ரஷ்யாவில் என்ன நடக்கிறது? 

ஷ்யாவில் வாக்னர் குழுவின் நடவடிக்கையால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே ரஷ்யாவில் இப்போது என்ன நிலைமை இருக்கிறது என்பது குறித்து ரஷ்யா வாழ் தமிழர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து ரஷ்யாவில் வசித்து வரும் பாஸ்கரன் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 

“நான் மாஸ்கோவில் வசித்து வருகிறேன். இங்கே பாதிக்கும் மேற்பட்டோருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வாக்னர் அமைப்பு என்பது கேள்விக்குறியான அமைப்பு. அதன் தலைவர் சொல்வதையும் முழுமையாக நம்ப முடியாது. எனவே, இப்போது நிலைமை என்ன எனத் தெளிவாகச் சொல்ல முடியாது. இப்போது தகவல் யுத்தம் நடக்கிறது என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

வாக்னர் அமைப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டும் அறிக்கையில் நிறைய விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மக்களின் இயல்பு வாழ்க்கை அனைத்தும் வழக்கம் போலவே இருக்கிறது. 

இன்று மாஸ்கோவில் இந்திய தூதரகத்தில் சிறப்பு நிகழ்ச்சி கூட நடக்கிறது. அது இரத்தானதாகக் கூட தகவல் இல்லை. பொது நிகழ்ச்சிகளை இரத்து செய்ய வேண்டும் என மாஸ்கோ மேயர் மட்டுமே வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், இங்கே பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

எல்லை நகரில் மட்டுமே இப்போது சில ராணுவ நடவடிக்கைகள் இருப்பதாகத் தெரிகிறது. மாஸ்கோவில் வசிக்கும் மக்கள் பெரிதாக இது குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வாக்னர், பிரிகோஜின் சொல்வதை நாம் முழுமையாக நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்கிறார் என்றும் நமக்கு முழுமையாகத் தெரியாது.

அதேநேரம் இது குறித்து புட்டின் வெளியிட்டுள்ள வீடியோ ரொம்பவே முக்கியமானது. அதில் வாக்னர் குழுவின் நடவடிக்கையால் அந்த நகரில் ராணுவ மற்றும் சிவில் நடவடிக்கை முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை நாம் முக்கியமாகப் பார்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன?

ன்று (24.06.2023) சனிக்கிழமை காலை உலகம் முழுவதும் ஒரே ஒரு விஷயம் பரபரப்பான பேசுபொருளானது. அது ரஷ்யா. அதுதான் ஏற்கெனவே உக்ரைன் மீதான தாக்குதலின் காரணமாக செய்திகளில் இருந்து கொண்டுதானே இருக்கிறது என எண்ணலாம். ஓம், இருக்கிறது. ரஷ்யா நெருக்கடியில்தான் இருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு மேலும் ஒரு நெருக்கடி கொடுத்து மீண்டும் புதிய கோணத்தில் பேசுபொருளாக்கியுள்ளது ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு.

வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் என்ன? – ரஷ்ய அதிபர் புட்டினுக்கு புதிய நெருக்கடி தரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் ஒரு தசமத்துக்கும் குறைவானதாகத் தான் இருக்கிறது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.

ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறைமுகமாக அதிபர் புட்டினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது.

வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள் ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் ப்ரிகோஸின் என்ற புட்டினின் முன்னாள் தலைமை சமையல் நிபுணரும் இணைந்து 2014 இல் இந்தப் படையை உருவாக்கினர். இதில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள், சிறை சென்று திரும்பியவர்கள் உண்டு. ஏன் தண்டனையிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் கூட ‘தி வாக்னர்’ குழுவில் இணைந்து தப்பித்துக் கொள்வதுண்டு. ஒரு மூர்க்கத்தனமான ஆயுதக் குழு. பக்முத்தில் வாக்னர் குழுவை இறக்கி தங்கள் படைகளுக்கு பெரும் சேதத்தை ரஷ்யா ஏற்படுத்தியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி இருந்தது.

இவ்வாறாக இவர்களின் படைகள் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் போர் தொடங்குவதற்கு முன்னரே 2014 தொட்டு உக்ரைனில் அவ்வப்போது சிறு தாக்குதல்களை இவர்கள் நடத்தினர். குறிப்பாக, கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் போரில் ‘தி வாக்னர்’ ஆயுதக் குழு பெரும் பங்காற்றியது.

2015 இல் தொடங்கி இந்த ஆயுதக் குழு சிரியா, லிபியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சிகளில் அரசுக்கு ஆதரவாகப் பணியாற்றியுள்ளது. அதேபோல் சிரியாவின் தங்கச் சுரங்கங்களைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், அதிபர் புட்டினின் ஆதரவோடு வளர்க்கப்பட்ட வாக்னர் குழு இன்று அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அதன் பின்னணி என்னவென்று பார்த்தால், இந்த ஆயுதக் குழுவுக்கும் ரஷ்ய ராணுவத் தலைமைக்கும் இடையேயான அதிகார மோதல். உக்ரைன் போரின்போது வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்களைக் கொடுப்பதில் ரஷ்ய ராணுவம் தாமதம் செய்து வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே வாக்னர் குழு குற்றம்சாட்டி வந்தது.

கடந்த ஜூன் மாதம் முதல் ‘தி வாக்னர்’ குழுவுக்கு ரஷ்ய ராணுவ அமைச்சகம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கியது. அந்தக் குழுவில் சேரும் வீரர்கள் ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை தொடங்கி பல கெடுபிடிகளை அடுக்கியது. ஆனால், இதற்கு ப்ரிகோஸின் எதிர்ப்பு தெரிவிக்கலானார். இந்நிலையில்தான் உக்ரைனில் உள்ள தங்கள் படைகள் மீது ரஷ்ய ராணுவ ஏவுகணை தாக்குதல் நடத்தி 2000-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளதாக ப்ரிகோஸின் புதிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதன் நீட்சியாக இன்று காலை அவர் ஓரு ஓடியோ எச்சரிக்கையை வெளியிட்டார். “நாங்கள் 25,000 பேர் இருக்கிறோம். ரஷ்யாவின் ராணுவத் தலைமையை எதிர்த்து முன்னேறுகிறோம். வழியில் எது தடையாக இருந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம்” என்று எச்சரித்திருந்தார். ஏற்கெனவே உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் உள்ள ரஷ்யாவுக்கு இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இந்த திருப்பத்தை உற்று நோக்கி வருகிறது.

இதனிடையே, தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புட்டின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Tags: