ராகுல் காந்தி: இந்தியனாக உங்கள் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிப்பது என்னுடைய கடமை

நாகாலாந்து மொகோக்சுங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி உரை:

இங்கே தரப்பட்ட அன்பான, பாசம் மிக்க நாகா பாணி வரவேற்புக்கு எனது நன்றி. இப்போது இரண்டு நாட்களாக நான் உங்கள் மாநிலத்தில் பயணம் செய்து வருகிறேன். எனக்கு மிகச் சிறப்பான நேரம் இங்கே கிடைத்ததை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய மக்களை ஒன்றிணைக்கும் வகையில் நடந்து சென்றோம். அதன் மூலம் வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு கருத்துகள் கொண்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தோம். கிழக்கிலிருந்து மேற்கு வரை அதே போன்றதொரு யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது நினைத்தோம். இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல வடகிழக்குப் பகுதியும் முக்கியமானது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினோம். மக்கள்தொகை மிகக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை – ஆனால் முக்கியத்துவம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம்.

இன்றைய தினம் காலையில் ஒரு கிராமத்தில் நான் சிலருடன் தேநீர் அருந்தினேன். தங்களுடன் தேநீர் அருந்த வருமாறு வாகனத்தில் சென்று கொண்டிருந்த எங்களை அவர்கள் அழைத்தனர். எங்களுடன் தேநீர் அருந்திய  சிறுமிகளில் ஒருவர் அப்போது என்னிடம் ‘உங்கள் யாத்திரையின் நோக்கம் என்ன’ என்று கேட்டார். சிறப்பு வாய்ந்த நபர் ஒருவர் அந்த வீட்டில் இருப்பதாக  நான் கேள்விப்பட்டேன் என்று அந்தச் சிறுமியிடம் கூறினேன். அவரைச் சந்தித்து அவர் பேசுவதிலிருந்து நாகாலாந்து மக்கள் என்ன மாதிரியாக உணர்கிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மட்டுமல்லாது நாகாலாந்து மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் முறை எவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்பதே எனது யாத்திரையின் நோக்கம் என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

இந்தியாவில் தற்போது ஒரு கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மீது ஆர்எஸ்எஸ், பா.ஜ.கவினர்  தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் பயணிக்கும் போது நான் உங்கள் வரலாறு, உங்கள் கலாச்சாரம், உங்கள் பாரம்பரியம், உங்கள் வாழ்வியல் முறை ஆகியவற்றைக் காண்கிறேன்.

குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இப்போது நான் பேசுவதற்கு சற்று முன்பாக… இங்குள்ள மக்களுக்கு ஆங்கிலம் புரியும் என்று என்னிடம் சொன்னார்கள். அது மிகவும் நல்ல விஷயம்தான். ஆனாலும் அவர்களிடம் என்னுடைய பேச்சு நாகா மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். ஏனென்றால் இந்த மொழியில்தான் நீங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறீர்கள். அந்த மொழிக்கான மரியாதையை நான் தர வேண்டும். அதனால்தான் இங்கே வரும்போது, கர்நாடகாவுக்குச் செல்லும்போது அல்லது வங்கத்திற்குச் செல்லும்போது அல்லது கேரளாவுக்குச் செல்லும்போதெல்லாம்  நான் அவ்வாறு செய்து வருகிறேன். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரோ இந்த மொழி, கலாச்சாரங்களைத் தாக்கி அவமரியாதை செய்து வருகின்றனர். எந்த மொழியில் நீங்கள் பேசுகிறீர்கள், யாரை நீங்கள் வணங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், உங்களுடைய திருமண மரபுகள் என்று அனைத்தும் உங்களுக்கான மரபுகள். மற்றவர்களுக்கு அவற்றைப் பொருத்தவரை எந்தவொரு வேலையும் இல்லை. இந்தக் கலாச்சாரங்கள், இந்தப் பாரம்பரியங்கள், இந்த வரலாறுகளை மதிப்பது இந்தியனாக என்னுடைய கடமையாகும்.

மணிப்பூரில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, இந்தியப் பிரதமர் அங்கு செல்லவில்லை என்பதைச் சொல்வதற்கு நான் உண்மையில் வெட்கப்படுகிறேன். இந்தியன் என்ற முறையில் என்னுடைய பிரதமர் மணிப்பூருக்கு இதுவரை செல்லாதது குறித்து வெட்கப்படுகிறேன். அவர்களுடைய அரசியல் மாநிலத்தை தனியாகப் பிரித்து வைத்துள்ளது. அந்த மாநிலத்தை அவர்கள் துண்டாடியிருக்கின்றனர். ஆயுதம் ஏந்திய மாநிலமாக்கியுள்ளனர். மாநிலத்தை தீக்கிரையாக்கியுள்ளனர். அவர்களால் மாநிலத்திற்குள் காலடி எடுத்து வைக்கக்கூட முடியவில்லை.  அதற்குத்தான் இந்த ‘பாரத் ஜோடோ நியாய் யாத்ரா’.

இங்குள்ள சாலைகள் வழியாக நாகாலாந்து மக்கள் வாகனம் ஓட்டுவது நாகாலாந்து இளைஞர்கள், முதியோர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். இது நாகாலாந்து மக்களுக்கு செய்திருக்கும் துரோகம். நாகாலாந்து இளைஞர்களுக்குச் சாதகமான எதிர்காலத்தை இந்தச் சாலைகள் மூலம் கொண்டு வர முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நாட்டில் போட்டித் தேர்வுகள் நடப்பதாகக் கூறுகிறீர்கள். எடுத்துக்காட்டாக ஐஐடி போட்டித் தேர்வை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தேர்வை எழுதப் போகின்ற ஒரு நாகா குழந்தை இதுபோன்ற சாலைகளைச் சமாளிக்க வேண்டிய நிலையே இருக்கிறது. அந்தக் குழந்தை வேறு மாநிலத்தில் இதுபோன்ற நிலைமையில் இல்லாத குழந்தையுடன் போட்டியிடுவது எப்படி நியாயமாக இருக்கும்? வீட்டில் மின்சார வசதியே இல்லாமல் இருக்கின்ற நாகா குழந்தை, தன் வீட்டில் மின்சாரத்துடன் இருக்கின்ற மற்றொரு குழந்தையுடன் எப்படி போட்டியிட முடியும்? பெற்றோர்கள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள நாகா குழந்தை பெற்றோர்கள் எளிதாக மருத்துவமனைக்குச் செல்லக்கூடிய வசதியுடன் உள்ள மற்ற குழந்தைகளுடன் எப்படி போட்டியிடும்? அதைத்தான் ‘பாரத் ஜோடோ நியாய யாத்ரா’ கேள்வி கேட்கிறது. இங்குள்ள சாலைகள் இந்த ஊர் மக்களுக்கு அநீதி இழைக்கின்றன. நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இடம் பெற்றிராத மணிப்பூர் மக்கள், நாகாலாந்து மக்கள், அசாம் மக்கள் மீது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தைத் திருப்புவதே இந்த யாத்திரையின் நோக்கமாக இருக்கிறது.

நாட்டின் ஒட்டுமொத்த வணிக அமைப்பையும் இரண்டு அல்லது மூன்று பேர் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர். இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் எதுவும் நாகாவுக்கு சொந்தமானதாக ஏன் இல்லை என்ற கேள்வியை இங்கே கேட்க விரும்புகிறேன். ஏன் மிஸ்டர் அதானி, மிஸ்டர் அம்பானி உங்களிடம் இல்லை?  இந்தியாவில் ஐநூறு பெரிய நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட நாகா தலைமையுடன் இருக்கவில்லை. அப்படியிருக்கையில் ஒரு நியாயமான அமைப்பை நடத்துவதாக எப்படி அவர்களால் கூற முடியும்? எனவே அதுவே இந்த யாத்திரையின் நோக்கமாகும்.

இங்கே நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள், இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பீகாரைச் சேர்ந்தவர்கள், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பலரையும் என்னால் காண முடிகிறது. அவர்கள் அனைவரையும் நாகா மக்கள் மிகுந்த மரியாதையுடன், பாசத்துடன் நடத்துகிறார்கள் என்பதைச் சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன். உங்கள் பாரம்பரியம், சமத்துவம் மீது உங்களுக்கிருக்கும் உறுதி போன்றவை இந்திய தேசத்திற்கு, இந்தியாவிற்கான சொத்துக்களாக இருக்கின்றன. நாகாலாந்தில் மக்கள் நடத்தப்படும் விதத்தை இந்தியா முழுவதிலும் இருந்து வந்து அனைவரும் பார்க்க வேண்டும். இன்னொரு விஷயம் – நாகா மக்கள் வரிசையில் நிற்கும் போது, தள்ளுமுள்ளு எதுவும் இருப்பதில்லை என்பதைக் கவனித்தேன். இங்கே பாருங்கள் – மக்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கிறார்கள். யாரும் யாரையும் தள்ளுவதில்லை, இழுப்பதும் இல்லை. அனைவரும் மற்றவர்களுக்கு இடம் கொடுக்கிறார்கள். அதாவது நீங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மற்றவரின் இடத்தை மதிக்கிறீர்கள். மற்றவரின் கருத்துகளை மதிக்கிறீர்கள். நாங்கள் இதுபோன்ற இந்தியாவைத்தான் உருவாக்க முயன்று வருகிறோம். எனவே முன்னோக்கி செல்லும் வழியை எங்களுக்குக் காட்டியுள்ள உங்களுக்கும், உங்கள் முன்னோர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். உங்களிடம் இன்று பேசுவது உண்மையில் எனக்குக் கிடைத்த பெருமை. நீங்கள் என்னிடம் காட்டிய அன்பை, பாசத்தை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க மாட்டேன்.

மணிப்பூருக்குச் செல்லாமல் பிரதமர் மணிப்பூருக்குச் செய்திருக்கும் அநீதி குறித்து நான் பேசினேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் செய்து கொண்ட நாகா ஒப்பந்தம் குறித்தும் பேச விரும்புகிறேன். இந்தியப் பிரதமர் மணிப்பூருக்குச் செல்லாதது குறித்து வெட்கப்படுவதாக நான் அப்போது கூறினேன். அதேபோல இந்தியப் பிரதமர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நாகாலாந்து மக்களுக்கு உறுதியளித்தது பற்றியும் அதுகுறித்து அவர் எதுவும் செய்யவில்லை என்பது குறித்தும் நான் வெட்கப்படுகிறேன். அவர்களிடம் தீர்வு எதுவும் எதுவுமில்லை என்றால் தங்களிடம் தீர்வு இருக்கிறது என்று அவர்கள் பொய் சொல்லியிருக்கக் கூடாது. நாம் ஒரு தீர்வை நோக்கி உழைக்க வேண்டும், ஒரு தீர்வை நோக்கிப் பாடுபடுவோம் என்று கூறியிருக்க வேண்டுமே தவிர நாகாலாந்து மக்களிடம் அவர்கள் அவ்வாறு பொய் சொல்லியிருக்கக் கூடாது. உங்கள் பிரச்சனைகள் மிகவும் தீவிரமானவை, தீர்வுக்கான தேவை இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். நாகாலாந்து மக்களின் நம்பிக்கையைப் பெறாமல், நாகாலாந்து மக்களுடன் உரையாடாமல்,  கலந்துரையாடாமல் எந்தவொரு தீர்வையும் காண முடியாது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி வெற்று வாக்குறுதி என்று கூறுவதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். உங்களுக்கான தீர்வைப் பெறத் தேவைப்படும் கடினமான உழைப்பை மேற்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உங்களிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த யாத்திரை முடிந்த பிறகு சில நாட்களுக்கு நாகாலாந்தில் உங்களுடன் தங்கி, இங்குள்ள மக்களிடம் இன்னும் விரிவாகப் பேசி, இளைஞர்களிடம் உரையாடி அவர்களுடைய ஆசைகள், கனவுகள் என்னவென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எனது உறுதிப்பாட்டையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் ஒளிவுமறைவில்லாத, ஒழுக்கமான, நேர்மையான மனிதர்கள். நானும் உங்களைப் போன்றவன்தான்… ‘ராகுல் காந்தி’ என்ற வீரர் ஒருவர் உங்களுக்காகப் புதுதில்லியில் காத்திருக்கிறார் என்பதை உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் பிரச்சனைகள் எதையும் நாடாளுமன்றத்தில் நான் எழுப்ப வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைச் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

இங்குள்ள இளைஞர்கள், குறிப்பாக அதோ அங்கே நின்று கொண்டிருக்கும் இளம் பெண்களிடம், நீங்கள் எல்லோரும் அரசியலில் நுழைந்து நாகாலாந்தின் எதிர்காலம் குறித்த புதிய பார்வையை வழங்கிட வேண்டும் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன். மிக்க நன்றி!

பாரத் ஜோடோ யாத்ரா, நாகாலாந்து

 2024 ஜனவரி 17

தமிழில்: தா.சந்திரகுரு

Tags: