“எனது வளர்ச்சியே புத்தகங்களால் உருவானதுதான்” – நீதியரசர் சந்துரு

-வினி சர்பனா

”நான், திடமாக இருக்கும்போதே புத்தகங்களை கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அம்பேத்கர் குறித்த அனைத்து புத்தகங்கள், மார்க்சியம், அரசியல், வரலாறு, பெண்ணியம் என” -கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு ரூ.20 இலட்சம் மதிப்பில் சுமார் 5000 புத்தகங்கள் வழங்கிய நீதியரசர் சந்துரு

“எனது வளர்ச்சியே புத்தகங்களால் உருவானதுதான். நீதிபதியாக இருக்கும்போது சட்டம் மட்டும் அல்லாமல் அரசியல், சமூகநீதி குறித்தெல்லாம் பேச வாய்ப்பு கிடைத்தது. கருத்து சொல்வதற்கான சிந்தனைப்போக்கும் புத்தகங்களாலேயே வந்தது”

“சட்டங்கள் தாண்டியும் பொருளாதாரம், வரலாறு, அரசியல் படிக்கும்போதுதான் விரிவான பார்வைக் கிடைக்கும். அதைத்தீர்ப்பிலும் பதிவு செய்ய முடிந்தது. புத்தக வாசிப்பால்தான் 7 வருடங்கள் நீதிபதியாக இருக்கும்போது, 96 ஆயிரம் வழக்குகளை விரைவாக முடிக்க முடிந்தது” – கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு தான் வைத்திருந்த ஒரே ஒரு நூலைத்தவிர, அனைத்து நூல்களையும் பரிசாக வழங்கிய நீதியரசர் சந்துருவின் வார்த்தைகள்தான் இவை.

ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக புகழ்பெற்ற அண்ணா நூலகத்தைவிட பிரம்மாண்டமாகவும் சர்வதேச தரத்துடனும் மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்திற்கு தான் வைத்திருந்த சுமார் 5,000 ஆயிரம் புத்தகங்களை வழங்கியிருக்கிறார் மேனாள் நீதிபதி கே. சந்துரு. இதுகுறித்து அவர் பேசும்போதுதான் அவர் புத்தகங்களை எந்தளவுக்கு நேசித்தார், அந்த புத்தகங்களை தற்போது கலைஞர் நூலகத்துக்கு பரிசாக வழங்க காரணம் என்ன? உள்ளிட்ட பின்னணி தெரிய ஆரம்பித்தது. உணர்ச்சிகரமான தகவல்களை சொல்ல ஆரம்பித்தார்:

“என்னுடைய சிறுவயதில் புத்தகம் வாங்குவதற்கான பொருளாதார வசதிகள் இல்லை. அப்போதெல்லாம் எந்த பொழுதுபோக்கும் கிடையாது. சினிமாவுக்கும் அனுப்பமாட்டார்கள். முடி வெட்டும் கடையில் வார இதழ்கள் படிப்போம். எங்கள் வீடு தி.நகரில் இருந்தது. அங்கிருந்து, சி.ஐ.டி காலனியிலுள்ள நூலகத்துக்கு நடந்தே சென்று படிப்பேன். மாவட்ட கிளை நூலகம், மாவட்ட நூலகம், கன்னிமாரா நூலகம் என நூலகம் நூலகம்களாக ஏறி இறங்கித்தான் எனது சிறு வயது கடந்தது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

இடதுசாரி இயக்கத்தில் சேர்வதற்கு முன்பு திராவிடர் கழகத்தால் ஈர்க்கப்பட்டு, நாங்கள் குடியிருந்த வீட்டுக்கும் மேல் வீட்டில் குடியிருந்த பெரியவரிடம் கெஞ்சி கூத்தாடி பெரியார் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அதையெல்லாம் படித்த பிறகுதான் பக்தி பழமாக இருந்த என்னுடைய பதினொறு வயதிலேயே இறை மறுப்புக்கொள்கைக்கு வந்துவிட்டேன்.

இப்போதுவரை இறை மறுப்புக் கொள்கையில்தான் இருக்கிறேன். அதன்பிறகு, மார்க்சிஸ்ட் இயக்கத்துக்கு சென்றபோது நான் முதலில் படித்த புத்தகம் ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. வரலாற்றுப் புரிதலை கொடுத்த புத்தகம் மட்டுமல்ல, என்னை அதிகமாக பாதித்த புத்தகமும் இதுதான்.

இளம் வயதிலேயே இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்ததும் புத்தகங்களே உலகமாக மாறி கையில் இருந்த எல்லா காசுக்கும் புத்தகங்களையே வாங்கிக் குவித்தேன். எந்தளவுக்கு ஆர்வம் என்றால் வேர்க்கடலை பொட்டலத்தைக்கூட விடமாட்டேன். அந்த பேப்பரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படிப்பேன். இடதுசாரி இயக்கத்தில் புத்தகம் விற்பனை செய்யும் பணியும் இருந்தது. அந்தப்பணியை எனக்கும் கொடுத்தார்கள். கல்லூரி மற்றும் ஹாஸ்டல்களில் புத்தகங்களைக் கொண்டுவந்து விற்பேன். வழக்கறிஞர் ஆனபிறகு படிப்பதற்காக நிறைய புத்தகங்களை சேர்க்க ஆரம்பித்தேன். அப்படி, கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க ஆரம்பித்தது இன்று சுமார் 5,000 புத்தகங்கள் என சேர்ந்துவிட்டன.

நான், கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு நூல்களைக் கொடுக்க இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, பொதுவா புத்தகங்களை கொடுப்பது என்றாலே சென்னையிலுள்ள நூலகங்களுக்கு கொடுப்பதுதான் வழக்கமாக உள்ளது.

அது, மாறவேண்டும் என்பதால்தான். ஏற்கனவே நான் சீனியர் வழக்கறிஞரிலிருந்து நீதிபதி ஆனதும் மதுரை பார் அசோசியேஷனுக்கு என்னுடைய அனைத்து சட்டப் புத்தகங்களையும் கொடுத்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்த அறிவிப்பு வந்ததும் ’எனது புத்தகங்களையெல்லாம் கொடுக்கிறேன்’ என்று முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அவர், ஒப்புதலின் பெயரில் வந்து எடுத்துச்சென்றார்கள். மதுரையில் கலைஞர் பெயரில் புதிய நூலகம் தொடங்கப்பட்டிருப்பதால் 13 மாவட்ட மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள். அந்த நூலகத்துக்கு இப்போது 4,972 நூல்களை பரிசாக வழங்கியிருக்கிறேன்.

புத்தகம் வழங்க இரண்டாவது காரணம், நிறைய சட்டக்கல்லூரி மாணவர்கள் என்னிடம் பயிற்சி எடுக்கிறார்கள். இவ்வளவு புத்தகங்கள் உள்ளன. நான் கண்டிப்பான ஆள் கிடையாது. புத்தகங்களை பூட்டி வைப்பனும் அல்ல. ஆனால், என்னிடம் பயிற்சிக்கு வரும் சட்டக்கல்லூரி மாணவர்கள் புத்தகங்களை எடுத்து படிக்கவேண்டும் என்று நினைப்பேன். ஆனால், சட்டம் சார்ந்த பயிற்சியை மட்டுமே முடித்துச்செல்கிறார்கள். உலக அறிவை வளர்த்துக்கொள்ளும் புத்தகங்களை படிப்பதில்லை. எனது வீடு, அலுவலகங்களில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்து நான் இவ்வளவு புத்தகங்கள் படித்திருக்கிறேனா என்று அவர்கள் ஆச்சர்யப்படுவதால் என்ன பயன்? உண்மையிலேயே ஆர்வமுள்ள மாணவர்கள், பொதுமக்கள் இந்த நூல்களை படித்தால்தானே எனக்கு மகிழ்ச்சி. நான், திடமாக இருக்கும்போதே இந்த புத்தகங்களை கொடுத்துவிடவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

நான், நேரிலேயே பார்த்திருக்கிறேன். திடீரென்று சில வழக்கறிஞர்கள் இறந்துவிடுவார்கள். அவர்களுடைய வீட்டிலும் வழக்கறிஞர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஜூனியர்களும் தனியாக போய்விடுவார்கள். இதனால், அந்த புத்தகங்கள் தனிமைப்பட்டுவிடும். சிலருக்கு வயது முதிர்ச்சியின் காரணமோ, குடும்பச்சூழல் காரணமாக சேர்த்துவைத்த புத்தகங்களை பராமரிக்கமுடியாத சூழல் ஏற்படலாம். இதுபோன்ற புத்தங்களை சென்னை மயிலாப்பூரில் பழைய புத்தகங்கள் வாங்கும் சீனிவாசன் என்பவரிடம் விற்றுவிடுவார்கள். எனக்கு அப்படியெல்லாம் நடக்கக்கூடாது. நான், உயிரோடு இருக்கும்போதே எனது நூல்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதால் இப்போதே கொடுத்துவிட்டேன்” என்று உருக்கமாக பேசி இதயம் கனக்கவைத்தவர், என்னென்ன மாதிரியான புத்தகங்களை வழங்கினார் என்பதும் குறித்தும் விளக்கினார்.

“இதுவரை அம்பேத்கர் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியான அனைத்து நூல்களும் என்னிடம் இருந்தன. மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அம்பேத்கரின் முக்கியப்பணிகள் குறித்த 13 தொகுதிகளும் அடங்கிய புத்தகங்களும் உள்ளன. சட்டம், அரசியல், வரலாறு, பெண்ணிய, மார்க்சிய நூல்கள், தத்துவம், அரசியல் சாசனம் தொடர்பான புத்தகங்கள். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் என எல்லா நூல்களும் இருந்தன. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சூடாமணி, ராஜம் கிருஷ்ணன் என அத்தனை எழுத்தாளர்களின் அத்தனை புத்தகங்களும் இருந்தன. வரலாற்று பேராசிரியரான எனது மனைவி பாரதி சில புத்தகங்களையும் எனது மகள் டாக்டர் சக்தி சில புத்தகங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி, ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் சுமார் 20 இலட்ச ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள். அதில், 10,000 ரூபாய் மதிப்பிலான சட்ட புத்தகங்கள்கூட இருக்கிறது. சட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள். அனைத்தும் நான் மதிப்புடன் வாங்கி தேர்ந்தெடுத்துப் படித்தப் புத்தகங்கள் இவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். ஆனால், ஒரேயொரு புத்தகத்தைத் தவிர” என்றவரிடம் ”அப்படியென்ன புத்தகம் அது?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

“அது வள்ளலாரின் திருவருட்பா. எங்க அப்பா வள்ளலார் பக்தர். 1936-ஆம் ஆண்டு வெளியான திருவருட்பாவை புத்தகத்தை அப்பா அடிக்கடி படிப்பார். நானும் வள்ளலார் மீது அபிமானம் உள்ளவன். அப்பா, இறந்தபிறகு திருவருட்பா புத்தகத்தை மட்டும் என் கையிலேயே வைத்துள்ளேன். வள்ளலார் குறித்து தீர்ப்பே கொடுத்திருக்கிறேன். அந்த தீர்ப்பைக்கூட வள்ளலார் குறித்த 29 புத்தகங்களை படித்துவிட்டுத்தான் தீர்ப்பு வழங்கினேன்” என்கிறவர், கலைஞர் குறித்தும் பேசினார்:

“கலைஞர் தீவிர வாசகர். அவருக்கு முன்னாலும் பின்னாலும் இருந்த எந்த முதல்வரும் அவருக்கு இணையாக மாட்டார்கள். நான், மதுரையில் தீர்ப்புகொடுத்தால்கூட படித்துவிட்டு உடனடியாக ரியாக்ட் செய்வார். ‘அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ என்ற எனது புத்தகத்தை படித்துவிட்டு முரசொலியில் ’நெறி தவறாத நீதியரசர் சந்துரு’ என பாராட்டி கட்டுரை எழுதினார். கடைசி பத்தியில் ‘அவர் நீதியரசர் என்பதால் எழுதுகிறேன் என்பார்கள். ஆனால், அவரது மாணவர் பருவத்திலிருந்தே எங்களை எதிர்த்துதான் வந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார். முடியாத சூழலில்கூட எனது புத்தகத்தைப் படித்துவிட்டு புத்தக விமர்சனம் எழுதியிருந்தார். அதேபோல், ’கோவில்களில் பெண்கள் பூஜை செய்யலாம்’ என்று நான் வழங்கியிருந்த தீர்ப்பிற்கும் ‘மாணவர் பருவத்திலிருந்தே அந்த நீதிபதி ஒரு சீர்திருத்தவாதி’ என்று பாராட்டினார்.

கலைஞரிடம் பிடித்ததே அவரது கூர்மையான நினைவாற்றல்தான்” என்றவரிடம், ”நூலகங்களில் அனைத்துவிதமான புத்தகங்களும் உள்ளன. என்ன மாதிரியான புத்தகங்களை இளைய தலைமுறையினர் குறிப்பாக படிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கிறீர்கள்? தென்மாவட்டங்களில் சாதிய பிரச்சனைகள் அதிகம். அங்குள்ள மாணவர்கள், பொதுமக்களுக்கு இந்த நூலகம் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்?” என்று கேட்டபோது,

“அறிவே ஆயுதம். அந்த அறிவாயுதம் படிப்பால், புத்தகத்தால்தான் வரும். அனைத்துவிதமான புத்தகங்களையும் படிக்கலாம். தென் மாவட்டங்களில் சாதிப்பிடிப்பு இருக்கிறது என்பதைவிட, எல்லா இடங்களிலும் படிக்காத முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். படிப்பவர்கள், வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். தென் மாவட்டங்களில் இதுபோன்ற நூலகங்கள் வரும்போது ஆயிரக்கணக்கானோர் படிக்க வாய்ப்புள்ளது. இப்போதும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தினந்தோறும் காலையில் நின்று கொண்டிருப்பார்கள்.

ஜெயலலிதா அண்ணா நூற்றாண்டை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்ற முயற்சித்தபோது, தொடரப்பட்ட வழக்கில் தடையுத்தரவு நான் தான் கொடுத்தென். நூலகத்திற்கு அப்போது என்னுடைய நன்கொடை அந்த தீர்ப்புதான்” என்று நெகிழும் நீதியரசர் சந்துரு, சென்னை மயிலாப்பூரிலுள்ள பட்டியிலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான எம்.சி ராஜா விடுதிக்கு 1000 புத்தகங்கள் கொடுத்து நூலகமும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

அதேபோல, மயிலாப்பூர் சாவித்திரி அம்மாள் பள்ளிக்கு 1000 புத்தகங்களும் கீழ்ப்பாகத்திலுள்ள கேரள் சமாஜ் பள்ளிக்கு 500 புத்தகங்கள் என இன்னும் பல பள்ளிகள் நூலகங்களுக்கும் புத்தகங்களைக் கொடுத்துள்ளார். மேலும், பேராசிரியர் கல்யாணி நடத்திவரும் தாய்த்தமிழ் பள்ளிக்கு அவர் எழுதிய புத்தகங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் கணிசமான தொகை சென்றுகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி, புத்தகங்களைக் கொடுத்து மாணவர்கள், பொதுமக்களை பலம் வாய்ந்த மனிதர்களாக உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறார் நீதிரயரசர் சந்துரு. அதனால்தான், அவர் நீதியரசர்!

Tags: