கனடா பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம்

னேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் (Justin Trudeau)18.05.2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடந்த கால மோதல்கள் தொடர்பான மூர்க்கத்தனமான இனப்படுகொலைக் கூற்றுக்கள் அடங்கிய கனடா பிரதமரின் அறிக்கையையே, முற்றாக நிராகரிப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நேற்று (19.05.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு தேசத் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு ரீதியான அறிவிப்புக்கள், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் அமைதியின்மை, வெறுப்பையும் வளர்ப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறுப்பு சார்ந்த தவறான தகவல் மற்றும் தீவிரவாதக் கருத்துக்களை ஊக்குவிக்கும் உலகளாவிய தளமாக கனடாவை மாற்றுவதைத் தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான பயனற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை கனடாவையும் அதன் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது,

இது ‘உலகம் முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல்’ என்ற கனேடியப் பிரதமரின் குறிக்கோளுக்கு முற்றிலும் முரணானதாகும். தவறான தகவல்களையும் வெறுப்புணர்வையும் பரப்பி, தவறான கதையை கனடாவில் அங்கீகரிக்கும் அரசியல் உந்துதலுள்ள இலங்கை எதிர்ப்பு சக்திகளால் வேண்டுமென்றே கட்டமைக்கப்பட்ட ‘இனப்படுகொலை’ குறித்த இந்த ஆதாரமற்ற கதையை இலங்கை கடுமையாக நிராகரிக்கின்றது.

சமூக ஊடகத் தளங்கள் உட்பட தவறான தகவல்களின் ஆபத்துக்களை உலகம் எதிர்த்துப் போராடும் இத்தகையதொரு நேரத்தில், எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை மக்கள் உலகின் மிக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டனர். இது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சகல சமூகங்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களின் வாழ்க்கையையும் ஜனநாயக உரிமைகளையும் நசுக்கியது.

விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களில் இலங்கை மற்றும் வெளிநாட்டுத் தலைவர்கள், மிதவாத தமிழ்த் தலைவர்களின் படுகொலைகளும் அடங்கும்.

இந்த பயங்கரவாத அமைப்பின் தோல்வி இலங்கைக்கு பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்தது. கனடா உட்பட பல ஜனநாயக நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் பல இலங்கைப் படையினர் கொல்லப்பட்டும், ஊனமுற்றுமுள்ளனர்.

எமது நாடுகளுக்கிடையில் வளமான மற்றும் பரஸ்பரம் வலுவூட்டும் உறவைப் பேணுகின்ற இலங்கைப் பாரம்பரியத்தையுடைய கனேடியர்களின் குறிப்பிடத்தக்க சமூகத்தால், இலங்கையும் கனடாவும் இணைக்கப்பட்டுள்ளன. மக்களிடையே நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்புக்களை உருவாக்குவதற்கும், கனடா மற்றும் வெளிநாடுகளிலுள்ள சமூகங்களை துருவப்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கனேடிய அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது நாடு எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், ஸ்திரத்தன்மை, மீட்சி மற்றும் அனைத்து சமூகங்கள்,பிரிவு மக்களுக்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்தனை இலங்கை எச்சரிக்கையுடன் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியில் சர்வதேச சமூகத்திடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவை மிகவும் பாராட்டுகிறோம்.

இலங்கை மற்றும் கனடா ஆகிய இரண்டும் பொதுவான ஜனநாயக விழுமியங்கள், நிறுவனங்கள் மற்றும் மரபுகள் மற்றும் சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு சமாதானம் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளன.

நீண்டகால இருதரப்பு மற்றும் அபிவிருத்திப் பங்காளியான கனடாவுடன் இந்த பரஸ்பர மரியாதையுடன் ஈடுபட இலங்கை விரும்புகிறது.

Tags: