைக்கும் உத்தியாகவே இதை அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி மேற்கொண்டிருக்கிறது.

பின்லாந்தை இணைப்பதன் மூலம் 1,300 கிலோ மீட்டர் அளவுக்கு ரஷ்யாவுடனான நேட்டோ நாடுகளின் எல்லை அதிகரிக்கிறது. பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய இரு நாடுகளும் நேட்டோவில் உறுப்பினர்களாக ஆக  வேண்டுமானால், அனைத்து 30 உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இப்போதைய நிலையில் ஹங்கேரி மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நாடுகளும் இந்த ஒப்புதலை அளிக்காமல் இருக்கின்றன. இந்நிலையில்தான் புதிய நாடுகள் நேட்டோவில் இணைய இருக்கின்றன என்று ஜென்ஸ் ஸ்ரோல்ரென்பெர்க் கூறியுள்ளார். உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் அமெரிக்காவின் கூட்டணிகள் அனைத்துமே போர்களை உருவாக்குவதிலும், ஆயுதங்களை விற்பதிலும் முனைப்பாக இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: