இஸ்ரேல் – ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது

ஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கு இடையேயான அதிகாரப்பூர்வமான நான்குநாள் தற்காலிக போர்நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை (24.11.2023) உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.

நவம்பர் 22 அன்று போர் நிறுத்தத்திற்கான அறிவிப்பு வெளியானபோதும், போர் நிறுத்தம் தொடங்கும் நேரம் தாமதமாகி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியதாக, இரண்டு தரப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய கத்தார் அறிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் சிறைகளில் உள்ள பலஸ்தீன  ஹமாஸ் கைதிகளில் விடுதலை செய்யப்பட இருக்கும் 150 பலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் கொடுத்துள்ளது. இவர்களில் பலர் விசாரணை யின்றி இஸ்ரேல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதில் முதல் 39 கைதிகள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்றும், காசாவில் உள்ள பணயக்கைதிகள் இஸ்ரேலுக்கு வந்த பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) காசாவில் இருந்து பணயக்கைதிகளை அழைத்து செல்ல உதவும் என்று கத்தார் கூறியுள்ளது.

ஹமாஸ் விடுதலை செய்ய இருக்கும் பணயக்கைதிகளின்  பட்டியலை இஸ்ரேல் பெற்றுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் வியாழக்கிழமை (23.11.2023) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் ஒவ்வொரு நாளும் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான பொருட்கள் அடங்கிய 200 லொரிகளும்  மற்றும் நான்கு எரிபொருள் லொரிகளும் காசாவிற்குள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீனிய சிறுவர்கள்.

வடக்கு பகுதிக்கு செல்பவர்கள் மீது தாக்குதல்

போர் தொடங்கியதில் இருந்து வடக்கு காசா பகுதியில் வசித்து வந்த 10 இலட்சத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்களை தெற்கு பக்கம் நோக்கி துரத்திய இஸ்ரேல் இராணுவம், தற்போது போர் நிறுத்தம் தொடங்கிய பிறகும் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் தங்களின் வீடுகள்  இருந்த பகுதியை நோக்கி யாரும் வரக் கூடாது என மிரட்டல் விடுத்திருப்பதாகவும் சில இடங்களில்  துப்பாக்கியால் சுட்டும், புகைக்குண்டுகளை வீசியும்  தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

யுத்தம் தொடங்கிய ஒக்ரோபர் 7 முதல் இதுவரை 6 ஆயிரம் குழந்தைகள், 4 ஆயிரம் பெண்கள் என 14 ஆயிரத்து 800 பலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்று குவித்துள்ளது. 1 இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகளையும் அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில முக்கிய கள நிகழ்வுகள்

  • 4 நாள் போர் நிறுத்தத்தின் பொழுது ஹமாஸ் விடுவிக்கப்போகும் 50 பணயக்கைதிகளில் இஸ்ரேல் தேசத்தவர் எவரும் இருக்க மாட்டார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
  • ஹமாசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு செல்வது மிகவும் ஆபத்தானது என இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர் பென்-கிவிர் கூறியுள்ளார். இஸ்ரேல் அமைச்சரவையில் இது குறித்து ஒருமித்த கருத்து இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது.
  • சியோனிசம் எனும் யூத இனவெறி என்றைக்குமே கொலைவெறி சித்தாந்தமாகவே இருந்து வந்துள்ளது. காசா படுகொலைகளுக்கு பின்னர்தான் உலகத்தின் பலரும் அதனை தெளிவாக உணர்ந்தனர் என பிரபல பத்திரிகையாளர் டேவிட் மில்லர் கூறியுள்ளார்.
  • ஒஸ்கார் மற்றும் எம்மி விருதுகள் பெற்ற பிரபல ஹாலிவுட் திரைப்பட கலைஞர் சூசன் சரான்டன் பலஸ்தீன அதரவு நிலை எடுத்த காரணத்தால் அவர் நீக்கப்படுவதாக யுனைடெட் டேலண்ட் ஏஜென்சி எனும் ஹொலிவுட் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • சவூதி / எகிப்து / ஜோர்டான் / பலஸ்தீனம் ஆகிய தேசங்களின் அரேபிய அமைச்சர்கள் தூதுக்குழு முதலில் சீனா, பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பலஸ்தீன பிரச்சனை குறித்து பேசியுள்ளனர். பிரிட்டன் / பிரான்சு / அமெரிக்கா ஆகிய வீட்டோ அதிகாரம் படைத்த தேசங்களின் தலைவர்களையும் சந்திக்க உள்ளனர்.
  • கனடா பல்கலைக்கழக மாணவர்கள் வாக்கெடுப்பில் 71.6 சதவீதம் பேர் இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் கனடா அரசாங்கம் இஸ்ரேல் பக்கம் நிற்கிறது.
  • துருக்கியிலிருந்து பல தேசங்களின் செயற்பாட்டாளர்கள் அடங்கிய 1000 படகுகள் காசா துறைமுகத்துக்கு செல்வது என திட்டமிட்டுள்ளனர்.
  • இஸ்ரேலின் முன்னாள் ஐ.நா.வுக்கான தூதர் டேனி டேனன் காசா மக்களை உலகில் உள்ள ஒவ்வொரு தேசமும் சில ஆயிரம் பேரை அழைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இது சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த இன அகற்றல் என கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. 
  • காசாவில் இன ஒழிப்பில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலை கண்டித்து ஏமனின் ஹவுதி அமைப்பு இஸ்ரேலின் ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளனர். செங்கடல் வழியாக செல்லும் எந்த ஒரு இஸ்ரேல் கப்பலும் தமது இலக்காக இருக்கும் எனவும் அறிவித்துள்ளனர். இது இஸ்ரேலுக்கு புது தலைவலியை உருவாக்கியுள்ளது.
  • பலஸ்தீன இன ஒழிப்பு போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவாக பொய் செய்திகளை கூறுமாறு நிர்பந்திக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அன்னா போயர் (நியூயார்க் டைமஸ்)/ ஜாஸ்மின் ஹியூக்ஸ் (நியூயார்க் டைமஸ்) / பாசம் பொனவுனி (பி.பி.சி) போன்ற பல பத்திரிகையாளர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

– அ. அன்வர் உசேன்

Tags: