நேட்டோ தலையீடு செய்தால் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம்

Abdoulaye Diop

.நா சபையின் 78 ஆவது அமர்வில் உரையாற்றிய மாலி (Mali) வெளியுறவுத்துறை அமைச்சர் நேட்டோ படையின் தலையீடு இருக்கும் பட்சத்தில் நாங்கள் பொறுமைகாக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆட்சியை கைப்பற்றிய பிறகு பிரான்சின் இராணுவ தாக்குதலை எதிர்க்க நைஜர் (Niger), மாலி, புர்கினா பாசோ  (Burkina Faso) ஆகிய நாடுகள்  கூட்டு பாதுகாப்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான சாஹேல் (Sahel) உடன்படிக்கையை உருவாக்கின.

லிபியாவில் செய்த தவறை நைஜரில் தவித்திடுக!

2011 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்கத் தலைவர்கள் எதிர்ப்பை மீறி  ஐநா பாதுகாப்பு கவுன்சில் லிபியாவில் நேட்டோ இராணுவத் தலையீட்டை அங்கீகரித்த முடிவு சாஹேல் நாடுகளில் தீவிரவாதம் பரவுவதற்கான அடிப்படையாக அமைந்தது. இதனால் 2011 முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என மாலியின் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் அப்துலே டியோப் (Abdoulaye Diop) ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் அதன் பொறுப்பை உணர்ந்து இந்த நேட்டோ  இராணுவத் தலையீட்டிலிருந்து முழுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். எனவே லிபியாவில் செய்த தவறை நைஜரில் மீண்டும் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது. இராணுவ தலையீடு இருக்கும் பட்சத்தில் ‘நாங்கள் பொறுமைகாக்க மாட்டோம்” என்றும் டியோப் எச்சரிக்கை செய்தார்.

மாலி வெளியுறவு துறை அமைச்சரின் இந்த உரையை புர்கினா பாசோவின் அமைச்சர் பாஸ்சோல்மா பாசியே (Bassolma Bazie) வலியுறுத்தினார். புர்கினா பாசோவிலும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள மக்களை, நைஜருக்கு எதிரான ஏகாதிபத்திய நாடுகளின் இராணுவத் தாக்குதலை  தடுக்க சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் அணிதிரள அவர் அழைப்பு விடுத்தார்.

Bassolma Bazie

இராணுவத்தளங்களை மூடுக!

புர்கினோ பாசோ அமைச்சர் பாசியே உரையாடும் போது “சாஹேல் கூட்டமைப்பு இராணுவம் மனிதாபிமானப் பணிகளைச் செய்ய வேண்டும். முறையான அரசியலில் ஈடுபடவேண்டுமெனவும்  பிரான்ஸ்க்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டுமெனவும் கூறினீர்கள். ஆனால் ஆப்பிரிக்க மக்கள் சுதந்திரமான பொருளாதார மற்றும் இறையாண்மையை அடைய விரும்புகிறார்கள்” என சுட்டிக் காட்டினார்  மேலும் “ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தளங்களை மூட வேண்டும்,  மேலும் ஆப்பிரிக்க பொருளாதாரத்தை முடக்கும் பிரான்ஸ் ஆப்பிரிக்க பொது நாணயத்தை அகற்ற வேண்டும்” என  ஐ.நா பொதுச்சபையில்  கூறினார்.  ஐ.நா உட்பட சில சர்வதேச அமைப்புகள் பல  நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. காலனித்துவ மற்றும் மேலாதிக்கத்தை நிலைநாட்டும் அமைப்புகளாக மாற்றப்படுகின்றன என குற்றம் சாட்டினார்.

பிரிக்ஸ் மற்றும் ஜி 20 இல் வளரும் நாடுகள், சர்வதேச ஒழுங்கை மாற்றியமைக்க வேண்டும் என்று  முன்வைத்த கோரிக்கைகளையே மாலி மற்றும் புர்கினா பாசோவும் ஐநாவில் வலியுறுத்திப்பேசின. நியாயமாக வளரும் நாடுகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தவும், தற்போதுள்ள பொருளாதார, நிதி மற்றும் உலகளாவிய அரசியல் நிர்வாக வழிமுறைகளில் மாற்றங்கள் தேவை என வலியுறுத்திய தோடு, ஜி-20 இல் ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதையும் பிரிக்ஸ் கூட்டணி உருவாவதையும் அவர் வரவேற்றார்.

பிரான்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா பொருளாதாரக் கூட்டமைப்பின் தலைவர்களின் தலையீட்டின் காரணமாக ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது அமர்வில் பிரான்சுக்கான நைஜர் தூதர் சில்வைனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் பங்கேற்பை  உறுதிப்படுத்த தவறிவிட்டார் என நைஜர் இராணுவத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags: