ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இருதரப்பு வாதங்கள்: ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிசேக் மனு சிங்வி, “நீதிபதி இதனை தார்மிக ஒழுக்கக் கேடான ஒரு கடுங்குற்றமாக பார்க்கிறார். இது ஒரு பிணையில் வரக்கூடிய குற்றமாகும். இந்தக் குற்றம் சமூகத்துக்கு எதிரானதோ, கடத்தலோ, பாலியல் வன்கொடுமையோ, கொலைக் குற்றமோ இல்லை. அப்படியிருக்கையில், இது எப்படி தார்மிக ஒழுக்கக் கேடான குற்றாமாகும்?

ஜனநாயகத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றவாளி கிடையாது. பா.ஜ.க தொண்டர்களால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், எதற்கும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ராகுல் காந்தி ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்லமுடியவில்லை” என்று வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “அந்த மொத்தப் பேச்சும் 50 நிமிடங்கள் நீடித்தன. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் அதற்கான ஆதாரங்களும் வீடியோ பதிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ராகுல் காந்தி ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று வாதிட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு: இந்த வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் மூன்று விஷயங்களை அவதானித்தது. அவை:

> அந்தப் பேச்சு (ராகுல் காந்தி பேசியது) ரசிக்கக் கூடியதாக இல்லை என்பதில் சந்தேகமில்லை. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தங்களின் பேச்சுக்களில் கவனமாக இருக்க வேண்டும். அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரது பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அவர் (ராகுல்) தனது பேச்சில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.

> இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

> விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் திகதி தகுதியிழப்புக்கு ஆளானார். பின்னர் கீழ்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றமும் பிறகு குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 7 ஆம் திகதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காவிட்டால், பேச்சுரிமை, கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பது போலாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 111 நாட்களாக அவரால் எம்.பி. பணிகளை செய்ய இயலவில்லை.

மேலும், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடும். எம்.பி. பதவி தகுதியிழப்பால் அவரால் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்க முடியவில்லை. எனவே, ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் எம்.பி.ஆகும் ராகுல் : உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!

பிரியா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ‘நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோரை குறிப்பிட்டு எல்லா திருடர்களின் பெயருக்கு பின்னாலும் மோடி என்று வருகிறதே’ என்று விமர்சித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி ‘மோடி’ சமூதாயத்தை அவதூறாக பேசியதாக குஜராத் எம்.எல்.ஏ பூர்ணேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்.எச். வர்மா மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

இந்த தண்டனை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு சென்றார். ஆனால் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

இதனிடையே ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டு, அவரது அரசு பங்களாவை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, சஞ்சய் குமார் அமர்வு விசாரித்தது.

ராகுல் காந்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

அப்போது அவர், “ராகுல் காந்தி மீது புகார் கொடுத்த புர்ணேஷ் மோடியின் துணை பெயர் உண்மையில் ‘மோடி’ அல்ல. அவரது குடும்ப பெயர் மோத் வனிகா சமாஜ் ஆகும்.

மோடி சமூகத்தில் 13 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் வழக்குத் தொடர்ந்தவர் யார் என்று பார்த்தால் பாஜகவைச் சேர்ந்தவர். இதுபோன்று பாஜகவினரால் ராகுல் மீது பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஆனால் எந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டதில்லை.

ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்ட ஒருவர் கூட அவருக்கு எதிராக வழக்குத் தொடரவில்லை.

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருப்பது அரிதிலும் அரிதானது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேச வேண்டும் என்று ராகுல் காந்திக்கு எந்த காரணமும் கிடையாது.

அவருக்கு எதிராக பதியப்பட்டது, கடத்தல், கொலை போன்ற கடுமையான வழக்குகள் அல்ல. ஜாமீன் பெறக் கூடிய சாதாரண வழக்குதான். அவதூறு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் அவர் 8 ஆண்டுகள் மவுனமாக்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய தண்டனை அவதூறு வழக்கில் தேவையற்றது. புகார்தாரர் ராகுல் கூறியதை தான் நேரடியாக கேட்கவில்லை. வாட்ஸ் அப் மெசேஜ், செய்தித் தாள்கள் வழியாகவும் தெரிந்துகொண்டதாக கூறுகிறார். அதோடு அவரே உயர் நீதிமன்றத்தை அணுகி அவதூறு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். அதன்பின், அவரே கேட்டுக்கொண்டதற்கு பிறகு விசாரணை  நடத்தப்பட்டு ஒரே மாதத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனநாயகத்தில் நமக்குள் மாற்றுக் கருத்துகள் உள்ளன. ராகுல் காந்தி ஒன்றும் கொடுங்குற்றம் செய்யவில்லை. ராகுல் காந்தியால் ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற அமர்வுக்கு செல்ல முடியவில்லை. உச்ச நீதிமன்றம் இப்போது தண்டனையை நிறுத்தி வைக்கவில்லை என்றால் முழு பதவிகாலத்தையும் இழக்க நேரிடும்.

எனவே அவர் மீதான தண்டையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து புகார்தாரர் புர்னேஷ் மோடி சார்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, “ராகுல் காந்தி பேசிய வீடியோ நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் ராகுல் காந்தியின் பேச்சை கேட்ட ஒரு நபர் சாட்சியாக ஆஜர்படுத்தப்பட்டார்.

‘மோடி’ என்பது பிரதமரின் குடும்ப பெயர் என்பதால் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறு செய்ய வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நோக்கம். விசாரணை நீதிமன்றத்தின் முன், தான் பேசியது தனக்கு நினைவில் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அதுபோன்று ‘ரஃபேல் விமானம் விவகாரத்தில் பிரதமரை உச்ச நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது’ என்று ராகுல் காந்தி கூறியதற்காக அவர் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, ராகுல் காந்தி எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இதுபோன்று தொடர்ந்து பேசி வரும் அவருக்கு சலுகைகள் கோர உரிமையில்லை. எனவே அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “ராகுல் காந்தி மீதான இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கிறோம்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

“அவதூறு வழக்கில் உச்சபட்ச தண்டனை வழங்கியதற்கு கீழமை நீதிமன்ற நீதிபதி போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கூறவில்லை. ராகுல் காந்தி போன்று பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் குஜராத் நீதிமன்றம் பல்வேறு பக்கங்களை கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையின் மூலம் ஒரு நபரின் உரிமை மட்டுமல்ல ஒரு தொகுதி மக்களின் உரிமையே பாதிக்கப்படுகிறது. அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி மீதான இரண்டு ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டதன் மூலம் அவர் மீண்டும் எம்.பி.யாக தொடர்வார். மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதும் அவர் பேசுவார் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags: